07 பிப்ரவரி 2014

தமிழ் தேசியத்தை மறக்க பசும்பொன் கவசம்!

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருடா வருடம் அக்டோபர் மாதம் கடைசி வாரம் முழுமைக்கும் கோவில் திருவிழா போல நடைபெறும் ஓர் ஆன்மீக நிகழ்வை, ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளின் தலையீட்டால் கடமைக்கு பசும்பொன் வந்து தலை காட்டி செல்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர். 

பெரும்பான்மை சமூகம் சார்ந்த விழா என்பதால், தமிழகத்தில் செயல்படும் லெட்டர்பேடு கட்சி முதற்கொண்டு மாநிலத்தை ஆளும் திராவிட கட்சிகளும், மத்தியில் ஆளும் தேசிய கட்சிகள் உள்பட அனைவரும் அக்டோபர் 30ம் தேதியென்று பசும்பொன்னை ஆக்கிரமித்து கொள்வது தான் கடந்தகால வரலாறு. அப்படிப்பட்ட ஆன்மீக விழாவான தேவர் ஜெயந்திக்கு தடை போட்ட ஜெயலலிதா, முழுக்க முழுக்க நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து முக்குலத்து ஓட்டு வங்கியை கையகப்படுத்தும் முயற்சியில் தற்போது தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

 
அதன் முதல் முயற்சியாக, ஓட்டுக்காக கொடுக்கப்படும் லஞ்சம் போல, வருகின்ற பிப்ரவரி 09ம் தேதி பசும்பொன்னில் தங்க கவசம் அணிவிக்கிறேன் என்ற பெயரில், இழந்த தேவரின ஓட்டு வங்கியை கவர மலிவான அரசியல் யுக்தியை பயன்படுத்துகிறார். இதில் வெட்க கேடான விசயம் என்னவெனில், 32 1/2 கிராமங்களை சொந்தமாக கொண்டு பெரிய ஜமீன்தாராக வாழ்ந்திருக்க வேண்டிய பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர், தேசியவாதியாகவும் - துறவி போல பிரம்மச்சாரியத்தை கடைபிடித்தும், பொன், பெண், மண் ஆசையற்ற ஆன்மீகவாதியாகவும், இறுதிவரை எளியவராகவே வாழ்ந்த மாமனிதரான ஆன்மீக சித்தருக்கு, தங்க கவசம் சூட்டுவதென்பது கேடுக்கெட்ட திராவிட அரசியலின் சூழ்ச்சி என்பதை ஓட்டளிக்கும் எம் மக்கள் புரிந்து கொள்ளாதவரை, தமிழ்நாட்டை தமிழர் ஆள்வதற்கான 'தமிழ் தேசிய அரசியல்' என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

- இரா.ச.இமலாதித்தன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக