13 செப்டம்பர் 2022

ஆண்ட பரம்பரையில் வந்த இங்கிலாந்த ராணி!






இந்திய மண்ணை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை எதிர்த்த நேதாஜிக்கு ஒரு பக்கம் சிலை திறக்கிறோம். மறுபக்கம் அந்த ஆங்கிலேய அரச வம்சத்தை சேர்ந்த ஒரு மூதாட்டி இறந்ததற்காக நாடு முழுதும் துக்கம் அனுசரித்து அரைக்கம்பத்தில் தேசியகொடியை பறக்க விடுறோம். இது இந்திய கொள்கை.

தமிழ்நாட்டிலோ, எல்லா சாதியிலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சுதந்திரப்போரட்ட வீரர்களை, தேசபக்தி நாயகர்களை விழா எடுத்து கொண்டாடுகிறோம். ஆனால், அவர்களை சூழ்ச்சியால் வீழ்த்தி கொன்றொழித்த ஆங்கிலேய மன்னர் வம்சத்தை சேர்ந்த வயது முதிர்வால் இறந்து போன மூதாட்டிக்கும் இரங்கற்பா படிக்கின்றோம்.

இதெல்லாம் என்ன மாதிரியான டிசைன்?

தமிழ்நாட்டில் மன்னர் பரம்பரை, ஆண்ட பரம்பரை என சொல்பவர்களை கடுமையாக எதிர்க்கும் எல்லா குரூப்களும் இங்கிலாந்து ராணிக்கு ராஜவிசுவாசம் காட்டுகின்றனர். 1801ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதியில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் மட்டுமில்லாது அவர்களது குடிவழி உறவினர்கள் என திருப்பத்தூரில் 500க்கும் மேற்பட்ட தமிழர்களை, தேச பக்தர்களை, மண்ணின் மைந்தர்களை கொன்றொழித்தன் பின்னணியில் இந்த இங்கிலாந்து ராணியின் குடும்பமும் உண்டென என்பது கூடவா தெரியாது? இதையெல்லாம் கேட்டால், முரட்டு முட்டு தான் கொடுக்கிறார்கள். ஒருபோதும் நம் வரலாற்றை மறக்காதீர்கள். அது கடந்த காலத்தை மட்டும் நினைவு படுத்தவில்லை. எதிர்காலத்தை எச்சரிக்கை செய்யும் வல்லமையும் அதற்குண்டு.

- இரா.ச. இமலாதித்தன்


பிற்சேர்க்கை:

இந்த சாதி ஒளிப்பு போராளிகள், தலித்திய போராளிகள், பகுத்தறிவு போராளிகள், ஆண்டப்பரம்பரை எதிர்ப்பு போராளிகள், ஆணவக்கொலை என பெயர்மாற்றம் செய்த போராளிகள், கருஞ்சட்டை, நீலச்சட்டை, பச்சை சட்டை, சிவப்புசட்டை என வண்ணப்போராளிகளெல்லாம் சேர்ந்து, இந்தியா உள்பட நூற்றுகணக்கான நாடுகளை அடிமைப்படுத்திய அந்த மன்னர் பரம்பரையை சேர்ந்த ராணிக்கு விதவிதமா இரங்கல் பா படிச்சாட்டாங்க. இந்நேரம் அந்த மகாராணியின் ஆன்மா சாந்தி அடைஞ்சிருக்கணும்.

12 செப்டம்பர் 2022

நாய்கள் ஜாக்கிரதை!


நாகரீக நாய் வளர்ப்பு கதை!

கொஞ்சம் காசு பணம் வந்துட்டா பொட்டி மாதிரி வீடு கட்டி, லோன்ல காரை வாங்கி நிப்பாட்டுறதோட மட்டுமில்லாம பெருமைக்கு நாயை வேற வளர்க்க ஆரம்பிச்சிடுறாங்க. எல்லா சூழலையும் தாங்கிக்கிற நம்ம நாட்டு நாயை விரட்டி விட்டுட்டு, எங்கேயோ ஆயிர கணக்குல பணங்கொடுத்து நாய்ங்கிற பேர்ல ஒன்னை வாங்கி வாசல்ல கட்டி போட்டுறாங்க. அது பூனைக்குட்டியா? கன்னுக்குடியா, பன்னிக்குட்டியா, கழுதைக்குட்டியான்னு கண்டுபிடிக்க முடியாத உருவத்துல இருக்கு.

நாய் வளர்க்கிற பேர்ல இவனுங்க அடிக்கிற இம்சை தாங்க முடியல. அந்த நாய்க்கு வாய்ல நுழையாத பேரு வச்சு, அதுகிட்ட கூட இங்க்லீஷ்லயே பேசி பழகுறாய்ங்க. அதுக்கு தனி தட்டு, தனி அரிசி, தனி சமையல், தனி தீனின்னு உடம்பு முடியாதவங்கள பாத்துக்கிற மாதிரி பொத்தி பொத்தி வளர்க்குறாங்க. அது அந்த வீட்ல உள்ள சோம்பேறிகள விட மோசமா வளர்ந்து நிக்குது. வேளாவேளைக்கு டான்'ன்னு மணி அடிச்சா பசி வந்து கத்த ஆரம்பிச்சிடுது. நாய்ன்னா குரைக்கும்ன்னு சொல்வாங்க. இதுக்கு அதெல்லாம் வரதே இல்ல. எல்லாத்துக்கும் ஒரே கத்தல் தான். பசிச்சாலும், வீட்டுக்குள்ள யார் வந்தாலும், கொஞ்சினாலும் ஒரே ரகமான காட்டுக்கத்தலை தவிர ஒன்னும் அதுக்கு தெரியல.

பகல்ல அங்கேயும் இங்கேயும் ஓடி கிட்டு படுத்தே கிடக்கிற நாய், நைட்ல அந்த வீட்ல உள்ளவங்க தூங்குறதுக்கு முன்னாடியே இது தூங்க ஆரம்பிச்சிடுது. மாசத்து ரெண்டு தடவை டாக்டர்கிட்ட காமிக்கிறது, தினமும் காலைல அந்த நாயை வாக்கிங் அழைச்சிட்டு போய், டாய்லெட் பிரச்சனைய முடிச்சுட்டு, குளிப்பாட்டி, துவட்டி விட்டு சர்வண்ட் மாதிரி இந்த புது பணக்கார பார்ட்டிகளின் லூட்டிகளை காண கண் கோடி வேண்டும். அற்பனுக்கு வாழ்ந்த மாதிரி வெளி வேசம் போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் பில்டப் ஆசாமிகளின் நாகரீக நாய் வளர்ப்பை பற்றி தனி நாவலாகவே எழுதலாம். அவ்ளோ இருக்கு அதுக்குள்ள கதை!

- இரா.ச. இமலாதித்தன்


90ஸ் கிட்ஸ் Vs நாகரீக நாய் வளர்ப்போர்!

90ஸ் கிட்:-

ஏன் சார் நாயையே இப்படி பொத்தி பொத்தி வளர்க்குறீங்களே? உங்க தாய் தகப்பனையெல்லாம் வேற மாதிரி கவனிச்சிருப்பீங்கள்ள சார்?!

நா.நா.வ:-

இல்ல தம்பி. அவங்களுக்கு கிராமத்த விட்டு வர பிடிக்காதுங்கிறதுனால, அந்த குடிசை வீட்லேயே விட்டுட்டு வந்துடுங்கன்னு என் வொஃய்ப் சொன்னாங்க. அதான் சரின்னும் பட்டுச்சு. அங்கேயே ரெண்டு பேரும் கடைசி காலத்த ஓட்டிட்டாங்க தம்பி.

90ஸ் கிட்:

நாய்க்கு ஒன்னுன்னாலே துடிதுடிச்சு போறீங்க. அப்போ, உங்க அம்மா அப்பாவையெல்லாம் அடிக்கடி போய் பார்த்துட்டு, டாக்டர் செக்கப்லாம் பார்த்துருப்பீங்கள்ள சார்?

நா.நா.வ:

நீங்க சொல்ற மாதிரி கவனிச்சிக்கலாம்ன்னு தான் தம்பி பார்த்தேன், ஆனா முடியல. சொல்லி வச்ச மாதிரி ரெண்டு பேருமே ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போறப்பதான் தம்பி இறந்தாங்க. கொழுந்தியா பையனுக்கு கல்யாணம், சகலை பொண்ணுக்கு சடங்குன்னு வொஃய்ப் சைடுல உள்ளவங்க ஃபங்ஷனுக்கு போனதுனால ரெண்டு பேரோட டெத்க்கு கூட கடைசி நேரத்துல தான் தம்பி போக முடிஞ்சிச்சு.

90ஸ் கிட்:

அதுனால என்ன சார்! வொஃய்ப், நாய் மேல நீங்க வச்சிருக்க பாசத்துல உங்கள யாருமே அடிச்சிக்க முடியாது; சூப்பர் சார்.

- இரா.ச. இமலாதித்தன்



செல்லப்பிராணி வளர்ப்பு பிரியர்!

வீட்டுக்குள்ள ஹாலில் ஏசியை போட்டுட்டு, அங்கேயே நாயையும் படுக்க வச்சிட்டு, கதவுக்கு வெளியே ஷூ ஸ்டாண்ட் கிட்ட டவுசரோட ஒருத்தர் வாட்ச்மேன் மாதிரி உட்கார்ந்து இருக்காரே அவர்தாங்க செல்லப்பிராணி வளர்ப்பு பிரியர்!

11 செப்டம்பர் 2022

90ஸ் கிட்ஸ்களின் கனிவான கவனத்திற்கு! அத்தியாம்: 1


90ஸ் கிட்ஸ்களின் கனிவான கவனத்திற்கு! அத்தியாம்: 1


கல்யாணத்துக்கு அப்பறம் சுதந்திரம் பறிபோய்டும்.

சுயமா ஒரு சின்ன முடிவு கூட எடுக்க முடியாது.

வெளியூர் இல்ல, வீட்டை விட்டு வெளிய போக கூட ஆயிரத்தெட்டு கண்டிசன்கள் வரும்.

லேட் நைட் வர முடியாது. 7.30 மணியே லேட் நைட் கணக்குல தான் வரும். வரலைலைனா ஏழரை தான்.

லீவு நாளு, திருவிழா நாளுன்னு ஃப்ரெண்ட்ஸ பார்க்க கூட வெளிய போக முடியாது.

ப்ரெண்ட்ஸோட கல்யாணமோ, கோவிலுக்கோ வெளியூர் கிளம்புறதுக்கு ப்ரெண்ட்ஸ் மட்டும் போற மாதிரி ப்ளான் பண்ற தகவல் கிடைச்ச நொடியிலிருந்து வீட்டுக்குள்ள பூகங்கம் கிளம்பும்.

கடைத்தெரு, தியேட்டர், ஹோட்டல்ன்னு அடிக்கடி போய்கிட்டே இருக்கணும். மணிபர்சையும் டயட்லேயே வச்சிக்கணும்.

சோசியல் மீடியாவுல ஒரு போஸ்ட், கமெண்ட் கூட போட முடியாது. எப்ப பார்த்தாலும் மொபைல் தானான்னு சண்டை வரும்.
 
காமெடி வீடியோக்களை கூட சலனமில்லாம சிரிக்காம பார்த்து பழகிக்கணும். சிரிச்சா போச்சு.

நிம்மதியா ஹெட்ஃபோன் போட்டு பாட்டு கூட கேட்க முடியாது. உங்க அம்மா இப்படி சொல்லிட்டாங்க, உங்க அப்பா இப்படி சொல்லிட்டாரு, உங்க குடும்பத்துல உள்ளவங்க அதை பண்ணிட்டாங்க, இதை பண்ணிட்டாங்கன்னு சொல்லிச்சொல்லி, நம்ம காதுக்கு ரெஸ்டே இருக்காது.

இவ்ளோ சொல்லியும் ஏன்னு போய் அவங்கள கேட்க மாட்டீங்களா? அவரை பாருங்க, இவரை பாருங்கன்னு உசுப்பேத்தி விட்டு கடைசியா, பொண்டாட்டி பேச்சை கேட்க ஆரம்பிச்சிட்டான்னு ஊர்முழுக்க அவதூறுகளை வாங்க வேண்டி வரும்.

பைத்தியக்காரத்தனமான க்ரிஞ்சிகளையெல்லாம் பார்த்து கேட்டு பழகுறதோட மட்டுமில்லாம, புகழ்ந்து தொலைக்கணும்.

