இன்றைய காலக்கட்டங்களில்
'இணையம்' என்ற ஒற்றைக்கருவி, உலகையே ஆட்டுவிக்கத்தான் செய்கிறது என்பதை
சொல்லித் தெரியவேண்டியதில்லை. புரட்சி என்பது களத்தில் நின்று கலகம்
செய்வதென்ற மையத்திற்கே அடித்தளமாக, இப்போது இணையமும்
செயல்பட்டுக்கொண்டிருக்கிறது .இப்படிப்பட்ட இணையமென்ற மாபெரும் சக்தியை,
மக்கள் சக்தியாக்கி மகத்தான வெற்றிகளை சமகாலத்தில் பலநாட்டு சாமானிய
மக்களும் அனுபவித்துக்கொண்டு வருகின்றனர். இதற்கு உதாரணங்கள்
தேவையில்லையென்றே கருதுகிறோம்.இணையத்தைப்பற்றிய எல்லா விடயங்களும் நாம்
அறிந்தததே!
இணையவாதிகளான
நாம், இணையமென்ற கடவுளின் தூதர்களாகவே செயல்பட வேண்டிய அவசியத்தை
விவரிப்பதே, இந்த பதிவின் சாரம்சம் என்பதை தெரிவித்துக்கொண்டு தொடர்கிறோம்.
நாம்
வழமையாக இணைய செயல்பாடுகள், குழும விவாதங்கள் மற்றும் வலைத்தளம் ஊடாகவே
இருந்து வருகிறது.இப்போது இன்னும் விரிவாகி, சமூக பொதுதளங்களான பேஸ்புக்,
கூகிள் பஸ், ட்விட்டர் வரையிலுமாக செயல்பட்டு வருகின்றோம். அதுவும் மிக
விரைவான/ விரிவான கருத்து பரிமாற்றங்களால் நொடிக்குநொடியிலான பலதரப்பட்ட
செய்திகள் பகிரப்படுகின்றன.
கருத்து பரிமாற்றம்
என்பது நாம் அனுபவித்துணர்ந்த செயல்களின் வழிமுறைகளையும், அதன்
நிறை-குறைகளையும், அதன் பயன்பாடுகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும்
இணைய பொதுவெளிகளில் வைத்தால் அது போற்றுதலுக்குரியது. தமக்கு நேர்ந்த
இன்பதுன்ப நிகழ்வுகளை சமாளித்து, அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை மற்ற
தோழமைகளுக்கும் பகிர்தலே,கருத்து தெளிதல்களுக்கு வித்திடும்.ஆனால்,
பெரும்பாலான இணையவாதிகளின் பார்வையில், பகிர்தல் என்பதை வேறொரு கோணத்திலேயே
அணுகப்படுகிறது என்பதையே நாம் அவதானித்து வந்திருக்கிறோம்.
"ஒவ்வொரு தனிநபரின்
ஒழுக்கமே, ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒழுக்கம்" என்பதையே, 'கழுகு' பலமுறை
வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்த இணையத்தின் ஊடாகவே, நாமெல்லாம் இன்று
நண்பர்களாக, சகோதர சகோதரிகளாக இணைந்துள்ளோம். பெரும்பான்மையாக, முகம்
பார்க்காமல் எழுத்தோடு நட்பு பாராட்டி பின்பு குரலோடு உறவாடி, அதன்
அடுத்தகட்டமாய் நேரடியாக சந்தித்து ஒரு நட்பின் இணக்கத்தை வளர்த்துக்கொண்டு
வருகிறோம்.இப்படிப்பட்ட நட்பினை தந்த இணையத்தை, இன்று பலரும் தன்
சுயதம்பட்டங்களை மட்டுமே எழுத்துகளாக்கி இம்சை தருவது, தேவையா என்பதே நமது
கேள்வி
இந்த
சுயதம்பட்டங்களை பொதுவெளியில் பரிமாற்றங்களாக பகிரப்படும்போது, இணையத்தில்
இயங்கும் ஆண்-பெண், இளையோர்-மூத்தோர் என்ற பாகுபாடின்றி
பலதரபட்டவர்களுக்கும் இது சென்றடைகிறது. சுயதம்பட்டங்கள் மட்டுமின்றி தான்
சார்ந்த கருத்துசார்புகளை புகழ்ந்து எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல்,
தனக்கு எதிர்சார்பு கொள்கையுடைய தனி நபர்களைக்கூட மத/சாதீய ரீதியில்
தாக்கி, இழிவான முறையில் எழுதும் இணையவாதிகளை, இணையவெளியில் காணும்போது
வருத்தமாய் இருக்கிறது.பொதுவாக இணையங்களில் ஏற்படும் விவாதங்களில் மையக்கரு
குறுப்பிடத்தக்க சிலவற்றை சார்ந்ததாவே இருக்கும்.
இனம்/மதம்/சாதீய
ரீதியில் ஏற்படும் விவாதங்கள், ஆத்திக - நாத்திக முரண்பாடுகள், அரசியல்
கொள்கைகளில் எதிரெதிர் அரசியல் சார்புநிலை கொண்டவர்களின் மோதல்கள்,
எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகத்தின் கதாநாயகர்கள், நாயகிகளின்
விமர்சனங்களென இதுபோன்ற இன்ன சில விவாதங்களே அதிகம் இடம்பெற்று வருவதையே
நாம் கண்டுவருகிறோம்.
ஒரு காலத்தில்
நல்ல விடயங்களையும் நல்ல பண்புகளையும் பொது வெளியில் பகிர்வது அந்த
தனிப்பட்ட மனிதரை நல்லவராக அடையாளம் காட்டும் ஆனால் சம காலத்தில் நான்
எதார்த்தமாய் இருக்கிறேன் பேர்வழி என்று தனிப்பட்ட தங்களின்
அந்தரங்கங்களையும், இன்ன பிற சமுதாயத்தால் தீங்கு என்று நாம் நினைக்கும் பல
விடயங்களை பகிங்கரமாகவே பொது வெளியில் மனிதர்கள் பகிர்வதும் அதனை
ஆமோதிப்பது போல மனிதர்கள் இவர்க்ளைச் சுற்றி வலம் வருவதும் எப்படி ஒரு நல்ல
சமுதாயத்தை உருவாக்கும்...!
யாருக்கும்
தெரியாமல் செய்யும் ஒரு செயலை பொதுவெளியில் பகிங்கரப்படுத்தப்படுவதாலேயே
அது நல்ல செயல் ஆகிவிடுமா? சிந்திக்க வேண்டும் தோழமைகளே....! ஏனென்றால்
வளரும் சமுதாயம் இது ஒரு போன்ற கவர்ச்சிகளைக் கண்டு இதை ஒரு நாகரீகமாக
கருதத் தொடங்கினால்...? சற்றே நம் வீட்டுப் பிள்ளைகளை இந்த இடத்தில்
வைத்து எண்ணிப் பாருங்கள்...!
கிராமத்து
டீக்கடைகளிலும், சிறுநகரத்து சலூன்கடைகளிலும் நடைபெறும் வெற்று
வாதங்களாகவே, பெரும்பாலான இணைய விவாதங்கள் அமைகின்றன.மேலும் இம்மாதிரியான
விவாதங்களில், தான் சொன்ன கருத்தில் கொஞ்சமும் உண்மை இல்லையென்றாலும் கூட,
தான்பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்பது போன்ற கடைசிவரை
விதண்டாவதாமாய் பேசிக்கொண்டு, முடியாதபட்சத்தில் தனிநபர்களை குறிவைத்து
(சாதி/மதம்/இன ரீதியிலான) வசைசொற்களால் அர்ச்சனை செய்வதும் வன்மையாக
கண்டிக்கத்தக்கது.
அடுத்தவர்களை
காயப்படுத்தாத தன்னைசார்ந்த எந்தவொரு நிகழ்வுகளை பொதுவெளியில் பகிர்வது
சரியானதே. நான் இன்னைக்கு பிரியாணி சாப்பிட்டேன், நான்கு சவரனில் வளையல்
வாங்கினேன் என்பது கூட இடம்பொருள் ஏவலுக்கு தகுந்தற்போல, சிறுதகவலேனும்
கிடைக்கும் என மனதை சமாதானப்படுத்திக்கொள்ளலாம். மாறாக மதத்தை தாக்குவது,
சிலரது நம்பிக்கைகளை கடுமையாக எதிர்ப்பது என்பது மட்டுமே தவறு. இதே
வாய்ப்பு எதிராளிக்கும் உண்டு என்பதை நாம் வசதியாக மறந்துவிடுவதால்தான்
சண்டையே வருகிறது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பதுகூட மற்றவர்களின்
மனங்களை காயப்படுத்தாமல் இருக்கவேண்டும்
நாம் பகிரும்
கருத்துக்கள் அடுத்த மனிதரை ஊக்கப்படுத்துவதாய், புதிய செய்திகளைப்
பகிர்வதாய், நகைச்சுவையூட்டி சிரிக்கச் செய்வதாய் இருக்க வேண்டும் மாறாக
தாழ்வு மனப்பான்மையும், எரிச்சலையும் ஊட்டுவதாய் இருக்கக் கூடாது.
நண்பர்களுக்குள்ளான பிரைவேட் ஆப்சனில் யாருக்கு என்ன பிரியமோ அதை பகிர்ந்து
கொள்வதில் தவறு இல்லை.. ஆனால் பொதுவெளியில் நாகரீகத்தை கடை பிடிக்க
வேண்டியது மிக அவசியமாகிறது.
நீங்கள்
இப்படித்தான் இருக்கவேண்டுமென சொல்ல எங்களுக்கு உரிமையில்லையென்றாலும்,
இதுமாதிரியெல்லாம் இணையத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை, அனைவரின்
கவனத்திற்கு கொண்டு வந்து பகிர்வது எங்களது கடமையாக கருதுகிறோம். இந்த
கட்டுரையின் வாயிலாக, உங்களை நீங்களே சுயவிமர்சனம் செய்து பார்க்க, ஒரு
சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதை எங்களது பணியாக கருதுவதால் இங்கே
பகிர்கிறோம்.
மேற்சொன்ன
பதிவின் சாராம்சமான, "தனி நபரை தாக்கும் வகையிலோ யாரையும் ஏளனம் செய்யும்
வகையிலோ, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன் படுத்தியோ, எனது சொந்த அன்றாட
நடவடிக்கைகளை வெளியே கூறி தம்பட்டம் அடித்தோ, சமுதாயத்திற்கு தீங்கு
செய்யும் எந்தவித கருத்துக்களையும் இணையமென்ற பொதுவெளியில் பகிரமட்டோம்"
என்பதை இங்கே உறுதிமொழியாய் எடுத்துக்கொண்டு, மனநிறைவோடு இப்பதிவை நிறைவு
செய்கின்றோம்.