17 டிசம்பர் 2015

ஆகவிதியும் அட்ராசிட்டியும்!

நல்ல நாள் அதுவுமா, கோவில் வாசல்ல ஐம்பது ரூபாய்க்கு அர்ச்சனை தட்டு வாங்கி, கோவில் அலுவலகத்துல பத்து ரூபாய்க்கு அர்ச்சனை சீட்டு வாங்கி, அர்ச்சகர் கிட்ட போய் நம்ம ராசி - நட்சத்திரத்தை சொன்னா, அதை காதுலேயே வாங்காம காணிக்கையை போடுங்கன்னு மிரட்டுற தொனியில சொல்ற அர்ச்சகரை தான் நூத்துக்கு தொன்னுத்தொன்பது இடத்துல பாத்துருக்கேன். இதெல்லாம் என்ன எழவு விதியோ? என்ன மானங்கெட்ட குலத்தொழிலோ?

#

குலதெய்வம் கோவில்களிலும், ஊர்புற அம்மன் கோவில்களிலும் எந்த ஆகமவிதிப்படி அர்ச்சனை நடக்கிறது? எந்த ஆகமவிதிப்படி கடவுள் பூசாரியின் உடலில் வந்து தெய்வ வாக்காக குறி சொல்கிறார்? பூசாரி மட்டுமல்ல, கோவிலுக்கு வந்த யார் மீது வேண்டுமானாலும் அந்த கடவுள் அடிக்கடி வந்து போகிறாரோ? எனக்கு ஆகமவிதியை புறந்தள்ளிய இந்த கடவுளே போதும்! இறக்குமதி செய்யப்பட்ட எந்த கடவுளும் தேவையில்லை.

#

நான் தீவிர கடவுள் நம்பிக்கையாளன். என் ஆன்மீகறிவுக்கு எட்டியபடி, ஆகம விதிப்படி தான் கடவுளை ஆராதனை பண்ணமுடியும்ன்னு எந்த கடவுளும் உட்சபட்ச நீதியை வழங்கவில்லை என்பதை அறிவேன். ஏனெனில், எந்த கடவுளும் பூநூலை போட்டுக்கொண்டு மேல்தட்டு சாதியவாதியாக இருக்கவில்லை.

#

'சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்ற காமெடி போலத்தான், இந்த ஆகமவிதியும்!

#

சங்கரராமன்களும், தேவநாதன்களும் தான் ஆகமவிதிக்கு உரிமை கொண்டவர்களா? கோவில் கட்டி மண்ணையே ஆண்ட பரம்பரை என வீர முழக்கமிடும் என் அகமுடையார் குடியில் பிறப்பெடுத்த இந்த இமலாதித்தன் போன்றவர்களுக்கு வெறும் தலைவிதி மட்டும் தானா சொந்தம்?

#

"சாதியும் - நிறமும் ஆன்மீகத்திற்கு சர்வ நிச்சயமாக கிடையாது!"
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

குலத்தொழிலில் போர்குடிகளை தவிர்த்த ஏனையர்களும் வீரம் செறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது கடந்தகால / நிகழ்கால வரலாறு. அதனால் குலத்தொழில் என்பதெல்லாம் ஒரு மாயை.
கோவில் கருவறையில் காம களியாட்டம் ஆடிய காஞ்சிபுரம் தேவநாதனின் குலத்தொழில் எது?

சித்தர்களில் - நாயன்மார்களில் - நால்வர்களில் - ஆழ்வார்களில் எத்தனை பேர் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள்? இவர்களில் எத்தனை பேர் ஆகமவிதியை பயின்றவர்கள்?

அனைத்து சாதியிலிருந்தும் முறையாக பயின்று வரும் நபர்கள் சரியான முறையில் ஆன்மீக சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அன்று கோவில் கட்டிய தமிழ்குடிகளின் வருங்கால தலைமுறைகள், இன்று முறையாக பயின்ற பின்னால் கோவில் கருவறையில் நுழைய யாரும் தடை போட கூடாது. அப்படி இருந்தால் அந்த தடையை உடைப்போம் தமிழனாய்!

#

எங்க நாகப்பட்டினத்தில் மீனவனாய் பரதவர் குலத்தில் பிறந்த 'அதிபத்த நாயனார்' எந்த ஆகமவிதிப்படி வெறும் நாற்றம் பிடித்த மீனை கொடுத்து கடவுளை வணங்கி, அவரையே நேரில் வர வைத்தார் என்பதை சட்டமேதை என்ற அறிவுஜீவிகளால் பதில் சொல்ல முடியாது.
கடவுள் என்பது உணர்வு. அதுவொரு உட்சம் தொட்ட அறிவுநிலை. அது வேறுபாடற்ற அன்பின் நிறைவு. நான் யாரென்ற புரிதலோடு இயற்கை சூழ் இந்த உலகமடங்கிய ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை அணு அணுவாக அனுபவித்து, அணுவாகவே இடம் பெயர்ந்து அதுவாகவே ஆகிவிடும் பெரும்போதை. அதை இந்த ஆகம விதி, ஆகாத விதியென ஒப்பிட்டு இனியும் ஏமாற்றாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக