30 ஜனவரி 2016

தேசியம் என்பது கொடியில் இருக்கிறதா?!

ஒரு நாட்டின் தேசிய கொடியில் தான், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் தேசியமும் அடங்கிருப்பது போன்ற மாயை மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியா என்பது பலதரப்பட்ட தேசிய இனங்களின் (சமஸ்தானங்களின்) கூட்டாட்சி தத்துவமுடைய ஒரு நாடு. ஆனால் கூட்டாட்சி போலவா இந்தியா செயல்படுகிறது? பாகிஸ்தானில் கடற் எல்லையில் சிக்கினால் அவன் இந்திய மீனவன்; அதுவே இலங்கை எல்லையில் சிக்கினால் தமிழ் மீனவன். இதுதான் இந்திய தேசியத்தின் அளவீடு.

பண்டைய தமிழகத்திலேயே சேர - சோழ - பாண்டிய - பல்லவ என நான்கு பெரிய நாடுகளும், அதற்கு கட்டுப்பட்ட நடுநாடு, சேதிநாடு போன்ற பல சிற்றரசு நாடுகளும் இருந்திருந்தன. ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனி கொடியும் - இலச்சினையும் இருந்தது. அந்த கொடிகளெல்லாம் அந்த நாட்டின் எல்லைக்கும், அதிகாரத்திற்குமான ஓர் அடையாளமாகத்தான் பார்க்கப்பட்டது. இப்போதும் கூட கொடியை அடையாளமாக மட்டுமே பார்த்தாலே போதும்.

ஆனால், இன்றைக்கு எவனோ ஒருவன் இந்திய கொடியை எரித்து, அதை மெனக்கெட்டு போட்டோவும் எடுத்து விளம்பர நோக்கில் சமூகசலைதளங்களில் பகிர்கிறானெனில் அதை நாமும் ஏன் மீண்டும் பகிர்ந்து விளம்பரப்படுத்த வேண்டும்? தமிழனாக ஹிந்திய தேசியத்தின் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் கூட, இந்திய கொடியை எரித்ததை நான் ஆதரிக்கவுமில்லை. ஆனால் ஒரு நாட்டின் மீதான வெறுப்பு சாமானியனுக்கும் ஏற்படுகிறதென்றால், அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்க்கே இருக்கிறது. மோடிக்கள் எல்லாம் அதானிகளையும், சோனியாக்கள் எல்லாம் அம்பானியையும் நண்பர்களாக்கி கொண்டால், நாலாபுறமும் வெறுப்பு உண்டாகி ஹிந்திய தேசியம் என்பது யாரோ ஒருவனால் நாளுக்கு நாள் தினந்தோறும் எரிக்கப்பட்டே தீரும்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக