10 செப்டம்பர் 2009

உயிரின் விலை ஐந்து லட்சம்!



நான்  பனிரெண்டாம் வகுப்பை மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்து முடித்ததும், என்ன படிப்பது? எங்கு சேருவது? என்று எத்தனித்து நிற்கும் நேரம் பார்த்து,எங்களது நாகை வி.டி.பி கல்லூரியில் அறிமுகமான தகவல் தொழிற்நுட்பம் பிரிவில் அனைவருக்கும் இடம் கிடைக்க, என்னை போல் பலரும் நேரிடையாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்தோம்.

நாங்கள் எங்களது கல்லூரி வாழ்க்கையைஇரண்டு ஆண்டுகளே கழித்தோம்.என்னோடு பல மாணவர்கள் பயின்றாலும் சரவணன் குறிப்பிடத்தக்கவன்.அவன் மிகவும் அமைதியானவன்.சரவணனுக்கு ரொம்ப பெருந்தன்மையான மனது.எப்போதும் எந்தவித  ஆர்ப்பாட்டமில்லாமல் கல்லூரி வாழக்கையை என்னோடு கடந்து சென்றவன்.நான் டிப்ளோமாவோடு முடித்துகொண்டாலும் , சரவணன் பொறியியல் படிப்பை முடித்து,இரண்டு ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியனாக பணியாற்றி வருகிறான்.

அவன் என்னோடு தொழிற்நுட்ப கல்வி பயிலும் நாட்களில், அதிகநெருக்கம்  இல்லாத போதும் இடையிடையே வழிபயனங்களில் சந்தித்து உரையாடிய அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இன்னுமும் என் நினைவில் நிற்கிறது.

 சரவணனுக்கு ஒரு கல்லூரியில் ஆசிரியர் பதவி கிடைத்த பின்பும் கூட
வழக்கம் போல் அவனது அண்ணன் நடத்துனராக பணி புரியும் அந்தவொரு தனியார் பேருந்திலேயே பயணித்து வருவது வழக்கம்.அந்த பேருந்தில் அவனுக்கு டிக்கெட் கிடையாதென்பதால்,வருவதும் போவதும் அந்த பேருந்தில்தான். அவன் மீது எல்லோரும் பாசம் வைத்திருந்தாலும்,ஒரு படி மேலாகவே சரவணனின் அக்கா பாசம் வைத்திருந்து படிக்க வைத்தார்.கணவன் வெளிநாட்டில் இருப்பதால் தம்பியை கூடவே தங்கவும் வைத்துக்கொண்டார்.

அன்று வழக்கம் போல் பேருந்து நிறுத்தத்தில், அந்த பேருந்துக்காக காத்திருந்தும் பேருந்து இவனது நிறுத்தத்தில் நிற்காமலே சென்று விட்டது.சரியென்று அக்கா வீட்டிற்க்கு சென்று அத்தானின் பைக் ஐ எடுத்து கொண்டு ,கல்லூரிக்கு சென்றுவிட்டான்.மாலை அன்று வழக்கத்திற்கு மாறாக அனைத்து சக ஆசிரியர்களிடமும் நலவிசாரிப்புகளுடன், என்றைக்கும் இல்லாமல் மிகவும் முக மலர்ச்சியுடன் காணப்பட்டான்.எப்போது  பைக் ஐ சரவணன் எடுத்து வந்தாலும், சக தோழன் சக ஆசிரியருடன் சேர்ந்து மூவருமாக  பயணிப்பதே வழக்கம்.ஆனால் அன்று அவனுக்கு பல தடங்கள் ஏற்பட்டு மூவர் சேர்ந்து பயணிக்காமல்,இருவர் மட்டுமே பயணிக்க தொடங்கினர்.வளைவில் கடக்கும் போது தினமும் வந்து போகும் பேருந்துக்காகவே வழிவிட ஒதுங்கி பைக் ஐ திருப்பும் போது பள்ளத்தில் விட்டு,சருக்கியவாறே இருவரும் கிழே விழுந்தனர்.இருவருக்கும் காயம் அதிகம் இல்லாமல் இருந்தும்,பின்புறம் வந்த பைக் மோதியதில் சரவணின் இதயம் வெடித்து,ரத்தகுலாய்கள் தெறித்து மூளையும் செயலந்துவிட்டதாக மருத்தவறிக்கையில் தகவல் கூறப்பட்டது. உயிர் பிரிந்தது கூட அறியமுடியாமல் மயக்கநிலையில் தான் சரவணன் உள்ளான் என எண்ணி அலைபேசி மூலமாக தகவலை அளிக்க முற்ப்பட்டார் உடன் வந்த சக ஆசிரியர்.அதே நேரத்தில், அங்கே வந்த காவல்துறையின் உதவியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  இருவரும் அழைத்து செல்லப்பட்டனர்.பின்புறம் வந்து மோதியவனையும் கைது சென்றனர்.

இறுதிசடங்குக்கான அந்த இரு தினங்களும் கல்லூரி மாணவர்கள்,கல்லூரி ஆசிரியர்கள்,முதல்வர் உட்பட ஆயிரகணக்கான மாணவர்களின் கூட்டம் அலைமோத சரவணனின் ஊரே ஸ்தம்பித்து போனது.சரவணனை காதலித்து வந்த பெண்ணின் கண்ணீரும்,அப்பா,அண்ணனின் அலறல் சத்தத்திலும் ஊரே துக்கத்தில் மிதந்தது.

"இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" என்ற பாடலுக்கினங்க எல்லோரும் சரவணனின் புகழ் பேசி கண்கலங்கி நின்றனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் சரவணனின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் தர முன்வந்துள்ளது. எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும், அவனின் காதலிக்கும், பெற்றோருக்கும், அண்ணனுக்கும், அக்காவிற்கும் அவனுக்கு இணையாக யார் வரமுடியும்?

சரவணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக