18 பிப்ரவரி 2016

பி.வி.ரமணாவை விமர்சிக்கும் உத்தமன் யார்?

அமைச்சர் பி.வி.ரமணாவும் அவரது மனைவியும் நெருக்கமாக இருக்கும் படங்களை பகிர்ந்து ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை தரம் தாழ்ந்து பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அமைச்சராக இருக்க கூடியவரும் சக மனிதன் தானே? குடும்பம், இல்லற சுகம் எதுவுமற்றவர் தான் அமைச்சராக இருக்க வேண்டுமென்ற ஏதாவது நியதி, தமிழக அரசியலில் இருக்கிறதா? ஒருவேளை பி.வி.ரமணா யாரோவொரு பெண்ணோடு உல்லாசமாகவே இருந்து விட்டு போகட்டுமே. அதனால் மற்றவர்களுக்கு என்ன இழப்பு?

ஒரு பெண்ணின் சம்மதத்தோடு உடலறவு வைத்து கொள்வதே சட்டப்படி நியாயமென உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், விபச்சாரமே அரசாங்க ஒத்துழைப்போடு இந்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போது, ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிட யாருக்குமே உரிமை இல்லை. இன்னொருவனின் படுக்கையறையை எட்டிப்பார்த்து தான் சிலரின் ஒவ்வொரு இரவும் கழிகிறது போல.

காமம் என்பது உடலியல் சார்ந்த இச்சை. அது இல்லாத மனிதனே இல்லை. அதை கடக்க தெரிந்தவன் தான் ஞானியாகிறான்; அடக்க தெரியாதவன் சம்சாரி ஆகிறான். வாய்ப்பு கிடைக்காததால் யோக்கியனாக காலம் கடத்தும் சிலரின் விமர்சனங்களால், தனி மனிதனாக பி.வி.ரமணாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மனரீதியான தாக்குதல் ஏற்படலாம். அதை தாங்கி கொள்வதற்கான வல்லமையை பி.வி.ரமணாவுக்கு இப்பிரபஞ்சம் வழங்கட்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக