சைவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சைவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 டிசம்பர் 2017

மதமென்பது...

ஆதித்தமிழனுக்கும் ஹிந்து மதத்துக்கும் சம்பந்தமில்லை. ஆதிசங்கரர் தான் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒன்றாக்கினார். சக்தி வழிபாட்டை சாக்தம் என்றும், முருக வழிபாட்டை கெளமாரம் என்றும், கணபதி வழிபாட்டை கணபத்யம் என்றும், சூரிய வழிபாட்டை செளரம் என்றும், பெருமாள் வழிபாட்டை வைஷ்ணம் என்றும், சிவ வழிபாட்டை சைவம் என்றும் ஆறு வழிபாட்டு குழுக்களை ஒரே வட்டத்திற்குள் அடைத்தார். அதற்கு முன் வரை எல்லாம் வேறு வேறு தான். ஐவகை நில தெய்வங்களான குறிஞ்சி -
(சேயோன்) முருகன் , முல்லை - (மாயோன்) திருமால், மருதம் - இந்திரன், நெய்தல் - வருணன், பாலை - கொற்றவை வழிபாட்டை தான், சமகிருதத்திற்கு முன்னோடியான தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.
ஆதித்தமிழனுக்கு இயற்கை வழிபாடு தான் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு நெருப்பு, பிறகு ஐம்பெரும்பூத வழிபாடு, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு என்ற நாட்டார் வழிபாடு தான் இருந்தது; இருக்கிறது. இதில் எங்கேயும் ஹிந்து மதம் வராது. பிற்காலங்களில் சமண-பெளத்த ஆதிக்கத்திலிருந்து, காரைக்கால் அம்மையார் மற்றும் சைவ குரவர்கள் நால்வராலும், நாயன்மார்களாலும் தான், இன்றைய சைவ வழிபாடு கூட மீளெடுக்கப்பட்டது. ஆழ்வார்களால் வைணவம் என்ற மாயோன் வழிபாடு கூட மீட்கப்பட்டது. சுடலை மாடன் என்ற நீத்தார் வழிபாடும், கருப்பசாமி என்ற திருமால் வழிபாடும், முனீஸ்வரன் என்ற சிவ வழிபாடும் தான் தமிழர்களுக்கு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், சிவன் என்பதே ஒரு மன்னன் தான். தென் பாண்டியநாட்டை ஆண்டவன். அதனால் தான் தென்னாடுடைய சிவனானான் அவன். மற்றபடி ஹிந்து என்பது பல மொழி பேசிய, பல இனங்களை கொண்ட பல நூறு சிற்றரசு நாடுகளை ஒன்றிணைத்து ஹிந்தியா என்ற ஒற்றை நாடாக்கிய வல்லபாய் படேலின் யுக்திகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பின் வெளிப்பாடே இது.

27 மே 2017

சைவம்? அசைவம்!


எந்த கடவுளும் நேரடியாக வந்து, இதை சாப்பிடு; அதை சாப்பிடாதே என யாரிடமும் சொல்லவில்லை. தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப, அந்தெந்த பகுதிகளுக்கேற்ப கிடைக்கும் அனைத்தையும் சாப்பிட்டு பரிணாம வளர்ச்சியடைந்தவன் மனிதன் தான். அதன் பிறகு பகுத்தறிந்து இதை சாப்பிடலாம்; அதை சாப்பிட வேண்டமென்று பட்டியலிட்டதும் இந்த மனிதன் தான்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி, முனிவராய், தேவராய் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சொல்கிறார்.

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என சொன்ன இராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் கீரையை கூட சாப்பிடுவதில்லை; காரணம் கீரையை வேர் வரை பிடிங்கி ஓர் உயிரை சாகடித்து உண்பதால் அம்மார்க்கத்தினர் அதை உணவில் சேர்ப்பதில்லை. மாடு மட்டுமல்ல; மாடு சாப்பிடும் புல் கூட ஓர் உயிர் தான். அந்த மாட்டின் ரத்தத்தின் ஒருபகுதியான பால் கூட அசைவம் தான்.

எனவே கடவுளின் பெயரைச்சொல்லியோ, மதவாதிகளின் ஆதரவிற்காகவோ, எதையும் அதிரடியாக தடை செய்வதில் உடன்பாடில்லை. இவ்வுலகில் 'உணவுச் சங்கிலி' என்பது சரியான விகிதத்திலேயே தான் இயற்கையால் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றின் தேவை அதிகமானால், அந்த தேவைக்கான உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே தவிர, அந்த தேவையையே முடக்க கூடாது. உலகளாவிய அளவில் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஹிந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதை கவனித்தாலே, தடை செய்ய வேண்டியது எதுவென புரியும். வணிக சூழ்ச்சிகளால் சூழப்பட்ட உலகமயமாக்கலில் இனப்பெருக்கம் என்பதை கூட மேற்கத்திய நாட்டவன் கொடுக்கும் ஊசியை நம்பி வாழ பழகி விட்டோம். எனவே, நாம் இப்படித்தான் கருத்தடை, பலித்தடையென தடை போட்டு நம் வீரியத்தை தொலைத்து, கண்டவனிடமும் ஜெர்சி மாடுகளை போல இனி வருங்கால சந்ததி உள்பட எல்லாவற்றையும் யாசகம் தான் பெறுவோம்.

மாட்டின் கொம்புகளுக்கு கூட வண்ணம் தீட்ட கூடாதென்று தடை போடும் காரணத்தை கூட ஏனென யாரும் கேட்டதாக தெரியவில்லை. ஒருவேளை கொம்புகளுக்கு வண்ணம் பூசினால் மாடு இறந்துவிடுமா? ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கொம்புக்கு வண்ணமடித்தால் தானே தனி மிடுக்கே வரும்? இதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இன்னைக்கு மாட்டுக்கு தடை போட்டதும் மனமகிழ்கிறோம். ஒருவேளை ஜெயலலிதாவின் அறிவிப்பு போல, நாளை நம் குலசாமி கோவில்களில் பலியிடும் ஆட்டையும், சேவலையும் தடை போடும் சூழல் வரும் போது தான், அதன் தேவை புரியும். மாட்டுக்கறிக்காக எதையும் இங்கு சொல்லவில்லை; மாட்டுக்கறியெல்லாம் சாப்பிடும் பழக்கமும் எனக்கில்லை.

- இரா.ச. இமலாதித்தன்

02 ஆகஸ்ட் 2016

திருவள்ளுவர் சமணரா? திருக்குறள் சமண நூலா?!

”ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” - முதுமொழி

பல்லுக்கு உறுதி தரக்கூடியவைகளில், ஆலமர குச்சியும், வேப்பமர குச்சியும் எந்தளவுக்கு உண்மையோ, அதுபோலவே நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதியென சொல்லிருக்கிறார்கள். இங்கே ”நாலும் இரண்டும்” என்பதில், நாலும் என்பது நான்கு அடிகளை கொண்ட நாலாடியாரும், இரண்டும் என்பது இரண்டு அடிகளை கொண்ட திருக்குறளும் குறிப்பிடப்படுகிறது. மேலும், நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதை என்னால் முடிந்தளவுக்கு சிறிய ஒப்பீடு செய்திருக்கிறேன். அவை;

01. இந்த இரண்டுமே பதினென் கீழ் கணக்கு நூல்களில் இடம்பெற்று இருக்கின்றன.

02. இந்த இரண்டிலுமே, பாடல்களெல்லாம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

03. இந்த இரண்டு அறநூல்களுமே, அறத்துப்பால் - பொருட்பால் - இன்பத்து பால் என்ற மூன்று பெரும்பிரிவுகளை கொண்டுள்ளன.

04. நாலடியாரில், அறத்துப்பால் - 13 அதிகாரங்களும், பொருட்பால் - 24 அதிகாரங்களும், இன்பத்துப்பால் - 3 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 40 அதிகாரங்களை கொண்டுள்ளது.

05. திருக்குறளில், அறத்துப்பால் - 38 அதிகாரங்களும், பொருட்பால் - 70 அதிகாரங்களும், இன்பத்து பால் - 25 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 133 அதிகாரங்களை கொண்டுள்ளது.

06. நாலடியார், மொத்தமாக 40 அதிகாரங்களை கொண்டது; அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என்ற வீதத்தில் 400 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. திருக்குறள், 133 அதிகாரங்களை கொண்டது; அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என்ற வீதத்தில் 1330 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

07. இந்த இரண்டிலுமே, பொருளுக்கு அதிகமான பாடல்களும், அதற்கடுத்து அறத்திற்கு ஓரளவு மிதமான பாடல்களும், மூன்றாவதாக இன்பத்திற்கு குறைவான பாடல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

08. இதிலுள்ள, நாலடியார் என்ற நூலை இயற்றியது சமண முனிவர்கள் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. அதுபோலவே திருக்குறளை இயற்றியதும் சமண மதத்தை சார்ந்த திருவள்ளுவர் என்று அழைக்கப்படும் ஒரு சமணத்துறவி தான் என்பது என் அனுமானம்.

- இரா.ச.இமலாதித்தன்