29 அக்டோபர் 2014

சூரசம்ஹாரத்திற்கும் நாகப்பட்டினத்திற்குமான தொடர்பு!

இன்னைக்கு எம்பெருமான் முருகனின் சூர சம்ஹாரம்! அதைப்பற்றி எனக்கு தோன்றிய சிறு ஆய்வு. நாகப்பட்டினமும் கடல் நகரம். திருச்செந்தூரும் கடல் நகரம். மேலும், முருகனின் அறுபடை வீடுகளில் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே பிரசித்தி பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் விளங்குகிறது. இந்த விசயத்தை மையமாக வைத்தே இந்த பதிவு அமைய உள்ளது. மாற்று கருத்துகள் இருந்தால் கூறவும்.

நாகப்பட்டினம் அருகேயுள்ள சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் வதம் செய்யும் நிகழ்வு தான் சூரசம்ஹாரம். சிக்கல் கோவிலுக்கு அருகேயே அரை மைல் தொலைவில் பொரவச்சேரி என்ற பொருள்வைத்தச்சேரி இருக்கு. அங்கு தான் எம்பெருமான் முருகனின் கல்லினால் ஆன மூலவர் சிலையும் இருக்கு. ஆனால், சிக்கல் கோவிலுனுள் ஐம்பொன்னினால் ஆன உற்சவர் மட்டுமே உள்ளது. ஆனால், அந்த உற்சவருக்கும் சூரசம்ஹார நாளில் வேர்வை வியர்க்கும் என்பது காலம் காலமாக நடந்து வரும் அதிசய நிகழ்வு. சிக்கல் - பொரவச்சேரி இது இரண்டு ஊர்களுமே கடலுக்கு அருகே இல்லை. மேலும், நாகப்பட்டினதில் கூட ஆறுமுகனுக்காக தனி ஆலயமாக குமரன் கோவில் நகரத்தின் மைய பகுதியில் இருக்கின்றது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஒரு முருகன் கோவில் சாமாந்தான் பேட்டை என்ற கடலோர கிராமத்தில் இருக்கின்றது. இந்த கோவிலுக்கு அருகில்தான் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகமும் இருக்கின்றது.

பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கிய அந்த கோவிலுக்கும், சிக்கலுக்கும் ஏறத்தாழ 10 மைல் தொலைவு இருக்கும். அந்த கோவிலில் வள்ளி-தெய்வானை இல்லாமல் எம்பெருமான் திருமுருகன் தனியே போர்கோலத்தில் தான் காட்சியளிக்கின்றார். என் கணிப்பின் படி, சிக்கலில் வேலும் ஆசீர்வாதமும் வாங்கியவுடன் பொருள்வைத்தச்சேரியில் ஆயுத தடவாளங்களை கட்டமைத்து, அப்படியே தரை மார்க்கமாக சாமந்தான்பேட்டைக்கு வந்து அங்கு தங்கிருந்து, பிறகு கடல்வழியாக திருச்செந்தூருக்கு போர்கலங்களோடு எம்பெருமான் முருகனின் கடற்படையினர் பயணித்திருக்க வேண்டும்.

மேலும், எம்பெருமான் முருகன், யாரிடம் வேல் வாங்கினார் என்பது எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக பார்வதி என தெரிந்திருக்கும். ஆனால், சிக்கல் கோவிலிலுள்ள பார்வதியின் திருப்பெயர் வேல்நெடுங்கன்னி அம்மன். அந்த வேல்நெடுங்கன்னி அம்மன் தான் காலப்போக்கில் முடவனுக்கு கடலோரத்தில் காட்சியளித்த வேளாங்கன்னி மாதாவாக விளங்கி வருகிறார். இங்கே மதமாற்றம் மனிதனுக்கு மட்டுமல்ல, கடவுளுக்கும் தான் என்பது மாரியம்மன் - மரியே என மருவி விட்ட இந்த விசயத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வேல்நெடுங்கன்னி என்ற வேளாங்கன்னி மாதாவுக்கும் கடலோரத்தில் தான் சர்ச் என்ற மாதா கோவில் இருக்கின்றது. இந்த முறையில் யோசித்தால், ஒருவேளை சாமந்தான்பேட்டையிலிருந்து வேல் உள்ளிட்ட ஆயுத தடவாளங்களுடன் கிளம்பி, வேளாங்கன்னி என்ற இந்த கடல் வழி மார்க்கமாகவே எம்பெருமான் முருகனின் கடற்படை திருச்செந்தூருக்கு பயணித்திருக்க வேண்டும், அப்போதும் அங்கு பார்வதி காட்சியளித்து எம்பெருமான் முருகனுக்கு ஆலோசனைகளையும், ஆசிகளையும் வழங்கிருக்க கூடும்.

இதுபோலவே, சிக்கலிலுள்ள எம்பெருமான் முருகனின் திருப்பெயர் சிங்கார வேலன் ஆகும். இந்த சிங்கார வேலனுக்கும் ஒரிசாவுக்கும் ஒரு தொடர்புண்டு. அந்த தொடர்பும் போர் சம்பந்தப்பட்டது தான். அதுபோல திருச்செந்தூர் முருகனுக்கும், குன்று இருக்குமிடமெல்ல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கிணங்க, திருப்பதியிலுள்ள வேல்கொண்ட ஈசனுக்கும் கூட ஒரு தொடர்புண்டு. அதுவும் போர் ஆயுதமான வேல் சம்பந்தப்பட்டது தான். இவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட அனுமானங்களே. இவை பொய்யாக கூட போகலாம். எல்லாம் உண்மைகளும் எம்பெருமான் முருகனுக்கே தான் வெளிச்சம்!

வீர வேல்! வெற்றி வேல்!

- இரா.ச.இமலாதித்தன்

1 கருத்து:

  1. அருமை. வீரவேல், வெற்றிவேல்.
    சத்தியகிரி அல்லது கந்தமான பருவதம் அல்லது முருகனின் ஆலயங்கள் உள்ள மலைகள் அனைத்தும் இயமலை உருவானபோது உருவானவை. இந்த மலைகளே பூமியில் முதலில் தோன்றிய கல்மலைகள் ஆகும். இதுவே கல்தோன்றிய காலம் ஆகும்.

    பதிலளிநீக்கு