சமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 டிசம்பர் 2017

மதமென்பது...

ஆதித்தமிழனுக்கும் ஹிந்து மதத்துக்கும் சம்பந்தமில்லை. ஆதிசங்கரர் தான் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒன்றாக்கினார். சக்தி வழிபாட்டை சாக்தம் என்றும், முருக வழிபாட்டை கெளமாரம் என்றும், கணபதி வழிபாட்டை கணபத்யம் என்றும், சூரிய வழிபாட்டை செளரம் என்றும், பெருமாள் வழிபாட்டை வைஷ்ணம் என்றும், சிவ வழிபாட்டை சைவம் என்றும் ஆறு வழிபாட்டு குழுக்களை ஒரே வட்டத்திற்குள் அடைத்தார். அதற்கு முன் வரை எல்லாம் வேறு வேறு தான். ஐவகை நில தெய்வங்களான குறிஞ்சி -
(சேயோன்) முருகன் , முல்லை - (மாயோன்) திருமால், மருதம் - இந்திரன், நெய்தல் - வருணன், பாலை - கொற்றவை வழிபாட்டை தான், சமகிருதத்திற்கு முன்னோடியான தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.
ஆதித்தமிழனுக்கு இயற்கை வழிபாடு தான் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு நெருப்பு, பிறகு ஐம்பெரும்பூத வழிபாடு, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு என்ற நாட்டார் வழிபாடு தான் இருந்தது; இருக்கிறது. இதில் எங்கேயும் ஹிந்து மதம் வராது. பிற்காலங்களில் சமண-பெளத்த ஆதிக்கத்திலிருந்து, காரைக்கால் அம்மையார் மற்றும் சைவ குரவர்கள் நால்வராலும், நாயன்மார்களாலும் தான், இன்றைய சைவ வழிபாடு கூட மீளெடுக்கப்பட்டது. ஆழ்வார்களால் வைணவம் என்ற மாயோன் வழிபாடு கூட மீட்கப்பட்டது. சுடலை மாடன் என்ற நீத்தார் வழிபாடும், கருப்பசாமி என்ற திருமால் வழிபாடும், முனீஸ்வரன் என்ற சிவ வழிபாடும் தான் தமிழர்களுக்கு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், சிவன் என்பதே ஒரு மன்னன் தான். தென் பாண்டியநாட்டை ஆண்டவன். அதனால் தான் தென்னாடுடைய சிவனானான் அவன். மற்றபடி ஹிந்து என்பது பல மொழி பேசிய, பல இனங்களை கொண்ட பல நூறு சிற்றரசு நாடுகளை ஒன்றிணைத்து ஹிந்தியா என்ற ஒற்றை நாடாக்கிய வல்லபாய் படேலின் யுக்திகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பின் வெளிப்பாடே இது.

02 ஆகஸ்ட் 2016

திருவள்ளுவர் சமணரா? திருக்குறள் சமண நூலா?!

”ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” - முதுமொழி

பல்லுக்கு உறுதி தரக்கூடியவைகளில், ஆலமர குச்சியும், வேப்பமர குச்சியும் எந்தளவுக்கு உண்மையோ, அதுபோலவே நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதியென சொல்லிருக்கிறார்கள். இங்கே ”நாலும் இரண்டும்” என்பதில், நாலும் என்பது நான்கு அடிகளை கொண்ட நாலாடியாரும், இரண்டும் என்பது இரண்டு அடிகளை கொண்ட திருக்குறளும் குறிப்பிடப்படுகிறது. மேலும், நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதை என்னால் முடிந்தளவுக்கு சிறிய ஒப்பீடு செய்திருக்கிறேன். அவை;

01. இந்த இரண்டுமே பதினென் கீழ் கணக்கு நூல்களில் இடம்பெற்று இருக்கின்றன.

02. இந்த இரண்டிலுமே, பாடல்களெல்லாம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

03. இந்த இரண்டு அறநூல்களுமே, அறத்துப்பால் - பொருட்பால் - இன்பத்து பால் என்ற மூன்று பெரும்பிரிவுகளை கொண்டுள்ளன.

04. நாலடியாரில், அறத்துப்பால் - 13 அதிகாரங்களும், பொருட்பால் - 24 அதிகாரங்களும், இன்பத்துப்பால் - 3 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 40 அதிகாரங்களை கொண்டுள்ளது.

05. திருக்குறளில், அறத்துப்பால் - 38 அதிகாரங்களும், பொருட்பால் - 70 அதிகாரங்களும், இன்பத்து பால் - 25 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 133 அதிகாரங்களை கொண்டுள்ளது.

06. நாலடியார், மொத்தமாக 40 அதிகாரங்களை கொண்டது; அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என்ற வீதத்தில் 400 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. திருக்குறள், 133 அதிகாரங்களை கொண்டது; அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என்ற வீதத்தில் 1330 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

07. இந்த இரண்டிலுமே, பொருளுக்கு அதிகமான பாடல்களும், அதற்கடுத்து அறத்திற்கு ஓரளவு மிதமான பாடல்களும், மூன்றாவதாக இன்பத்திற்கு குறைவான பாடல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

08. இதிலுள்ள, நாலடியார் என்ற நூலை இயற்றியது சமண முனிவர்கள் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. அதுபோலவே திருக்குறளை இயற்றியதும் சமண மதத்தை சார்ந்த திருவள்ளுவர் என்று அழைக்கப்படும் ஒரு சமணத்துறவி தான் என்பது என் அனுமானம்.

- இரா.ச.இமலாதித்தன்

09 நவம்பர் 2015

நரகாசுரன் யார்? தீபாவளி, தமிழர் பண்டிகையா? - ஓர் ஆய்வு.


நராகசுரனை கொன்றொழித்த நாள் தான் தீபாவளியென வரலாறு சொல்கிறது. ஆனால் இந்த புராண வரலாறெல்லாம் முற்று முழுதாக உண்மையில்லை. புராணங்களெல்லாம் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, ஏதாவதொரு கதாபாத்திரத்தை கடவுளோடு ஒப்பிட்டு நம்பும்படியாக செய்வதுதான் ஆன்மீக நூலோரின் கடமையாக இருந்தது.

வள்ளுவன் சொன்ன அந்த ஆதிபகவனான சிவஜோதியை முதலாம் தீர்த்தங்கர் ரிஷபதேவரான நந்திதேவர் முதற்கொண்டு 24ம் தீர்த்தங்கராக அவதரித்த மகாவீரர் வரையிலும் சமணம் என்ற மார்க்க பெயரில் பாரத தேசமெங்கம் சாதி வேறுபாடின்றி உண்மையான ஆன்மீகத்தை அவரவர் தாய் மொழிகளின் வாயிலாகவே பரவ செய்தனர்.

இன்றைய நாட்களில் ஹிந்து பண்டிகைகளில் முதன்மையானதாக தீபாவளியே அறியப்படுகிறது என்பதற்கு, கத்தோலிக்க வாடிகனின் வாழ்த்து செய்திகளில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற நாளை நினைவு படுத்தவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்றும், இராமர் தனது பதினான்கு ஆண்டு வனவாசத்தை முடித்து விட்டு நாடு திரும்பியது நாள்தான் தீபாவளி என்பதே பலரின் நம்பிக்கை.

ஹிந்து என்பது ஒரு மதமென அறியப்படும் முன், பாரதம் உள்ளிட்ட பழம்பெரும் நாடுகளில் ஆதிமதமாக சமணமே விளங்கியது. உலகில் மூத்தக்குடியென அறியப்படும் நம் தமிழர்களின் ஆதிமதத்தின் பெயரே ஆசீவகம் தான். அந்த ஆசீவகமும், சமணமும் ஒன்றே. அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் என, தமிழின் பழைய அகராதிகளான, திவாகர நிகண்டும் - பிங்கல நிகண்டும் குறிப்பிடுகிறது.

"சாவகர் அருகர் சமணர் ஆகும்;
ஆசீவகரும் அத்தவத் தோரே"
- திவாகர நிகண்டு

நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குக் கற்பித்த மகாவீரரை, 'வென்றவர்' என்ற பொருளில் 'ஜெயனா' என்று மக்கள் அழைத்தனர். இவருடைய கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் ஜெயனர்கள் என்று அழைக்கப் பெற்றனர்.சம்மணம் போட்டு தியானத்தில் இருப்பதால் ச(ம்)மணர் என்றும், அம்மணமாய் இருந்ததால் அ(ம்)மணர் என்றும், அன்றைய சமகாலத்தில் இவர்கள் அறியபட்டதாகவும் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்தில் இரவு முழுவதும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தி கொண்டிருக்க, விடியற்காலையில் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தவாறே இறந்து விடுகிறார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அவர் முக்தியடைந்த நாளில், மக்கள் அனைவரும் வீட்டினுள் வரிசையாக விளக்கினை ஏற்றி வைத்து அவரை நினைவுக் கூற ஆரம்பித்தனர்.

தீப+ஆவளி =தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசை (ஆவலி - வரிசை) என்று பொருள். மகாவீரர் விடியற்காலையில் வீடுபேற்றினை அடைந்ததாலேயே தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகின்றது.

"சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்தப் பிறகும் அவர்கள் தாம் வழக்கமாகக் கொண்டாடி வந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்துக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் துவங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்களின் நடைமுறைப் பழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறு அடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்டக் கதை தான் நரகாசுரன் கதை!"

- ஆராய்ச்சியாளர் மயிலை சீனி. வேங்கடசாமி, (புத்தகம்: சமணமும் தமிழும்)

வர்ணாசிரமங்களை கொண்டு சாதிய அடிப்படையில் கடவுளை வணங்க மனிதனால் திட்டமிட்டு பிரிக்கப்பட்ட போலி கொள்கைகளை உடைத்தெறிந்து, உண்மையான ஆதி மார்க்கத்தை வழிகாட்டிய 24வது தீர்த்தங்கரான மகாவீரரின் இறப்பானது, ஹிந்து அடிப்படைவாதிகளுக்கு பெருமகிழ்ச்சியை தந்தது. அதனாலேயே, மகாவீரரை அசுரனாக்கி, பெருமாள் வதம் செய்ததாக பொய் பரப்புரையை புராணக்கதைகள் மூலமாக பரப்பிட காரணமாகவும் அமைந்தது. இது போன்ற பொய் புராண கதையை திருவோணம் பண்டிகையிலும் காணலாம். தமிழ் அகம்படி குலத்தில் உதித்த மாவலி சக்கரவர்த்தியின் இறப்பின் பின்னாலேயே கேரளத்தில் சமகிருதம் கோலோச்சியது. கேரள தமிழ் மன்னனை கொன்றொழித்த நாளே ஓணம் பண்டிகையென அம்மக்களையே நம்ப வைத்தது கூட பொய் புராணக்கதைகள் தான் என்பதும் சிந்திக்க வேண்டிய விசயமாகும். எது எப்படியோ, தமிழர்களின் ஆதி மதமான ஆசிகவத்தின் இறைத்தூதரான மகாவீரரின் நினைவுநாளை தீபமேற்றி மனதில் ஏற்றுவோம் அவரது நினைவேந்தலை!

கொல்லாமை வேண்டாமென்று சொன்ன மகாவீரரின் நினைவுநாளிலேயே அசைவம் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்; இதுதான் கால மாற்றம். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தமிழின உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்...

- இரா.ச.இமலாதித்தன்