28 மார்ச் 2016

இந்த வார அரசியல்!

# சுழலுமா?

'பம்பரம் டிவி' என்ற இணையதள தொலைக்காட்சியை மதிமுக சார்பில் தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலுக்கு பிறகு அந்த சின்னம் மிஞ்சாவிட்டால் கூட டிவியாவது மிஞ்சுமென நினைக்கிறேன்.

# திராவிட வடுகம்!

விஜயகாந்த் மனைவியின் தம்பி என்ற ஒரேவொரு தகுதி மட்டுமேயுள்ள எல்.கே.சுதீஷ் போன்றவர்களை கூட, விஜயகாந்த் முதல்வரானால், துணை முதல்வர் யார்? அமைச்சர்கள் பதவி யாருக்கு? என பேச வைத்திருக்கும் வைகோவின் திறமை போற்றுதலுக்குரியது!


# இசையின் இறைத்தூதர்!

கோடிக்கணக்கான இந்த தேசத்து மக்களின் விருதுகளை வாங்கிய இசைஞானிக்கு, தேசிய விருது என்பது ஒரு சிறிய அங்கீகாரம் மட்டுமே!



# தேர்தலும் சாதியும்‬!

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு தருகிறோமென சொல்லும் அரசியல் கட்சிகளையும், அந்த ஒடுக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்யும் ரவுடிகளுக்கு துணை போகும் சட்டத்தையும்- காவல்துறையையும் கண்டுதான், இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களும் கலக்கத்தில் இருக்கின்றனர். தேர்தலில் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் திராவிட கட்சிகளுக்கு தான் போய் சேர்கின்றன. ஆனால் சட்டத்தாலும் ரவுடிசத்தாலும் நவீனமாய் மிரட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சியென சொல்லிக்கொள்ளும் எந்த கட்சிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கானது 1% கூட கிடைப்பதில்லை. மாறாக, அட்டவணை சாதி மக்களின் வாக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் வாக்கும் 95% திராவிட கட்சிகளுக்கே போய் சேர்கின்றன.

# ஊழலுக்கு பின்னால் ஒளியும் சாதிக்காரன்!

கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி.க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதியரசர் மகேந்திர பூபதியை இடை நீக்கம் செய்தால் மட்டும் எல்லாம் சரியாகிடுமா?! முதலில், நீதித்துறைக்குள் ஒரு சில மாற்றம் வரணும். முக்கியமான ஊழல் கொலை கொள்ளை போன்ற வழக்குகளின் நீதிமன்ற வாதங்களையும், தீர்ப்புகளையும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்ப செய்ய வழிவகை வேண்டும். கிராமப்புறங்களில் சட்டம் படிக்காத ஆளுங்க கூட பஞ்சாயத்து பேசும்போது 'நீதி' பக்கம் தான் தீர்ப்பு சொல்றாங்க. இங்கே நீதிமன்றத்தில் 'காசு' பக்கம் தான் தீர்ப்பு சொல்றாங்க போல! த்தூ...


#  ஏர்டெல் என்ற ஏமாற்றுக்காரன்!
யாருமற்ற பனி மலையிலும், பாறைகள் நிறைந்த வெட்ட வெளிகளிலும், ஹிந்தியாவெங்கும் ஏர்டெல் 4ஜி நெட்வொர்க் கிடைப்பதாக தொடர்ச்சியாக விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். நாகப்பட்டினத்திற்கு உட்பட்ட செம்பியன்மாதேவி, வடுகச்சேரி, தேவூர், வெண்மணி, திருக்குவளையென எங்களது வயல்வெளியுள்ள வண்டலூர் கிராமத்திற்கு அருகேயுள்ள ஊரெங்கும் சுற்றி கொண்டிருந்தேன். ஒழுங்காக 2ஜி நெட்வொர்க் கூட கிடைக்கவில்லை. அதை சரி பண்ணவே வக்கில்லை; இந்த லட்சணத்துல 4ஜி...

# மக்களுக்காக பாலிமர்!

நக்கீரன், ஜூவி, குமுதம் ரிப்போர்ட்டர் போல, நேரில் பார்க்காத ஒரு விசயத்தை பக்கம் அமர்ந்து பார்த்தது போல திரைக்கதை அமைத்து ஐநூறு கோடி, ஆயிரம் கோடியென விஜயகாந்த் பற்றி ஊடகங்களில் உளறிய வைகோவை, அதே ஊடகம் 'ஆயிரத்து ஐநூறு கோடிக்கு அதிமுகவிடம் நீங்கள் விலை போனதாக சொல்கிறார்களே' என ஐயம் எழுப்பியது நூற்றுக்கு நூறு வீதம் சரி. எதிர்வினையென்றால் இப்படி தான் இருக்குமென வைகோவுக்கு புரிய வைத்த பாலிமர் தொலைகாட்சியின் 'மக்களுக்காக' நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு வாழ்த்துகள்!

# சாதிய தலைமைகள்!

ஜெயலலிதாவிடமும், கருணாநிதியிடமும் மாறி மாறி இரு அணியாக பிரிந்து தன் சாதி மக்களின் தொகையை கணக்கில் காட்டி சாதியையே அடகு வைக்கிற சாதி அமைப்பின் தலைவர்களெல்லாம், இந்த 2016 தேர்தலில் ஒரேயடியாக ஜெயலலிதாவிடம் மட்டும் சரணாகதி அடைந்து விட்டனர்.
'வாழும் வேலுநாச்சியாரே!'ன்னு ஜெயலலிதாவுக்கு போஸ்டர் அடிச்சு, கீழே, 'வாழும் முத்துராமலிங்கத்தேவர்', 'அடுத்த பசும்பொன் தேவர்', 'தேவரின் வாரிசு', 'தேவரின பாதுகாவலர்'... இப்படியாக தங்களுக்கு தாங்களே தேர்தல் வரையிலும் விளம்பரப்படுத்தி கொள்வார்கள். தேர்தல் முடிந்த பிறகு, அடுத்து அக்டோபரில் ஆழ் உறக்கத்தை களைவார்கள்.
வீர வசனம் பேசி மீசை முறுக்கிக்கொண்டு போஸ்டர்ல போஸ் கொடுக்கிறவங்களையும் கூட, கையை கட்டி வாய்மூடி பேச வைக்கும் வல்லமையுள்ள ஜெயலலிதாவின் திறமை ஆச்சர்யபட தக்க ஒன்றுதான்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக