07 ஜூன் 2011

இமலாதித்தவியல்!


☼ என்னுள் உருவான சில கருத்துகள் உங்களது கருத்துகளோடு ஒத்துபோகாமல் இருக்கலாம். என்ன செய்ய, உங்களுக்கு ஒத்துபோகாது என்பதால் என்னுள்ளான கருத்துகளை சொல்லாமல் இருக்க முடியாதென்கிறது மூளையின் வழியாக மனது...!

☼ நான் நானாகவே இருக்க முயலும்  நேரமெல்லாம் நீ ஏன் நீயாய் இல்லாமல்
என்னை நீயாக்க முற்படுகிறாய்...?

☼ காலம் கைகூடும் வரை காத்திருப்போம்...நமது வலியை அவர்களுக்குள் திணித்துவிட...!


☼ உன்னை புகழும் இதழ்களுக்கு தெரிந்திருக்க "வாய்"ப்பில்லை; 
நீ என்றாவது ஒருநாள் அவைகளுக்கு அடிமை ஆகிவிடு"வாய்" என்பது...!

☼ எழுத்தின் வழியே, தான் சொல்வது எல்லாமே சரியாகத்தான் இருக்கிறதென்று நினைப்பதுவும், மற்றவர்களை விட தனக்கு மட்டுமே எல்லாமே தெரிந்திருக்கிறதென்று நினைத்துக்கொண்டிருப்பதும் கூட மூடத்தனமே...!  


☼ பெண்களின் கவனத்தை தனது பக்கம் திருப்புவதற்காக பெரும்பாலான ஆண்கள், என்னன்னமோ (!@#$%^&*) செய்கிறார்கள். # முடியல
இந்த விசயத்தில் மட்டும் நான் சிறுபான்மையானவனாகவே இருக்க முயல்கிறேன்...!


☼ பல கோடிகளை ஊழல் செய்து கொள்ளை அடித்ததை செய்தியை வெளியிட்டதற்காக, இன்னும் பல கோடிகளை நஷ்ட ஈடாக கேட்பவன் கேடி* தானே...?

☼ ஒரு வெற்றியாளன் பின்னால் பெண்கள் இருப்பார்களா ? இல்லையா ? என்பது தெரியாது; ஆனால், நிச்சயமாக, அவன் பின்னால் தான் நிச்சயம் ஒரு கூட்டம் இருக்க முடியும்,அது ஆண் - பெண் என்ற பாகுபாடின்றி. இன்னும் சொல்லபோனால், தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்திருப்பது கூட வெற்றி தான்...!


☼ எல்லோரது பேச்சையும் கேட்பதும், யார் பேச்சையுமே கேட்காமல் இருப்பதும் கூட தோல்விக்கு காரணமாக இருக்கலாம்...!

☼ நீயும் இன்று, மீண்ட என்னை, மீண்டுமிங்கே, விளையாட்டு பொருளாக்கி, விளையாடி பார்க்கிறாயோ இறைவா...?     

☼ மனதின் வலி ஒரு சிலருக்கு, யாருக்காகவோ போடப்படும் தூண்டிலாக தெரியலாம்...! ஆனால் இங்கே அந்த மனதுதான் மீன் என்பது யாருக்கு தெரியும்...?

☼ நான் உன்னை மறந்து விட நீ உதவி செய்யலாம்.ஆனால் உன் நினைவுகளை மறந்து விட யாராலுமே எனக்கு  உதவி செய்ய முடியாதே...! என்ன செய்ய...?

☼ நம்பிக்கை மட்டும் வாழ்க்கை யல்ல...எதை/யாரை/எப்போது நம்புவது என்பதுதான் வாழ்க்கை...!

☼ ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட  ஒன்றை திருத்தியமைக்க எல்லோராலும் முடிவதில்லை... அப்படி திருத்தினாலும், தீர்மானிக்க பட்ட அந்தவொரு இறுதி முடிவை யாராலுமே மாற்ற முடிய வில்லை...!  இதுதான் விதியோ...?

☼ ஒவ்வொரு முடிவுக்குள்ளும் ஏதோவொரு ஆரம்பம் இருக்கத்தான் செய்கிறது என்பதை தெரிந்த பின்னும்... என் முடிவு எங்கேயென்று என்னால் முடிவு செய்ய முடியவில்லையே ...! நான் வந்த ஆரம்பத்தை ஆராய்ந்து பார்த்தாலும் அறிந்திட முடியவில்லையே...! வரப்போகிற ஆரம்பத்தையும் கூட கணிக்க முடியவில்லையே என் இறைவா...! ஏன் இறைவா...? ஆரம்பம் எது...? முடிவு எது...? ஆரம்பம் எங்கேயென்று   ஆராயும் நான் அதன் முடிவை அறியும் முன்னரே எனக்கொரு முடிவை கொடுத்துவிடுவாயோ...? இல்லை உன் முடிவை என்னிடம் விரைவிலேயே சொல்லிவிடுவாயோ...? 


☼ சேவை செய்ய கொஞ்சம் பணமும்,நல்ல மனமும் மட்டுமே போதுமானது...! சேவை செய்ய தலைவன்,தொண்டன் யென்ற பாகுபாடு தேவையில்லை.மேலும், உதவி செய்ய பதவி என்பதே தேவை இல்லாத ஒன்று...! அப்பறம் பதவி வந்த பிறகு, உதவி செய்வதை மறந்து தன் பதவியை தக்க வைக்கவே பல பேரு உதவியை நாட வேண்டி வரும்...!

☼ வியப்பான உண்மை என்னவென்றால் எல்லா நட்பும் ஏதோ ஒரு தேவைக்காக உருவாக வில்லை.அப்படி தேவைக்காகவே உருவாவதற்கு நட்பு என்று அர்த்தம் கொள்வதும் சரியில்லை.மாறாக தேவை முடிந்தும் எவ்வித தேவையே இல்லாமல் தொடருவதுதான் நட்பாய் இருக்க முடியும்...!

☼ எட்டப்பன் பலபேரு இருக்கும் வரை...ஈழம் எட்டாக் கனியாகத்தான் இருக்கும்...!

☼ நீ என்றிலிருந்து உனக்கான சுய விளம்பரங்களை உன்னாலும்,உன் நட்பு வட்டங்கள் மூலமாகவும்  தேட ஆரம்பிக்கிறியோ அன்றிலிருந்து உன்(புகழ்,பெருமை, நட்பு) அழிவுக்கான நாளும் தீர்மானிக்கப் படுகிறது என்பதை மட்டும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்...!

☼ விதியை மதியால் வெல்ல முடியாது. சாமர்த்தியம் இருந்தால் போராடி மட்டுமே பார்க்க முடியும்.வெல்வதற்கு விதி என்பது ஒரு போட்டி அல்ல.அது ஏற்கனவே எனக்காகவே பிரத்யோகமாக அமைக்கப்பட்ட ஒருவித பயணம்.ஒருசில பகுதியில் கரடு முரடாகவும்,வேறு சில பகுதியில் ரம்மியமாகவும் இருந்தி ருக்கிறது.பயணத்தின் போது இடைஞ்சலான சமயங்களில் மாற்று பாதையை தேர்ந்தெடுக்க மட்டுமே இந்த மதி உதவுகிறது. ஆனால், பயணத்தையோ அந்த பயணத்தின் முடிவையோ இந்த மதியினால் முற்று முழுதாக மாற்ற முடியவில்லை என்பதை நான் பல முறை உணர்ந் திருக்கிறேன். எல்லாம் விதி வசம்...!

☼ விதி என்றவொன்று என்னோடு எப்படி யெல்லாம் விளையாடி விட்டு போகிறது ...! இறைவா...!  நீயும் இதை வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கிறாயா...? உன்னையே விதி ஆட்டிவிக்கும் போது மிக சாமானியனான என்னால் மட்டும் எப்படி விதியோடு விளையாடி வென்று விட முடியும் என்று எண்ணி விட்டாயோ...?

☼ இறைவா...! எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வதே இன்பம் என்பதை நான் அறிந்திருந்தாலும் ... எதையுமே எதிர்பார்க்காமல் வாழ முடியாது என்பதையும் நீயெனக்கு அறிய வைத்திருக்கிறாயே ...!  :(  அப்படியெனில் எப்போதும் துன்பத்தோடு தான் வாழவேண்டுமா...?ஏன் இறைவா...?

☼ அன்றைய காலத்து வரலாற்று பெருமை தேவையா இல்லையா என்பதை விவாதம் செய்வதை விட, நீ என்ன செய்து நாளைய சந்ததியினருக்கு இன்றைய காலக்கட்டத்தை வரலாற்று பெருமையாக மாற்றப் போகிறாய் யென்று தினமும் என்னையே நான் கேள்விக்கு உள்ளாக்குகிறேன்...!

☼ இங்கே பலருக்கு வீரம் என்பது அடி உதை மட்டும் தான். அதுமட்டுமே அவர்களது எண்ணத்தில் ஊறி போய் இருக்கிறது.ஒன்றின் அழிவு மட்டுமே இன்னொன்றின் வீரம் என்பது தான் அவர்களின் வரையறை.மேலும், ஒன்று அழியும் நிலையில் மற்றொன்று உருவெடுக்கும் என்பதை அறிய மறந்து விடுகிறார்கள்...!


☼ வீரத்தையோ, வீரம் சார்ந்த அடையாளத்தையோ மேலும் வீரத்தை மையப்படுத்திய வேறு நிகழ்வையோ தனிப்பட்ட எந்தவொரு இனக்குழுவும் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முடியாது.வீரம் எல்லோருக்கும் பொதுவான ஒரு குணாதிசயம்.வீரம் என்பது ஒரு பொதுசொத்து;அதை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது...!


- இரா.ச.இமலாதித்தன்