02 ஜூன் 2021

என் பார்வையில் இளையராஜா!



சிறு நகரங்களில் இயங்கும் தனியார் பேருந்துகளின் தனிச்சிறப்பே இளையராஜா பாடல்கள் தான். இன்றைக்கும் பட்டி தொட்டியெங்கும் பிரைவேட் டவுன் பஸ்களின் மவுசுக்கு இதுவே முதற்காரணம்.
பனிக்கால ஜன்னலோர இருக்கை, மாலை நேர ரயில் பயணம், மழைச்சாரல், சூடான காபி, தன்னந்தனியாய் நெடுந்தூர பயணம், என எந்த மாதிரியான சூழலையும் இளையராஜா பாடல்களே பலரது மனதையும் குதூகலமாக்குக்கின்றன.
2k கிட்ஸ், 90s கிட்ஸ், 80s கிட்ஸ்(?) என யாராக இருந்தாலும், இளையராஜா பாடல்கள் இல்லாமல் அவர்களது வீட்டு காதணி விழா, திருமணங்கள் உள்பட எந்த சடங்குகளும் முழுமை அடைவதே இல்லை.
கோவில் திருவிழாக்காலங்களிலும், பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜையென ஆண்டுதோறும் நடக்கின்ற எல்லா கொண்டாட்டங்களிலும் இன்றைய சந்தோஷ் நாராயணன் காலத்திலும் அன்றைய இளையராஜா பாடல்களை ஒலிபரப்பாமல் எந்த திருவிழாவும் முடிவடைவதில்லை.
காதல் தோல்வி, ஏமாற்றம், விரக்தி, துரோகம், பொருளாதார நெருக்கடியென பல விதங்களில் தனித்து விடப்பட்டவர்களின் மனங்களிலுள்ள காயா ரணங்களுக்கான ஒரே மருந்து இளையராஜா பாடல்களே. மதுவும், புகையும் உடலுக்கு கேடெனும் பொழுதும் அந்த இரண்டோடும் கூடி கொஞ்சி குலாவும் வேளையிலும் செவிகளில் பாயும் இளையராஜாவின் இசைகளே ஒரு சாராருக்கு சொர்க்க போதையாக இன்றளவும் இருக்கிறது.
இதுபோல சுட்டிக்காட்ட எத்தனையோ செய்திகள் இளையராஜாவின் இசையில் ஆயிரம் உண்டு. ஒரு பானை சோற்றுக்கு எத்தனை சோற்றை பதம் பார்ப்பது? எளிமையாக சொல்ல வேண்டுமெனில், பெரு மகிழ்ச்சியோ, கடுங்கோபமோ, மீளாத்துயரமோ, இப்படியான எல்லாவித உணர்வுகளுக்கும் தீனி போடும் ஒரே மருந்து இளையராஜாவின் இசை தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. எளிதாக சொல்ல வேண்டுமெனில், இன்றைய அசுர வளர்ச்சியடைந்த சமூக ஊடகங்களில் இளையராஜா பாடல்களை பகிராத பதிவர்களே இல்லையென சொல்லலாம். வாட்சப் ஸ்டேடஸ், பேஸ்புக் ஸ்டோரி, டிவிட்டர், இன்ஸ்டாகிராமென இளையராஜா தான் பலரின் ஒரே ஆபத்துதவி கண்டன்ட். விமர்சனம் செய்தாவது அவரை நினைப்படுத்திக் கொண்டே இருக்கும் நபர்களும் இங்குண்டு. அவர்கள் பத்தில் ஓரிரண்டு ஆட்களாக இருப்பார்கள்.
இளையராஜாவை வானளாவ உயர்த்துவதால் எம்.எஸ்.விசுவநாதனும், டி.கே.இராமமூர்த்தியும், கே.வி. மகாதேவனும், ஏ.ஆர்.ரஹ்மானும், யுவன் சங்கர் ராஜாவும், ஜி.வி.பிரகாஷ்ராஜூம் எங்கேயும் குறைந்தவர்களாக்கப் படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். டி.ராஜேந்தரும், சங்கர் போஸூம், கங்கை அமரனும் கூட இளையராஜாவின் இசைக்கு நிகரான பல சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கின்றனர். அவர்களது பாடல்களையும் இளையராஜவின் கணக்கில் எழுதி, ரசித்து வருவோரின் எண்ணிக்கை இங்கே ஏராளம். இன்றைய நாட்களில் இசை ரசிகர்களால் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்படும் ஹாரீஸ் ஜெயராஜின் எத்தனையோ பாடல்களுக்கு பல லட்சம் பேர் வெறியர்களாக இருப்பது தான் இந்த இசையின் வெற்றி.
புனிதமென்றோ, இழுக்கென்றோ இசையில் எதுவுமில்லை. காப்புரிமைக்காக தன் பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்துவதில் நடந்து கொண்ட விதமும், தற்புகழ்ச்சியும், கோபமும் என இளையராஜா மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. ஏற்கிறேன். ஆனாலும், அவரவர் செவியும், மனமும், அறிவும் முடிவு செய்யும் வரையறைகளுக்கு இளையராஜா போன்ற சமகால இறைத்தூதர்களை புறந்தள்ளுவது அறமாகாது. ஏ.ஆர்.ரஹ்மானை போலவே இளையராஜாவின் இசையையும் ரசிக்கும் பாமரனனாக எனக்குண்டான திருப்தியில் இப்பதிவை எழுதிருக்கின்றேன். அவர், இவரென இசையில் யாரும் பெரிதில்லை. இசையே பெரிது தான். உங்களுக்குள் உள்ள இறைவனை, விலகி நின்று அருகில் தரிசிக்கும் மாயவித்தை இசைக்குள் உள்ளது. எனவே அதை அனுபவியுங்கள். இசையோடு வாழுங்கள்; உங்களோடு இளையராஜாவும் வாழ்வார்!
- இரா.ச. இமலாதித்தன்

பின்னிணைப்பு:

OTD Facebook Memories!
தனிமையில் இரவோடு தவித்த பொழுதுகள் எல்லாமே, உன் இசையாலே சுகமாய் கழிந்தது. ஆன்மீக ஞானம் உள்ளவனாலேயே மிகப்பெரும் இசை கலைஞனாக உருவெடுக்க முடியுமென்பதை உலகிற்கு நிரூபித்து, கடுந்தவம் செய்த ஞானி பெறும் வரம் அவரை மட்டுமே சாரும்போது, உன் தவத்தால் நீ பெற்ற வரம் உன்னைவிட எங்களையல்லவா சந்தோசப்படுத்திக் கொண்டிருக்கிறது. தொடரட்டும் உன் தவம்.
இசைஞானிக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2012

*

தென்கோடி பண்ணைபுரத்தை பலகோடி பேர்களுக்கு பாதை போட்டு காட்டி, இசை போதையூட்டிய இளைய இசையரசனுக்கு என்றும் பதினாறே!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2015

*

இரவு நேர ரயில் பயணங்களிலும், நெடுந்தூர பேருந்து ஜன்னலோர இருக்கையிலும், ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை பைக் பயணத்திலும், உறக்கம் தொலைத்த எல்லா இரவுகளிலும், இதுபோல பல நேரங்களில் இசையே என்னோடு நட்பின் துணையாய், தாயின் ஆறுதலாய் இருந்திருக்கிறது.
என்னை ஆட்கொண்ட பெரும்பாலான இசையின் காரணகர்த்தாவாக விளங்கும் இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். ஆன்மீகப்பற்றுள்ள எங்கள் இசையாண்டவன், இன்னும் பல ஆண்டுகள் அந்த இறையருளால் நீடுழி வாழட்டும்!
'ஏழை பேச்சு அம்பலம் ஏறாது' என்ற கருத்தியலை உடைத்தெறிந்து, இசையுலகில் புது ராஜாங்கம் அமைத்து, அதை அவாளுக்கும் பறைசாற்றிய இசையரசனின் கடைகோடி பாமர ரசிகர்களில் ஒருவனாக என் வாழ்த்துகளும்!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக