30 மே 2015

ஐ.ஐ.டி. அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டத்திற்கு பின்னால்...



ஐ.ஐ.டி.,யில் அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்திருப்பது மிகவும் கேவலமான அடக்குமுறை. எது 'தேச விரோதம்' என்பதை யார் வரையறுப்பது? பார்பன - பாசிச - ஹிட்லரிய - ஹிந்துத்வ சித்தாந்தங்களை எதிர்க்கும் வார்ணாசிரம அடிப்படையில் அடையாளப்படும் எளிய கூட்டத்தையெல்லாம், தேச துரோகியென சொல்லி விடுவது தான் இங்கே எளிதாக போய்விட்டது. மேலும், பார்பன சித்தாந்தங்களை ஹிந்து என்று பொது புத்தியில் ஓர் அணி திணிப்பதும், அதற்கு எதிராக இன்னொரு அணி பார்பன எதிர்ப்பு என்பதை பார்பனர்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த ஹிந்துக்களையே எதிர்ப்பதும் என இங்கே நடக்கும் பெரும் குழப்பங்களுக்கு இந்த புரிதல் இல்லாத நிலையே காரணமாக அமைந்து விட்டது.

படிப்பு மட்டுமன்றி அரசியலை பேசும் உரிமையும் தகுதியும் மாணவ சமுதாயத்திற்கு உண்டு. அவர்கள் தான் வருங்கால அரசியலை கட்டியெழுப்ப கூடியவர்கள். அப்படிபட்ட அந்த மாணவர்களின் கூட்டமைப்பிற்காக எந்த பெயரிலும் இணையலாம். அது தனி மனித உரிமை. அந்த அமைப்பின் பெயரால் ஒரு கருத்தை சொல்வதோ, பரப்புவதோ முற்றிலும் சட்டத்திட்டத்திற்கு உட்பட்ட ஒன்றே. மேலும், "தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்து பேசுவது கூட தவறில்லை!"யென ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ள நிலையில், நரேந்திர மோடியின் தவறான செயல்திட்டங்களை விமர்சிப்பதும் கூட தனி மனித கருத்து/பேச்சுரிமையே. நரேந்திரமோடியோ, பா.ஜ.க.வோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. தவறை சுட்டிக்காடும் உரிமையானது, ஹிந்திய குடிமகனாக வர்ணாசிரம தமிழனுக்கும் உண்டு என்பதை பார்பன சித்தாந்தவாதிகள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். ஐ.ஐ.டி.யிலும் இதுபோன்ற விழிப்புணர்வு கூட்டம் தான் நடந்ததுள்ளது. ஆனால். முன்னறிவிப்போ, எச்சரிக்கையோ இல்லாமல் நரேந்திர மோடிக்கு ஆதரவாக விழிப்புணர்வு கூட்டத்தை ரகசியமாக இல்லாமல் பொது அரங்கில் நடத்திய காரணத்திற்காகவே, அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்திருக்கிறது பார்பன சித்தாந்த கூட்டம்.

அது தொடர்பாக இன்றைய தந்திடிவி விவாதத்தில் கலந்து கொண்ட மாணவர் அமைப்பு சார்பாக பங்கேற்ற 'மருது' மிகத்தெளிவாக கருத்துகளை பகிர்ந்தார். மேலும் அவர் சொன்ன, "ஐ.ஐ.டி., என்றாலே அது, ஐயர் ஐயங்கார் இன்ஸ்ட்டியூட்" என்ற ஒற்றை வரிதான் என்னை மிகவும் கவர்ந்தது. மருது என்ற அவரின் பெயரிலேயே தெரிந்து விட்டது அவரது அரசியல் தெளிவும், போராட்ட குணமும்! மருது போன்ற இளம் அரசியல்வாதிகள் தான் இனி காலத்தின் தேவை. வாழ்த்துகள் மருது!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக