16 ஆகஸ்ட் 2011

மனம் குரங்கு! மதம் சேவல்! நான் இனி...?



என்னன்னமோ சிந்தனைகள் மனதுக்கும்,மூளைக்கும் இடையே பயணித்துக்கொண்டிருக்கும் இந்த மாலைநேர வேளையில் எதையாவது ஒன்றை எழுதி பதிவேற்றி விடவேண்டுமென்ற எண்ணத்தோடு எழுத ஆரம்பிக்கின்றேன்.ஆனாலும் இன்னும் என்னவென்பது முடிவு செய்யப்படவில்லை.

காலம் என்ற இயந்திர குதிரை எவ்வளவு வேகமாக நம்மை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை யோசிக்கும் வினாடிகளில் கூட அது பல மைல்களுக்கு அப்பால் கடந்து மறைகிறது.இதையேன் இப்போது சொல்கிறேனென்றால், என்னைப்பற்றிய ஒரு பின்னோக்கிய பயணத்தைதான் இங்கே தொடரப்போகிறேன் என்பதாலேயே.

நாகப்பட்டினம் சோழர்களுக்கு மட்டுமில்லாமல் சாமானியனான எனக்கும்கூட பட்டினமாகவே திகழ்ந்து வருகிறது.வேளாங்கண்ணியில் கிருத்துவமும், நாகூரில் இசுலாமும் இங்கே அரவணைக்க படுவதோடு, ஒரு மாதம் மேலாக திருவிழாக் காணும் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் போல, பல கோயில்களோடு இந்துக்களுக்கும் உறைவிடமாய் இருந்து வருகிறது. இது நான் பிறந்த ஊரு என்பதால் மட்டுமே தூக்கி பிடிக்கவேண்டிய அவசியமில்லை.ஆனாலும் மும்மதத்தையும் முழுதாய் ஏற்கும் நாகப்பட்டினத்திலே பிறந்தேனென்று சொல்லிக் கொள்வதுகூட, என்னை சார்ந்த ஓர் உள்ளார்ந்த செய்திக்கான ஒரு முடிச்சே என்பதையும் அடுத்தடுத்த வரிகளில் நீங்களே புரிந்துகொள்ள நேரிடும்.

நாகை அரசு மருத்துவமனையில் நான் பிறப்பெடுத்த அந்நாளின், என் தாயின் கட்டிலுக்கு இருபுறமும் குழந்தை பெற்றெடுத்தது இசுலாம்,கிருத்துவம் மதத்தை சார்ந்த நாகைப்புறவாசிகளே.

நான் பிறந்த தேதியில் அதே மருத்துவமனையில் பத்து பதினைந்து பேரு பிறந்திருக்கலாம்.ஆனாலும் இன்றைக்கும் எனக்கு நினைவுக்கு வருவது, இந்த இரண்டு குடும்பங்களை தான். இங்கே குடும்பம் என்பதை குறிப்பிடுவதை விட, இரண்டு மதத்தினர் யென்று சொல்வதுதான் எனக்கு சரியாக இருக்கும்.

என்னுடைய எண்ணவோட்டங்களால் நான் ஒரு மதவாதியாய் இருப்பது போல உங்களது பார்வைக்கு தெரியக்கூடும். ஆனால் அது அப்படியானதல்ல. பிறர் மதங்களை மதிக்கவும், தன் மதத்தை நேசிக்கவும் பழகிக்கொண்டிருக்கிறேன்.இது சமீபத்தில் வந்த சிந்தனையாகக்கூட இருக்கலாம்; ஆனாலும் முன்கூட்டியே வந்திருந்தால், ஒருசில நிகழ்வுகளில் வெகுசிலரை எழுத்துகளால் காயப்படுதிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.பட்டறிந்த பின்பு வரும் ஞானமெல்லாம், இந்த பட்டறிவு தருவதில்லை.

அரட்டை,வம்பு,விடாப்பிடியான பேச்சு என்றெல்லாம் இன்றைய பொழுதுகளில், நான் தீவிரமாய் இயங்கினாலும்  நான் பிறந்த அரைமணி நேரம் வரையிலும் நான் எந்த வித அழுகையோ,முனகல்கலையோ, கத்தலுமின்றி அப்படியே கிடந்தேனாம். அப்போது அழுது துடித்த என் பாட்டியும், அம்மாவும் இருக்கின்ற கடவுளுக்கெல்லாம் விண்ணப்பம் வைத்துக்கொண்டிருந்த வேளையில், அருகிலுள்ள இரு மதத்தினரும் ஏசுவையும், அல்லாஹ் வையும்  வேண்டி சேவல் வேண்டிவிட சொன்னார்களாம்.அதுபோலவே, நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி சர்ச்சென்று மூன்று ஆன்மீகத்தலங்களுக்கும் வேண்டுதலை வைக்க, அரைமணி நேரத்திற்கு பின்பாக நான் அழத்தொடங்கினேனாம்.நல்லோரை வாழ வைக்கவும், தீயோரை வீழ வைக்கவும் மட்டுமே தேவைப்பட்ட இறைவன் என்னை அழ வைக்கவும் கூட தேவைப்பட்டிருகிறான்.அந்த இறைவன் அருளால் நான் சந்தோசமாகவே இருக்கிறேன் இப்போதும் கூட.

மதம் என்ற வழியில் பயணிக்கும்போது, பாதை மாறுமே  தவிர  இறைவனென்ற ஊர் ஒன்றாகவே இருக்கும்.