நல்லது கெட்டதுன்னு எதுனாலும் தனியா போக முடியாது. ஜோடியா போனாலும் சிக்கல். ப்ளான் பண்ணின டைமுக்கு சீக்கிரமாவும் போக முடியாது. அங்க யாராவது அவுகள சரியாக கவனிக்கலைன்னா பாதியிலேயே ஒடியார வேண்டிருக்கும்.

மத்த பொண்ணுங்க போட்டிருக்க ஜூவல்ஸ், சாரின்னு அத்தனை மேக்கப்களையும் காட்டிக்காட்டி என்னை என்னைக்காவது இப்படி பண்ணிக்க விட்டுருக்கீங்களான்னு எல்லார் முன்னாடியும் வரும் முனுமுனுப்பையெல்லாம் யாருக்கும் தெரியாம சிரிச்சே சமாளிக்கணும்.

ஒரே நேரத்துல ரெண்டு மூனு பங்ஷன் வந்தா, எந்த பங்க்‌ஷனுக்கு போகணும்னு நாம முடிவு பண்ண முடியாது.
 
காசு இருக்கோ இல்லையோ, லீவு கிடைக்குதோ இல்லையோ பொண்டாட்டியோட தூரத்து சொந்தக்காரர்களின் பங்க்‌ஷனுக்கு ரெண்டு நாள் முன்னாடியே ட்ரெயினோ, பஸ்ஸோ புக் பண்ணி போய்ட்டு, எதையாவது பெருசா செய்யணும்.

பெத்தவங்கள விட வாக்கப்பட்டவங்க குடும்பத்தை தான் தாங்கி பிடிக்கணும். மத்த குடும்பம் மாதிரி நாங்க இல்ல. எங்க குடும்பம் அப்படி, இப்படி என்கிற பில்டப்களுக்கு ஆமாம் சாமி போடணும்.

பொண்டாட்டி வீட்டு சொந்தக்காரங்க தான் நல்லவங்கன்னு சொல்றது இல்லாம, நம்மளோட சொந்த பந்தமெல்லாம் மோசமானவங்கன்னும் சொல்ல பழகிக்கணும்.

எங்கப்பா தான் சூப்பர்ஹீரோன்னு பில்டப் கதைகளை சொல்ற மனைவிகிட்ட எதிர்கேள்வி கூட கேட்க முடியாது. கேட்டா அதுவே தனி பஞ்சாயத்தா நாலஞ்சு நாள் போகும்.

மனைவியோட சொந்தக்காரங்க தான் நமக்கும் சொந்தக்காரங்க. நம்ம இத்தனை நாளு பழகுன ப்ரெண்ட்ஸ்ல இருந்து சொந்தக்காரன் வரைக்கும் மனைவிக்கு பிடிக்கலைனா குட்பை தான் சொல்லணும்.

                                                                                                   (2ஆம் அத்தியாயம் தொடரும்...)

- இரா.ச. இமலாதித்தன்

09 செப்டம்பர் 2022

காசுக்காக காலை நக்கும் உலகம்!

”ஃப்ரெண்ட் விசயத்துல கணக்கு பார்க்க மாட்டேன். கணக்கு விசயத்துல ப்ரெண்ட்டே பாக்க மாட்டேன்” என சிறுத்தை படத்தில் பாதி மொட்டை அடித்து பணம் பிரிக்கும் காட்சியில் சந்தானத்திடன் கார்த்தி சொல்வாப்ள. அந்த மாதிரி காசு விசயத்தில் அனைவருமே கார்த்தி வகையறா தான்!

இதே கார்த்தி, சிறுத்தை போன்றதொரு திரைப்படத்தில்
மட்டுமில்லாது, தெலுங்கு திரைப்பட விழாவில் கூட “எனக்கு தமிழ் ஆடியன்ஸை விட டெபனட்டா தெலுகு ஆடியன்ஸ தான் பிடிக்கும்!” என பிசினஸிற்காக கூச்சமே படாமல் சொல்வாப்ள. அது போலத்தான் இங்கே பலரும்.
இதில் அப்பா, அம்மா, மாமனார், மாமியார், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மச்சான், சகலை, நாத்தனார், ஓப்பிடியா என எந்த வேறுபாடும் இல்லை. இடத்துக்கு தகுந்தாற்போல எல்லாரும் பணம் காசு வச்சிருக்க ஆளுக்கு தான் பல்லாக்கு தூக்குவாங்க. செருப்படி வாங்குறதுல கூட காசு இருக்கவன் தங்க செருப்பால அடிச்சா, ரெண்டு அடி எக்ஸ்ட்ராவா கேட்டு வாங்கிப்பாங்க.
”என்ன பண்ணி தொலைக்கிறது. காசுக்கு எச்சில் விட்டு, வசதி படைத்தவனின் காலை நக்கும் இந்த சொந்தக்கார நாய்களை நம்ம வீட்ல நடக்குற நல்லது கெட்டதுக்காக சகித்து கொள்றோம்” என மனதிற்குள் புழுங்கி கொள்வர்களே இங்கு அதிகம். ”காசுக்கு பீ திங்கிறதை காரணங்காட்டி நாம் ஒதுங்கி போனாலும், ’சொந்தம் பந்தம்ன்னு யாருமே இல்ல போல’ என ஊருதெருவுல உள்ளவன் நம்மள காறி துப்புவானுங்களே” என்ற பயத்தில் தான் முக்கால்வாசி பேர் இந்த ஈனக்கூட்டத்தை சகித்துக்கொண்டு போகிறார்கள்.

ஒருவன் கஷ்டப்படுகின்ற காலங்களிலோ, சாதாரண நிலையிலோ, அவனிடமிருந்து தூர நின்று கண்டும் காணாமாலும் கடந்து சென்று விட்டு, திடீரென காசு பணம் பதவி புகழென என கஷ்டப்பட்டவன் செட்டிலான காலங்களில் அவனது காலை நக்கி பிழைக்கும் நயவஞ்சகர்களுக்கு பெயர் சொந்தக்காரர்கள்!

- இரா.ச. இமலாதித்தன்

05 செப்டம்பர் 2022

ஆசிரியரெல்லாம் அறவழியினரா?



நூற்றில் பத்து பேர், 'அனைத்து தகுதிகளும் உடைய' ஆசிரியராக இருக்கலாமே தவிர, மற்ற 90% பேர் வியாபாரிகள் தான். வட்டிக்கு கொடுப்பது, மினி ரியல் எஸ்டெட் செய்வது, ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்வது, வீடு கடைகள் கட்டி வாடகை வசூலிப்பது என பகுதி நேர புரோக்கர்கள் இங்கே அதிகம். ஃபேஸ்புக்கில், வாட்சப்பில் யோக்கியர் போல காட்டிக்கொள்ளும் இவர்களில் பெரும்பாலானோர் நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை.

கஷ்டப்படும் பெற்ற தாய் தந்தை, சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சான், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளுக்கு கூட பலர் உதவ முன்வருவதில்லை. தன் பூர்வீக ஊருக்கு அருகேயுள்ள புறநகரங்களிலுள்ள உருவாக்கப்பட்ட புதுப்புது நகர்களில் வீடு கட்டி பொண்டாட்டி, பிள்ளை என சுருங்கி விடுகின்றனர். நல்லது கெட்டதற்கு மட்டும் ஊரார், உறவுகளை பார்க்க சில மணிநேரம் ஒதுக்கி, அவர்களோடு தங்கி விட்டு ஒதுங்கி விடுகின்றனர்.

ஆசியர்கள் அனைவருமே சுயநலவாதிகளா? என தெரியாது. ஆனால் பல சுயநலவாதிகள் ஆசிரியர்களாக இருக்கின்றனர். தன்னை மிகப்பெரும் ஆளுமையாக காட்டிக்கொள்ள காய் நகர்த்தி, பொதுவெளிகளில், சமூக ஊடகங்களில் எளிமை வேடம் போடுவார்கள். பெரும்பாலான ஆசிரியர்களின் திருமண இணையர்களும் ஆசிரியராகவே இருப்பதால், தன் குடும்பச்சூழலின் பின்னணியை மறைத்து,பழசையெல்லாம் மறந்து தனித்தே பயணிக்க விரும்புகிறார்கள். ஒருகாலத்தில் ஆசிரியர்கள் மீதெல்லாம் அத்தனை மதிப்பை வைத்திருந்தேன். அவர்களில் பெரும்பான்மையோரின் சுயரூபம் புரிந்த பின்னால் எதார்த்தம் உணர்ந்தேன்.

ஆசிரியர்களில் பலர், சிவாஜியை தோற்கடிக்கும் வல்லமை பொருந்திய மாபெரும் நடிகர்கள். கம்பனை மிஞ்சும் கற்பனை வளமிக்க எழுத்தினால் பொய்யை கூட நம்ப வைப்பவர்கள். நல்ல வருவாய் வருகின்ற கிராமத்து கோவிலின் அர்ச்சகர் போல நாசூக்காக பேசும் வல்லவர்கள். எளிதாக சொல்வதெனில், என்னளவில் அவர்களெல்லாம் சைலண்ட் கில்லர்கள்!
மீதமுள்ள, அந்த பத்து சதவீத ஆசிரிய பெருமக்களுக்கு, இனிய ஆசிரியர் திருநாள் நல் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

26 ஆகஸ்ட் 2022

நடுநிலைவாதி எனும் திராவிட சொம்புகள்!

நடுநிலைவாதி போல காட்டிக்கொள்ளும் திராவிட சொம்புகள், இந்த வாரம் நடந்த கூத்துகளை பேசவே இல்லை. அவற்றுள் சில...

1. ”நிலமே இல்லாதவர்கள் கூட பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு போராட்டம் செய்கிறார்கள்” என எ.வ.வேலு விவசாயிகளை காட்டமாக பேசியது. தேர்தல் நேரங்களில் விவசாய நிலங்களிலுள்ள வயல்களில் கான்கிரிட் சாலை அமைத்து பச்சைத்துண்டு சகிதமாக இந்நாள் முதல்வர் போட்டோஷூட் செய்தார். விவசாயி போல பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு அதிமுக ஆட்சியில் பல போராட்டங்களை முன்னெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், சென்னை மேயரை வா, போ என ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதன் பிறகு மேயர் பிரியா அவர்களாலேயே கட்சியில் மூத்தவர், உரிமையில் பேசினார் என அறிக்கை விடப்பட்டது. இதே மூத்தவர் முதல்வரின் மகனை அல்ல, அவரது பேரனை கூட வா,போ என பொதுவெளியில் ஒருமையில் பேச முடியாது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

3. காவல்துறை சார்பில் சென்ற ஆண்டை விட இந்தாண்டு 15 கொலைகள் மட்டுமே அதிகம். அதுவே அதிமுக ஆட்சி காலம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி அந்த கொலைகளை விட இவை குறைவு என சொல்லப்பட்டது. 36 மணிநேரத்தி 15 கொலைகள் என ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் 12 கொலைகள் தான் நடந்துள்ளது என காவல்துறை தரப்பில் அதிகாரபூர்வ அறிக்கையானது. பார்ப்பதற்கு அப்படியே அரசியல் கட்சியின் அறிக்கை போல இருந்தது என விமர்சனம் எழுந்தது.

4. திமுகவை விமர்சிப்பவர்கள் தன்மானம், இனமானம் இல்லாதவர்கள் என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார். ஒரு கட்சியை விமர்சித்தாலே அவர்களுக்கு தன்மானம் இல்லையென சொல்வதை பற்றி பலரும் கேள்வியெழுப்பினர். பதிலில்லை. சங்கி, தொம்பி என திசைதிருப்பப்பட்டது தான் மிச்சம்.

5. ”கருணாநிதியின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது தான் திமுகவின் கொடி” என முதல்வர் சொன்னார். அப்படியெனில் திமுகவை உருவாக்கிய சி.என்.அண்ணாதுரையின் பங்களிப்பு திமுகவில் இல்லையா? என பலரும் கேள்யெழுப்பி வருகின்றனர்.

இது மாதிரி பல நிகழ்வுகள் நடந்தாலும் பொத்திக்கொண்டு கடக்கின்றனர் திமுக சொம்புகள். பார்க்க பரிதபமாக இருக்கிறது. திமுக அல்லாத பிற கட்சிகள் செய்தால் பொத்துக்கொண்டு வருகின்ற அறச்சீற்றத்தை திமுக செய்தால் தங்களுக்குள்ளாகவே பொத்திக்கொள்கின்றனர்.

- இரா.ச.இமலாதித்தன்

22 செப்டம்பர் 2021

வாழ்த்துகள் சொல்வதென்ன அத்தனை பிரமாதமான விசயமா?


        ன் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி! இத்தனை பேர்களின் வாழ்த்து என்ன செய்து விட போகிறது? ஒரு பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் சொல்வதென்ன அத்தனை பிரமாதமான விசயமா? என என்னிடம் யாராவது கேட்டால், இல்லையென்றோ ஆமாமென்றோ சொல்லத் தெரியவில்லை.


        ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வரவின் பின்னால் பிறந்தநாள் உள்ளிட்ட எந்தவொரு நாட்களையும், சம்பந்தப்பட்ட நபரே மறந்தாலும் அவரது நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு அந்த நாளிலுள்ள சிறப்பை சுட்டிக்காட்ட அது தயங்குவதில்லை. அப்படித்தான் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிறந்தநாளோ, திருமணநாளோ, நல்லதோ, கெட்டதோ எம்மாதிரியாக இருந்தாலும் கடந்த ஆண்டின் மெமரிஸ் வழியாக கூட அனைவருக்கும் காட்டிக்கொடுத்து விடுகிறது. இப்படியான ஒன்றின் மூலமாக பலரிடமிருந்து பெறப்படும் வாழ்த்துகளை வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது? என்று பலர் நினைக்கவும் வாய்ப்புண்டு. இதில் பெருமை ஏதுமில்லை தான். ஆனால் அதை தாண்டிய ஒரு பலம் அதிலுள்ளது. ”நமக்கென யாருமில்லையோ!” என்ற மிகப்பெரும் தனிமையை அது ஆழ்மனதில் இருந்து நீக்கும் பேரொளியாக இருக்கிறது.


        எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து ஒவ்வோர் ஆண்டுமே, என்னுடைய பிறந்தநாளை பெரிதும் கொண்டாடும் எண்ணவோட்டத்தில் நான் இருந்ததில்லை. இந்த நாளும் மற்றைய நாள் போன்றது தான் என்ற மனநிலையில் தான் இருந்திருக்கிறேன். ஆனாலும், அன்றைய நாள் விடுமுறை நாளாக இருந்தால், வேதாரண்யம் அருகிலுள்ள கடிநெல்வயலில் உள்ள குலதெய்வ கோவிலான (வேம்புடையார் என்கிற) வேம்படி ஐயனாரை தரிசிக்க செல்வேன். வேலை நாட்களெனில், அந்த வாரத்தில் ஒரு நாள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதுண்டு. இல்லையெனில், அன்றைய நாளின் காலையிலோ, மாலையிலோ அருகிலிருக்கும் சிவாலயத்திற்கோ, முருகன் கோவிலுக்கோ செல்வதுண்டு. அதிகபட்சம் ஓர் அர்ச்சனையோடு அன்றைய நாள் கடந்து விடும். ஆனால், நமக்கு மட்டுமே தெரிந்த நாளானது, இந்த சமூக ஊடகங்களின் தயவால் ஊரறிய தம்பட்டம் அடிக்கப்படுகிறது. அந்த ஓசையினால், நானும் ஏதோ ஆடிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி இதில் கொண்டாட்டமோ, பெருமிதமோ வேறொன்றுமில்லை.
 
        இன்னும் சொல்வதென்றால். நான் பிறந்தது ஆங்கில நாட்காட்டி படி, செப்டம்பர் 21. அப்படியானால் தமிழ் மாதம் புரட்டாசி ஐந்தாம் நாள். அதிலும் நட்சத்திரப்படி புரட்டாசி கேட்டை அன்று என் பிறந்தநாள் இதுவென கணக்கிலெடுத்திருக்கிறேன். புரட்டாசி முதல் சனிக்கிழமையை கணக்கில் எடுத்திருக்கிறேன்; புரட்டாசி ஐந்தாம் தேதியை கணக்கிலெடுத்திருக்கிறேன்; புரட்டாசி வளர்பிறை ஷஷ்டி திதியை கணக்கில் எடுத்திருக்கிறேன். இப்படியாக என் பிறந்தநாளை பலவாறு கணக்கில் கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் இதை பற்றி ஆய்வுகளையெல்லாம் கடந்து அமைதியாக கடந்திருக்கிறேன்.


        ஆர்குட், கூகிள் பஸ் காலத்திலிருந்தே இதே ஊடகத்தில் நிறைய கசப்பான நிகழ்வுகளும், பலரின் வசவுகளையும், கேலி கிண்டல், மிரட்டல்கள் என பலதரப்பட்ட விமர்சனங்களையும் பார்த்து வந்திருக்கின்றேன். ஆர்குட் முழுவதும் மூடப்பட்ட பின்னால், 2009ம் ஆண்டு முதல் இந்த ஃபேஸ்புக்கின் வாயிலாக இயங்கி வருகின்றேன். அன்றிலிருந்து இன்று வரை என் நட்பு வட்டத்தில் இணைந்திருந்தவர்களை கணக்கிலெடுத்தால், விலகியவர்களின் பட்டியலே ஆயிர கணக்கில் இருக்கும். ஆனாலும், ஆர்குட் காலத்திலிருந்து இன்று வரை நட்பிலிருக்கும் உறவுகளும் இன்னும் உண்டு.

 
        இந்த சமூக ஊடகங்களின் உதவியால், என்னை உடன்பிறந்தானாக பார்க்கும் அன்பிற்கினிய அண்ணன்களும், தம்பிகளும், பாசமிகு பங்காளிகளும் இங்கே கிடைத்திருக்கின்றனர் என நினைக்கையில் வேறென்ன சொத்துபத்து நமக்கு வேண்டும் என, மன உளைச்சலுக்கு ஆளான நேரங்களில் ஆசுவாசப்படுத்தி கொண்டதும் உண்டு. எவ்வித கைமாறும் செய்யாமல், ஊரெங்கும் இத்தனை பேர் எனக்கென அன்பொழுக பாசத்தோடு அரவணைக்க தோள் கொடுக்க இருக்கின்றனர் என நினைக்கையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

 
        என் வாழ்வில் எனக்கு நேர்ந்த எல்லாவிதமான சுக துக்கங்களில் உள்ள மனக்குமுறல்களை என் நெருங்கிய உறவினர்களோடு, என் குடும்பத்தினரோடு பகிர்ந்ததை விட, இங்குள்ள இணைய உறவுகளோடு அலைபேசியின் வாயிலாக நான் பகிர்ந்து கொண்ட செய்திகளே அதிகம். இப்படியானதொரு பிணைப்பை, நெருக்கத்தை ஆர்குட், ஃபேஸ்புக், வாட்சப் போன்ற சமூக ஊடகங்களே சாத்தியப்படுத்திருக்கின்றன. இணையம் கொடுத்திருக்கும் இப்படியானதொரு வாய்ப்பை அனுபவிக்கும் நாம் அனைவருமே இந்த விசயத்தில் கொடுத்து வைத்தவர்களே.

        ஏதோ பழைய நோட்டு தாள்களில் கிறுக்கி கொண்டிருந்தவனை, நல்லா எழுதுறீங்கற. எழுதுங்க, தொடர்ச்சியா எழுதுங்க, உங்களுக்கு நல்லா எழுத வருது... என நம்பிக்கையூட்டி எனக்கென ஓர் அடையாளத்தை என் எழுத்துகளின் மூலமாகவே எனக்கு கொடுத்ததும் இதே சமூக ஊடகங்களில் இயங்கிய உறவுகள் தான். பூகோள ரீதியாக அவர்களெல்லாம் ஆளுக்கொரு மூலையில் மாவட்டமாக, நகரமாக, ஊராக பிரிந்து இருந்தாலும், என் மீது இத்தனை நெருக்கமும், பாசமும், அன்பும், உரிமையும் வைத்திருக்கின்ற இத்தனை பெரிய உறவு கூட்டத்தை எனக்களித்த இப்பிரபஞ்ச பேரருளுக்கு இந்நாளிலும் என் நன்றி!

- இரா.ச. இமலாதித்தன்