02 ஜூலை 2021

தமிழர்களின் தொல்பொருளாய்வு மீதான வன்மம்!



        "தொல்பொருளாய்வு என்ற வெட்டிவேலை" என்ற தலைப்பில் துக்ளக் இதழ் ஓர் அபத்தமான கட்டுரையை வெளியிட்டு, மீண்டெழும் தமிழ் பண்பாட்டு புதையற்குவியல்களின் மீது தனது வன்மத்தை கக்கிருக்கிறது. தங்களது கற்பனை புராணங்களுக்கு வலு சேர்ப்பதற்காக, இல்லாத சரஸ்வதி நதியை தேட பல்லாயிரம் கோடிகளை வாரி இரைத்து செலவு செய்வதை தட்டிக்கேட்க வக்கில்லாத துக்ளக் இதழ், தமிழர்களின் உண்மை வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய ஆய்வுகள் மேற்கொண்டால், அதை திட்டமிட்டே இழிவு படுத்துகிறது.


        கீழடி மட்டுமல்ல எங்கள் தாய்மடி. அது, புதுக்கோட்டை அருகிலுள்ள பொன்பனை கோட்டை, தூத்துக்குடி அருகிலுள்ள சிவகளை, ஆதிச்சநல்லூர் என தமிழர்களின் ஆதி எச்சங்கள் ஆயிரம் இங்குண்டு. காளையார்கோவில் அருகேயுள்ள இலந்தக்கரை போன்ற தமிழர்களின் பண்பாட்டை இழந்தக் கரைகள் இந்த தேசம் முழுவதும் எக்கசக்கமாய் உண்டு. ஆனால், அதையெல்லாம் ஆய்வு செய்யத்தான் ஆளில்லை.


        இந்த மண்ணையெல்லாம் நோண்டினால் மண் பானைகளும், எலும்புக்கூடுகளுமே கிடைக்கின்றன என இழிவாக பேசும் வாய்களுக்கு, சொந்த மொழி ஏதுமுண்டா? தாய்மொழி, தாய் மண் என்ற ஏதாவது உண்டா? வாயை மட்டுமே நம்பி பசுங்கன்றையும், குதிரையும் நெருப்பிலிட்டு வேள்வி மூலம் வயிறு வளர்த்த கூட்டங்களை, எதிர் கேள்வி எழுப்பும் கூட்டத்தின் பண்பாட்டு மீட்சியை பார்த்து அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. என்ன செய்வது? தமிழர்களின் பல்லாயிரமாண்டு பண்பாட்டு நீட்சியை, முன்பு போல எந்த நூலும் இனி கட்டிப்போட முடியாது.

            நாகரீகமற்று நாடோடிகளாய் திரிந்து நாடு பிடித்த கூட்டத்திற்கு நிரந்தர சுடுகாடுகளோ, இடுகாடுகளோ இருப்பதற்கான வாய்ப்பில்லை. அதனால் தான், ஆதிச்சநல்லூரில் நோண்டியதை நினைத்து அவர்களுக்கு பெரும்பதற்றம் வருகிறது போல. காலங்காலமாக ஒரே இடத்தில் பூர்வகுடிகளாக வாழ்ந்த மக்களுக்கு தானே நிரந்தரமான இடுகாடு கூட இருந்திருக்க முடியும். தமிழர்களது நாகரிகமும், பண்பாடும், தொன்மையும், துக்ளக் போன்ற துக்கடா ஆட்கள் சொல்வது போல, வெறும் மண்பானைகளுக்குள் முடங்கி விடவில்லை. மண் பானையின் கீறல் தானே, எங்கள் இலக்கியத்தரவுகளின் மற்றுமொரு அசைக்க முடியா சான்றாகவும் இருக்கிறது. எழுத்தறிவே இல்லாத நாடோடி மேய்ச்சல் கூட்டம் செவி வழியாக கடத்தி வந்த காலத்திலேயே, மண் பானை செய்யும் வேளாரின் கீறல்களை கூட புரிந்து கொள்ள வாய்ப்பில்லை என்பது தானே இன்றைக்கும் மறுக்க முடியாத பேருண்மை.

            மண்ணை நோண்டுவதே தண்டச்செலவு என கூப்பாடு போடும் போலி தேச பக்தர்களுக்கு, அயோத்தியில் இராமர் கோவில் கட்ட அங்குள்ள மண்ணை நோண்டிய ஆதாரங்களைத்தானே நீதிமன்றங்களில் முன்வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை மறந்து போய்விட்டதோ? அங்கே, புத்தனும், சிவனும் கிடைத்த இடத்தில் இராமனுக்கு கோவில் எழுப்பப்படுகிறது என்பது வேறு கதை.

            நாட்டு காளைகளை பீட்டாவோடு பின் நின்று கொல்ல துடித்ததை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொழுது புரிந்து கொள்ள முடிந்தது. கோமாதா எங்கள் குலமாதா என ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, ஆண்டுதோறும் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் சம்பாரிக்கும் தேசப்பக்தர்களின் உண்மை முகத்தையும் அறியாமல் இல்லை. மாதந்தோறும் விழாக்களில் கோவிலுள் வலம் வந்த காளைகளை, வெறும் நந்தி சிலைகளாக்கி, பாலூற்றும் பிரதோச வழிபாடு நடத்தும் வரலாற்று திரிபுகளை உருவாக்கிய ஆன்மீக அயோக்கியத்தனத்தை அடையாளம் காணாமல் விட்டதன் விளைவைத்தான், இத்தனை நூற்றாண்டுகள் அனுபவித்து வருகின்றோம் என்பதை மறுப்பதற்கில்லை.

            தமிழ்நாட்டிலிருந்து சென்று கொரியாவையே ஆண்ட செம்பவளம் என்ற தமிழ் பேரரசியை கூட, வடக்கத்தியராக்கிய பெருமை, ஆரிய சித்தாந்த தொல்பொருள் ஆய்வாளர்களின் கைங்கர்யத்தை கண்கூடாகவே கண்டு வருகின்றோம். ஆய் குடியை அயோத்தியாக்கிய வரலாற்று திருடர்களின் ஆதிக்கமே இங்கே இன்னமும் கோலொச்சி நிற்கின்றன. அடுத்தவனின் வரலாற்றை திருடி தனதாக்கும் போக்கு இந்த நாடோடிகளுக்கு கை வந்த கலை என்பதற்கு , கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும், யோகாவும் கூட குறிப்பிடதக்க ஒரு சில சான்றுகளாகும். தமிழ் மருத்துவமான சித்தர் மருத்துவத்தை ஆயுர்வேதமாக்கியதும், முருகனை சுப்பிராமணியம் ஆக்கியதும், ஆசீவகத்தை அபகரித்ததும் என அடுக்கடுக்காக சொல்ல ஆயிரம் திருட்டுத்தனங்கள் இங்கே உண்டு.


            சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது தான் என்பதை மெய்ப்பிக்க தொடர்ச்சியாக சான்றுகள் கிடைத்து கொண்டிருப்பதும் அந்த மண்ணை நோண்டித்தான் என்பதை இங்கேயும் சுட்டிக்காட்ட வேண்டிருக்கிறது. சிந்து விட்ட இடமும், கீழடி தொட்ட இடமும் தமிழரின் தொன்மைகள் தான் என்பதை சான்றுகளின் அடிப்படையில் மறுப்பதற்கு யாருமில்லை என்பதே தமிழின் வளமை. எங்கள் வழிபாட்டை, எங்கள் கடவுளை, எங்கள் மொழியை, எங்கள் அறிவை திருடிக்கொண்டு, கடைசியாக எங்களையே முட்டாளாக்கிய காலம் இனி முடிவுக்கு வந்து விட்டது. இங்கே மண்ணை மட்டுமல்ல, எதை நோண்டினாலும் தமிழரின் பண்பாடும், பெருமையும், தொன்மையும், வரலாறும் மட்டுமே மிஞ்சி இருக்கும். இனியும் ஏமாற தமிழர்கள் தயாராக இல்லை. எத்தனை வசவுகள் எங்கள் மீது வந்தாலும் தமிழர் வரலாறு மீண்டெழும். இதை எந்த கொம்பனும் தடுக்க முடியாது.

            அகண்ட பாரதத்தை கட்டியமைப்போம் என சொல்லும் யாராகினும், காலம் முழுக்க பொய்ப்புராணங்களை மட்டுமே இங்கே முன்னிறுத்த முடியாது. அனைத்திற்கும் ஆதாரம் வேண்டுமெனில் மண்ணை நோண்டித்தான் நிரூபணம் செய்ய வேண்டும். அன்று போல், மூன்றடி மண் கேட்டு மாவலி சக்கரவர்த்தியை சூழ்ச்சியாக கொன்றான் வாமனன் என்ற பொய்க்கதை சொன்ன காலமெல்லாம் இங்கே மாறி போச்சு. எங்கள் முப்பாட்டன் மாவலியை போல, எம் மண்ணை இழக்க நாங்கள் யாரும் ஏமாளிகள் இல்லை.

            அலெக்சாண்டர் கன்னிங்காம் என்ற ஆங்கிலேய அதிகாரி தான்,  இந்தியத் தொல்லியல் ஆய்வின் தந்தை என்பதை ஆங்கிலேய விசுவாசிகளான துக்ளக் ஆதரவு ஆட்கள் மறந்திருக்க மாட்டார்கள். அப்படி, நாடோடிகளாக பிழைக்க வந்த ஐரோப்பிய அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்த எங்கள் மண்ணை மீட்பதற்காக, எழுத்துப்பூர்வமாக முதற் போர்ப்பிரகடனத்தை அறிவித்து, இம்மண்ணுக்காக தங்களது உயிர் மட்டுமல்லாது, ஐநூறுக்கும் மேற்பட்ட தங்கள் குடிவழி உறவுகளையும், மக்களையும் இழந்த மாமன்னர் மருதுபாண்டியர்கள் வாழ்ந்த மண் இது. அவர்களை போன்ற மக்கள் போராளிகளின் வழிவந்த எங்களின் மண்ணை நோண்டி எங்கள் வரலாற்றை மீட்டெடுக்க கூடாதென சொல்ல யாருக்கும் இங்கே அருகதை இல்லை.

            பழனி முருகனை நோண்டி வயிறு வளர்த்த கூட்டத்தை பெருந்தன்மையாக விட்டதன் விளைவு, எங்களையே ஏன் மண்ணை நோண்டுகிறாய் என கேட்க துணிச்சல் வந்திருக்கிறது. எங்கு நோண்டினாலும் உங்களுக்கென தனித்த எந்தவொரு பழமையான வரலாறும், சான்றும் கிடைக்க போவதில்லை என்ற வெறுப்பில் புலம்பி எந்த பலனும் இனி கிடைக்க போவதில்லை.

            மண் என்பதற்கான பொருள் வேள் என்பதாகும். மண்ணை நோண்டியவர்களே வேளாராகவும், வேளாளராகவும், வேளீராகவும் உருவெடுத்தார்கள் என்பதே யாராலும் மறுக்கவே முடியாத வரலாறு. அரசவுருவாக்கம் என்பதே மண்ணை நோண்டியதிலிருந்தே உலகெங்கும் உருவெடுத்தது. இன்னும் சொல்லப்போனால், மனித நாகரீகமும், நகர மயமாக்கலும் மண்ணை நோண்டியதால் தான் என்பது கடந்தகால வரலாற்று உண்மை. அந்த மண்ணை நோண்டுவதையே பெருங்குறையாக சொல்லி இழிவுபடுத்தும் கண்காணிகளை இழிபிறவிகளாகவே கருத வேண்டிருக்கிறது.

            பூர்வகுடி மக்களை ஏதிலிகளாக்கி, அவர்களது மண்ணை கைப்பற்றி, பெட்ரோல் டீசலுக்காகவும், தங்கம் வைரத்திற்காகவும், மீத்தேன், ஈத்தேனெ என கனிம வளத்திற்காகவும் அந்த பூர்வ குடிகளின் மண்ணை நோண்டும் வெட்டி வேலை செய்யும் அரசாங்கத்திற்கு ஆதரவாக பஜனை பாடும் கும்பல்கள், தொலைந்து போன தமிழரது வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் எங்களை இழிவாக சித்தரிக்க வேண்டியதின் வன்மமும் அதன் பின்னணியும் எங்களுக்கு புரியாமல் இல்லை. காலம் உங்களை மீண்டும் வைக்க வேண்டிய இடத்தில் நிச்சயம் வைக்கும். அதுவரை எங்களை விமர்சித்து கொண்டே இருங்கள். விடியல் பிறப்பதை யாரால் நிறுத்த முடியாது. ஏனெனில், இனி எங்கள் காலம். உலக நாகரீகங்கள் அனைத்தும், மண்ணை நோண்டிய வெட்டி வேலையினால் தான் உருவாகி இருக்கின்றன. அப்படியான நாகரீகங்களின் மிகத்தொன்மையான தமிழர்களது நாகரீகமும் இம்மண்ணை நோண்டிய வெட்டி வேலை செய்ததால் தான் உருவானது. எனவே, தொல்பொருளாய்வு எனும் இந்த மண்ணை நோண்டும் வெட்டி வேலை இங்கே தொடர்வது காலத்தின் தேவை. அதுவே, உங்களைப்போன்ற கங்காணிகளிடமிருந்து மீள தமிழர்களுக்கான வெற்றி ஓலை!

- இரா.ச. இமலாதித்தன்