11 ஜூன் 2021

எதனடிப்படையில் டெல்டா மாவட்டங்களுக்கு ஊரடங்கு?



 அன்பிற்கினிய டெல்டா பகுதி வாழ் மக்களே!


தினசரி கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டமே இல்லை. மயிலாடுதுறையையும் நாகப்பட்டினம் மாவட்ட கணக்கிலேயே இதுவரை காட்டி வருகின்றனர். அப்படி பார்த்தால், இன்றைய நிலவரப்படி இந்த இரு மாவட்டங்களையும் சேர்த்து பாதிப்புள்ளானவர்களின் எண்ணிக்கை - 482 பேர். அப்படியெனில் சராசரியாக நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் 240 பேர் என ஒரு கணக்கிற்கு கொள்ளலாம். கொஞ்சம் ஏற்றமிறக்கம் இருந்தாலும், இவ்விரு மாவட்டங்களின் தினசரி பாதிப்பு 250 பேர் என வைத்து கொள்வோம். அடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய பாதிப்பு 272 பேர். அப்படியெனில் இந்த மூன்று மாவட்டங்களிலும் சராசரி பாதிப்பு 250 பேர் தான் வருகின்றது.
அப்படியே இதே கணக்கீடோடு சென்னையை எடுத்து கொண்டால் இன்றைய ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி, 1094 பேர் என அரசு கணக்கு காட்டிருக்கிறது. ஆயிரம் பேர்களுக்கு மேல் தினசரி பாதிப்புள்ளாகும் சென்னைக்கு ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையோடு ஒப்பிடும் பொழுது நான்கில் ஒரு பங்கான தலா 250 பேர் தினசரி பாதிப்புக்குள்ளாகும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்னும் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
எதிர்க்கேள்வி கேட்க கூட ஆளில்லை என்பதால், அரசாங்கம் என்ன சொன்னாலும் தலையாட்டும் மந்தை புத்தி கொண்ட மக்கள் வேடிக்கை மட்டும் பார்த்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை மூடச்சொன்ன மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டரசோ, இன்று சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்திருக்கிறது. சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இவையெல்லாம் என்ன மாதிரியான கணக்கீடுகளென்றே தெரியவில்லை. எல்லாம் ஆள்பவர்களுக்கே வெளிச்சம்!
- இரா.ச. இமலாதித்தன்

09 ஜூன் 2021

PhD பரிதாபங்கள்!


#ஒன்றிய_உயிரினங்கள் என ட்விட்டரில் இருநாட்களாக ட்ரெண்டிங்கான பல பதிவுகள் சுவாரசியமாக இருந்தன.
என் கடந்த கால பணியின் அனுபவங்களில் #முனைவர்_உயிரனங்கள் பலரை நெருங்கி கவனித்திருக்கிறேன். பழகிருக்கிறேன். அவர்களின் உண்மை முகத்தை கண்டிருக்கிறேன்.
கிணற்று தவளை,
கண்ணை மூடிய பூனை,
செம்மாறியாடு,
கூண்டுக்கிளி,
அட்டைப்பூச்சி,
எருமைமாடு
என பல PhDக்களில், போலிகளும், வெற்று பிம்பங்களுமே இருந்தன. 'தான்' என்ற பெருங்கூச்சல்கள் மட்டுமே அங்கே தென்பட்டன. வாட்சப் குரூப்பில் ஆங்கிலத்தில் எழுதுவதாக நினைத்து அடிப்படை வார்த்தைகளில் கூட ஆறேழு பிழைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். வேர்ட் ஃபைல்லோ, எக்‌ஸல் ஃபைலோ கூட ஒழுங்காக உருவாக்க தெரியாமல் முழி பிதுங்கியதை பார்த்திருக்கிறேன். அடிப்படை ஸ்போக்கன் இங்லீஷ் கூட தெரியாமல் தங்லீஷில் மேடையேறி ஒப்பேற்றியதை கவனித்திருக்கிறேன்.
கணினித்துறையில் பிஎச்.டி பெற்றவர்களுக்கு, அப்ளிகேசன் தொடர்பான சர்வர்களுக்கும், ஆப்ரேட்டிங் சிஸ்டம் தொடர்பான சர்வர்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாததை பார்த்து வியப்படைந்திருக்கிறேன். நெட்வொர்க்கிங் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாதவர்கள், அதே கணினித்துறையில் பிஎச்.டி பெற்றிருந்ததை விட, அது தொடர்பாக மாணவர்களிடம் பாடமெடுப்பதற்காக Non Teaching ஊழியர்களிடம் பாடம் கேட்டு ஓடிக் கொண்டிருந்ததையும் பார்த்திருக்கிறேன்.
இதுபோல சொல்ல ஆயிரம் நிகழ்வுகள் உண்டு. 'பல' வகைகளில் கெயிடை கரெக்ட் செய்து முனைவர் ஆனவர்களே அதிகம் இருப்பதையும் பல ஆதாரங்களின் அடிப்படையில் மெய்ப்பொருள் கண்டறிந்த பிறகே, கல்லூரிகளின் கல்வித்தரத்தை எடைபோட முடிந்தது. விதிவிலக்குகள் எல்லா இடத்திலும் உண்டு. நான் பேசுவது பெரும்பான்மைகளை பற்றி.
எனவே, பிஎச்.டி முடித்த முனைவர்கள் அனைவருமே அதிமேதாவிகளோ, அதிபுத்திசாலிகளோ அல்ல. அவர்களுக்கு எல்லாவித துறைசார் அறிவும் இருப்பதில்லை என்ற எதார்த்தத்தையும் ஒத்துக்கொள்ள பழகுங்கள். ஏனெனில் அவரவர் துறையிலேயே பதில் சொல்ல முடியாத விசயங்கள் ஆயிரமுண்டு. மீண்டும் சொல்கிறேன், இங்கே விதிவிலக்குகளை பேசவே இல்லை. ஆனால், கூத்தாடும் குறைகுடங்களையே சுட்டிக்காட்டிருக்கிறேன்.
- இரா.ச. இமலாதித்தன்

02 ஜூன் 2021

என் பார்வையில் இளையராஜா!



சிறு நகரங்களில் இயங்கும் தனியார் பேருந்துகளின் தனிச்சிறப்பே இளையராஜா பாடல்கள் தான். இன்றைக்கும் பட்டி தொட்டியெங்கும் பிரைவேட் டவுன் பஸ்களின் மவுசுக்கு இதுவே முதற்காரணம்.
பனிக்கால ஜன்னலோர இருக்கை, மாலை நேர ரயில் பயணம், மழைச்சாரல், சூடான காபி, தன்னந்தனியாய் நெடுந்தூர பயணம், என எந்த மாதிரியான சூழலையும் இளையராஜா பாடல்களே பலரது மனதையும் குதூகலமாக்குக்கின்றன.
2k கிட்ஸ், 90s கிட்ஸ், 80s கிட்ஸ்(?) என யாராக இருந்தாலும், இளையராஜா பாடல்கள் இல்லாமல் அவர்களது வீட்டு காதணி விழா, திருமணங்கள் உள்பட எந்த சடங்குகளும் முழுமை அடைவதே இல்லை.
கோவில் திருவிழாக்காலங்களிலும், பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜையென ஆண்டுதோறும் நடக்கின்ற எல்லா கொண்டாட்டங்களிலும் இன்றைய சந்தோஷ் நாராயணன் காலத்திலும் அன்றைய இளையராஜா பாடல்களை ஒலிபரப்பாமல் எந்த திருவிழாவும் முடிவடைவதில்லை.
காதல் தோல்வி, ஏமாற்றம், விரக்தி, துரோகம், பொருளாதார நெருக்கடியென பல விதங்களில் தனித்து விடப்பட்டவர்களின் மனங்களிலுள்ள காயா ரணங்களுக்கான ஒரே மருந்து இளையராஜா பாடல்களே. மதுவும், புகையும் உடலுக்கு கேடெனும் பொழுதும் அந்த இரண்டோடும் கூடி கொஞ்சி குலாவும் வேளையிலும் செவிகளில் பாயும் இளையராஜாவின் இசைகளே ஒரு சாராருக்கு சொர்க்க போதையாக இன்றளவும் இருக்கிறது.
இதுபோல சுட்டிக்காட்ட எத்தனையோ செய்திகள் இளையராஜாவின் இசையில் ஆயிரம் உண்டு. ஒரு பானை சோற்றுக்கு எத்தனை சோற்றை பதம் பார்ப்பது? எளிமையாக சொல்ல வேண்டுமெனில், பெரு மகிழ்ச்சியோ, கடுங்கோபமோ, மீளாத்துயரமோ, இப்படியான எல்லாவித உணர்வுகளுக்கும் தீனி போடும் ஒரே மருந்து இளையராஜாவின் இசை தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. எளிதாக சொல்ல வேண்டுமெனில், இன்றைய அசுர வளர்ச்சியடைந்த சமூக ஊடகங்களில் இளையராஜா பாடல்களை பகிராத பதிவர்களே இல்லையென சொல்லலாம். வாட்சப் ஸ்டேடஸ், பேஸ்புக் ஸ்டோரி, டிவிட்டர், இன்ஸ்டாகிராமென இளையராஜா தான் பலரின் ஒரே ஆபத்துதவி கண்டன்ட். விமர்சனம் செய்தாவது அவரை நினைப்படுத்திக் கொண்டே இருக்கும் நபர்களும் இங்குண்டு. அவர்கள் பத்தில் ஓரிரண்டு ஆட்களாக இருப்பார்கள்.
இளையராஜாவை வானளாவ உயர்த்துவதால் எம்.எஸ்.விசுவநாதனும், டி.கே.இராமமூர்த்தியும், கே.வி. மகாதேவனும், ஏ.ஆர்.ரஹ்மானும், யுவன் சங்கர் ராஜாவும், ஜி.வி.பிரகாஷ்ராஜூம் எங்கேயும் குறைந்தவர்களாக்கப் படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். டி.ராஜேந்தரும், சங்கர் போஸூம், கங்கை அமரனும் கூட இளையராஜாவின் இசைக்கு நிகரான பல சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கின்றனர். அவர்களது பாடல்களையும் இளையராஜவின் கணக்கில் எழுதி, ரசித்து வருவோரின் எண்ணிக்கை இங்கே ஏராளம். இன்றைய நாட்களில் இசை ரசிகர்களால் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்படும் ஹாரீஸ் ஜெயராஜின் எத்தனையோ பாடல்களுக்கு பல லட்சம் பேர் வெறியர்களாக இருப்பது தான் இந்த இசையின் வெற்றி.
புனிதமென்றோ, இழுக்கென்றோ இசையில் எதுவுமில்லை. காப்புரிமைக்காக தன் பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்துவதில் நடந்து கொண்ட விதமும், தற்புகழ்ச்சியும், கோபமும் என இளையராஜா மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. ஏற்கிறேன். ஆனாலும், அவரவர் செவியும், மனமும், அறிவும் முடிவு செய்யும் வரையறைகளுக்கு இளையராஜா போன்ற சமகால இறைத்தூதர்களை புறந்தள்ளுவது அறமாகாது. ஏ.ஆர்.ரஹ்மானை போலவே இளையராஜாவின் இசையையும் ரசிக்கும் பாமரனனாக எனக்குண்டான திருப்தியில் இப்பதிவை எழுதிருக்கின்றேன். அவர், இவரென இசையில் யாரும் பெரிதில்லை. இசையே பெரிது தான். உங்களுக்குள் உள்ள இறைவனை, விலகி நின்று அருகில் தரிசிக்கும் மாயவித்தை இசைக்குள் உள்ளது. எனவே அதை அனுபவியுங்கள். இசையோடு வாழுங்கள்; உங்களோடு இளையராஜாவும் வாழ்வார்!
- இரா.ச. இமலாதித்தன்

பின்னிணைப்பு:

OTD Facebook Memories!
தனிமையில் இரவோடு தவித்த பொழுதுகள் எல்லாமே, உன் இசையாலே சுகமாய் கழிந்தது. ஆன்மீக ஞானம் உள்ளவனாலேயே மிகப்பெரும் இசை கலைஞனாக உருவெடுக்க முடியுமென்பதை உலகிற்கு நிரூபித்து, கடுந்தவம் செய்த ஞானி பெறும் வரம் அவரை மட்டுமே சாரும்போது, உன் தவத்தால் நீ பெற்ற வரம் உன்னைவிட எங்களையல்லவா சந்தோசப்படுத்திக் கொண்டிருக்கிறது. தொடரட்டும் உன் தவம்.
இசைஞானிக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2012

*

தென்கோடி பண்ணைபுரத்தை பலகோடி பேர்களுக்கு பாதை போட்டு காட்டி, இசை போதையூட்டிய இளைய இசையரசனுக்கு என்றும் பதினாறே!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2015

*

இரவு நேர ரயில் பயணங்களிலும், நெடுந்தூர பேருந்து ஜன்னலோர இருக்கையிலும், ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை பைக் பயணத்திலும், உறக்கம் தொலைத்த எல்லா இரவுகளிலும், இதுபோல பல நேரங்களில் இசையே என்னோடு நட்பின் துணையாய், தாயின் ஆறுதலாய் இருந்திருக்கிறது.
என்னை ஆட்கொண்ட பெரும்பாலான இசையின் காரணகர்த்தாவாக விளங்கும் இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். ஆன்மீகப்பற்றுள்ள எங்கள் இசையாண்டவன், இன்னும் பல ஆண்டுகள் அந்த இறையருளால் நீடுழி வாழட்டும்!
'ஏழை பேச்சு அம்பலம் ஏறாது' என்ற கருத்தியலை உடைத்தெறிந்து, இசையுலகில் புது ராஜாங்கம் அமைத்து, அதை அவாளுக்கும் பறைசாற்றிய இசையரசனின் கடைகோடி பாமர ரசிகர்களில் ஒருவனாக என் வாழ்த்துகளும்!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2016

01 ஜூன் 2021

சுப்பிரமணிய சுவாமியும், பழனிவேல் ராஜனும்!



நாயக்கர் ஆட்சியின் முதல் மன்னனான விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலமான 1529–1563 ஆண்டுகளில் தளவாயாக இருந்தவர் அரியநாத முதலி. இவரது வழித்தோன்றலே பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

நாயக்கர் ஆட்சியின் குறிப்பிடத்தக்க மன்னரான திருமலை நாயக்கர் ஆட்சிக்காலமான 1623–1659 ஆண்டுகளில் தளவாயாக இருந்தவர் ராமப்ப ஐயர். இவரது வழித்தோன்றலே சுப்பிரமணிய சுவாமி.

பெரும்பான்மை தமிழர்களின் வீழ்ச்சி இக்காலக்கட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.




படம் 1: குடியரசு இதழில் பெரியார் ஈ.வெ.ராவின் இரங்கல் தலையங்கம்.





படம் 2: சுப்பிரமணிய சுவாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது ஒப்புதல் வாக்கு மூலம்.

- இரா.ச. இமலாதித்தன்