25 நவம்பர் 2014

பசும்பொன் தேவரின் குருவான சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி!


தேவர் மீதான கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்புச் சொல்லும் நாள் 1959 ஜனவரி 7 ம் தேதி வந்து விட்டது. நீதிபதி அனந்த நாராயணன், சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்து அமர்ந்தார். 50 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பைப் படித்தார்.

"தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று யூகிப்பதற்குக் கூட சாட்சியம் இல்லை. எனவே தேவரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கிறேன்" என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான குருசாமித் தேவர், காட்டுச்சாமித் தேவர், முனியசாமித் தேவர், சடையாண்டித் தேவர், பெரியசாமித் தேவர் ஆகியோரை சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தார் நீதிபதி. இதர மூன்று பேர்களான அங்குசாமித் தேவர், பேயன் முனியாண்டித் தேவர், தவசித் தேவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளே என்று தீர்மானித்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.

தேவர் விடுதலை அடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்து, மக்களுக்குக் காட்சி தந்ததும், மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, ஆரவாரம் செய்து, கோஷங்கள் எழுப்பிக் கரவொலி செய்தனர். தேவருக்கு பலர் பெரும்பெரும் மாலைகளை அணிவிக்க வந்தனர். ஆனால், தேவரோ, "முழு வெற்றிக்குப் பிறகே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். மாலைகள் எதுவும் அணிவிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கும். எனவே மாலைகளை ஆண்டவனுக்கு அணியுங்கள். என் பொருட்டு இத்தனை ஆர்வத்தோடு கூடிய அனைவருக்கும் நன்றி. அமைதியாகக் கலைந்து செல்க" என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலை ஆனதும் தேவர் முக்கிய தலைவர்களுடன் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில், பிரஹதாம்பாள் கோயில், ஐயனார் கோவில் முதலிய ஆலயங்களில் வழிபட்ட பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, "சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?" என்று கேட்டார். அதற்கு சுவாமிகள், "உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவீர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்" என்று கூறினார். பிறகு, சுவாமிகள் முன்னரே தான் குறிப்பிட்ட தேதியில் ஆடுதுறைக்கு அருகிலுள்ள காவிரி ஆற்றங்கரைக்கு மேற்கே ஓரிடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தை தன் பக்தரான செட்டியார் ஒருவரிடம் சொல்லி அதை வாங்க சொன்னார். பிறகு சொன்னது போலவே குறிப்பிட்ட தேதியில் அங்கே சுவாமிகள் ஜீவசமாதி ஆனார். அதனால்தான் விடுதலை ஆனதும் ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர்.

ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகளின் இந்த ஜீவசமாதிக்கு செல்வதற்காக மூன்று முறை முயற்சித்தும் தரிசிக்க முடியாமல் போனதால், நான்காவது முறையாக நேற்று (24.11.2014) மாலை இந்த ஜீவசமாதிக்கு சென்று வந்தேன். தேவர் மீது பற்றுள்ள அனைவரும், நேரமிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.

செல்லும் வழி:

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோவில் செல்லும் சாலையில் அரை மைல் தொலைவில் காவிரியாற்றின் மேம்பாலம் ஒன்றுள்ளது. அதற்கு முன்பாகவே இடபக்கமுள்ள அம்மன் கோவிலின் பின்புறமுள்ள தோப்பில் சைதன்ய விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவிலிலுள்ள விநாயகர் சிலைக்கு கீழாகவே ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி உயிர்துடிப்புடன் இருந்து வருகின்றது.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக