24 நவம்பர் 2014

கீழ வெண்மணியும் - வரலாறும்!

விவசாய அறுவடை கூலியாக தரும் ஒரு படி நெல்லிலிருந்து இரு படி நெல் தரவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டதால் ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இருந்த இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாட்களால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் துயர சம்பத்திற்கு பிறகு 'கீழ வெண்மணி' என்ற கிராமம் தமிழக கம்யூனிசத்தின் ஆணிவேராக மாறிபோனது. 36க்கு 12 என்ற நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீட்டுக்குள் வைத்து 44 பேரும் தீ வைத்து கொளுத்தப்பட்டனர். இறந்தவர்களில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 20 பெண்கள்; 13 வயதிற்கும் குறைவான 19 சிறுவர்கள்; 70 வயது பெரியவர் உள்பட 5 ஆண்களென மொத்தம் 44 அப்பாவிகள் கொல்லப்பட்ட பிறகும், தன் சாதியை சார்ந்த ஒருவரால் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டதை அறிந்திருந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கடைசி வரையிலும் எந்தவித பெரிய எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதும் துரோக வராலாற்றுக்கு ஒரு சான்று. அப்படிப்பட்ட கீழ வெண்மணிக்கு மூன்று மைல் தொலைவில் தான் வண்டலூர் எனும் கிராமமும் உள்ளது.

டெல்டாவில் பெரும்பாலான விவசாயம் சார்ந்த கிராமங்களிலெல்லாம் கம்யூனிசம் மிக வலுவாக கால் பதித்திருந்த நிலையில், கீழவெண்மணிக்கு மிக அருகிலுள்ள வண்டலூரில் கிளை செயலாளர் என்ற மிகச்சிறிய பதவியில் இருந்த என் தந்தை இரா.சம்பந்தம் அவர்களின் தீவிர முயற்சியால், தீவிர கம்யூனிசத்தொண்டர்களை திராவிட கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்தார் என்பது கடந்த கால வரலாறு. இங்கே திராவிடம் - கம்யூனிசம் என்று ஒப்பிட்டு பேசி எது சரி? எது தவறு? என்பதையெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால், எளியவனுக்கும் நேர்மையான மனத்திடத்துடன் கூடிய ஆளுமை திறனிருந்தால், எந்தமாதிரியான களத்திலும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை சொல்லவே இந்த பதிவு. மேலும், கம்யூனிசம் பரவியிருந்த மண்ணில் திராவிடத்தை திணித்திருக்கும் போது, திராவிடம் பரவியிருக்கும் இக்காலத்தில் தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாதா என்ன? முடியும்.

வரலாறு என்பது மன்னர் என்று நிறுவுவதில் மட்டுமல்ல; மண் சார்ந்த புது மாற்றத்திலும் உண்டு.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக