எத்தனை புத்தகங்களை படித்தேன், யாராருடைய எழுத்துகளையெல்லாம் வாசித்தேன், எந்தெந்த துறைகளிலுள்ள நூல்களை புரட்டினேன் என பலரது பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
எளிய மக்களின் வாழ்வியல், ஆண்டான் அடிமையெனும் சாதிய அடக்குமுறை, சமூக புரட்சியாளர்களின் அனுபவங்கள், வணிகமயமாக்கலின் கோரமுகம், மதங்களுக்கு பின்னாலுள்ள அரசியல், உலகமெங்கும் நடக்கும் இயற்கை வளம் சூறையாடல், எல்லை கடந்து நாடு பிடிக்கும் நாடகங்கள், வல்லாதிக்க நாடுகளின் போர் அரசியல், இப்படியாக ஆளாளுக்கு என்னென்ன படித்தேனென, இங்கே பட்டியலிட்டு பீற்றிக்கொள்வதை தவிர அதனால் என்ன பிரயோசனம் இருக்கிறதென தெரியவில்லை.
இப்படி சொல்வதால் மற்றவர்களையும் படிக்க தூண்டும் உளவியல் இருக்கிறதென முட்டு கொடுப்பதை ஏற்க முடியாது. எழுதியவன் ஏட்டை கெடுத்தான்; படிச்சவன் பாட்டை கெடுத்தான் என்ற கதை தான் இங்கே நிலவுகிறது. தனக்கான ஒரு வட்டத்தை வைத்து கொண்டு தங்களைத்தாங்களே மெத்த படித்தவர்கள், வாசிப்பனுபவம் இருப்பவர்கள் போல மாற்றிமாற்றி புகழ்வதும் ஒருவித மனப்பிறழ்வு தான். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் ஒருவித மாயையை உருவாக்கி, தங்களை அறிவுஜீவியாக காட்டிக்கொள்ளும் யுக்திக்குதான் இந்த புத்தக வாசிப்பு கதைகளெல்லாம் தேவைப்படுகிறதே ஒழிய, அப்படி படித்தவர்களால் எந்த பலனும் மற்றவர்களுக்கு இல்லை.
நிறைய படித்தவர்களாக அடையாளப்படுபவர்களில் பெரும்பாலனோர், தங்களது சுயத்தை மறைத்து, தன் மனதிற்கு நெருக்கமான அடையாளத்தை மறைத்து, இல்லாத நடுநிலை பக்கம் நிற்பது போல போலியாக காட்டி கொள்கின்றனர். நிறைய நூல்களை வாசித்தவர்கள், நிஜத்தில் அந்த வாசிப்பில் கிடைத்த அனுபவறிவை போலவே வாழ்வதில்லை. அப்படி வாழ்வதாக நடித்து, சுற்றியுள்ளவர்களை ஏமாற்றி மட்டுமே வருகின்றனர். எழுத படிக்கவே தெரியாத பாமரர்களிடம் இல்லாத எந்த சிறப்பும், பல நூல்களை படித்ததாக பட்டியலிடம் நபர்களிடம் இல்லவே இல்லை என்பதே உண்மை.
- இரா.ச. இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக