16 செப்டம்பர் 2009

வலைப்பதிவை ஹேக்கர்களிடமிருந்து காப்பற்றிக்கொள்ள ஓர் வழி!



உங்களது வலைப்பதிவனை ஹேக் செய்ய,உங்களது மின்னஞ்சல் ஊடாகவே ஹேக்கர்கள் உள்ள புக முடிகிறது.அதனால் வேறொரு மின்னஞ்சல் முகவரியை இணைப்பது எப்படி என்பதை,எனக்கு தெரிந்த அளவில் இங்கே சொல்லிருக்கிறேன்.அப்படி மின்னஞ்சலை இணைப்பதன் மூலம் ஒரு மின்னஞ்சல் ஹேக் செய்ய பட்டாலும்,மற்றொரு மின்னஞ்சல் வாயிலாக உங்களது வலைப்பதிவை காப்பற்றிக்கொள்ள முடியும்.


அதற்கான வழிமுறைகள்:


உங்களது வலைப்பதிவினை Login  செய்ததுடன், Dashboard சென்று, அங்கு Settings ஐ Click செய்யவும்.



Settings இல் கடைசியாக உள்ள Permissions என்ற Tab ஐ Click செய்து விடவும்.




பின், Permissions Tab பக்கத்தில் ADD AUTHORS  Tab ஐ கிளிக் செய்து உங்களது நண்பரையோ அல்லது உங்களின் வேற மின்னஞ்சல் முகவரி தந்து Invite செய்து கொள்ளுங்கள்.



பின் நீங்கள் Invite செய்த மின்னஞ்சலுக்கு அந்த Invitation வந்துவிடும்.அந்த மடலில் அதற்கான சுட்டியும் சேர்ந்து வரும்.அந்த Link ஐ Click செய்தால் Blogger page திரையில் தோன்றும்.

 

இதில் கேட்கப்படும் Username,Password போன்ற தகவல்களை அளித்து Accept Invitation ஐ Click செய்யவும்.
பின்பு சென்று உங்களது ஏற்கனவே உள்ள உங்களது Blogger Settings - Permissions பக்கத்தில் Grant admin privileges என்பதை Click செய்து அந்த மின்னஞ்சல் முகவரிக்கும் Admin தரமளித்து பக்கத்தை மூடி விடவும்.

 

இனிமேல் நீங்கள் இந்த இரு மின்னஞ்சல் ஊடாகவும் உங்களது வலைப்பதிவை சீர்செய்துகொள்ளவோ,மாற்றி அமைக்கவோ முடியும்.ஒரு மின்னஞ்சல் வாயிலாக உங்களது வலைப்பதிவை ஹாக் செய்யப்படாலும்,இன்னொரு மின்னஞ்சல் வாயிலாக Login செய்து  ஹாக் செய்யப்பட்ட முகவரியை Remove செய்துவிடவும் முடியும்.



பின்பு நீங்களே இன்னொரு புதிய மின்னஞ்சல் முகவரியை Add Authors ஆக நிருவகிக்க முடியும்.இந்த வழிகளினூடே வலைப்பதிவை ஹக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.  

- இரா.ச.இமலாதித்தன் 


10 செப்டம்பர் 2009

உயிரின் விலை ஐந்து லட்சம்!



நான்  பனிரெண்டாம் வகுப்பை மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்து முடித்ததும், என்ன படிப்பது? எங்கு சேருவது? என்று எத்தனித்து நிற்கும் நேரம் பார்த்து,எங்களது நாகை வி.டி.பி கல்லூரியில் அறிமுகமான தகவல் தொழிற்நுட்பம் பிரிவில் அனைவருக்கும் இடம் கிடைக்க, என்னை போல் பலரும் நேரிடையாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்தோம்.

நாங்கள் எங்களது கல்லூரி வாழ்க்கையைஇரண்டு ஆண்டுகளே கழித்தோம்.என்னோடு பல மாணவர்கள் பயின்றாலும் சரவணன் குறிப்பிடத்தக்கவன்.அவன் மிகவும் அமைதியானவன்.சரவணனுக்கு ரொம்ப பெருந்தன்மையான மனது.எப்போதும் எந்தவித  ஆர்ப்பாட்டமில்லாமல் கல்லூரி வாழக்கையை என்னோடு கடந்து சென்றவன்.நான் டிப்ளோமாவோடு முடித்துகொண்டாலும் , சரவணன் பொறியியல் படிப்பை முடித்து,இரண்டு ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியனாக பணியாற்றி வருகிறான்.

அவன் என்னோடு தொழிற்நுட்ப கல்வி பயிலும் நாட்களில், அதிகநெருக்கம்  இல்லாத போதும் இடையிடையே வழிபயனங்களில் சந்தித்து உரையாடிய அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இன்னுமும் என் நினைவில் நிற்கிறது.

 சரவணனுக்கு ஒரு கல்லூரியில் ஆசிரியர் பதவி கிடைத்த பின்பும் கூட
வழக்கம் போல் அவனது அண்ணன் நடத்துனராக பணி புரியும் அந்தவொரு தனியார் பேருந்திலேயே பயணித்து வருவது வழக்கம்.அந்த பேருந்தில் அவனுக்கு டிக்கெட் கிடையாதென்பதால்,வருவதும் போவதும் அந்த பேருந்தில்தான். அவன் மீது எல்லோரும் பாசம் வைத்திருந்தாலும்,ஒரு படி மேலாகவே சரவணனின் அக்கா பாசம் வைத்திருந்து படிக்க வைத்தார்.கணவன் வெளிநாட்டில் இருப்பதால் தம்பியை கூடவே தங்கவும் வைத்துக்கொண்டார்.

அன்று வழக்கம் போல் பேருந்து நிறுத்தத்தில், அந்த பேருந்துக்காக காத்திருந்தும் பேருந்து இவனது நிறுத்தத்தில் நிற்காமலே சென்று விட்டது.சரியென்று அக்கா வீட்டிற்க்கு சென்று அத்தானின் பைக் ஐ எடுத்து கொண்டு ,கல்லூரிக்கு சென்றுவிட்டான்.மாலை அன்று வழக்கத்திற்கு மாறாக அனைத்து சக ஆசிரியர்களிடமும் நலவிசாரிப்புகளுடன், என்றைக்கும் இல்லாமல் மிகவும் முக மலர்ச்சியுடன் காணப்பட்டான்.எப்போது  பைக் ஐ சரவணன் எடுத்து வந்தாலும், சக தோழன் சக ஆசிரியருடன் சேர்ந்து மூவருமாக  பயணிப்பதே வழக்கம்.ஆனால் அன்று அவனுக்கு பல தடங்கள் ஏற்பட்டு மூவர் சேர்ந்து பயணிக்காமல்,இருவர் மட்டுமே பயணிக்க தொடங்கினர்.வளைவில் கடக்கும் போது தினமும் வந்து போகும் பேருந்துக்காகவே வழிவிட ஒதுங்கி பைக் ஐ திருப்பும் போது பள்ளத்தில் விட்டு,சருக்கியவாறே இருவரும் கிழே விழுந்தனர்.இருவருக்கும் காயம் அதிகம் இல்லாமல் இருந்தும்,பின்புறம் வந்த பைக் மோதியதில் சரவணின் இதயம் வெடித்து,ரத்தகுலாய்கள் தெறித்து மூளையும் செயலந்துவிட்டதாக மருத்தவறிக்கையில் தகவல் கூறப்பட்டது. உயிர் பிரிந்தது கூட அறியமுடியாமல் மயக்கநிலையில் தான் சரவணன் உள்ளான் என எண்ணி அலைபேசி மூலமாக தகவலை அளிக்க முற்ப்பட்டார் உடன் வந்த சக ஆசிரியர்.அதே நேரத்தில், அங்கே வந்த காவல்துறையின் உதவியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  இருவரும் அழைத்து செல்லப்பட்டனர்.பின்புறம் வந்து மோதியவனையும் கைது சென்றனர்.

இறுதிசடங்குக்கான அந்த இரு தினங்களும் கல்லூரி மாணவர்கள்,கல்லூரி ஆசிரியர்கள்,முதல்வர் உட்பட ஆயிரகணக்கான மாணவர்களின் கூட்டம் அலைமோத சரவணனின் ஊரே ஸ்தம்பித்து போனது.சரவணனை காதலித்து வந்த பெண்ணின் கண்ணீரும்,அப்பா,அண்ணனின் அலறல் சத்தத்திலும் ஊரே துக்கத்தில் மிதந்தது.

"இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" என்ற பாடலுக்கினங்க எல்லோரும் சரவணனின் புகழ் பேசி கண்கலங்கி நின்றனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் சரவணனின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் தர முன்வந்துள்ளது. எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும், அவனின் காதலிக்கும், பெற்றோருக்கும், அண்ணனுக்கும், அக்காவிற்கும் அவனுக்கு இணையாக யார் வரமுடியும்?

சரவணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்!

- இரா.ச.இமலாதித்தன்

இணைய பயன்பாட்டாளர்கள் பற்றிய பார்வை..!


இன்றைய காலக்கட்டங்களில் 'இணையம்' என்ற ஒற்றைக்கருவி, உலகையே ஆட்டுவிக்கத்தான் செய்கிறது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. புரட்சி என்பது களத்தில் நின்று கலகம் செய்வதென்ற மையத்திற்கே அடித்தளமாக, இப்போது இணையமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது .இப்படிப்பட்ட இணையமென்ற மாபெரும் சக்தியை, மக்கள் சக்தியாக்கி மகத்தான வெற்றிகளை சமகாலத்தில் பலநாட்டு சாமானிய மக்களும் அனுபவித்துக்கொண்டு வருகின்றனர். இதற்கு உதாரணங்கள் தேவையில்லையென்றே கருதுகிறோம்.இணையத்தைப்பற்றிய எல்லா விடயங்களும் நாம் அறிந்தததே!

இணையவாதிகளான நாம், இணையமென்ற கடவுளின் தூதர்களாகவே செயல்பட வேண்டிய அவசியத்தை விவரிப்பதே, இந்த பதிவின் சாரம்சம் என்பதை தெரிவித்துக்கொண்டு தொடர்கிறோம்.

நாம் வழமையாக இணைய செயல்பாடுகள், குழும விவாதங்கள் மற்றும் வலைத்தளம் ஊடாகவே இருந்து வருகிறது.இப்போது இன்னும் விரிவாகி, சமூக பொதுதளங்களான பேஸ்புக், கூகிள் பஸ், ட்விட்டர் வரையிலுமாக செயல்பட்டு வருகின்றோம். அதுவும் மிக விரைவான/ விரிவான கருத்து பரிமாற்றங்களால் நொடிக்குநொடியிலான பலதரப்பட்ட செய்திகள் பகிரப்படுகின்றன.

கருத்து பரிமாற்றம் என்பது நாம் அனுபவித்துணர்ந்த செயல்களின் வழிமுறைகளையும், அதன் நிறை-குறைகளையும், அதன் பயன்பாடுகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் இணைய பொதுவெளிகளில் வைத்தால் அது போற்றுதலுக்குரியது. தமக்கு நேர்ந்த இன்பதுன்ப நிகழ்வுகளை சமாளித்து, அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை மற்ற தோழமைகளுக்கும் பகிர்தலே,கருத்து தெளிதல்களுக்கு வித்திடும்.ஆனால், பெரும்பாலான இணையவாதிகளின் பார்வையில், பகிர்தல் என்பதை வேறொரு கோணத்திலேயே அணுகப்படுகிறது என்பதையே நாம் அவதானித்து வந்திருக்கிறோம்.

"ஒவ்வொரு தனிநபரின் ஒழுக்கமே, ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒழுக்கம்" என்பதையே, 'கழுகு' பலமுறை வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்த இணையத்தின் ஊடாகவே, நாமெல்லாம் இன்று நண்பர்களாக, சகோதர சகோதரிகளாக இணைந்துள்ளோம். பெரும்பான்மையாக, முகம் பார்க்காமல் எழுத்தோடு நட்பு பாராட்டி பின்பு குரலோடு உறவாடி, அதன் அடுத்தகட்டமாய் நேரடியாக சந்தித்து ஒரு நட்பின் இணக்கத்தை வளர்த்துக்கொண்டு வருகிறோம்.இப்படிப்பட்ட நட்பினை தந்த இணையத்தை, இன்று பலரும் தன் சுயதம்பட்டங்களை மட்டுமே எழுத்துகளாக்கி இம்சை தருவது, தேவையா என்பதே நமது கேள்வி

இந்த சுயதம்பட்டங்களை பொதுவெளியில் பரிமாற்றங்களாக பகிரப்படும்போது, இணையத்தில் இயங்கும் ஆண்-பெண், இளையோர்-மூத்தோர் என்ற பாகுபாடின்றி பலதரபட்டவர்களுக்கும் இது சென்றடைகிறது. சுயதம்பட்டங்கள் மட்டுமின்றி தான் சார்ந்த கருத்துசார்புகளை புகழ்ந்து எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனக்கு எதிர்சார்பு கொள்கையுடைய தனி நபர்களைக்கூட மத/சாதீய ரீதியில் தாக்கி, இழிவான முறையில் எழுதும் இணையவாதிகளை, இணையவெளியில் காணும்போது வருத்தமாய் இருக்கிறது.பொதுவாக இணையங்களில் ஏற்படும் விவாதங்களில் மையக்கரு குறுப்பிடத்தக்க சிலவற்றை சார்ந்ததாவே இருக்கும்.

இனம்/மதம்/சாதீய ரீதியில் ஏற்படும் விவாதங்கள், ஆத்திக - நாத்திக முரண்பாடுகள், அரசியல் கொள்கைகளில் எதிரெதிர் அரசியல் சார்புநிலை கொண்டவர்களின் மோதல்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகத்தின் கதாநாயகர்கள், நாயகிகளின் விமர்சனங்களென இதுபோன்ற இன்ன சில விவாதங்களே அதிகம் இடம்பெற்று வருவதையே நாம் கண்டுவருகிறோம்.

 ஒரு காலத்தில் நல்ல விடயங்களையும் நல்ல பண்புகளையும் பொது வெளியில் பகிர்வது அந்த தனிப்பட்ட மனிதரை நல்லவராக அடையாளம் காட்டும் ஆனால் சம காலத்தில் நான் எதார்த்தமாய் இருக்கிறேன் பேர்வழி என்று தனிப்பட்ட தங்களின் அந்தரங்கங்களையும், இன்ன பிற சமுதாயத்தால் தீங்கு என்று நாம் நினைக்கும் பல விடயங்களை பகிங்கரமாகவே பொது வெளியில் மனிதர்கள் பகிர்வதும் அதனை ஆமோதிப்பது போல மனிதர்கள் இவர்க்ளைச் சுற்றி வலம் வருவதும் எப்படி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும்...!

யாருக்கும் தெரியாமல் செய்யும் ஒரு செயலை பொதுவெளியில் பகிங்கரப்படுத்தப்படுவதாலேயே அது நல்ல செயல் ஆகிவிடுமா? சிந்திக்க வேண்டும் தோழமைகளே....! ஏனென்றால் வளரும் சமுதாயம் இது ஒரு போன்ற கவர்ச்சிகளைக் கண்டு இதை ஒரு நாகரீகமாக கருதத் தொடங்கினால்...?  சற்றே நம் வீட்டுப் பிள்ளைகளை இந்த இடத்தில் வைத்து எண்ணிப் பாருங்கள்...!

கிராமத்து டீக்கடைகளிலும், சிறுநகரத்து சலூன்கடைகளிலும் நடைபெறும் வெற்று வாதங்களாகவே, பெரும்பாலான இணைய விவாதங்கள் அமைகின்றன.மேலும் இம்மாதிரியான விவாதங்களில், தான் சொன்ன கருத்தில் கொஞ்சமும் உண்மை இல்லையென்றாலும் கூட, தான்பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்பது போன்ற கடைசிவரை விதண்டாவதாமாய் பேசிக்கொண்டு, முடியாதபட்சத்தில் தனிநபர்களை குறிவைத்து (சாதி/மதம்/இன ரீதியிலான) வசைசொற்களால் அர்ச்சனை செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அடுத்தவர்களை காயப்படுத்தாத தன்னைசார்ந்த எந்தவொரு நிகழ்வுகளை பொதுவெளியில் பகிர்வது சரியானதே. நான் இன்னைக்கு பிரியாணி சாப்பிட்டேன், நான்கு சவரனில் வளையல் வாங்கினேன் என்பது கூட இடம்பொருள் ஏவலுக்கு தகுந்தற்போல, சிறுதகவலேனும் கிடைக்கும் என மனதை சமாதானப்படுத்திக்கொள்ளலாம். மாறாக மதத்தை தாக்குவது, சிலரது நம்பிக்கைகளை கடுமையாக எதிர்ப்பது என்பது மட்டுமே தவறு. இதே வாய்ப்பு எதிராளிக்கும் உண்டு என்பதை நாம் வசதியாக மறந்துவிடுவதால்தான் சண்டையே வருகிறது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பதுகூட மற்றவர்களின் மனங்களை காயப்படுத்தாமல் இருக்கவேண்டும்

நாம் பகிரும் கருத்துக்கள் அடுத்த மனிதரை ஊக்கப்படுத்துவதாய், புதிய செய்திகளைப் பகிர்வதாய், நகைச்சுவையூட்டி சிரிக்கச் செய்வதாய் இருக்க வேண்டும் மாறாக தாழ்வு மனப்பான்மையும், எரிச்சலையும் ஊட்டுவதாய் இருக்கக் கூடாது. நண்பர்களுக்குள்ளான பிரைவேட் ஆப்சனில் யாருக்கு என்ன பிரியமோ அதை பகிர்ந்து கொள்வதில் தவறு இல்லை.. ஆனால் பொதுவெளியில் நாகரீகத்தை கடை பிடிக்க வேண்டியது மிக அவசியமாகிறது.

நீங்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமென சொல்ல எங்களுக்கு உரிமையில்லையென்றாலும், இதுமாதிரியெல்லாம் இணையத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை, அனைவரின் கவனத்திற்கு கொண்டு வந்து பகிர்வது எங்களது கடமையாக கருதுகிறோம். இந்த கட்டுரையின் வாயிலாக, உங்களை நீங்களே சுயவிமர்சனம் செய்து பார்க்க, ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதை எங்களது பணியாக கருதுவதால் இங்கே பகிர்கிறோம்.

மேற்சொன்ன பதிவின் சாராம்சமான, "தனி நபரை தாக்கும் வகையிலோ யாரையும் ஏளனம் செய்யும் வகையிலோ, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன் படுத்தியோ, எனது சொந்த அன்றாட நடவடிக்கைகளை வெளியே கூறி தம்பட்டம் அடித்தோ, சமுதாயத்திற்கு தீங்கு செய்யும் எந்தவித கருத்துக்களையும் இணையமென்ற பொதுவெளியில் பகிரமட்டோம்" என்பதை இங்கே உறுதிமொழியாய் எடுத்துக்கொண்டு, மனநிறைவோடு இப்பதிவை நிறைவு செய்கின்றோம்.
 

09 செப்டம்பர் 2009

உலகத்திலேயே மிகச் சிறந்த பொறுமைசாலி யாரு ?




தினமும் ஏதாவது எழுதிடனும்னு நேத்துலேர்ந்து ஒரு முடிவோட இருந்தேன்.ஆனா, இன்னைக்கு எதப்பத்தி எழுதறதுன்னு ஒண்ணுமே தெரியல.
(இப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சே...) இருந்தாலும் ஏதாவது எழுதனுமே,நம்ம தான் நேற்றைக்கு ஓவரா பில்டப் கொடுத்துடோம் வேற.அதுக்காகவே ஏதாவது எழுதனுமேன்னு எனக்குள்ளே நானே புலம்பிகிட்டு, கடைசியா எதையாவது எழுதிடலாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.அப்படி ஒரு நல்ல (?) முடிவுக்கு வந்த பிறகும் கூட ஏதேதோ எழுதிகிட்டு இருக்கேன் என்ன பண்றது எல்லாம் ஒரு ஜலதோசத்துல வருது.சாரி பழக்கதோசத்துல  ன்னு சொல்றதுக்கு பதிலா ஜலதோசம்ன்னு பழக்கதோசத்துல சொல்லிட்டேன்.
அச்.....அச்....என்னான்னு கேக்குறீங்களா அதான் சொன்னேன்ல எனக்கு ரெண்டு நாளா ஜலதோசம் அதான் இப்படி.இப்ப வெயில் காலம் தானே அப்பறம்  ஜலதோசம் எப்படின்னு கேக்குறீங்களா...எங்க ஊரு பக்கம் கோடைமழை பேய்ஞ்சிட்டு இருக்கு.எனக்கு மழைன்னா அவ்வளவு சந்தோசம், பழக்கதோசத்துல நிறைய நேரம் நினைஞ்சிட்டேன்.அதுனால தான் இந்த ஜலதோசம்.  


சரி அது போகட்டும்,ஒரு வழியா விசயத்துக்கு வந்துடுறேன்.
எது எப்படியோ எனக்கு சந்தோசம் தான்.ஒன்னுமே தெரியாம இவ்வளவு வரிகளை எழுதிட்டோம்மான்னு எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டுக்கிட்டு நான் சொல்ல வந்தத இப்ப சொல்லிடுறேன்.அது என்னன்னா...


உலகத்திலேயே மிகச் சிறந்த பொறுமைசாலி யாரு ? ன்னு  ஒரு கேள்விய யாராவது  உங்ககிட்ட கேட்டாங்கன்னு வச்சிக்குங்க,அதுக்கு பதில் நீங்க யாரை சொல்லுவீங்க?


புத்தன்,
இயேசு,
காந்தி...ன்னு யாரை வேணும்னாலும் நீங்க சொல்லலாம்.ஆனால் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை...ஏன் ? எப்படி ? யார் அந்த நபர்? என்கிறீர்களா...அப்படியும் ஒரு நபர் இருக்காங்க.


வெளி உலகத்திருக்கு தெரியாத அந்த நபரையும்,அந்த நபர் பற்றிய ஆச்சரியமான தகவல்களையும் இங்கு தருகிறேன்.மிகவும் கவனத்தோடு படியுங்கள்.உலகத்துல பொறுமைசாலி நிறைய பேரு இருக்கலாம்.ஆனா  நான் சொல்ல போற நபர், மிகவும் பொறுமைசாலி.அவர் யாருன்னா.............. வேற யாரும் இல்ல நீங்கத்தான். ஏன்னா இவ்வளவு நேரம் என் மொக்கையை அசை போட்டதுனாலேயே...அந்த பொறுமைசாலி  நீங்கதான்னு நிருபிச்சிடீங்க.அப்பறம்  உங்கள பத்தி நான்  சொல்ல என்ன இருக்கு ? உங்களுக்கே உங்களை பற்றி தெரியாதா என்ன ?