19 பிப்ரவரி 2014

ஏழு பேரின் விதியை மாற்றிய விதி எண் 110 அறிப்பு!



பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் இதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனக்கு தெரிந்து, தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட நல்ல அறிவிப்பு இது மட்டுமே. நேற்று உச்சநீதிமன்றம் மூவரின் தூக்கை ரத்து செய்த அதேவேளையில், முக்கியமானதொரு ஆலோசனையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்கி இருந்தது என்பதும் குறிப்பிடதக்க அம்சம். அது என்னவெனில், 23 வருடங்கள் சிறைவாசம் கண்டுள்ள இவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசுதான் இனி முடிவு செய்ய வேண்டுமென்று அனைத்து பொறுப்பையும் விவேகமாக தமிழக அரசின் மீது வைத்துவிட்டனர். அதனாலேயே, நீதியரசர் சதாசிவம் தலைமையிலான மூவரின் ஆலோசனையை, இன்று அரசியல் லாபமாக மாற்றிக்கொண்டுவிட்டார் ஜெயலலிதா.

ஒருவேளை இந்த அறிவிப்பை ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் அறிவிக்காவிடில், தமிழ் ஆர்வலர்கள், ஈழ ஆதரவாளர்கள், நடுநிலைவாதிகள் என அனைவரும் ஜெயலலிதாவை குற்றம் சாட்ட தொடங்கிவிடுவார்கள் என்பதை நன்றாகவே அறிந்திருந்த ஜெயலலிதா, இதை தனக்கு சாதகமாகவே பயன்படுத்தி கொண்டுவிட்டார். நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்கின்ற இந்த காலக்கட்டத்தில், இப்படியொரு அறிவிப்பு கண்டிப்பாக ஜெயலலிதாவிற்கு லாபத்தைத்தான் தரும் என்பது என் அனுமானம்.

இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயமே, நேற்றைய தீர்ப்பின் சாரம்சத்தைத்தான். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், மூவரின் விடுதலையை தமிழக அரசின் பொறுப்புக்கே விடும்போது, அதை காங்கிரஸ் அல்லாத எந்தவொரு கட்சியும் தனக்கு சாதகமாகத்தான் பயன்படுத்த பார்க்கும் என்று உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்களின் கணிப்பு இன்று வெற்றியடைந்திருக்கிறது. இந்த விடுதலை பற்றிய அறிவிப்பை சரியானதொரு நேரத்தில் தமிழக அரசின் மீதே திசைதிருப்பி அதை வெற்றியடையவும் வைத்த நீதியரசர் திரு சதாசிவம் அய்யாவிற்கு அடியேனின் நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக