22 செப்டம்பர் 2021

வாழ்த்துகள் சொல்வதென்ன அத்தனை பிரமாதமான விசயமா?


        ன் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி! இத்தனை பேர்களின் வாழ்த்து என்ன செய்து விட போகிறது? ஒரு பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் சொல்வதென்ன அத்தனை பிரமாதமான விசயமா? என என்னிடம் யாராவது கேட்டால், இல்லையென்றோ ஆமாமென்றோ சொல்லத் தெரியவில்லை.


        ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வரவின் பின்னால் பிறந்தநாள் உள்ளிட்ட எந்தவொரு நாட்களையும், சம்பந்தப்பட்ட நபரே மறந்தாலும் அவரது நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு அந்த நாளிலுள்ள சிறப்பை சுட்டிக்காட்ட அது தயங்குவதில்லை. அப்படித்தான் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிறந்தநாளோ, திருமணநாளோ, நல்லதோ, கெட்டதோ எம்மாதிரியாக இருந்தாலும் கடந்த ஆண்டின் மெமரிஸ் வழியாக கூட அனைவருக்கும் காட்டிக்கொடுத்து விடுகிறது. இப்படியான ஒன்றின் மூலமாக பலரிடமிருந்து பெறப்படும் வாழ்த்துகளை வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது? என்று பலர் நினைக்கவும் வாய்ப்புண்டு. இதில் பெருமை ஏதுமில்லை தான். ஆனால் அதை தாண்டிய ஒரு பலம் அதிலுள்ளது. ”நமக்கென யாருமில்லையோ!” என்ற மிகப்பெரும் தனிமையை அது ஆழ்மனதில் இருந்து நீக்கும் பேரொளியாக இருக்கிறது.


        எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து ஒவ்வோர் ஆண்டுமே, என்னுடைய பிறந்தநாளை பெரிதும் கொண்டாடும் எண்ணவோட்டத்தில் நான் இருந்ததில்லை. இந்த நாளும் மற்றைய நாள் போன்றது தான் என்ற மனநிலையில் தான் இருந்திருக்கிறேன். ஆனாலும், அன்றைய நாள் விடுமுறை நாளாக இருந்தால், வேதாரண்யம் அருகிலுள்ள கடிநெல்வயலில் உள்ள குலதெய்வ கோவிலான (வேம்புடையார் என்கிற) வேம்படி ஐயனாரை தரிசிக்க செல்வேன். வேலை நாட்களெனில், அந்த வாரத்தில் ஒரு நாள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதுண்டு. இல்லையெனில், அன்றைய நாளின் காலையிலோ, மாலையிலோ அருகிலிருக்கும் சிவாலயத்திற்கோ, முருகன் கோவிலுக்கோ செல்வதுண்டு. அதிகபட்சம் ஓர் அர்ச்சனையோடு அன்றைய நாள் கடந்து விடும். ஆனால், நமக்கு மட்டுமே தெரிந்த நாளானது, இந்த சமூக ஊடகங்களின் தயவால் ஊரறிய தம்பட்டம் அடிக்கப்படுகிறது. அந்த ஓசையினால், நானும் ஏதோ ஆடிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி இதில் கொண்டாட்டமோ, பெருமிதமோ வேறொன்றுமில்லை.
 
        இன்னும் சொல்வதென்றால். நான் பிறந்தது ஆங்கில நாட்காட்டி படி, செப்டம்பர் 21. அப்படியானால் தமிழ் மாதம் புரட்டாசி ஐந்தாம் நாள். அதிலும் நட்சத்திரப்படி புரட்டாசி கேட்டை அன்று என் பிறந்தநாள் இதுவென கணக்கிலெடுத்திருக்கிறேன். புரட்டாசி முதல் சனிக்கிழமையை கணக்கில் எடுத்திருக்கிறேன்; புரட்டாசி ஐந்தாம் தேதியை கணக்கிலெடுத்திருக்கிறேன்; புரட்டாசி வளர்பிறை ஷஷ்டி திதியை கணக்கில் எடுத்திருக்கிறேன். இப்படியாக என் பிறந்தநாளை பலவாறு கணக்கில் கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் இதை பற்றி ஆய்வுகளையெல்லாம் கடந்து அமைதியாக கடந்திருக்கிறேன்.


        ஆர்குட், கூகிள் பஸ் காலத்திலிருந்தே இதே ஊடகத்தில் நிறைய கசப்பான நிகழ்வுகளும், பலரின் வசவுகளையும், கேலி கிண்டல், மிரட்டல்கள் என பலதரப்பட்ட விமர்சனங்களையும் பார்த்து வந்திருக்கின்றேன். ஆர்குட் முழுவதும் மூடப்பட்ட பின்னால், 2009ம் ஆண்டு முதல் இந்த ஃபேஸ்புக்கின் வாயிலாக இயங்கி வருகின்றேன். அன்றிலிருந்து இன்று வரை என் நட்பு வட்டத்தில் இணைந்திருந்தவர்களை கணக்கிலெடுத்தால், விலகியவர்களின் பட்டியலே ஆயிர கணக்கில் இருக்கும். ஆனாலும், ஆர்குட் காலத்திலிருந்து இன்று வரை நட்பிலிருக்கும் உறவுகளும் இன்னும் உண்டு.

 
        இந்த சமூக ஊடகங்களின் உதவியால், என்னை உடன்பிறந்தானாக பார்க்கும் அன்பிற்கினிய அண்ணன்களும், தம்பிகளும், பாசமிகு பங்காளிகளும் இங்கே கிடைத்திருக்கின்றனர் என நினைக்கையில் வேறென்ன சொத்துபத்து நமக்கு வேண்டும் என, மன உளைச்சலுக்கு ஆளான நேரங்களில் ஆசுவாசப்படுத்தி கொண்டதும் உண்டு. எவ்வித கைமாறும் செய்யாமல், ஊரெங்கும் இத்தனை பேர் எனக்கென அன்பொழுக பாசத்தோடு அரவணைக்க தோள் கொடுக்க இருக்கின்றனர் என நினைக்கையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

 
        என் வாழ்வில் எனக்கு நேர்ந்த எல்லாவிதமான சுக துக்கங்களில் உள்ள மனக்குமுறல்களை என் நெருங்கிய உறவினர்களோடு, என் குடும்பத்தினரோடு பகிர்ந்ததை விட, இங்குள்ள இணைய உறவுகளோடு அலைபேசியின் வாயிலாக நான் பகிர்ந்து கொண்ட செய்திகளே அதிகம். இப்படியானதொரு பிணைப்பை, நெருக்கத்தை ஆர்குட், ஃபேஸ்புக், வாட்சப் போன்ற சமூக ஊடகங்களே சாத்தியப்படுத்திருக்கின்றன. இணையம் கொடுத்திருக்கும் இப்படியானதொரு வாய்ப்பை அனுபவிக்கும் நாம் அனைவருமே இந்த விசயத்தில் கொடுத்து வைத்தவர்களே.

        ஏதோ பழைய நோட்டு தாள்களில் கிறுக்கி கொண்டிருந்தவனை, நல்லா எழுதுறீங்கற. எழுதுங்க, தொடர்ச்சியா எழுதுங்க, உங்களுக்கு நல்லா எழுத வருது... என நம்பிக்கையூட்டி எனக்கென ஓர் அடையாளத்தை என் எழுத்துகளின் மூலமாகவே எனக்கு கொடுத்ததும் இதே சமூக ஊடகங்களில் இயங்கிய உறவுகள் தான். பூகோள ரீதியாக அவர்களெல்லாம் ஆளுக்கொரு மூலையில் மாவட்டமாக, நகரமாக, ஊராக பிரிந்து இருந்தாலும், என் மீது இத்தனை நெருக்கமும், பாசமும், அன்பும், உரிமையும் வைத்திருக்கின்ற இத்தனை பெரிய உறவு கூட்டத்தை எனக்களித்த இப்பிரபஞ்ச பேரருளுக்கு இந்நாளிலும் என் நன்றி!

- இரா.ச. இமலாதித்தன்


02 ஜூலை 2021

தமிழர்களின் தொல்பொருளாய்வு மீதான வன்மம்!



        "தொல்பொருளாய்வு என்ற வெட்டிவேலை" என்ற தலைப்பில் துக்ளக் இதழ் ஓர் அபத்தமான கட்டுரையை வெளியிட்டு, மீண்டெழும் தமிழ் பண்பாட்டு புதையற்குவியல்களின் மீது தனது வன்மத்தை கக்கிருக்கிறது. தங்களது கற்பனை புராணங்களுக்கு வலு சேர்ப்பதற்காக, இல்லாத சரஸ்வதி நதியை தேட பல்லாயிரம் கோடிகளை வாரி இரைத்து செலவு செய்வதை தட்டிக்கேட்க வக்கில்லாத துக்ளக் இதழ், தமிழர்களின் உண்மை வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய ஆய்வுகள் மேற்கொண்டால், அதை திட்டமிட்டே இழிவு படுத்துகிறது.


        கீழடி மட்டுமல்ல எங்கள் தாய்மடி. அது, புதுக்கோட்டை அருகிலுள்ள பொன்பனை கோட்டை, தூத்துக்குடி அருகிலுள்ள சிவகளை, ஆதிச்சநல்லூர் என தமிழர்களின் ஆதி எச்சங்கள் ஆயிரம் இங்குண்டு. காளையார்கோவில் அருகேயுள்ள இலந்தக்கரை போன்ற தமிழர்களின் பண்பாட்டை இழந்தக் கரைகள் இந்த தேசம் முழுவதும் எக்கசக்கமாய் உண்டு. ஆனால், அதையெல்லாம் ஆய்வு செய்யத்தான் ஆளில்லை.


        இந்த மண்ணையெல்லாம் நோண்டினால் மண் பானைகளும், எலும்புக்கூடுகளுமே கிடைக்கின்றன என இழிவாக பேசும் வாய்களுக்கு, சொந்த மொழி ஏதுமுண்டா? தாய்மொழி, தாய் மண் என்ற ஏதாவது உண்டா? வாயை மட்டுமே நம்பி பசுங்கன்றையும், குதிரையும் நெருப்பிலிட்டு வேள்வி மூலம் வயிறு வளர்த்த கூட்டங்களை, எதிர் கேள்வி எழுப்பும் கூட்டத்தின் பண்பாட்டு மீட்சியை பார்த்து அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. என்ன செய்வது? தமிழர்களின் பல்லாயிரமாண்டு பண்பாட்டு நீட்சியை, முன்பு போல எந்த நூலும் இனி கட்டிப்போட முடியாது.

            நாகரீகமற்று நாடோடிகளாய் திரிந்து நாடு பிடித்த கூட்டத்திற்கு நிரந்தர சுடுகாடுகளோ, இடுகாடுகளோ இருப்பதற்கான வாய்ப்பில்லை. அதனால் தான், ஆதிச்சநல்லூரில் நோண்டியதை நினைத்து அவர்களுக்கு பெரும்பதற்றம் வருகிறது போல. காலங்காலமாக ஒரே இடத்தில் பூர்வகுடிகளாக வாழ்ந்த மக்களுக்கு தானே நிரந்தரமான இடுகாடு கூட இருந்திருக்க முடியும். தமிழர்களது நாகரிகமும், பண்பாடும், தொன்மையும், துக்ளக் போன்ற துக்கடா ஆட்கள் சொல்வது போல, வெறும் மண்பானைகளுக்குள் முடங்கி விடவில்லை. மண் பானையின் கீறல் தானே, எங்கள் இலக்கியத்தரவுகளின் மற்றுமொரு அசைக்க முடியா சான்றாகவும் இருக்கிறது. எழுத்தறிவே இல்லாத நாடோடி மேய்ச்சல் கூட்டம் செவி வழியாக கடத்தி வந்த காலத்திலேயே, மண் பானை செய்யும் வேளாரின் கீறல்களை கூட புரிந்து கொள்ள வாய்ப்பில்லை என்பது தானே இன்றைக்கும் மறுக்க முடியாத பேருண்மை.

            மண்ணை நோண்டுவதே தண்டச்செலவு என கூப்பாடு போடும் போலி தேச பக்தர்களுக்கு, அயோத்தியில் இராமர் கோவில் கட்ட அங்குள்ள மண்ணை நோண்டிய ஆதாரங்களைத்தானே நீதிமன்றங்களில் முன்வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை மறந்து போய்விட்டதோ? அங்கே, புத்தனும், சிவனும் கிடைத்த இடத்தில் இராமனுக்கு கோவில் எழுப்பப்படுகிறது என்பது வேறு கதை.

            நாட்டு காளைகளை பீட்டாவோடு பின் நின்று கொல்ல துடித்ததை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொழுது புரிந்து கொள்ள முடிந்தது. கோமாதா எங்கள் குலமாதா என ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, ஆண்டுதோறும் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் சம்பாரிக்கும் தேசப்பக்தர்களின் உண்மை முகத்தையும் அறியாமல் இல்லை. மாதந்தோறும் விழாக்களில் கோவிலுள் வலம் வந்த காளைகளை, வெறும் நந்தி சிலைகளாக்கி, பாலூற்றும் பிரதோச வழிபாடு நடத்தும் வரலாற்று திரிபுகளை உருவாக்கிய ஆன்மீக அயோக்கியத்தனத்தை அடையாளம் காணாமல் விட்டதன் விளைவைத்தான், இத்தனை நூற்றாண்டுகள் அனுபவித்து வருகின்றோம் என்பதை மறுப்பதற்கில்லை.

            தமிழ்நாட்டிலிருந்து சென்று கொரியாவையே ஆண்ட செம்பவளம் என்ற தமிழ் பேரரசியை கூட, வடக்கத்தியராக்கிய பெருமை, ஆரிய சித்தாந்த தொல்பொருள் ஆய்வாளர்களின் கைங்கர்யத்தை கண்கூடாகவே கண்டு வருகின்றோம். ஆய் குடியை அயோத்தியாக்கிய வரலாற்று திருடர்களின் ஆதிக்கமே இங்கே இன்னமும் கோலொச்சி நிற்கின்றன. அடுத்தவனின் வரலாற்றை திருடி தனதாக்கும் போக்கு இந்த நாடோடிகளுக்கு கை வந்த கலை என்பதற்கு , கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும், யோகாவும் கூட குறிப்பிடதக்க ஒரு சில சான்றுகளாகும். தமிழ் மருத்துவமான சித்தர் மருத்துவத்தை ஆயுர்வேதமாக்கியதும், முருகனை சுப்பிராமணியம் ஆக்கியதும், ஆசீவகத்தை அபகரித்ததும் என அடுக்கடுக்காக சொல்ல ஆயிரம் திருட்டுத்தனங்கள் இங்கே உண்டு.


            சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது தான் என்பதை மெய்ப்பிக்க தொடர்ச்சியாக சான்றுகள் கிடைத்து கொண்டிருப்பதும் அந்த மண்ணை நோண்டித்தான் என்பதை இங்கேயும் சுட்டிக்காட்ட வேண்டிருக்கிறது. சிந்து விட்ட இடமும், கீழடி தொட்ட இடமும் தமிழரின் தொன்மைகள் தான் என்பதை சான்றுகளின் அடிப்படையில் மறுப்பதற்கு யாருமில்லை என்பதே தமிழின் வளமை. எங்கள் வழிபாட்டை, எங்கள் கடவுளை, எங்கள் மொழியை, எங்கள் அறிவை திருடிக்கொண்டு, கடைசியாக எங்களையே முட்டாளாக்கிய காலம் இனி முடிவுக்கு வந்து விட்டது. இங்கே மண்ணை மட்டுமல்ல, எதை நோண்டினாலும் தமிழரின் பண்பாடும், பெருமையும், தொன்மையும், வரலாறும் மட்டுமே மிஞ்சி இருக்கும். இனியும் ஏமாற தமிழர்கள் தயாராக இல்லை. எத்தனை வசவுகள் எங்கள் மீது வந்தாலும் தமிழர் வரலாறு மீண்டெழும். இதை எந்த கொம்பனும் தடுக்க முடியாது.

            அகண்ட பாரதத்தை கட்டியமைப்போம் என சொல்லும் யாராகினும், காலம் முழுக்க பொய்ப்புராணங்களை மட்டுமே இங்கே முன்னிறுத்த முடியாது. அனைத்திற்கும் ஆதாரம் வேண்டுமெனில் மண்ணை நோண்டித்தான் நிரூபணம் செய்ய வேண்டும். அன்று போல், மூன்றடி மண் கேட்டு மாவலி சக்கரவர்த்தியை சூழ்ச்சியாக கொன்றான் வாமனன் என்ற பொய்க்கதை சொன்ன காலமெல்லாம் இங்கே மாறி போச்சு. எங்கள் முப்பாட்டன் மாவலியை போல, எம் மண்ணை இழக்க நாங்கள் யாரும் ஏமாளிகள் இல்லை.

            அலெக்சாண்டர் கன்னிங்காம் என்ற ஆங்கிலேய அதிகாரி தான்,  இந்தியத் தொல்லியல் ஆய்வின் தந்தை என்பதை ஆங்கிலேய விசுவாசிகளான துக்ளக் ஆதரவு ஆட்கள் மறந்திருக்க மாட்டார்கள். அப்படி, நாடோடிகளாக பிழைக்க வந்த ஐரோப்பிய அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்த எங்கள் மண்ணை மீட்பதற்காக, எழுத்துப்பூர்வமாக முதற் போர்ப்பிரகடனத்தை அறிவித்து, இம்மண்ணுக்காக தங்களது உயிர் மட்டுமல்லாது, ஐநூறுக்கும் மேற்பட்ட தங்கள் குடிவழி உறவுகளையும், மக்களையும் இழந்த மாமன்னர் மருதுபாண்டியர்கள் வாழ்ந்த மண் இது. அவர்களை போன்ற மக்கள் போராளிகளின் வழிவந்த எங்களின் மண்ணை நோண்டி எங்கள் வரலாற்றை மீட்டெடுக்க கூடாதென சொல்ல யாருக்கும் இங்கே அருகதை இல்லை.

            பழனி முருகனை நோண்டி வயிறு வளர்த்த கூட்டத்தை பெருந்தன்மையாக விட்டதன் விளைவு, எங்களையே ஏன் மண்ணை நோண்டுகிறாய் என கேட்க துணிச்சல் வந்திருக்கிறது. எங்கு நோண்டினாலும் உங்களுக்கென தனித்த எந்தவொரு பழமையான வரலாறும், சான்றும் கிடைக்க போவதில்லை என்ற வெறுப்பில் புலம்பி எந்த பலனும் இனி கிடைக்க போவதில்லை.

            மண் என்பதற்கான பொருள் வேள் என்பதாகும். மண்ணை நோண்டியவர்களே வேளாராகவும், வேளாளராகவும், வேளீராகவும் உருவெடுத்தார்கள் என்பதே யாராலும் மறுக்கவே முடியாத வரலாறு. அரசவுருவாக்கம் என்பதே மண்ணை நோண்டியதிலிருந்தே உலகெங்கும் உருவெடுத்தது. இன்னும் சொல்லப்போனால், மனித நாகரீகமும், நகர மயமாக்கலும் மண்ணை நோண்டியதால் தான் என்பது கடந்தகால வரலாற்று உண்மை. அந்த மண்ணை நோண்டுவதையே பெருங்குறையாக சொல்லி இழிவுபடுத்தும் கண்காணிகளை இழிபிறவிகளாகவே கருத வேண்டிருக்கிறது.

            பூர்வகுடி மக்களை ஏதிலிகளாக்கி, அவர்களது மண்ணை கைப்பற்றி, பெட்ரோல் டீசலுக்காகவும், தங்கம் வைரத்திற்காகவும், மீத்தேன், ஈத்தேனெ என கனிம வளத்திற்காகவும் அந்த பூர்வ குடிகளின் மண்ணை நோண்டும் வெட்டி வேலை செய்யும் அரசாங்கத்திற்கு ஆதரவாக பஜனை பாடும் கும்பல்கள், தொலைந்து போன தமிழரது வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் எங்களை இழிவாக சித்தரிக்க வேண்டியதின் வன்மமும் அதன் பின்னணியும் எங்களுக்கு புரியாமல் இல்லை. காலம் உங்களை மீண்டும் வைக்க வேண்டிய இடத்தில் நிச்சயம் வைக்கும். அதுவரை எங்களை விமர்சித்து கொண்டே இருங்கள். விடியல் பிறப்பதை யாரால் நிறுத்த முடியாது. ஏனெனில், இனி எங்கள் காலம். உலக நாகரீகங்கள் அனைத்தும், மண்ணை நோண்டிய வெட்டி வேலையினால் தான் உருவாகி இருக்கின்றன. அப்படியான நாகரீகங்களின் மிகத்தொன்மையான தமிழர்களது நாகரீகமும் இம்மண்ணை நோண்டிய வெட்டி வேலை செய்ததால் தான் உருவானது. எனவே, தொல்பொருளாய்வு எனும் இந்த மண்ணை நோண்டும் வெட்டி வேலை இங்கே தொடர்வது காலத்தின் தேவை. அதுவே, உங்களைப்போன்ற கங்காணிகளிடமிருந்து மீள தமிழர்களுக்கான வெற்றி ஓலை!

- இரா.ச. இமலாதித்தன்

11 ஜூன் 2021

எதனடிப்படையில் டெல்டா மாவட்டங்களுக்கு ஊரடங்கு?



 அன்பிற்கினிய டெல்டா பகுதி வாழ் மக்களே!


தினசரி கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டமே இல்லை. மயிலாடுதுறையையும் நாகப்பட்டினம் மாவட்ட கணக்கிலேயே இதுவரை காட்டி வருகின்றனர். அப்படி பார்த்தால், இன்றைய நிலவரப்படி இந்த இரு மாவட்டங்களையும் சேர்த்து பாதிப்புள்ளானவர்களின் எண்ணிக்கை - 482 பேர். அப்படியெனில் சராசரியாக நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் 240 பேர் என ஒரு கணக்கிற்கு கொள்ளலாம். கொஞ்சம் ஏற்றமிறக்கம் இருந்தாலும், இவ்விரு மாவட்டங்களின் தினசரி பாதிப்பு 250 பேர் என வைத்து கொள்வோம். அடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய பாதிப்பு 272 பேர். அப்படியெனில் இந்த மூன்று மாவட்டங்களிலும் சராசரி பாதிப்பு 250 பேர் தான் வருகின்றது.
அப்படியே இதே கணக்கீடோடு சென்னையை எடுத்து கொண்டால் இன்றைய ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி, 1094 பேர் என அரசு கணக்கு காட்டிருக்கிறது. ஆயிரம் பேர்களுக்கு மேல் தினசரி பாதிப்புள்ளாகும் சென்னைக்கு ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையோடு ஒப்பிடும் பொழுது நான்கில் ஒரு பங்கான தலா 250 பேர் தினசரி பாதிப்புக்குள்ளாகும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்னும் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
எதிர்க்கேள்வி கேட்க கூட ஆளில்லை என்பதால், அரசாங்கம் என்ன சொன்னாலும் தலையாட்டும் மந்தை புத்தி கொண்ட மக்கள் வேடிக்கை மட்டும் பார்த்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை மூடச்சொன்ன மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டரசோ, இன்று சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்திருக்கிறது. சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இவையெல்லாம் என்ன மாதிரியான கணக்கீடுகளென்றே தெரியவில்லை. எல்லாம் ஆள்பவர்களுக்கே வெளிச்சம்!
- இரா.ச. இமலாதித்தன்

09 ஜூன் 2021

PhD பரிதாபங்கள்!


#ஒன்றிய_உயிரினங்கள் என ட்விட்டரில் இருநாட்களாக ட்ரெண்டிங்கான பல பதிவுகள் சுவாரசியமாக இருந்தன.
என் கடந்த கால பணியின் அனுபவங்களில் #முனைவர்_உயிரனங்கள் பலரை நெருங்கி கவனித்திருக்கிறேன். பழகிருக்கிறேன். அவர்களின் உண்மை முகத்தை கண்டிருக்கிறேன்.
கிணற்று தவளை,
கண்ணை மூடிய பூனை,
செம்மாறியாடு,
கூண்டுக்கிளி,
அட்டைப்பூச்சி,
எருமைமாடு
என பல PhDக்களில், போலிகளும், வெற்று பிம்பங்களுமே இருந்தன. 'தான்' என்ற பெருங்கூச்சல்கள் மட்டுமே அங்கே தென்பட்டன. வாட்சப் குரூப்பில் ஆங்கிலத்தில் எழுதுவதாக நினைத்து அடிப்படை வார்த்தைகளில் கூட ஆறேழு பிழைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். வேர்ட் ஃபைல்லோ, எக்‌ஸல் ஃபைலோ கூட ஒழுங்காக உருவாக்க தெரியாமல் முழி பிதுங்கியதை பார்த்திருக்கிறேன். அடிப்படை ஸ்போக்கன் இங்லீஷ் கூட தெரியாமல் தங்லீஷில் மேடையேறி ஒப்பேற்றியதை கவனித்திருக்கிறேன்.
கணினித்துறையில் பிஎச்.டி பெற்றவர்களுக்கு, அப்ளிகேசன் தொடர்பான சர்வர்களுக்கும், ஆப்ரேட்டிங் சிஸ்டம் தொடர்பான சர்வர்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாததை பார்த்து வியப்படைந்திருக்கிறேன். நெட்வொர்க்கிங் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாதவர்கள், அதே கணினித்துறையில் பிஎச்.டி பெற்றிருந்ததை விட, அது தொடர்பாக மாணவர்களிடம் பாடமெடுப்பதற்காக Non Teaching ஊழியர்களிடம் பாடம் கேட்டு ஓடிக் கொண்டிருந்ததையும் பார்த்திருக்கிறேன்.
இதுபோல சொல்ல ஆயிரம் நிகழ்வுகள் உண்டு. 'பல' வகைகளில் கெயிடை கரெக்ட் செய்து முனைவர் ஆனவர்களே அதிகம் இருப்பதையும் பல ஆதாரங்களின் அடிப்படையில் மெய்ப்பொருள் கண்டறிந்த பிறகே, கல்லூரிகளின் கல்வித்தரத்தை எடைபோட முடிந்தது. விதிவிலக்குகள் எல்லா இடத்திலும் உண்டு. நான் பேசுவது பெரும்பான்மைகளை பற்றி.
எனவே, பிஎச்.டி முடித்த முனைவர்கள் அனைவருமே அதிமேதாவிகளோ, அதிபுத்திசாலிகளோ அல்ல. அவர்களுக்கு எல்லாவித துறைசார் அறிவும் இருப்பதில்லை என்ற எதார்த்தத்தையும் ஒத்துக்கொள்ள பழகுங்கள். ஏனெனில் அவரவர் துறையிலேயே பதில் சொல்ல முடியாத விசயங்கள் ஆயிரமுண்டு. மீண்டும் சொல்கிறேன், இங்கே விதிவிலக்குகளை பேசவே இல்லை. ஆனால், கூத்தாடும் குறைகுடங்களையே சுட்டிக்காட்டிருக்கிறேன்.
- இரா.ச. இமலாதித்தன்

02 ஜூன் 2021

என் பார்வையில் இளையராஜா!



சிறு நகரங்களில் இயங்கும் தனியார் பேருந்துகளின் தனிச்சிறப்பே இளையராஜா பாடல்கள் தான். இன்றைக்கும் பட்டி தொட்டியெங்கும் பிரைவேட் டவுன் பஸ்களின் மவுசுக்கு இதுவே முதற்காரணம்.
பனிக்கால ஜன்னலோர இருக்கை, மாலை நேர ரயில் பயணம், மழைச்சாரல், சூடான காபி, தன்னந்தனியாய் நெடுந்தூர பயணம், என எந்த மாதிரியான சூழலையும் இளையராஜா பாடல்களே பலரது மனதையும் குதூகலமாக்குக்கின்றன.
2k கிட்ஸ், 90s கிட்ஸ், 80s கிட்ஸ்(?) என யாராக இருந்தாலும், இளையராஜா பாடல்கள் இல்லாமல் அவர்களது வீட்டு காதணி விழா, திருமணங்கள் உள்பட எந்த சடங்குகளும் முழுமை அடைவதே இல்லை.
கோவில் திருவிழாக்காலங்களிலும், பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜையென ஆண்டுதோறும் நடக்கின்ற எல்லா கொண்டாட்டங்களிலும் இன்றைய சந்தோஷ் நாராயணன் காலத்திலும் அன்றைய இளையராஜா பாடல்களை ஒலிபரப்பாமல் எந்த திருவிழாவும் முடிவடைவதில்லை.
காதல் தோல்வி, ஏமாற்றம், விரக்தி, துரோகம், பொருளாதார நெருக்கடியென பல விதங்களில் தனித்து விடப்பட்டவர்களின் மனங்களிலுள்ள காயா ரணங்களுக்கான ஒரே மருந்து இளையராஜா பாடல்களே. மதுவும், புகையும் உடலுக்கு கேடெனும் பொழுதும் அந்த இரண்டோடும் கூடி கொஞ்சி குலாவும் வேளையிலும் செவிகளில் பாயும் இளையராஜாவின் இசைகளே ஒரு சாராருக்கு சொர்க்க போதையாக இன்றளவும் இருக்கிறது.
இதுபோல சுட்டிக்காட்ட எத்தனையோ செய்திகள் இளையராஜாவின் இசையில் ஆயிரம் உண்டு. ஒரு பானை சோற்றுக்கு எத்தனை சோற்றை பதம் பார்ப்பது? எளிமையாக சொல்ல வேண்டுமெனில், பெரு மகிழ்ச்சியோ, கடுங்கோபமோ, மீளாத்துயரமோ, இப்படியான எல்லாவித உணர்வுகளுக்கும் தீனி போடும் ஒரே மருந்து இளையராஜாவின் இசை தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. எளிதாக சொல்ல வேண்டுமெனில், இன்றைய அசுர வளர்ச்சியடைந்த சமூக ஊடகங்களில் இளையராஜா பாடல்களை பகிராத பதிவர்களே இல்லையென சொல்லலாம். வாட்சப் ஸ்டேடஸ், பேஸ்புக் ஸ்டோரி, டிவிட்டர், இன்ஸ்டாகிராமென இளையராஜா தான் பலரின் ஒரே ஆபத்துதவி கண்டன்ட். விமர்சனம் செய்தாவது அவரை நினைப்படுத்திக் கொண்டே இருக்கும் நபர்களும் இங்குண்டு. அவர்கள் பத்தில் ஓரிரண்டு ஆட்களாக இருப்பார்கள்.
இளையராஜாவை வானளாவ உயர்த்துவதால் எம்.எஸ்.விசுவநாதனும், டி.கே.இராமமூர்த்தியும், கே.வி. மகாதேவனும், ஏ.ஆர்.ரஹ்மானும், யுவன் சங்கர் ராஜாவும், ஜி.வி.பிரகாஷ்ராஜூம் எங்கேயும் குறைந்தவர்களாக்கப் படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். டி.ராஜேந்தரும், சங்கர் போஸூம், கங்கை அமரனும் கூட இளையராஜாவின் இசைக்கு நிகரான பல சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கின்றனர். அவர்களது பாடல்களையும் இளையராஜவின் கணக்கில் எழுதி, ரசித்து வருவோரின் எண்ணிக்கை இங்கே ஏராளம். இன்றைய நாட்களில் இசை ரசிகர்களால் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்படும் ஹாரீஸ் ஜெயராஜின் எத்தனையோ பாடல்களுக்கு பல லட்சம் பேர் வெறியர்களாக இருப்பது தான் இந்த இசையின் வெற்றி.
புனிதமென்றோ, இழுக்கென்றோ இசையில் எதுவுமில்லை. காப்புரிமைக்காக தன் பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்துவதில் நடந்து கொண்ட விதமும், தற்புகழ்ச்சியும், கோபமும் என இளையராஜா மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. ஏற்கிறேன். ஆனாலும், அவரவர் செவியும், மனமும், அறிவும் முடிவு செய்யும் வரையறைகளுக்கு இளையராஜா போன்ற சமகால இறைத்தூதர்களை புறந்தள்ளுவது அறமாகாது. ஏ.ஆர்.ரஹ்மானை போலவே இளையராஜாவின் இசையையும் ரசிக்கும் பாமரனனாக எனக்குண்டான திருப்தியில் இப்பதிவை எழுதிருக்கின்றேன். அவர், இவரென இசையில் யாரும் பெரிதில்லை. இசையே பெரிது தான். உங்களுக்குள் உள்ள இறைவனை, விலகி நின்று அருகில் தரிசிக்கும் மாயவித்தை இசைக்குள் உள்ளது. எனவே அதை அனுபவியுங்கள். இசையோடு வாழுங்கள்; உங்களோடு இளையராஜாவும் வாழ்வார்!
- இரா.ச. இமலாதித்தன்

பின்னிணைப்பு:

OTD Facebook Memories!
தனிமையில் இரவோடு தவித்த பொழுதுகள் எல்லாமே, உன் இசையாலே சுகமாய் கழிந்தது. ஆன்மீக ஞானம் உள்ளவனாலேயே மிகப்பெரும் இசை கலைஞனாக உருவெடுக்க முடியுமென்பதை உலகிற்கு நிரூபித்து, கடுந்தவம் செய்த ஞானி பெறும் வரம் அவரை மட்டுமே சாரும்போது, உன் தவத்தால் நீ பெற்ற வரம் உன்னைவிட எங்களையல்லவா சந்தோசப்படுத்திக் கொண்டிருக்கிறது. தொடரட்டும் உன் தவம்.
இசைஞானிக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2012

*

தென்கோடி பண்ணைபுரத்தை பலகோடி பேர்களுக்கு பாதை போட்டு காட்டி, இசை போதையூட்டிய இளைய இசையரசனுக்கு என்றும் பதினாறே!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2015

*

இரவு நேர ரயில் பயணங்களிலும், நெடுந்தூர பேருந்து ஜன்னலோர இருக்கையிலும், ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை பைக் பயணத்திலும், உறக்கம் தொலைத்த எல்லா இரவுகளிலும், இதுபோல பல நேரங்களில் இசையே என்னோடு நட்பின் துணையாய், தாயின் ஆறுதலாய் இருந்திருக்கிறது.
என்னை ஆட்கொண்ட பெரும்பாலான இசையின் காரணகர்த்தாவாக விளங்கும் இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். ஆன்மீகப்பற்றுள்ள எங்கள் இசையாண்டவன், இன்னும் பல ஆண்டுகள் அந்த இறையருளால் நீடுழி வாழட்டும்!
'ஏழை பேச்சு அம்பலம் ஏறாது' என்ற கருத்தியலை உடைத்தெறிந்து, இசையுலகில் புது ராஜாங்கம் அமைத்து, அதை அவாளுக்கும் பறைசாற்றிய இசையரசனின் கடைகோடி பாமர ரசிகர்களில் ஒருவனாக என் வாழ்த்துகளும்!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2016

01 ஜூன் 2021

சுப்பிரமணிய சுவாமியும், பழனிவேல் ராஜனும்!



நாயக்கர் ஆட்சியின் முதல் மன்னனான விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலமான 1529–1563 ஆண்டுகளில் தளவாயாக இருந்தவர் அரியநாத முதலி. இவரது வழித்தோன்றலே பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

நாயக்கர் ஆட்சியின் குறிப்பிடத்தக்க மன்னரான திருமலை நாயக்கர் ஆட்சிக்காலமான 1623–1659 ஆண்டுகளில் தளவாயாக இருந்தவர் ராமப்ப ஐயர். இவரது வழித்தோன்றலே சுப்பிரமணிய சுவாமி.

பெரும்பான்மை தமிழர்களின் வீழ்ச்சி இக்காலக்கட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.




படம் 1: குடியரசு இதழில் பெரியார் ஈ.வெ.ராவின் இரங்கல் தலையங்கம்.





படம் 2: சுப்பிரமணிய சுவாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது ஒப்புதல் வாக்கு மூலம்.

- இரா.ச. இமலாதித்தன்

29 மே 2021

இயக்குனர் வீணை எஸ்.பாலச்சந்தரின் முன்னோடி சிந்தனை!

வெற்றிக்கரமான இயக்குனர்களாக அடையாளப்படும் ஷங்கர், அட்லி, ஏ.ஆர்.முருகதாஸ், பா.ரஞ்சித் என பலரும் கதை திருட்டு விவகாரங்களில் சிக்கியவர்களே. பிரகாஷ்ராஜ், பிரிதிவிராஜ், கோபிகா நடிப்பில் உருவான 'வெள்ளித்திரை' திரைப்படத்தில் இம்மாதிரியான கலைத்திருட்டை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தையே இயக்குனர் விஜி உருவாக்கிருப்பார்.
ஆனால், 1964ல் வெளிவந்த 'பொம்மை' என்ற திரைப்படமானது வேறொரு பார்வையை நமக்கு தருகிறது. வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கி, இசையமைத்து நடித்த 'பொம்மை' திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளை கீழே இணைத்திருக்கிறேன். பார்த்தால் என்ன சொல்ல வருகின்றேனென உங்களுக்கு எளிதாக புரியும்.
கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பிலிம் நியூஸ் ஆனந்தன் என அந்த 'பொம்மை' திரைப்படத்தில் பங்காற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள், துணை இயக்குனர்கள், கலை இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர், பட தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், ஒப்பனையாளர், தயாரிப்பு நிர்வாகத்தில் உள்ளோர், வாகன ஓட்டிகள் என அனைவரையும் இயக்குனரான 'பத்ம பூசன்' வீணை. எஸ். பாலச்சந்தர் அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் பண்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
'World Movies Museum' குரூப்பில் இந்த காட்சியை அறிமுகப்படுத்தி பதிவு செய்த Muniyasamy Ramakrishnan அவர்களுக்கு நன்றி! இந்த வீடியோவை யூ ட்யூப் வாயிலாக பார்க்க: https://www.youtube.com/watch?v=LL_EEkZJw50
- இரா.ச. இமலாதித்தன்

தன் மீதான பாலியல் சர்ச்சைகளுக்கு முடிவுரை எழுத விருப்பமில்லாத வைரமுத்து!



    "கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி
அளிக்கிறேன். விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம்" என வைரமுத்து சொல்லிருப்பதை ஏற்க முடியவில்லை. அதென்ன காழ்ப்புணர்ச்சி? எத்தனை காலத்திற்கு தான், தன் மீதான காழ்ப்புணர்ச்சியென காரணத்தை சொல்லி தமிழர்களிடம் அனுதாபம் தேடி, வைரமுத்து ஒளிந்து கொள்ள முடியும்?

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எப்பொழுது தான் வைரமுத்து முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார் என்பது பெரும் குழப்பமாகவே நீடித்து வருகிறது. இத்தனை ஆண்டுகாலம் எழுத்துலகில் இயங்கி கொண்டிருக்கும் வைரமுத்துவிற்கு மிகப்பெரும் கறையாக அமைந்து விட்ட, சின்மயி உள்ளிட்டோரின் இந்த #metoo சர்ச்சைகளை முடிவில்லா தொடர்கதை போல மாற்ற நினைக்கும் அவரின் போக்கு, ஒரு தவறான முன்னுதாரணம்.
 
    கேரளாவையும், மலையாளத்தையும் நன்கறிந்த எழுத்தாளர் ஜெயமோகனே, இந்த ஓ.என்.வேலு க்ரூப் என்பவரை அரைகுறை எழுத்தாளராகவே தொடர்ச்சியாக சொல்லி வருகிறார். இளையராஜா போன்றோரின் மெட்டுகளுக்கு பாடல் எழுத முடியாமல் திணறியவரான, ஓ.என்.வி பெயரில் வழங்கப்படும் விருதும், அவரது எழுத்துகளை போலவே ஒரு சுமாரான விருது தான் என ஜெ.மோ பகிரங்கப்படுத்துகிறார். அப்படியான சுமார் ரக விருதுக்கு மலையாளி அல்லாத ஒருவரான வைரமுத்து முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதில் ஒரு சின்னஞ்சிறு மகிழ்ச்சி இங்கே நிலவியது. அதை கூட வாங்க தகுதி வைரமுத்துவுக்கு இல்லையென, பாலியல் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு பார்வதி நாயர் உள்ளிட்டோர் எழுப்பிய எதிர்க்குரல்களால் ஓ.என்.வி. கலாச்சார மையம், இந்த விருது விசயத்தில் பின்வாங்கிருக்கிறது.

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வைரமுத்து வெளிப்படையாக வாய் திறக்காத வரை, அவரை உத்தமர் என்ற அளவீட்டிற்குள் அடைக்க யாரும் முன்வரப் போவதில்லை. வாய்ப்புகள் கிடைக்காத வரை அனைவருமே இங்கே யோக்கியர்கள் தான். போக்சோ சட்டத்தில் கைதானவர்களின் மனசாட்சியை எழுத்தாளர் எஸ்.ரா. சொன்னது போல தட்டியெழுப்பி தீர விசாரித்தால் ஏதோவொரு சின்ன சபலத்தால், வேறொரு பாதைக்குள் சிக்கிக்கொண்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்பதை நம்மால் உணர முடியும்.

    ஒரு விருதை, யோக்கியனுக்கு கொடுக்க வேண்டுமா? திறமையாளனுக்கு கொடுக்க வேண்டுமா? என்பதே அவ்விருதுக்கான அளவீடாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, சின்மயி போன்றோர் கிளப்பிய பாலியல் புகார்களால், இதுவரை வைரமுத்துவுக்கு கொடுக்கப்பட்ட தேசிய விருதுகள் உள்பட அனைத்து விருதுகளையும் மறுபரிசீலனை செய்து திரும்பி வாங்கிக்கொள்ள அந்தெந்த அமைப்புகள் நினைத்தால் அது முடியுமா? அது சரியா?

    சினிமாவிலும், அரசியலிலும் எத்தனையோ பாலியல் குற்றவாளிகள் இன்று பெரும்பான்மை மக்களால் புனிதராக்கப்பட்டு விட்டனர். பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவராத வரை சினிமாவில் இயங்கும் 99% பேர் உத்தமர்களே. விதிவிலக்காக 1% பேர் இருக்கலாம். அவர்களை பேசி பலனில்லை. இன்றைய சினிமாவிலும், அரசியலிலும், யாரும் மகாத்மாக்கள் இல்லை. எல்லாருமே ஒருவகையில் திருடர்களே. கொள்கை, கதை, கற்பு என அவரவர் தகுதிக்கேற்ப களவாடிக் கொள்கின்றனர். அவர்களுக்குள்ளான வித்தியாசமும் இவ்வளவு தான்.

    உப்பு சப்பில்லாத ஒரு விருதை கூட வாங்க விடாமல் செய்யும் நபர்களின் மூக்குகளை உடைக்கவாவது வைரமுத்து வாய் திறக்க வேண்டுமென்பதே பலரது விருப்பம். தவறை செய்வது கூட எளிது தான். ஆனால், பொதுவெளியில் அதை ஒத்துக்கொள்ளத் தான் மனவலிமை அதிகம் தேவை. சரியோ? தவறோ? வைரமுத்து இனியாவது இச்சர்ச்சைகளுக்கு ஒரு முடிவுரை எழுத வேண்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

28 மே 2021

நிலையான தர்மம்! அனுபவக்கட்டுரை


        நிலையான தர்மம் என்பது இன்றைய நாளில் சமூக ஊடகங்களில்லாம் (லேப்டாக் வாங்கித்தருமாறு கோரிக்கை வைத்திருந்த சபரி மாலா அவர்களின் பதிவின் எதிரொலியாக) பரபரப்பாக பேசப்படும் வாத்தையாக மாறிவிட்டதனால், அதெ பெயரிலேயே இதையும் எழுத தொடங்குகிறேன்.

        எனக்கு தெரிந்த முகநூல் நண்பர் புதிதாக ஒரு நூல் எழுதிருப்பதாக சொன்னார். புத்தகத்திற்கு சரியான தலைப்பு சொல்லச்சொல்லி தொலைபேசியில் அழைத்து கேட்டதையடுத்து, ஒரு பெயரையும் சொன்னேன். அவருக்கு அது பிடித்ததனால், அந்த நூலுக்கு அந்த பெயரே சூட்டப் பட்டிருந்தது. அந்த நூல் வெளியீடு தொடர்பாகவும், நூல் சம்பந்தமான தகவல்களையும் தனிப்பதிவாக பதிந்து பலரையும் டேக் செய்திருந்தார் என்னைத்தவிர.

        நூலில், முன்னுரை, தொகுப்புரை, நன்றியுரை, என்னுரை என என்னனென்னவோ இருந்த பொழுதும் கூட, என் சிறு பங்களிப்பை பற்றி எங்குமே வாய் திறக்கவில்லையென்றே நினைக்கின்றேன். நானும் மனசு கேட்காமல் அந்த பதிவிற்கே சென்று கேட்டும், அந்த பெயரை இன்னொருவரும் சொன்னாரென மழுப்பலாக பதிலளித்தார். இது நடந்து ஓரண்டுக்கு மேலிருக்கும்.

        சென்றாண்டு போல, இம்முறையும் புது நூலுக்கு தலைப்பு வேண்டி பதிவிட்டிருக்கிறார் அந்த நண்பர். நான் ஏற்கனவே சொல்லிருந்த அந்த தலைப்பை சுட்டிக்காடி, அது போல மற்றுமொரு தலைப்பு வேண்டுமென பலரை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார். நல்லவேளையாக இம்முறையும் என்னை டேக் செய்யவில்லை.

நான் என்ன, 'என் சமூகக்களப்பணிக்கு புதிய லேப்டாப் ஒன்று தேவை. வாய்ப்புள்ளவர்கள் ஆன்லைன்லில் ஆர்டர் செய்து வாங்கித்தர' சொல்லியா கேட்டேன். ஒரு விருது வழங்கும் மேடையில் இயக்குனர் சசிகுமார் சொன்னது போல, ஒவ்வொரு சின்னஞ்சிறு மனசும், சின்ன பாராட்டுக்களுக்கும், சின்ன அங்கீகாரத்தும் தானே காத்து கிடக்கிறது?! அந்த நிலையான தர்மத்தை So Called எழுத்தாளர்கள் செய்ய மறுப்பதேன்? பலரை கவனித்திருக்கிறேன். என் பதிவை காப்பி பேஸ்ட் செய்பவர்கள் கூட, கீழேயுள்ள என் பெயரை மட்டும் மெனக்கெட்டு நீக்கிவிட்டுத்தான் தங்களது டைம்லைனில் பகிர்கின்றனர். இதெல்லாம் எந்த மாதிரியான மனநிலையென்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நிலையான தர்மம் இல்லாத இதுபோன்ற சூழல்களில் மெளனித்தே கடந்தே செல்கிறேன்.

- இரா.ச. இமலாதித்தன்


திரை விமர்சனம்: The Boy Who Harnessed the Wind



            'The Boy Who Harnessed the Wind' என்ற மிகச்சிறப்பான ஒரு திரைப்படத்தை இன்று பார்த்தேன். Parthiban SP என்பவருடைய நேற்றைய முகநூல் பதிவின் வாயிலாக இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட திரைப்படம் என்பதால் வெறும் டாக்குமெண்டரி போலில்லாமல் மனதிற்கு நெருக்கானதாகவே இப்படம் எனக்கு அமைந்திருந்தது. William Kamkwamba என்ற எளிய சிறுவனின் கனவும், பள்ளிக்கூடம் கூட முழுமையாக செல்ல முடியாதளவுக்கு வறுமையின் பிடியில் இருந்த 14 வயது சிறுவனுக்குள் இருந்த அறிவியல் ஆர்வமும், அவன் வாழ்ந்த சூழலும் கதைக்கு மிகப்பெரிய பலம். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி தான் கதைக்களமென்றாலும் கூட, பல காட்சியமைப்புகள் தமிழ் மண்ணோடும் ஒத்து போனதாகவே உணர்ந்தேன்.

           William Kamkwambaவாக நடித்திருந்த Maxwell Simbaவின் நடிப்பும், அவனது தந்தையாக நடித்திருந்த Chiwetel Ejiofor தான் இப்படத்தின் இயக்குனர் என்பதால் அவரின் நடிப்பும் மிகச்சிறப்பாக இருந்தது. இவர்களை தவிர படம் முழுக்க அனைத்துமே நிஜமாக நடப்பது போன்றே காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. படத்தில் வருகின்ற அனைவருமே அந்தெந்த பாத்திரமறிந்து ஊர்க்காரர்களாகவே வாழ்ந்திருந்தனர். காட்சியமைக்களும், கதைச் சூழலும், கதையில் வந்த மாந்தர்களும் மிக கச்சிதமாக பொருந்தி இருந்ததால், படம் முழுக்க அவ்வளவு எதார்த்தம் இருந்தது.

        இப்படத்தில் மிகப்பெரிய கதையெல்லாம் இல்லையென்றாலும் கூட அக்கா, தம்பி, அம்மா, அப்பா, மற்றுமொரு கைக்குழந்தையுடன் கூடிய ஒரு எளிய விவசாய குடும்பம், ஊர் பெரியவர், நண்பர்கள், வானம் பார்த்த பூமி, வறுமை சூழ்ந்த ஊர், ஏழைக் காதலுக்குள்ளும் இருக்கின்ற குடும்ப எதிர்ப்பு, ஏமாற்றும் அரசியல்வாதி, வறட்சியான சூழலில் வாழும் மக்கள், எப்படியாவது வாழ்ந்து விட வேண்டுமென்ற கனவுடன் ஓடும் மக்கள், சிறுவன் கூடவே ஓடி வரும் நாயும், வறுமையும் என எல்லாமே நமக்கு பழக்கப்பட்ட சூழல்கள் தான்.

        அக்காவை காதலிக்கும் வகுப்பு ஆசிரியர். அதை காரணமாக வைத்து தன் அறிவியல் அறிவிற்கு வலு சேர்க்கும் சிறுவன். பள்ளி நூலகத்தில் படித்த 'Using Energy' என்ற நூலை முதன்மையாக கொண்டு, வறுமையான தன் கிராமத்திற்கும், தன் குடும்பத்திற்கும் ஒரு சிறிய காற்றாலை உருவாக்கி அதன் மூலம் மின்சாரத்தை கொண்டு விளைச்சலையும், புது வெளிச்சத்தையும் கொண்டு வந்த உயரிய நோக்கம். இந்த மாதிரியான பாசிடிவ்வான அம்சங்களுக்காகவே இப்படத்தை அதிகம் ரசித்தேன்.

        மிக மோசமான சூழலில் வாழ்க்கையை தொடங்கினாலும் தன்னுடைய 14 வயதில் தன் கனவுகளை அறுவடை செய்து, சாதித்தக்காட்டிய அச்சிறுவனுக்கு இன்றைய வயது 33 என நினைக்கையில் வியப்பாக இருக்கிறது.
ஓர் உண்மை சம்பவத்தை திரைப்படமாக்குவது என்பது மிக சவாலான வேலை. இதற்கு முன், 2016ல் வெளிவந்த எம்.எஸ்.தோனி பற்றிய திரைப்படமான 'M.S. Dhoni: The Untold Story' என்னை கவர்ந்த ஒன்று. அதுபோல இது இல்லையென்றாலும் இரண்டும் ஒன்றுக்கொன்று குறைந்ததில்லை. 2019ல் வெளிவந்த இந்த 'The Boy Who Harnessed the Wind' என்ற திரைப்படமும் என் மனதிற்கு நெருக்கான ஒன்றாக அமைந்திருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்

பழனிவேல் தியாகராஜனின் நேர்காணல்! - ஒரு பார்வை.



        சமீபத்தில் ஓர் ஆங்கில தொலைக்காட்சிக்கு தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நேர்காணலை பார்க்கும் வாய்ப்பு சமூக ஊடகங்களில் வாயிலாக கிடைத்தது. அந்த நேர்காணலில் பேசியிருந்த திரு. பழனிவேல் தியாகராஜனின் கருத்துகளோடு முழுதும் உடன்படுகின்றேன். ஹிந்தியை கொண்டு வந்து சமஸ்கிருதத்தை நாட்டிலுள்ள அனைவரிடமும் திணிப்பதே பாஜகவை இயக்கும் அவர்களின் நோக்கம். அனைத்து திட்டத்திற்கும் ஹிந்தியில் பெயர் சூட்டுவது. ஹிந்தி தெரியாத மாநிலங்களின் தேர்தல் பிரச்சாரங்கள் உட்பட அனைத்து கூட்டத்திலும் ஹிந்தியிலேயே பேசுவது. ஊடகவியலாளர்கள் சந்திப்பிலும், மாநில முதல்வர்களோடு கூடிய இணைய சந்திப்பிலும், ஹிந்தியில் தான் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும் எதேச்சதிகார போக்கு. சுதந்திர நாள், குடியரசு நாள் விழாவிலும், மாநிலங்களின் பெயர் பலகைகளிலெல்லாம் ஹிந்தியிலேயே பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழி திணிப்பு. இப்படியாக, ஹிந்தி தான் தேசிய மொழியென ஒரு மாயையை உருவாக்க இவர்களது ஆட்சியாண்டுகளில் முயல்கின்றனர்.

        யூட்யூபில் எந்தவொரு வீடியோவை தேடினாலும் ஹிந்தி வீடியோக்களே முன்னதாக வந்து நிற்கும். தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், பெங்காலிகள், மராட்டியர்கள் என ஹிந்தியல்லாதோரே அவர்களது மொழிகளை அதிகம் பயன்படுத்தும் ஃபேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களிலும் ஹிந்தியே முன் நிற்கின்றன. மைக்ரோசாப்ட் போன்ற பல இணையங்களில் இந்தியா என்ற நாட்டிற்கு ஹிந்தி மொழிக்கு மட்டும் இடம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் உள்ளோர் எல்லாருமே ஹிந்தியரா என்ன?

        ஹிந்தியே தெரியாத மக்களுக்கு மான்கிபாத் யாருக்கு புரியும்? குடிமக்களின் குரல்வளையை நெரித்து விட்டு மனதின் குரல் என்ற கூப்பாடு தேவையா? யார் கேள்வி கேட்டாலும் ஹிந்தியில் பேசுவது. ஊடக சந்திப்பில் ஹிந்தியை மட்டுமே பேசுவது. ஹிந்தியில் மட்டுமே கேள்வி கேட்க சொல்லி ஆணையிடுவது. ஹிந்தியில் மட்டுமே எம்.பி.களுக்கும், மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்புவது. இப்படியாக நாலாந்தர மக்களாக ஹிந்தி மொழி பேசாத அனைவரையும் நினைக்கும் பாஜகவின் கோரதாண்டவத்திற்கும் முடிவு உண்டு. காலவெளியில் அவர்களின் போலி பிம்பங்கள் சுக்குநூறாய் உடையும். அந்நாள் இந்த இந்திய ஒன்றிய கூட்டாட்சிகளுக்கு இரண்டாம் சுதந்திரநாளாக அமையும்.

- இரா.ச. இமலாதித்தன்

27 மே 2021

தமிழ்நாட்டரசு நடவடிக்கை எடுக்குமா?

        அனைத்து கடைகளையும் அடைக்க சொல்லி, ஊரடங்கை நீட்டிக்கவும் ஆலோசனை செய்கிறது தமிழ்நாடு அரசு. 100க்கு 95% வணிகர்களின் கடைகள், வாடகைக்கு தான் செயல்படுகின்றன. கடையை, திறந்தாலும், திறக்காவிட்டாலும் வாடகையை வசூலிக்கும் வணிக வளாக உரிமையாளர்களிடம் எப்படி வாடகையை கொடுப்பது? நாள் தவணைக்கு கடன் வாங்கி கடை நடத்தும் வணிகர்களுக்கு என்ன மாதிரியான நிவாரணத்தை தமிழ்நாட்டரசு வைத்திருக்கிறது?
 
        பத்திரிகையாளர்கள் எல்லாம் எந்த வகையில் முன்கள பணியாளர்கள் ஆக்கப்பட்டார்களென தெரியவில்லை. கூடவே, அவர்களுக்கு நிவாரணத் தொகையையும் உயர்த்தி கொடுத்திருக்கிறது தமிழ்நாட்டரசு. ஆனால், அவர்களை விட, மாத சம்பளம் கூட வாங்க முடியாத பல்வேறு துறைகளை சார்ந்த தகுதியான பலதரப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை ஒதுக்கப்படாமல், தவித்து கிடக்கின்றனர் என்பது வேறு கதை.

        அண்டை மாநிலங்களிலெல்லாம் மின் கட்டணத்தை ரத்து செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலோ, இந்த ஊரடங்கு காலதிலும் மாதாமாதம் கட்டணம் செலுத்த சொல்கிறது தமிழ்நாட்டரசு. பெருந்தொற்று காலமென்பதால், இந்த மாத மின் கட்டணத்தொகைக்கு பதிலாக, சென்றாண்டு இதே மாதத்தில் அளவிடப்பட்ட மின் கட்டணத்தையே செலுத்தலாமென சொல்லிருக்கிறது மின்வாரியம்.

        எடுத்துக்காட்டாக சென்றாண்டில், ஏ.சி. பயன்படுத்தி கொண்டிருந்த ஒரு வீட்டிற்கு மூவாயிரம் மின்கட்டணம் வந்திருக்கிறது என எடுத்து கொள்வோம். ஆனால், இந்தாண்டு அந்த ஏ.சி. பழுதான காரணத்தினாலோ வேறுசில காரணங்களிலோ அதை பயன்படுத்தாமல் இருக்கும் பொழுது, அதே மூவாயிரம் ரூபாயை மின் கட்டணமாக இப்பொழுதும் அவர்களை செலுத்த சொல்வது சரியா? இதே சூழ்நிலையில் வாடகை வீட்டில் வசிப்போரின் நிலைமை இன்னும் மோசம். சென்றாண்டு அதே வீட்டில் குடியிருந்தோரின் மின் கட்டணமும் இவர்களது கட்டணமும் ஒரே அளவீட்டில் இருக்கவும் வாய்ப்பில்லை. இந்த மாதிரியான பல குழப்பங்களை தவிர்க்க, பெருந்தொற்று காலத்தில் மின் கட்டணத்தை ரத்து செய்ய தமிழ்நாட்டரசு முன்வர வேண்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

25 மே 2021

யார் தமிழர்? என்பதில் ஆரிய திராவிட மோதல்!









முதலில்,

'யாரோடும் பகையில்லை!'யென திராவிட ஸ்டாக் சுப.வீரபாண்டிய செட்டியார் சொன்னார்.

இப்பொழுது,

ஹெச்.ராஜா பீஹாரி எனில், மு.கருணாநிதி குடும்பம் எப்படி தமிழரானது? என ஆரிய ஸ்டாக் கிஷோர்.கே.சுவாமி ஐயங்கார் கேட்கிறார்.

ஆரியமும், திராவிடமும் மாறி மாறி டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்து கொண்டிருக்கின்றன.

'தமிழன் எங்கு சென்றாலும் தமிழன் தான்; இனம் என்றுமே மாறாது' என பி.டி.ஆர்.பழனிவேல் தியகராஜன் முதலியார் சொன்னதால் வந்த எதிர்வினைகளே, இப்பொழுது அறங்கேறிக் கொண்டிருக்கிறன.
இதையேத்தான் முன்பு 'நாம் தமிழர் கட்சி' சொன்ன பொழுது, திராவிட ஸ்டாக்குகளும், ஆரிய ஸ்டாக்குகளும் கண்டபடி வசை பாடி கொண்டிருந்தனர். கேலி செய்த அவர்களையே, காலம் கேள்வி கேட்க வைத்திருக்கிறது.


பின்னிணைப்பு:



#belongstodravidianstock என பெயரில் சேர்த்து கொண்ட திராவிட சுப.வீ. போன்றோர்கள், ஆயிரமாண்டு ஆரியப்பகை என ஒரு பக்கம் பேசிக்கொண்டே, மறு பக்கம் யாரோடும் பகையில்லை என்றும் முட்டு கொடுக்கின்றார்கள். சென்றாண்டு வரை கூட பன்றிகளுக்கு பூநூல் அணிவிக்கும் போராட்டமெல்லாம் திராவிட ஸ்டாக்குகள் செய்தார்கள். பூநூலை பார்பனர்கள் மட்டுமே அணிவதாக நினைத்து கொண்ட அவர்களது பகுத்தறிவை பார்த்து ஊருலகமே வியந்த நிகழ்வுகள் அவை. எஸ்.வீ.சேகர் வீட்டிற்கு சென்று பால் பாக்கெட் கொடுக்கின்ற கேவலமென விமர்சித்தார்கள். இன்றோ, பிராமணர்களின் வீட்டுக்கே சென்று அரிசி பருப்பு கொடுப்பதற்கெல்லாம், பொழிப்புரை எழுதிக்கொண்டிருக்கின்றனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

சுப.வீயின் இந்த ட்வீட் மூலம் அவர் சொல்ல வந்ததில் கடைசி வரி மட்டும் விடுபட்டிருக்கிறது. இவர்களை பொறுத்த வரையில், ஆரியர் திராவிடர் என "யாரோடும் பகையில்லை; தமிழர்களை தவிர..."


- இரா.ச. இமலாதித்தன்

24 மே 2021

பத்மசேஷாத்ரி பள்ளியில் பாலியல் அத்துமீறல்!


        பி.எஸ்.பி.பி.பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் பொழுது, வெறுமனே தவறு செய்ததன் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்வதால் மட்டுமே எல்லாம் சரியாகி விடாது. பாலியல் சீண்டல்களுக்கு ஆளான பாதிக்கப்பட்ட மாணவிகளையும், அவர்களது பெற்றோர்களையும், இந்நேரம் அந்த பள்ளி நிர்வாகம் மிரட்டி இருக்கக்கூடும். அரசுக்கோ, ஊடகங்களுக்கோ நம் பள்ளி ஆசிரியர் பற்றி இனி தகவல்களை கொடுத்தால், உங்கள் கல்வி உள்பட எதிர்காலமே பாதிக்கப்படுமென பாடமெடுத்திருப்பார்கள். எனவே, பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தையே கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

        ஆன்லைன் வகுப்பிலேயே மாணவிகளை பாலியல் தொந்தரவு கொடுக்கு ஆசிரியர்கள், சிறப்பு வகுப்புகள், தனி வகுப்புகளென என்னென்ன செய்திருப்பார்களென விசாரணை செய்ய வேண்டும். விஷ்ணுவிஷால் நடிப்பில் வெளிவந்த 'ராட்சசன்' படத்தில், மிகத்தெளிவாக இம்மாதிரிதான பாலியல் தொந்தரவு கொடுக்கின்ற ஆசிரியரின் கொடுஞ்செயல்களை விரிவாக காட்சிப்படுத்திருப்பார்கள். பார்க்கவே பதைபதைப்பாக இருக்கும். இந்த பாலியல் சீண்டலுக்கு தனிப்பட்ட ஆசிரியர் மட்டும் பொறுப்பல்ல. இப்படியான வக்கிரபுத்தியுள்ள நபரை பணியில் அமர்த்தி, அவருக்கு கட்டற்ற சுதந்திரம் கொடுத்த, நிர்வாகத்திற்கும் முழு பொறுப்பு உண்டு. எவ்விதமான தண்டனையாக இருந்தாலும் பத்மசேஷாத்திரி பள்ளி நிர்வாகத்திற்கு சமவிகிதத்தில் பகிர்ந்தளிக்க அரசு முன்வர வேண்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

22 மே 2021

அமமுகவினரின் புது அவதாரம்!

        டிடிவி தினகரனிற்கு ஆதரவாக, அதிமுகவை சகட்டுமேனிக்கு எதிர்த்து மூன்று பயர் விட்டவர்களும், டிடிவியை சாதி ரீதியாக ஆதரித்து சக சாதிக்காரரான ஓ.பி.எஸ்ஸை கடுஞ்சொல்லில் விமர்சித்தவர்களும், சின்னம்மா, தியாகத்தலைவி என மூச்சு முன்னூறு தடவை சொல்லி இணையத்தில் அமமுகவிற்காக செயல்பட்டவர்களெல்லாம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திடீரென திமுக பக்கம் செல்வதை கண் கூடாக பார்க்க முடிகிறது.

         இதற்கிடையே, எம்.பி.சி உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோமென வன்னியர்களையும், எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கிறோமென கொங்கு வெள்ளாள கவுண்டர்களையும், தென் தமிழகத்தில் பகைமை சக்திக்களாக்கிய சம்பவங்களால் சாதிய மோதலுக்கே கொண்டு செல்லுமளவுக்கு ஒரு கட்டத்தில் நிலைமை சென்றடைந்ததையும் மறக்க முடியாது.
 
        இப்படியான சூழல்களையெல்லாம் தாண்டி, தேர்தல் அரசியலில் அமமுகவின் ஓட்டு சதவீதம் 2%க்கு குறைவான அளவில் பதிவானதால், அமமுகவின் தீவிர ஆதரவாளர்கள், இணைய செயற்பாட்டாளர்கள் என காட்டிக் கொண்டவர்களில் பெரும்பான்மையனோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர். ஒருசிலர் வெளிப்படையாகவே, தினகரனுக்கு பதிலாக ஸ்டாலின் படத்தை ப்ரொஃபைல் படமாக மாற்றிக்கொண்டு, 'இனி திமுகவில் பயணிக்கின்றேன்' என சொன்னதையும் பார்க்க முடிந்தது. வேறு சிலரோ, டிடிவி அண்ணனுக்கே நம்பிக்கை துரோகம் செய்து விட்டீர்களே என விரக்தியில் பேசி, அரசியல் பதிவுகளிலிருந்து ஒதுங்கி நிற்பதையும் காண முடிகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ச்சியாக கவனிக்கும் பொழுது, 'அரசியலில் இதெல்லாம் சாதாரணம்' என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

- இரா.ச. இமலாதித்தன்

மெரினாவும், அரசு இல்லமும் - ஓர் அரசியல் மோதல்!

        எம்.எல்.ஏ. ஒருவர் இறந்தாரெனில் அவரது உடலை புதைக்க மெரினாவில் இடம் கொடுக்க வேண்டுமென்பது எந்த சட்டத்திலும், இல்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் என்பது கேபினெட் தகுதியுடைய பதவி. அமைச்சர்களுக்கு இணையான பதவி. அப்படியான எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளவருக்கு அரசு இல்லத்தில் குடியிருக்க அனுமதி உண்டு. இது சட்டத்திற்கு உட்பட்ட மரபு.
 
        இந்த இரண்டையும் குழப்பிக்கொண்டு, என்னென்னமோ எழுதி கொண்டிருக்கின்றனர் மு.க.நூல் மு.க. ரைட்டப் வெறியர்கள். 'இன்னா செய்தாரை ஒறுத்தல்...' என திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழ்ப்பாடங்களும், 'ஆறடி மண் மூன்றடி மண்' என கணித பாடங்களும், 'பெருந்தன்மை, மேன்மக்கள், பாரம்பரியம்' என வரலாற்று பாடங்களும், 'வெட்கமே இல்லாமல் அந்த வீட்டில் எடப்பாடி இருக்கிறார்' என உளவியல் பாடங்களும், இணையமெங்கும் ஆன்லைன் கிளாஸ் போல மு.க. ஊடகவியலாளர்கள் பாடம் எடுத்து கொண்டிருக்கின்றனர்.

        கடந்த கால் நூற்றாண்டு கால அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்களில் எடப்பாடி பழனிசாமியை தவிர மற்ற அனைவருமே சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், அரசு ஒதுக்கும் வீடு அவர்களுக்கு தேவைப்படாமல் இருந்திருக்கலாம். அதற்காக, சென்னையை இருப்பிடமாக கொண்டிருக்காத ஒருவருக்கு அரசு மரபின் படி, ஒதுக்கப்பட்டிருக்கும் அரசு இல்லத்தில் தங்கினால், அவருக்கு சூடு சுரணை, வெட்கம், மானமெல்லாம் இருக்காது என எழுதும் மனம்பிறழ்ந்த ஆட்களின் பதிவுகளை பார்க்கும் பொழுது தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக எழுதவும் தோன்றுகிறது. கடமை கண்ணியம் கட்டுப்பாடெல்லாம் எழுத்துகளில் கூட இல்லாதவர்கள் எப்படி திமுக காரர் என மார்த்தட்டி கொள்ள முடிகிறது?

        திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினே கடந்த கால கசப்புகளையெல்லாம் மறந்து இனி நாகரீகமான அரசியலை தமிழ்நாட்டில் செய்யலாமென முன்னெடுத்தால் கூட, இந்த மாதிரியான கட்சி ஆட்கள் விடுவதாக தெரியவில்லை.



பின்னிணைப்பு:


        எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் உள்ள ஒருவருக்கு அரசு இல்லம் ஒதுக்குவது அரசாங்க மரபு. அதற்கு பிச்சை என சொல்லுமளவுக்கு இறங்கி பேச ஆரம்பிக்கின்றனர். மு.கருணாநிதியோடு எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட முடியாது தான். ஆனால், அப்படியான ஒப்பீட்டைத்தான் அவர்கள் இன்று செய்து கொண்டிருக்கின்றனர். அப்படி இல்லையெனில், எடப்பாடி பழனிசாமியோடு தான் மு.க.ஸ்டாலினை ஒப்பிட்டு கொண்டிருக்கின்றனர் என பொருள் கொள்ள வேண்டும்.

        மெரினா விசயத்தில் ஜெயலலிதாவின் மரணம் வரை திரும்ப தோண்டி எடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஒருவேளை ஜெயலலிதா இறந்த பொழுது, அதிமுக ஆட்சியில் இல்லாமல், திமுக ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும் நீதிமன்றம் வரை சென்று தான் மெரினாவில் இடம் வாங்கிருப்பார்கள் அதிமுகவினர். உண்மையாகவே இதுதான் நடந்திருக்கும். ஏ1 குற்றவாளிக்கு எப்படி மெரினாவில் இடம் கொடுக்கலாமென அனைத்து சேனல்களும் நேரலை விவாத நிகழ்ச்சிகளை நடத்திருக்கும்.

        இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது ஒன்று புரிகிறது. தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறதென வெகுநாட்களாக கட்டமைக்கப்பட்ட போலி பிம்பமானது, ஸ்டாலினாலும், எடப்பாடி பழனிசாமியாலும் உடைபட்டு இருக்கிறது என்பதும் உண்மையாகிருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்


ஊரடங்கு கோரிக்கை வைக்கும் நபர்கள் யாரார்?

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வேண்டுமென கோரிக்கை வைப்பர்கள் யாராரென பார்த்தால்,

01. கல்வித்துறையில் அரசாங்க பணியிலுள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்.

02. பெற்றோரின் அரசு ஓய்வூதியமே மாதம் லட்சக்கணக்கில் வாங்கும் குடும்ப உறுப்பினர்கள்.

03. வெளிநாட்டில் தேவைக்கு அதிகமாக சம்பாரித்து விட்டு, ஊரில் செட்டிலானவர்கள்.

04. வீடுகள், கடைகள் என வாடகைக்கு விட்டு அதில் வருமானம் பார்ப்பவர்கள்.

05. வெளிநாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வசிக்கும் மகன்/மகளின் வருமானத்தை கொண்டு இங்கே சுகபோகமாய் வாழும் நபர்கள்.

06. தன் மூததையர் சொத்துகளால் குத்தகை மூலம் பலனடைபவர்கள்.

07. வீ.ஆர்.எஸ் வாங்கி கொண்டு, ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து ஆன்லைனிலேயே சம்பாரிக்கும் ஆட்கள்.

08. வொர்க் ஃப்ரெம் ஹோம் என வீட்டிலிருந்து கொண்டே மாதச்சம்பளத்திற்கு இடையூறு இல்லாத அலுவலர்கள்.

        இப்படியாக இன்னும் பல வழிகளில் மாதாமாதம் பல்லாயிரம் ரூபாய்கள் வருமானத்தால் பலனடைந்து கொண்டிருக்கும் நபர்கள் இங்கே பலருண்டு. அவர்களெல்லாம் பால், மருந்து, காய்கறி, இறைச்சி, மளிகை என எதற்குமே வீட்டை விட்டு வெளியவே வராத, ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து படிதாண்டா பணக்காரர்கள். வேலையாட்களை வைத்து கொண்டு அவர்களுக்கான எல்லாவற்றையும் கவனித்து கொண்டு, டிவி முன்பு அமர்ந்து கொண்டே தெருவில் வருவோர்களை அவர்களால் ஏளனம் செய்ய முடியும்.

        மொபைலோ லேப்டாப்போ அதன் மூலம், "ரோட்ல போறவனையெல்லாம் புடிச்சு ஜெயிலுக்குள்ள போடுங்க. கொரானாவை பரப்புறதே இவங்க தான்!" என பதிவுகள் எழுதவோ, கமெண்ட் செய்யவோ, கருத்து கூறவோ அந்த படிதாண்டா பணக்காரர்களால் முடியும். ஆனால் எதார்த்தம் அதுவல்ல.

         கொரொனாவை பரப்புவது வெளியில் திரிவோரின் வேலை. அவனவன் பிழைப்பே வெளியே போனால் தான் நடக்கும் என்பதை மிடில் கிளாஸ் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுக்கே புரியும். இந்த எதார்த்தம் புரியாமல், சுகர், பீ.ப்பி மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டே மாடியிலோ, ட்ரெட் மில்லிலோ வாக்கிங் போகும் ஆட்கள் மனதிற்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
 
        அன்றாடும் மன உளைச்சலில் அல்லற்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் (பொருளாதார பிச்சைக்காரர்களாகி போன, தனியார் தொழிலாளிகள், சிறு தொழில் செய்வோர், தினக்கூலிகள் உள்ளிட்ட) நபர்களையெல்லாம் ஏளனமாக பேசாமல் இருப்பதே படிதாண்டா பணக்காரர்களுக்கு நல்லது. இங்கே, அறிவுரை கூறவது தான் மிக எளிது. அது போல் வாழத்தான் எல்லாருக்கும் வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. வசதிகளும் கிடைப்பதில்லை.

- இரா.ச. இமலாதித்தன்

19 மே 2021

தொ.ப.வும், கி.ரா.வும்!

தொ.ப. கோனார்.
கி.ரா. நாயக்கர்.

முன்னவர் இறப்பின் பொழுது, பல தரப்பட்ட விமர்சனங்கள். பின்னவர் இறப்பிற்கு, அரசு மரியாதையோடு அடக்கம் செய்து அவருக்காக சிலை வைக்கவும் ஆணை.

இதற்கு பெயர் தான் #belongstodravidianstock

தொ.பரமசிவனுக்கும், கி.ராஜநாராயணனுக்கும் தனிப்பட்ட வர்க்க/இன/சாதிய பேதமோ, யார் பெரிதென்ற ஈகோவோ இருந்திருக்குமாயென தெரியாது. இருவரும் தங்களை தங்களோடு ஒப்பிட்டு கொண்டார்களா எனவும் தெரியாது. ஆனால், திராவிடம் என பேசும் புலித்தோல் போர்த்திய பன்றிகள் மிகப்பெரும் திட்டமிடலோடு தான் ஒவ்வொரு விசயத்தை அணுகுகின்றனர். கி.ரா.வை எந்த இடத்தில் வைக்க வேண்டும், தொ.ப.வை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்ற தெளிவான திட்டமிடல் அவர்களிடம் இருக்கின்றது. கி.ரா.வா? தொ.ப.வா? எனில் இவர்களில் யாரை பெரும்பிம்பமாக காட்ட வேண்டுமென்ற தெளிவு, திராவிடம் பேசும் தமிழரல்லாத ஆட்களிடம் இருக்கின்றது. இதை தமிழர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

- இரா.ச. இமலாதித்தன்

10 மே 2021

ஸ்டாலின் பதவியேற்றதற்கு ஆந்திர மூதாதையர் கிராமத்தில் கொண்டாட்டம்!


ஸ்டாலின் பதவியேற்றதற்கு ஆந்திர மூதாதையர் கிராமத்தில் கொண்டாட்டம்!

- என். மகேஷ் குமார், இந்து தமிழ்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதை ஆந்திராவில், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே உள்ள செருவு கொம்மபாளையம் கிராமத்தில் பேனர், தோரணங்கள் கட்டி கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து செருவு கொம்மபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வருலு கூறியதாவது:

ஆந்திரா, தமிழகம் எல்லாம் ஒன்றாக இருந்த சமயத்தில், பல மன்னர்கள் இப்பகுதிகளை ஆண்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூதாதை யர்கள் (தாத்தா) இந்த கால கட்டத்தில் விஜயநகர மன்னர்களின் அரசவையில் வித்வான்களாக பணியாற்றியுள்ளனர்.

அங்கிருந்து ஓங்கோல் அருகே இருந்த பெள்ளூரு சமஸ்தானத்தில் இவர்களது மூதாதையர்கள் நாகஸ்வர வித்வான்களாக வெங்கடகிரி அரசரிடம் பணி யாற்றினர். அப்போது, இவர்களின் வம்சாவளியினருக்கு பெள்ளூரு சமஸ்தானம் சார்பில் 5 குடும்பத் தாருக்கு தலா 30 ஏக்கர் நிலம் என மொத்தம் 150 ஏக்கர் நிலம் மானியமாக வழங்கப்பட்டது. இதில் அவர்கள் விவசாயம் செய்து வந்தனர். வறட்சி நிலவிய போது, நிலங்களை விற்றுவிட்டு இவர்கள் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இப்போதுகூட இவர்களுடைய மூதாதையரின் குடும்பத்தார் இங்கு வசிக்கின்றனர்.

கடந்த 1960-ம் ஆண்டு, கருணாநிதி ஆந்திராவின் ஏலூருக்கு வந்தார். டிடெக்டிவ் நாவலாசிரியர்கள் சங்க கூட்டத்தில் கருணாநிதி தலைமையேற்க வந்தார். அப்போது அவர் தமது மூதாதையர் வாழ்ந்த ஊரான செருவு கொம்மபாளையம் குறித்தும், அங்குள்ள வம்சாவளியினர் குறித்தும், இப்போது வசித்து வருபவர்கள் குறித்தும் ஆர்வத் தோடு கேட்டறிந்தார் என ஜலந்தர் பாலகிருஷ்ணா எனும் நாவலாசிரியர் கூறுவதுண்டு.

திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை உற்சவத் தில் கலந்துகொள்ள இந்த ஊரை சேர்ந்த பல நாகஸ்வர கலைஞர்கள் செல்வது வழக்கம். அப்படியே சென்னையில் கருணாநிதியை சந்தித்து விட்டு வருவதும் வழக்கம்.

எங்களது ஊரை சேர்ந்த ஸ்டாலின் தமிழக முதல்வராகி இருப்பது எங்கள் ஊருக்கே பெருமை. எங்களது கிராம வரலாற்றில் கருணாநிதியின் குடும்பமும் இடம் பெற்றுள்ளது. அதிலிருந்து ஒருவர் தமிழகத்தின் முதல்வராகி இருப்பது எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. விரைவில் நாங்கள் ஸ்டாலினை சந்திப்போம். இவ்வாறு வெங்க டேஸ்வருலு கூறினார். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு ஆந்திராவின், ஓங்கோல் அருகே உள்ள செருவு கொம்மபாளையம் கிராம மக்கள் அவருக்கு பேனர் வைத்து சூடம் கொளுத்தி கொண்டாடினர்.

நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்



07 மே 2021

திமுக அமைச்சரவை (குடி ரீதியாக) பட்டியல்:-



மு.க.ஸ்டாலின், முதல்வர் (இசை வேளாளர்)

கொங்கு வேளாள கவுண்டர் :(04)

சக்கரபாணி, உணவுத்துறை
சு.முத்துசாமி, வீட்டு வசதித்துறை
வெள்ளக்கோவில் சாமிநாதன், செய்தித்துறை
செந்தில்பாலாஜி, மின்சாரத்துறை

கள்ளர் : (03)

ஐ.பெரியசாமி, கூட்டுறவுத்துறை
பி.மூர்த்தி, பத்திரப்பதிவு துறை
மகேஷ் பொய்யா மொழி, பள்ளிக்கல்வி துறை

மறவர் : (01)

தங்கம் தென்னரசு, தொழில்துறை

வன்னியர் : (03)

துரைமுருகன், நீர்வளத்துறை
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை துறை
சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

நாயுடு : (03)

வேலு, பொதுப்பணித்துறை
காந்தி, கைத்தறித்துறை
சேகர்பாபு, அறநிலையத்துறை

ரெட்டியார் : (02)

கே.என்.நேரு, நகர்புற வளர்ச்சி துறை
இராமச்சந்திரன், வருவாய்த்துறை

யாதவர் : (02)

இராஜகண்ணப்பன், போக்குவரத்து துறை
பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி துறை

இஸ்லாமியர் : (02)

நாசர், பால்வளத்துறை
மஸ்தான், சிறுபான்மையினர் துறை

கிறித்துவ நாடார் : (02)

கீதா ஜீவன், சமுக நலத்துறை
மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்ப துறை

இந்து நாடார் : (01)

அனிதா ராதாகிருஷ்ணன், மீன்வளத்துறை

செட்டியார் : (01)

இரகுபதி, சட்டத்துறை

செங்குந்தர் : (01)

தா.மோ.அன்பரசன், ஊரக தொழிற்துறை

படுகர் : (01)

இராமச்சந்திரன், வனத்துறை

அகமுடையார் : (01)

பொன்முடி, உயர்கல்வித்துறை

சைவ வேளாளர் : (01)

பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை

முத்தரையர் : (01)

மெய்யநாதன், சுற்றுச்சூழல் துறை

மீனவர் : (01)

சுப்பிரமணியன், சுகாதாரத்துறை

தேவேந்திர குல வேளாளர் :

கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை

ஆதிதிராவிடர் : (01)

கணேசன், தொழிற்துறை

அருந்ததியர் : (01)

மதிவேந்தன், சுற்றுலாத்துறை

        டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக கூட்டணியே பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றியுள்ள பொழுதிலும், இங்குள்ளவர்களுக்கு யாரும் அமைச்சர் பதவி தரப்படவில்லை. டெல்டா பகுதியிலிருந்து ஓர் அமைச்சர் கூட இடம்பெறாத புறக்கணிப்புக்கு காரணம் எதுவென உறுதியாக தெரியவில்லை. மன்னார்குடி முனைவர் டி.ஆர்.பி.ராஜாவுக்கும், புதுக்கோட்டை மருத்துவர் முத்துராஜாவுக்கும், அமைச்சர் பதவி கிடைக்குமென பரவலாக பேசப்பட்ட நிலையில் அவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. மேலும், டெல்டா உள்ளிட்ட தென் பகுதிகளில் அகமுடையார் ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறது.

23 ஏப்ரல் 2021

புத்தக வாசிப்பா? பெருமை பீற்றலா?!


எத்தனை புத்தகங்களை படித்தேன், யாராருடைய எழுத்துகளையெல்லாம் வாசித்தேன், எந்தெந்த துறைகளிலுள்ள நூல்களை புரட்டினேன் என பலரது பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
 
எளிய மக்களின் வாழ்வியல், ஆண்டான் அடிமையெனும் சாதிய அடக்குமுறை, சமூக புரட்சியாளர்களின் அனுபவங்கள், வணிகமயமாக்கலின் கோரமுகம், மதங்களுக்கு பின்னாலுள்ள அரசியல், உலகமெங்கும் நடக்கும் இயற்கை வளம் சூறையாடல், எல்லை கடந்து நாடு பிடிக்கும் நாடகங்கள், வல்லாதிக்க நாடுகளின் போர் அரசியல், இப்படியாக ஆளாளுக்கு என்னென்ன படித்தேனென, இங்கே பட்டியலிட்டு பீற்றிக்கொள்வதை தவிர அதனால் என்ன பிரயோசனம் இருக்கிறதென தெரியவில்லை.

இப்படி சொல்வதால் மற்றவர்களையும் படிக்க தூண்டும் உளவியல் இருக்கிறதென முட்டு கொடுப்பதை ஏற்க முடியாது. எழுதியவன் ஏட்டை கெடுத்தான்; படிச்சவன் பாட்டை கெடுத்தான் என்ற கதை தான் இங்கே நிலவுகிறது. தனக்கான ஒரு வட்டத்தை வைத்து கொண்டு தங்களைத்தாங்களே மெத்த படித்தவர்கள், வாசிப்பனுபவம் இருப்பவர்கள் போல மாற்றிமாற்றி புகழ்வதும் ஒருவித மனப்பிறழ்வு தான். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் ஒருவித மாயையை உருவாக்கி, தங்களை அறிவுஜீவியாக காட்டிக்கொள்ளும் யுக்திக்குதான் இந்த புத்தக வாசிப்பு கதைகளெல்லாம் தேவைப்படுகிறதே ஒழிய, அப்படி படித்தவர்களால் எந்த பலனும் மற்றவர்களுக்கு இல்லை.
 
நிறைய படித்தவர்களாக அடையாளப்படுபவர்களில் பெரும்பாலனோர், தங்களது சுயத்தை மறைத்து, தன் மனதிற்கு நெருக்கமான அடையாளத்தை மறைத்து, இல்லாத நடுநிலை பக்கம் நிற்பது போல போலியாக காட்டி கொள்கின்றனர். நிறைய நூல்களை வாசித்தவர்கள், நிஜத்தில் அந்த வாசிப்பில் கிடைத்த அனுபவறிவை போலவே வாழ்வதில்லை. அப்படி வாழ்வதாக நடித்து, சுற்றியுள்ளவர்களை ஏமாற்றி மட்டுமே வருகின்றனர். எழுத படிக்கவே தெரியாத பாமரர்களிடம் இல்லாத எந்த சிறப்பும், பல நூல்களை படித்ததாக பட்டியலிடம் நபர்களிடம் இல்லவே இல்லை என்பதே உண்மை.

- இரா.ச. இமலாதித்தன்

18 ஏப்ரல் 2021

இந்து அறநிலையத்துறையும், ஜக்கி வாசுதேவும்!

        "ஜக்கி வாசுதேவ், திராவிடர். எதிர்ப்போம். பிரசாந்த் கிஷோர், ஆரியர். ஆதரிப்போம்." என பேசும் திராவிட அரசியல் பேசும் ஆட்கள் அனைவருமே மக்களை ஏமாற்றும் செயல்களையே செய்கின்றனர். இங்கே நடைபெறும் அனைத்து வணிகம் சார்ந்தது தான். அது, அரசியலோ, ஆன்மீகமோ, மருத்துவமோ, விளையாட்டோ, எதுவாகினும் அனைத்தும் வணிகமயமாகி விட்டன.

        கோவில்களை பற்றி ஜக்கி வாசுதேவ் பேசியதும் கொந்தளிக்கும் நபர்கள், இந்து அறநிலையத்துறையில் உள்ள ஊழல்களை பற்றி பேசுவதில்லை.
இந்து அறநிலையத் துறைக்கான அமைச்சர் உள்ளிட்ட அரசு ஊழியர்களால், கட்சி ஆட்களின் தலையீட்டால் கோவில்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆன்மீகத்தின் பெயரில் லஞ்சமே தலைவிரித்து ஆடுகின்றன. கிறிஸ்துவ மத பற்றாளருக்கு இந்து ஆலயத்தில் அரசு பணி வழங்கிய போக்கும் ஊழலின் நீட்சியே.
 
        கோவில் மூலவரை விரைவாக தரிசிக்க உருவாக்கப்பட்டிருக்கும் வி.ஐ.பி. தரிசனத்தில் அர்ச்சகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையால் ஏற்படும் சிரமங்களெல்லாம் பாமர பக்தர்களின் மீது தான் விழுகின்றன. கோவிலுள்ள உண்டியல்களில் கூட அர்ச்சகர்களுக்கும், அறநிலையத்துறை ஊழியர்களுக்கும் உள் இடஒதுக்கீடு உண்டு. பணம் யாருக்கென்ற அடிதடி போட்டிகளும் ஆங்காங்கே நடைபெறுவதை பார்த்துக்கொண்டு தான் கடக்கின்றோம்.
 
        சிலை கடத்தலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மிகப்பெரும் ஆன்மீக அடையாளமாய் இருக்கும் பெரியாட்களே முதன்மையாக இருக்கின்றனர். கோவிலுக்கு சொந்தமான சிலைகள் காணாமல் போவதும், மூலவருக்கான தங்க வைர நகைகள் பரவலாக எடைகுறைப்பு செய்யப்படுவதையும் அன்றாட செய்திகளாக பார்த்து வருகிறோம். பெரும்பாலான கோவில்களில் தட்சிணை வைக்கவில்லையென்றால் தரிசனமே கிடைக்காது. படியில் அமர்ந்திருக்கும் அர்ச்சகர், எழுந்து கூட தீபாராதனை தட்டை காட்டுவதில்லை. விபூதி குங்கும பிரசாதம் கூட தட்சினையை பொறுத்தே வழங்கப்படுகிறது. இவையெல்லாம் கோவிலுக்குள் நடைபெறும் கூத்துகள்.

        ஒவ்வொரு கிராமக்கோவில்களும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்து விட்டன. அனைத்து கோவில்களிலும் உற்சவர் சிலைகள் உண்டு. பெரும்பாலும் அவையெல்லாம் ஐம்பொன் சிலைகளாக இருக்கும். ஒவ்வொரு மாதாந்திர வருடாந்திர திருவிழாக்களின் பொழுது, வீதிவுலா செய்யும் உற்சவர் சிலையை அந்தெந்த கோவிலில் வைக்க விடுவதே இல்லை. பாதுகாப்பு காரணங்களை காட்டி, பல மைல் தொலைவிலுள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் எடுத்து கொண்டு போய் விடுகின்றனர். கோவில் திருவிழாவின் பொழுது வசூல் செய்து வாங்கிய அந்த உற்சவர் சிலையை எடுத்து வர, இந்து அறநிலையத்துறை ஊழியர்களுக்கு முறைப்படி ஒருமாதம் முன்பே கடிதம் கொடுத்து, ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்தால் தான் உற்சவர் ஊருக்கு வருவார். இல்லையெனில் கெடுபிடிகள் தான். சில ஊர்களில் லஞ்சம் கொடுத்து சமாளிக்க முடியாததாலும், கெடுபிடிகள் அதிகமிருப்பதாலும் ஊர்க்காரர்களே வசூலித்து மற்றுமொரு உற்சவர் சிலையை வாங்கி வைத்து அறநிலையத்துறையின் கெஞ்சிக் கொண்டிருக்காமல் திருவிழாவை சிறப்பாக செய்து முடிக்கின்றனர்.
இதெல்லாம் நேரடியாக கண்ட, கேட்டுணர்ந்த நிகழ்வுகள். இந்து அறநிலையத் துறையை பற்றி சுட்டிக்காட்ட இதுமாதிரியாக பல செய்திகள் உண்டு.

அடுத்து கோவில்களுக்கு வெளியே நடைபெறும் சம்பவங்களை பார்த்தால், பெரும்பாலான சிறு நகரங்களிலும், பல கிராமங்களிலும் உள்ள பல வீட்டு மனைகள் கோவில் நிலங்களே. மேலும், நகர்புற வணிகவளாகங்கள், முக்கிய இடங்களெல்லாம் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டு மிக சொற்பமான குத்தகை/வாடகை பணம் கூட சரிவர தரப்படுவதில்லை. இன்னும் ஒருபடி மேலாக போய், பல கோவில் இடங்கள் தனியாரின் சொத்தாகி கூட கை மாறியிருக்கின்றன. அதிலுள்ள உரிமையாளர்களில் மாற்று மதத்தினரும் உண்டு. கிராமப்புறங்களிலுள்ள எளிய மக்களை தவிர, பெரும்பாலான கோவில் நிலங்களின் உரிமையாளர்கள் அனைவருமே கட்சி ஆட்களாகவும், ஏதாவதொரு கட்சியின் உள்ளூர் தலைவர்களுக்கு வேண்டிய ஆட்களாகவுமே இருக்கின்றனர்.
 
        இந்து அறநிலையத்துறையை திமுகவும், அதிமுகவும் மாறிமாறி தங்களது கட்சியின் சொத்துகளாக்கி ஆக்கிரமித்த கதையெல்லாம் ஒவ்வொரு தனிநபருக்கும் தெரியாமல் இல்லை. நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதால் தான், கர்நாடகத்தில் இருந்து இங்கே வந்து ஆன்மீகத்தை மூலதனமாக்கி கார்ப்ரேட் நிறுவனம் போல கட்டமைத்து தொழில் செய்யும் ஜக்கி வாசுதேவ் போன்றோர் கோவில்களை கைப்பற்ற களமிறக்கப்பட்டிருக்கின்றனர். நாம் எதிர்க்க வேண்டியது ஜக்கி வாசுதேவை மட்டுமல்ல; அவரை எதிர்க்கும் கட்சி ஆட்களையும் தான். இரு தரப்புக்குமே இங்குள்ள கோவில்கள் மீது அக்கறையெல்லாம் இல்லை. கோவில்களை சார்ந்திருக்கும் அனைத்து சொத்துகளையும் கையகப்படுத்த நினைக்கும் வணிக சண்டையே இவர்களுக்கு முதற் நோக்கமாக இருக்கிறது.
 
- இரா.ச. இமலாதித்தன்