09 ஜூலை 2009

சாதி என்பது படித்து வாங்கிய பட்டமா...?


சாதி என்ற இந்த ஒற்றை வார்த்தை பெரியார்  காலத்திலிருந்து பிரயோகப் படுத்தி இருந்தாலும், இன்றைக்கு அந்த வார்த்தையை நம்பி தான் இப்ப நிறைய பேருக்கு பொழப்பே ஓடுது.அரசியல் தொழில் நடத்தும் பகுத்தறிவாதிகள், சாதி ஒழியவேண்டும் என்று போர்முழக்கமிட்டாலும் தன் கட்சியிலும்/ஆட்சியிலும்  ஒவ்வொரு சாதியினர்க்கும் ஒரு முக்கிய பொறுப்பு/பதவிகளை வழங்கி ஓட்டுவேட்டை காண்கிறார்கள். பதவிசுகம் காணும் இந்த மாதிரியான ஆட்( __________ )களும் பகுத்தறிவாதி யென தன்னைத்தானே அடையாளபடுத்திக்கொள்கிறார்கள். அரசியல் காட்டில் இவர்கள் வேட்டையாடப்படுவது பணம் பதவி மட்டும் அல்ல.இவர்களின் அறிக்கைகளை நம்பி வீதிக்கு வந்து போராடும் பாட்டாளிகளான, அப்பாவி மக்களின் உரிமைகள் தான் கூடவே பறிபோய் கொண்டிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட சில சாதிய பிரிவினரை மட்டும் தாக்கி பேசியும், எழுதியும்,அறிக்கை விட்டும், சுகம் காணும் சுகவீனமற்றவர்களை பற்றியும் என்ன சொல்றதேன்னு தெரியலை.சாதியை ஒரு அடையாளமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
"சாதி என்றவொன்று தனியாக தலை தூக்குறதுக்கு முன்பு அது ஒரு தொழில் சார்ந்த,பகுதி சார்ந்த,குணாதிசயம் சார்ந்த ஒரு குறியீடாகத்தான் கணக்கிடப்பட்டது."
சாதி ஒருவரையோ அல்லது அவரது வர்க்கத்தையோ தனித்துவ படுத்தவே தேவைப்படுகிறது.ஆரம்ப காலக்கட்டங்களில்,ஒவ்வொருவரும்  அவரவர்களுக்கென தனித்துவமாய் தனக்கென ஒரு பாரம்பரியத்தையும்,ஒரு தெய்வ வழிபாட்டு முறையையும் தனக்கென ஒரு தொழிலை மூலதனமாக வைத்திருந்தனர்.அந்த பாரம்பரியத்தையும்,சடங்கு சம்பிரதாயங்களையும் நெறிப்படுத்தி  தன்  சந்ததினருக்கும் அதை புகட்டினார்கள்.தனது தொழிலையே குல தொழிலாக வைத்து அதையே தனக்குப்பின்,  தன் சந்ததினருக்கும் கற்று தந்து வழிநடத்தி சென்றனர்.அதனாலேயே அவர்களை அடையாளப்படுத்த அவர்களது தொழிலையே அவர்களது பெயருக்கு பின்னாலிட்டு அழைத்தனர்.வேறு சிலரை அவர்கள் இருக்கிற வதிவிடங்களை அவர்களது பெயருக்கு பின்னால் இணைத்தும் அழைத்தனர்.
"காலப்போக்கில் தன் குல தொழிலையே, பல சூழ்நிலைகளாலும்,அவமானம் என கருதியும் தொடர்ந்து செய்ய தவறியதும் தான், சாதிய முறை வேரூன்ற தோன்றியதற்கு காரணமாய் இருக்கலாம்."
சாதியை ஒழிக்க போறேன்னு வெற்று சத்தமிடும் இந்த கும்பல்கள் தத்தமது பிள்ளைகளையோ,பேரன்/பேத்தி களையோ பள்ளியில் சேர்க்கும் போது, படிவத்தில் கேட்க்கப்பட்டிருக்கும் மதம்/சாதி என்று இடங்களில் என்ன வார்த்தைகளை கொண்டு நிரப்பினார்களோ,அதை தான் மற்றவர்களும் செய்வார்கள் என்பதை கூட  உணரமறுக்கும் இந்த அறிவு ஜீவிகளை என்னவென்று சொல்லுவது?
"வேறு சிலரோ அரசாங்கத்தின் சலுகைக்காகவே தான் வேறு பிரிவினையை சார்ந்திருந்தாலும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சாதி பெயரிலேயே தன் குழந்தை/வாரிசுகளை பள்ளியில் சேர்க்கின்றனர்."
இப்போதெல்லாம் பகுத்தறிவாதின்னு சொல்லிக்கிற நபர்கள்தான் அதிகமாக கல்வி நிலையங்களை நடத்தி பணம் சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றனர்.ஏன்... இவர்கள் நடத்துகிற கல்வி நிலையங்களிலும் கூட ,சாதி பெயரில் இட ஒதுக்கிடு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.இவர்கள் தான் எந்த அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தாலும் குடை பிடிக்கிறார்களே... அப்பறமென்ன, ஆட்சியாளர்களிடம் என்றாவது சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டை ரத்து செய்ய கேட்டு இருப்பாங்களா...?அப்படியே கேட்டாலும் அது வெறும் கண்ணீர் துடைப்புக்காக தான் இருக்க முடியும்.
 "கண்ணீரே வராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டிய இவர்கள்...வழிந்தோடி கொண்டிருக்கும் கண்ணீரை கூட துடைக்க தயங்குவது விதத்தில் நியாயம்...?"
சாதியை எதிர்த்து போராடும் எல்லா கும்பல்களும் அரசியல் நீரோட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுதான்இருந்தன; இருக்கின்றன; இருக்கபோகின்றன. இந்த பகுத்தறிவாதிகளின் ஆதரவோடுதான் எல்லாசெயல்களும் அரசாங்கத்தால் செயற்படுத்த படுகிறது.அதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்து தலையாட்டிவிட்டு,ஊருக்கு வெளியே ஆர்ப்பாட்டம்,போராட்டமென அறிக்கைகளை விடுவது இவர்களின் வாடிக்கையான செயலாகிவிட்ட ஒன்று.

சாதி எதிர்ப்பு பற்றி பேசும் பகுத்தறிவாதி என்று தன்னைத்தானே அடையாள படுத்திக்கொள்ளும் இந்த கும்பல்கள் தன் மகள்/மகனின் திருமணங்களை யாருடன் திருமணம் செய்து வைப்பார்கள் என்று பார்த்தால்,ரொம்ப வேடிக்கையாக இருக்கும்.தான் சாதியிலே உள்ள வேறுசில உட்பிரிவு வரன்களை கூட வேண்டாமென தவிர்த்துவிட்டு அவர்களின் உட்பிரிவிலேயே,மருமகன்/மருமகளை தேர்ந்தெடுத்து திருமணத்தை அரங்கேற்றுவார்கள்.
"ஊருக்கு மட்டும் தான் இவர்களின் உபதேசங்கள் !"
சாதியே இல்லைன்னு மறுக்குறவன் முதல்ல அவன் ஒரு ஆதிக்க சாதி வர்க்கத்திலிருந்து கீழே வந்து, அடிமை வர்க்கம் என தன்னை தானே தாழ்த்தி நினைத்துகொண்டிருக்கிற  மக்களுக்காக போராட வேண்டும்.அப்போதுதான் அது முழுமையான சாதிய எதிர்ப்பாக இருக்க முடியும்.சாதிய எதிர்ப்புகளை பற்றி பேசும் இந்த பகுத்தறிவாதிகளில் யாரென்று பார்த்தால்,உண்மையாவே ஒரு ஆதிக்க சாதியனரை எதிர்க்கும் தன்னைத்தானே தாழ்த்தி நினைத்துக் கொண்டிருக்கும் ஆதங்கத்தில் உள்ளவர்கள் மட்டுமே.

இன்றைய நாட்களில்  பாதிக்கும் மேற்பட்டவர்கள், சரியாக சொல்லப்போனால் முக்கால் வாசிக்கும் மேற்ப்பட்டவர்கள்  சாதிய முறையில் கீழாக கணக்கிடபட்டவர்கள் தான் அதிகமாக காணப்படுகின்றனர் என்பது தான் உண்மை.அவர்கள் சாதியை எதிர்ப்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இருக்க வாய்ப்பில்லை.ஏனென்றால் சாதிய ஒடுக்குமுறையில் பாதிக்கப்பட்டவர்களே இவர்கள் தானே.அன்றைய நாட்களில் நாயக்கர் என்ற ஆதிக்கச்சாதி வர்க்கத்தை சார்ந்த ராமசாமி என்ற நபர்,தன்னை ஒரு சாதிய எதிர்ப்பாளனாக ஒடுக்க ப்பட்ட  மக்களுக்கு ஆதரவாக போராடியதாலும் தான், நாயக்கர் என்பரை இவ்வுலகம் பெரியார் என பிரமிப்போடு அழைக்கிறது.



# இது 10/9/09 அன்று தமிழ்வாசலில் எழுதிய கொஞ்சம் பழைய பதிவு