01 ஜூன் 2015

மன்னர் பரம்பரையென்ற வரலாற்று குழப்பம்!

வரலாறு என்பது சுவாரசியமான போதை. அந்த வரலாற்று தேடல் மூலமாக, எதை வேண்டுமானாலும் நமக்கு சாதகமாகவோ அல்லது இன்னொரு சமூகத்துக்கு எதிராகவே தரவுகள் மூலமாகவே நிறுவ முடியும் என்பது தான் நிதர்சனம். கடந்த கால வரலாறு முற்றிலுமே குழம்பிய குட்டை போல தான், திறமையிருந்தால் எந்த மீனையும் எளிதில் பிடித்து விடலாம். ஏன், இன்னொருவனுக்கு உரிய மீனை கூட தனதாக்கி கொள்ளலாம். இதை அபகரிப்பு என்றோ திறமை என்றோ சொல்லிக்கொள்ளலாம். உண்மையில் அது உண்மையில்லை. இன்றைக்கு பலரும் தங்களது இனக்குழுவை மன்னர் பரம்பரை என்று சொல்லிக்கொள்வதில் முழு முனைப்போடு வரலாறென்ற குட்டையை தெளிவாக குழப்புகிறார்கள். தமிழ் மொழிவளத்தின் உறுதுணையால் எல்லாவற்றையும் தங்களுக்கு சாதகமாக்கியும் கொள்கிறார்கள். அரச பரம்பரை என்று இன்றைக்கு அநேக சாதி சங்கங்களும் தங்களை முன்னிறுத்தி விட்டன.

ஒன்று மட்டும் தெளிவாக்கி கொள்ளுங்கள். பொதுவாகவே மன்னன் என்பவன் பல மனைவிகளுக்கு கணவனாகி இருக்கின்றான். சாதி பார்த்து எந்த பெண்ணையும் மண உறவு கொள்ளவில்லை அவன். போர் வியூகங்களுக்காகவும், மோகத்திற்காகவும், அரசியல் சாதக பாதகங்களின் போது ஏற்பட்ட இக்கட்டான சூழலின் போதும் மாற்று சாதி பெண்களை மணமுடித்திருக்கின்றான். ஒரு குறிப்பிட இனக்குழுவினர் மட்டும் தான் மன்னர் பரம்பரை என்று யாராவது நம்பிக்கொண்டிருந்தால் அது அவர்களின் அறியாமையே. மேலும், அரசபரம்பரையினர் என அடையாளப்பட்ட யாருமே ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு உள்ளாக மட்டுமே திருமண உறவு செய்து கொள்ளவில்லை என்பதையும் முதலில் உணர்தல் வேண்டும்.

இன்னும் முக்கியமாக, தமிழ் சாதிகளில் பெரும்பான்மையினோர் போர்குடிகளே. முழுநேர போர்குடிகளாக ஒருசில இனக்குழுக்களும், பகுதி நேர போர்குடிகளாக பெரும்பான்மையான இனக்குழுக்களும் இருந்துள்ளன. போர்குடியும் மன்னர் பரம்பரையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். ஆனால், ஒட்டுமொத்த போர்குடி இனக்குழுவும் மன்னராக இருக்க தகுதி படைத்திருக்கவில்லை என்பதையும் புரிதல் கொள்ள வேண்டும். ஓர் எடுத்துக்காட்டுக்கு, இன்றைக்கு தமிழக அரசியலில் திரு கருணாநிதி நான்கு முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்திருக்கார். ஆயிரம் வருடங்களுக்கு பிறகு அவர் சார்ந்த இசைவேளாளர் சமூகமே தமிழ்நாட்டை ஆண்ட பரம்பரை என்று சொல்வதை இன்றைக்கு நம்மால் ஏற்க முடியுமா?

மன்னர் பரம்பரை என்று பீற்றி கொள்ளும் எல்லா இனக்குழுக்குளிலும் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஏழை எளிய வறுமையில் வாடும் குடும்பங்கள் இங்குண்டு. முதலில் சொந்த சாதியில் வறுமையில் வாடும் குடும்பங்களை மேலேற்றி விட பாடுபடுங்கள். அவர்களுக்கு இந்த மன்னர் பரம்பரை கதைகளை சொல்லி உளவியல் ரீதியாக சமூகத்தில் உயரிய இடத்து கொண்டு முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் இந்த வரலாற்று குட்டையை குழப்பலாம்.

நானும் இந்த வரலாற்று குட்டையை, அகமுடையார் இனக்குழு சார்ந்து குழப்பத்தான் வெகு நாட்களாக காத்திருக்கிறேன். நான் குழப்பினால், முக்குலத்தோர் என கட்டமைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தின் அடித்தளமே ஆட்டம் காணுமோ என்ற குழப்பத்திலேயே பழைய குப்பைகளையெல்லாம் கிளறாமல் வேடிக்கை பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக