31 அக்டோபர் 2015

கோவன் கைதை கண்டிப்போம்!



தமிழக அரசின் மதுக்கடைகளை எதிர்த்து 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் மூலமாக, “மூடு டாஸ்மாக்கை மூடு", "ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது 124 ஏ - தேசத்துரோக நடவடிக்கை, 153 - சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 - அவதூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரிமை, பேச்சுரிமையை கூட கொடுக்க இயலாத கையாலாகாத மக்களாட்சி அரசின் வெளிப்பாடுதான் இந்த செயல். தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களை கூட ஆதரித்து பேச, எழுத, செயல்பட உரிமை கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வழங்கிய ஜனநாயகத்தின் நேர்மை இதுதானா?
எதை ஆதரிக்க வேண்டும்? எதை எதிர்க்க வேண்டும் என்பதை கூட ஆளும் அரசாங்கங்கள் முடிவெடுத்தால், அது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்? சர்வாதிகாரத்தின் உட்சம் இது. நாட்டுப்புற பாடகர் தோழர் கோவனை அரசு விடுதலை செய்ய அனைத்து தமிழ் அமைப்புகளும் மிகப்பெரிய அளவிலான போரட்டக்களங்களை உருவாக்க வேண்டும்.

நம்மை அடிமை படுத்திய அந்நியன் அன்று, பேச்சுரிமையை அடக்க பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மீது வாய்ப்பூட்டு சட்டம் தான் போட்டான். இன்று தேவரது ஜெயந்தி நாளில் அவருக்கு போட்ட வாய்பூட்டு சட்டத்தை விட மோசமான கைதை அரங்கேற்றிய அரசாங்கத்தின் நோக்கம் தான் என்ன? குடிபோதைக்கு அடிமையாகி தமிழன் தன் சுயத்தை இழக்க வேண்டும் என்பது தானா? தமிழனின் சிந்தனையை மழுங்கடித்தால் தானே, அந்நியர்கள் ஆட்சியில் அமர முடியுமென்ற ராஜதந்திரமா? தமிழனே போதையிலிருந்து விழித்தெழுந்து தமிழ் மண்ணை தமிழனே ஆள வழிவகை செய்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக