நரகாசுரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நரகாசுரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 நவம்பர் 2018

ஆய்வு நோக்கில் தீபாவளி திருவிழா!


 தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது? நரகாசுரன் யார்? அவரை கொன்றது கிருஷ்ணனா? எங்கே, எப்போது, எப்படி கொன்றார்? அப்படியெனில், தீபாவளி என்பது வைணவ பண்டிகையா? அந்த நரகாசுரன், மக்களையெல்லாம் கொடுமை செய்த கொடூர அசுரனா? இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன; கேள்விகள் மட்டுமே இருக்கின்றன; உண்மையான பதில்கள், உண்மையாகவே யாரிடமும் இல்லை. பெரும்பாலும் வெறும் யூகங்களே.

நாடெங்கும் பொதுவாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி என்ற ஆரிய பெருவிழாவை பெரும்பான்மையானோர் கொண்டாடி வருகின்றனர். என்ன காரணம்? எதனால் இந்த பண்டிகை வருடம் தோறும் கொண்டாடி வருகிறோம்? என்பதை பற்றிய தெளிவெல்லாம் அவர்களிடம் துளியுமில்லை. ஆரிய பார்ப்பனர்களின் புனைவு புராணங்கள் என்ன சொல்லி இருக்கிறதோ அதை அப்படியே நம்பும் கூட்டமாகி மாறிப்போனவர்களிடம் எதிர்பார்க்கவும் முடியாது.

இந்த நரகாசுரன் யார் என்பதைப் பற்றி தெளிவாக சொல்ல வேண்டுமெனில், அவர் தான் ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர். இவர் காலத்தில் தான் ஜைனம் நாடெங்கிலும் தழைத்தோங்கியது. இம்மாதிரியான ஐப்பசி மறைநிலவு நாளில் தான் மரணமடைகிறார். அவரது மார்க்கத்தை பின்பற்றியவர்களெல்லாம் ஆண்டு தோறும் அவர் இறந்த நாளன்று, தீப ஒளி விளக்குகள் வைத்து வழிபட்டனர். மகாவீரரின் மறைவிற்கு பிறகு ஜைனம் வீழ்ச்சியடைய சைவம் வைணவம் உள்ளிட்ட ஹிந்து மதம் கோலோச்ச தொடங்கியது.

அந்த காலகட்டத்தில் ஜைனத்திலிருந்து ஹிந்துவாக மடை மாற்றப்பட்டவர்கள், மகாவீரரின் இறந்த நாளை ஆண்டுதோறும் கடைபிடித்து வந்தனர். அதை தனக்கு சாதகமாக்கி கொள்ள அந்த நாள்தான் தீபாவளி திருநாள் என்றும், அந்த மகாவீரரின் இழப்பை தான் நரகாசுரன் வதமென்றும் சொல்லி வைணவ கிருஷ்ணரை முன்னிலைப்படுத்தினர். பீகார் மாநிலத்து பண்டிகையாக இருந்திருக்க வேண்டிய ஒன்றை, ஒட்டுமொத்த நாட்டின் பண்டிகையாக்கிய பெருமை ஆரிய புராணக்கதைகளுக்கே சேரும்.

பீகாரை சேர்ந்த ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கரரின் இறப்பினால் ஹிந்து மதம் வளர்ச்சியடைந்தது; அதனால் அந்த மகாவீரரை நரகாசுரன் என சொல்லி ஆரியர்கள் விழா எடுப்பதில் கூட நியாயம் இருக்கிறது. ஆனால், இங்குள்ள பகுத்தறிவு பேசும் திராவிடவாதிகள் போட்டி விழாவென சொல்லி ஆரியர்களுக்கு போட்டியாக இந்த நரகாசுரன் விழாவை கொண்டாடுகிறார்கள். நரகாசுரன் என்பவர் எங்கு வாழ்ந்தார்? எங்கே ஆட்சி செய்தார்? யாரோடு போர் புரிந்தார்? என்பது போன்ற அடிப்படை சான்று ஒன்றுகூட கிடையாது. மேலும் அந்த நரகாசுரன் யார் என்பதற்கான சான்றும் கிடையாது. அந்த போலி புராணத்தின் கற்பனை பாத்திரப்பெயருக்கு மாவீரர் /மாமன்னர் / பெரும்பாட்டன் என்ற முன்னொட்டுகள் கொடுத்து விழா எடுப்பது தான் பகுத்தறிவா? இதுதான் மாற்று புரட்சியா? இதுபோன்ற விசயங்களில் ஆரியம், திராவிடம், தமிழ்தேசியம் என அனைத்து அரசியலும் ஒரே நேர் கோட்டில் நிற்பது ஏன்?

(தொடரும்...)

ஏற்கனவே சென்ற பதிவில் சொன்னது போலவே வட இந்தியாவெங்கும் நவம்பர் ஏழாம் தேதி தான் தீபாவளி பண்டிகை ஆகும்; ஆனால் தென்னிந்தியா முழுவதும் நவம்பர் ஆறாம் தேதியே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், முன்பெல்லாம் ஒட்டுமொத்த நாடெங்கும் அம்மாவாசையும் தீபாவளியும் ஒரே நாளில் வந்து கொண்டிருந்தது. ஒரு சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் மட்டும் இதில் வேறுபாடு தெரிகிறது. இப்போதெல்லாம் தீபாவளிக்கு அடுத்த நாள்தான் தென்னிந்தியாவிற்கு அமாவாசை வருகிறது; வட இந்திய நாட்காடியிடன் படி இந்த மாதம் கார்த்திகை; நமக்கோ ஐப்பசி மாதம்.

பொதுவாக ஓர் ஆண்டுக்கான நாட்களை கணக்கிட வேண்டுமெனில், நிலவின் அடிப்படையில் கணிப்பதே சரியானதாக இருக்கும். ஆண்டின் எல்லா நாட்களிலும் சூரியன் எப்போதுமே உதித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதை வைத்து ஓராண்டின் நாட்களை கணக்கிட முடியாது. ஆனால், ஓராண்டிற்கு எத்தனை நாட்கள்? எத்தனை மாதங்கள்? என்பதை நிலவின் அடிப்படையிலேயே துல்லியமாக கணிக்க முடியும். மறைநிலவு, முழுநிலவு (அமாவாசை / பவுர்ணமி) என்பதை வைத்துதான் பனிரெண்டு மாதங்களிலும் முழுநிலவு/மறைநிலவு நிறைவேறுவதாக கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்த அடிப்படையில் பார்த்தால் ஓராண்டிற்கு 360 நாட்கள் வரலாம்; அதில் ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ குறைவானதாகவோ இருக்கலாமே தவிர 99% 360 நாட்கள் என்பது சரியானதாகவே இருக்கும்.

நாம் பயன்படுத்தும் ஆங்கில நாட்காட்டியின் படி, ஓராண்டிற்கு 365 நாட்கள்; அதிலும் நான்கு வருடத்திற்கு ஒரு முறையாக லீப் ஆண்டு என சொல்லி 366 நாட்கள் வருகிறது. குழப்பமான ஆங்கில நாட்காட்டியின் படி கணக்கிடப்படுகிற 366 நாட்கள் என்பதையும், 365 நாட்கள் என்பதையும், ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஒரு மாதம் என்பது சராசரியாக 30 நாட்களே இருக்க வேண்டும்; அதுதான் சரியானதாகவும் இருக்கும். அப்படி பார்த்தால், நாம் பின்பற்றும் ஆங்கில நாட்காட்டி முறையே குழப்பமானது தான்.

மேலும் இந்த தீபாவளி விசயத்தில், இன்று நவம்பர் 6ம் தேதியை சிறிய தீபாவளி என்றும், நவம்பர் 7ஆம் தேதியை (கார்த்திகை அமாவாசை) வடஹிந்தியர்கள் பெருந்தீபாவளியாகவும் கொண்டாடிகின்றனர். ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்திற்கு நவம்பர் ஆறாம் தேதியே தீபாவளி வந்துவிடுகிறது; குறிப்பாக அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வந்துவிடுகிறது. இங்குதான் குழப்பமே மற்றபடி இந்த தீபாவளி என்பது மகாவீரரின் நினைவு நாள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒருவேளை, மகாவீரருக்கு முன்பு இங்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதாக சான்று இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்; அப்படி இருப்பதாக தெரியவில்லை. தீபாவளி என்பது அறுவடைத் திருநாள் என்றும், ராஜேந்திரனின் போர் வெற்றித்திருநாள் என்றும், இங்கு சொல்லப்படும் எதுவுமே சான்றுகள் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

தமிழ்நாட்காட்டியென நம்பப்படும் ஐப்பசி மாத அமாவாசையில் தான், ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கராரன மகாவீரர் உயிர்நீத்தார்; அதன் நினைவாகவே ஆண்டுதோறும் இந்த அமாவாசை நாளில் விளக்கேற்றி அசைவம் தவிர்த்து இந்த தீபாவளி பண்டிகையை பெரும்பான்மையானோர் கொண்டாடுகின்றனர். மேலும் ஜைன நாட்காட்டி படி, ஜைனர்களுக்கு மகாவீரரின் நினைவு நாளான அமாவாசையிலிருந்து அடுத்த நாளே அவர்களது ஜைன புத்தாண்டும் தொடங்குகிறது.

மேலும் மகாவீரர் இறந்த பின்னாட்களில், ஜைனம் ஒடுக்கப்பட்டு மீண்டும் வைதீக ஹிந்து மதம் தலையெடுக்கும் போது ஜைனத்திலிருந்து வைதீக ஹிந்து மதத்திற்கு மதம் மாற்றப்பட்டவர்கள் இந்த தீபாவளியை ஆண்டுதோறும் கொண்டாடி வந்தனர். அதுபோல ஜைனம் தழைத்தோங்கிய காலத்தில் வைதீக ஹிந்து மதத்திற்கு மகாவீரர் பெரும் தலைவலியாக இருந்திருக்கிறார்; எனவே அவரது மரணத்தை ஒட்டுமொத்த வைதீக ஹிந்துக்களுமே பெருவிழாவாக எடுத்து கொண்டாடி இருக்கலாம். அதன் நீட்சியே நரகாசுரன் என்ற புராண கட்டுக்கதை.

- இரா.ச. இமலாதித்தன்

பி.கு: இந்த பதிவுக்கு கீழே நிறைய படங்களை இணைத்திருக்கிறேன். இந்த பதிவுக்கு பின்புல தொடர்பான செய்திகளை இந்த படங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

#ஜைனம் #தீபாவளி #மகாவீரர் #நாட்காட்டி #அசைவம்


 



























12 நவம்பர் 2015

பகுத்தறிவு பேசும் திராவிடனும், ஹிந்துத்வா பேசும் ஆரியனும்!

பகுத்தறிவு பேசும் திராவிடனும், ஹிந்துத்வா பேசும் ஆரியனும் ஒரே மாதிரியாக செயல்படுகிறார்கள். ஒரு பக்கம் கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு, இன்னொரு பக்கம் கடவுள் அழிச்சாத சொல்ற நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அந்த பக்கம் பார்த்தால், வர்ணாசிரம கொள்கையெல்லாம் இனி தேவையில்லை; நாமெல்லாம் ஒன்றென சொல்லி, கடவுள் கொல்றதெல்லாம் தமிழன் என்பது மாதிரியே கதை புனைகிறார்கள்.
திராவிட-ஆரிய கூத்தாடிகளுக்கு, தமிழன் என்ற ஒருவன் இல்லையென்றால் அரசியல் பிழைப்பே இருக்காது போல.

09 நவம்பர் 2015

நரகாசுரன் யார்? தீபாவளி, தமிழர் பண்டிகையா? - ஓர் ஆய்வு.


நராகசுரனை கொன்றொழித்த நாள் தான் தீபாவளியென வரலாறு சொல்கிறது. ஆனால் இந்த புராண வரலாறெல்லாம் முற்று முழுதாக உண்மையில்லை. புராணங்களெல்லாம் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, ஏதாவதொரு கதாபாத்திரத்தை கடவுளோடு ஒப்பிட்டு நம்பும்படியாக செய்வதுதான் ஆன்மீக நூலோரின் கடமையாக இருந்தது.

வள்ளுவன் சொன்ன அந்த ஆதிபகவனான சிவஜோதியை முதலாம் தீர்த்தங்கர் ரிஷபதேவரான நந்திதேவர் முதற்கொண்டு 24ம் தீர்த்தங்கராக அவதரித்த மகாவீரர் வரையிலும் சமணம் என்ற மார்க்க பெயரில் பாரத தேசமெங்கம் சாதி வேறுபாடின்றி உண்மையான ஆன்மீகத்தை அவரவர் தாய் மொழிகளின் வாயிலாகவே பரவ செய்தனர்.

இன்றைய நாட்களில் ஹிந்து பண்டிகைகளில் முதன்மையானதாக தீபாவளியே அறியப்படுகிறது என்பதற்கு, கத்தோலிக்க வாடிகனின் வாழ்த்து செய்திகளில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற நாளை நினைவு படுத்தவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்றும், இராமர் தனது பதினான்கு ஆண்டு வனவாசத்தை முடித்து விட்டு நாடு திரும்பியது நாள்தான் தீபாவளி என்பதே பலரின் நம்பிக்கை.

ஹிந்து என்பது ஒரு மதமென அறியப்படும் முன், பாரதம் உள்ளிட்ட பழம்பெரும் நாடுகளில் ஆதிமதமாக சமணமே விளங்கியது. உலகில் மூத்தக்குடியென அறியப்படும் நம் தமிழர்களின் ஆதிமதத்தின் பெயரே ஆசீவகம் தான். அந்த ஆசீவகமும், சமணமும் ஒன்றே. அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் என, தமிழின் பழைய அகராதிகளான, திவாகர நிகண்டும் - பிங்கல நிகண்டும் குறிப்பிடுகிறது.

"சாவகர் அருகர் சமணர் ஆகும்;
ஆசீவகரும் அத்தவத் தோரே"
- திவாகர நிகண்டு

நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குக் கற்பித்த மகாவீரரை, 'வென்றவர்' என்ற பொருளில் 'ஜெயனா' என்று மக்கள் அழைத்தனர். இவருடைய கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் ஜெயனர்கள் என்று அழைக்கப் பெற்றனர்.சம்மணம் போட்டு தியானத்தில் இருப்பதால் ச(ம்)மணர் என்றும், அம்மணமாய் இருந்ததால் அ(ம்)மணர் என்றும், அன்றைய சமகாலத்தில் இவர்கள் அறியபட்டதாகவும் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்தில் இரவு முழுவதும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தி கொண்டிருக்க, விடியற்காலையில் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தவாறே இறந்து விடுகிறார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அவர் முக்தியடைந்த நாளில், மக்கள் அனைவரும் வீட்டினுள் வரிசையாக விளக்கினை ஏற்றி வைத்து அவரை நினைவுக் கூற ஆரம்பித்தனர்.

தீப+ஆவளி =தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசை (ஆவலி - வரிசை) என்று பொருள். மகாவீரர் விடியற்காலையில் வீடுபேற்றினை அடைந்ததாலேயே தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகின்றது.

"சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்தப் பிறகும் அவர்கள் தாம் வழக்கமாகக் கொண்டாடி வந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்துக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் துவங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்களின் நடைமுறைப் பழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறு அடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்டக் கதை தான் நரகாசுரன் கதை!"

- ஆராய்ச்சியாளர் மயிலை சீனி. வேங்கடசாமி, (புத்தகம்: சமணமும் தமிழும்)

வர்ணாசிரமங்களை கொண்டு சாதிய அடிப்படையில் கடவுளை வணங்க மனிதனால் திட்டமிட்டு பிரிக்கப்பட்ட போலி கொள்கைகளை உடைத்தெறிந்து, உண்மையான ஆதி மார்க்கத்தை வழிகாட்டிய 24வது தீர்த்தங்கரான மகாவீரரின் இறப்பானது, ஹிந்து அடிப்படைவாதிகளுக்கு பெருமகிழ்ச்சியை தந்தது. அதனாலேயே, மகாவீரரை அசுரனாக்கி, பெருமாள் வதம் செய்ததாக பொய் பரப்புரையை புராணக்கதைகள் மூலமாக பரப்பிட காரணமாகவும் அமைந்தது. இது போன்ற பொய் புராண கதையை திருவோணம் பண்டிகையிலும் காணலாம். தமிழ் அகம்படி குலத்தில் உதித்த மாவலி சக்கரவர்த்தியின் இறப்பின் பின்னாலேயே கேரளத்தில் சமகிருதம் கோலோச்சியது. கேரள தமிழ் மன்னனை கொன்றொழித்த நாளே ஓணம் பண்டிகையென அம்மக்களையே நம்ப வைத்தது கூட பொய் புராணக்கதைகள் தான் என்பதும் சிந்திக்க வேண்டிய விசயமாகும். எது எப்படியோ, தமிழர்களின் ஆதி மதமான ஆசிகவத்தின் இறைத்தூதரான மகாவீரரின் நினைவுநாளை தீபமேற்றி மனதில் ஏற்றுவோம் அவரது நினைவேந்தலை!

கொல்லாமை வேண்டாமென்று சொன்ன மகாவீரரின் நினைவுநாளிலேயே அசைவம் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்; இதுதான் கால மாற்றம். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தமிழின உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்...

- இரா.ச.இமலாதித்தன்