24 மார்ச் 2015

66 ஏ சட்டம் ரத்து!

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தனி நபர்களின் கருத்துகளை வைத்து, கைது - சிறையென அச்சமூட்டி கொண்டிருந்த 66-ஏ சட்டத்தை உச்சநீதிமன்றம் இன்று தடைவிதித்துள்ளது. “தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.” எனவே அதை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளதை வரவேற்றும் அதே சமயம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வரையறையே இல்லாமல் அவதூறு பரப்புவதை நாம் மறுபரிசீலனை செய்து சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டியதும் இனி அவசியமாகிறது. ஆதாரமே இல்லாமல், யாரை வேண்டுமானாலும் அவன், இவளென்று ஒருமையில் பேசி தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை கருத்து சுதந்திரம் என்ற வகையில் வெளிப்படுத்துவதையும் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

சுதந்திரம் என்பதிலும் ஒருவித கட்டுப்பாடு இருக்க வேண்டும். அப்போதுதான் அது நமக்கு நிலையாக கிடைக்கும். தவறு எங்கிருப்பினும் தயக்கமில்லாமல், அதை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவது தான் கருத்து சுதந்திரம். ஆனால், நமக்கு வேண்டாதவர்களை அனுமானத்தின் அடிப்படையில் எதை வேண்டுமானாலும் சொல்வது என்பதெல்லாம் கருத்து சுதந்திரம் என்ற வரைவுக்குள் வருவதில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் நாம், நாகரீகமான முறையில் யார் மீதான தவறையும் சரியான வழியில் வெளிப்படுத்துவோம். அதுதான் ஜனநாயக மக்களின் சரியான எதிர்வினையாக அமையக்கூடும்.

ஒருகாலத்தில், நேற்றைய செய்திகளை இன்றைய தேதியில் கொடுத்து கொண்டிருந்த அச்சு ஊடகங்களை, அன்றைய செய்திகளை அன்றைக்கே தந்த தொலைக்காட்சி ஊடகங்கள் ஏற்கனவே அசைத்து பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால், அதை விட நொடிக்கு நொடி நேரடியாக செய்திகளை சுடச்சுட தரத்துவங்கிய சமூக வலைதளங்களால், தொலைக்காட்சி ஊடகங்களும் தற்பொழுது ஆட்டம் கண்டு கிடக்கின்றன. இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் எந்த தலைப்பு அதிக அளவில் பகிரப்படுகின்றதோ, அதையே தான் தொலைக்காட்சி ஊடகங்களும் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி வெகுநாட்கள் ஆகிவிட்டது. நெட் பேக்குடன் கூடிய ஓர் ஆண்ட்ராய்டு செல்போன் இருந்தால் போதும், அனைவருடனும் எல்லாவிதமான செய்திகளையும் உடனுக்குடன் பகிரமுடியுமென்ற நிலை வந்த பின்னால், மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடக சக்தியே ஓரளவுக்கு நம் பின்னால் வந்து விட்டது எனலாம். எனவே, அதன் தன்மையையும் - அத்தியாவசியத்தையும் உணர்ந்து பொறுப்போடு இயங்குவது நம் ஒவ்வொருவரின் கடமை. ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக