18 ஜனவரி 2016

அரசியலை கைப்பற்றாமல் எதுவுமிங்கே சாத்தியமில்லை!

செய்தி: 01

இன்றைய காலக்கட்டத்தில் நடைபெறும் திருமணங்களில் பைக்கோ - காரோ சீர்வரிசைகளில் முக்கிய இடம் பிடிக்காமல் இருப்பதே இல்லை. மேலும் எளிய தவணை முறையிலும் பைக் - கார் லோன் கிடைத்து விடுவதால் கூட, சர்வ சாதாரணமாக அனைவரது வீட்டிலும் பைக் - கார்களின் எண்ணிக்கை அதிக அளவில் நம்மிடையே புழக்கத்திற்கு வந்து விட்டன. அதனால் தான் சுற்று சூழல் கேடும் அதிகமாகி, அதிக மழை - அதிக வெயில் - அதிக பனியென பருவநிலையும் தலைகீழாக மாறி போனது.

செய்தி: 02

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு விலை சரிவு ஏற்பட்டும், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காமல் இருக்க என்ன காரணம்? உதாரணமாக சென்ற காங்கிரஸ் ஆட்சியில் தோராயமாக 130 டாலர்களாக இருந்த விலை, தற்போது வெறும் 30 டாலர்கள் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் இப்போதும் வெறும் பைசா கணக்கில் லிட்டருக்கு விலையை குறைப்பதால் பாதிக்கப்படுவது (எங்களை போன்ற) நடுத்தர வர்க்கம் தானே?

மேற்கண்ட இந்த இரண்டு செய்திகளை நாம் கண்டும் காணாமல் சென்று விட்டு, அரசியல் சாக்கடை; சமூகம் மோசமாக போய் விட்டது; அரசியல் வாதிகள் ஊழல் செய்கிறார்களென எளிதாக சொல்லிவிட்டு எளிதாக நகர்ந்து விடுகிறோம். ஆனால் கட்சி தாண்டிய பார்வையோடு இந்த அரசியலை இளைஞர்கள் அணுகாத வரை, குவார்ட்டருக்கும் - பிரியாணிக்கும் ஆசைப்பட்டு வாக்களிக்கும் இயந்திரமாகவே மாறி போவார்கள். இதுவே இனியும் தொடர்ந்தால் நம் அடுத்த தலைமுறை, இலவசங்களுக்காக காத்திருந்து கையேந்தும் அடிமைகளாகி போவதை யாராலும் தடுக்கவே முடியாது.

களத்திற்கு வா! ஒன்று சேர்! போராடு! அரசியல் அதிகாரத்தை கைப்பற்று! நீயே ஆட்சி செய்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக