11 ஜூன் 2021

எதனடிப்படையில் டெல்டா மாவட்டங்களுக்கு ஊரடங்கு?



 அன்பிற்கினிய டெல்டா பகுதி வாழ் மக்களே!


தினசரி கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டமே இல்லை. மயிலாடுதுறையையும் நாகப்பட்டினம் மாவட்ட கணக்கிலேயே இதுவரை காட்டி வருகின்றனர். அப்படி பார்த்தால், இன்றைய நிலவரப்படி இந்த இரு மாவட்டங்களையும் சேர்த்து பாதிப்புள்ளானவர்களின் எண்ணிக்கை - 482 பேர். அப்படியெனில் சராசரியாக நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் 240 பேர் என ஒரு கணக்கிற்கு கொள்ளலாம். கொஞ்சம் ஏற்றமிறக்கம் இருந்தாலும், இவ்விரு மாவட்டங்களின் தினசரி பாதிப்பு 250 பேர் என வைத்து கொள்வோம். அடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய பாதிப்பு 272 பேர். அப்படியெனில் இந்த மூன்று மாவட்டங்களிலும் சராசரி பாதிப்பு 250 பேர் தான் வருகின்றது.
அப்படியே இதே கணக்கீடோடு சென்னையை எடுத்து கொண்டால் இன்றைய ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி, 1094 பேர் என அரசு கணக்கு காட்டிருக்கிறது. ஆயிரம் பேர்களுக்கு மேல் தினசரி பாதிப்புள்ளாகும் சென்னைக்கு ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையோடு ஒப்பிடும் பொழுது நான்கில் ஒரு பங்கான தலா 250 பேர் தினசரி பாதிப்புக்குள்ளாகும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்னும் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
எதிர்க்கேள்வி கேட்க கூட ஆளில்லை என்பதால், அரசாங்கம் என்ன சொன்னாலும் தலையாட்டும் மந்தை புத்தி கொண்ட மக்கள் வேடிக்கை மட்டும் பார்த்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை மூடச்சொன்ன மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டரசோ, இன்று சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்திருக்கிறது. சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இவையெல்லாம் என்ன மாதிரியான கணக்கீடுகளென்றே தெரியவில்லை. எல்லாம் ஆள்பவர்களுக்கே வெளிச்சம்!
- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக