29 மார்ச் 2017

முதுகெலும்பில்லாத ஹிந்தியா!



இம்மண் சார்ந்த பிரச்சனைகளுக்காக யார் போராடினாலும் ஆரம்பத்திலேயே அந்த போரட்டத்தை பல்வேறு வடிவங்களில் நீர்த்து போக செய்வதில் இந்த ஹிந்திய ஆட்சியாளர்கள் ரொம்பவே திறமைச்சாலிகள். இவர்களின் முதல் ஆயுதம், தேசத்துரோகி. இந்த ஒற்றை வார்த்தையை வைத்து, போராளிகளுக்கு எதிராக தேசத்துரோக வழக்காக பதிய வைத்து கைது செய்து சிறையிலும் அடைப்பார்கள். எது தேசத்துரோகம்? பன்னாட்டு கார்ப்ரேட் கம்பெனிகளுக்காக இம்மண்ணின் வளத்தையே சூறையாடி வாரி கொடுப்பது தானே தேசத்துரோகம். அந்த இழிசெயலை எதிர்க்கும், மண்ணின் மைந்தர்கள் எப்படி தேசத்துரோகி ஆக முடியும்?

மதத்தை வைத்து தீவிரவாதி, கட்சியை வைத்து நக்சலைட், மொழியை வைத்து பொறுக்கி, இனத்தை வைத்து ஈழவியாபாரிகள், என இப்படியாக பல அடைமொழிகளை கொடுத்து விட்டு இவர்கள் மட்டும் உத்தமனாகி விடுகிறார்கள். இங்குள்ள அனைவருக்குமே ஏதோவொரு வகையில் ஒரு பின்புலம் இருக்கத்தான் செய்கிறது. அதை தேடிப்பிடித்து அவர்களை தனிநபர் தாக்குதல் நடத்தி உளவியல் ரீதியாக ஒடுக்கும் யுக்தியை இந்த ஹிந்திய ஆட்சியாளர்கள் முறையாக கையாளுகின்றனர். அப்படித்தான், ஹிந்திய கூட்டாட்சி ஒன்றியத்தின் தலைநகரான டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போரட்டத்தையும் கொச்சை படுத்துகிறார்கள். முசிறியை சேர்ந்த ஐயாக்கண்ணு அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட டெல்லி விவசாய போரட்டத்தை மழுங்கடிக்க, அவரது சொத்து மதிப்பு, அவரது மனைவி, மகன் உள்ளிட்ட அந்தரங்க விசயங்களை அவதூறாக பரப்பி சுகம் காண்கிறார்கள். விவசாயி என்பவனுக்கு தொப்பை இருக்கவே கூடாதா? அவனுக்கு சொந்தமாக ஏக்கர் கணக்கில் நிலம் இருக்க கூடாதா? என்ன மாதிரியான மனநிலையில் சில ஹிந்துத்துவ வாதிகள் இருக்கிறார்களென தெரியவில்லை.

ஒருவேளை, பச்சை துண்டிற்கு பதிலாக காவித்துண்டை தலையில் கட்டி விவசாயிகள் போராடிருந்தால் ஹிந்திய ஆட்சியாளர்கள் கடைக்கண் பார்வை எப்போதே பட்டிருக்கலாம். இப்போதும் பெரிய விசயமில்லை; அவர்கள் மொழியில் சொல்வதென்றால், விவசாயிகளில் பெரும்பாலானோர் 'சோ கால்டு' ஹிந்து தான் என்பதையாவது ஆட்சியாளர்களுக்கு உணர வைத்தாலே போதும், போரட்டத்திற்கான பலன் சீக்கிரமாகவே கிடைக்கும். 'மான்கி பாத்' போன்ற மக்களோடு உரையாடும் ஒவ்வொரு முறையும் புதிய ஹிந்தியா பிறந்து விட்டதாக நரேந்திர மோடி மார் தட்டுகிறார். அப்படியொரு ஹிந்தியா பிறப்பது உண்மைதான். அதில் சிக்கல் என்னவென்றால், விவசாயத்துடன் கூடிய கிராமம் என்ற முதுகெலும்பு இல்லாமலேயே குறை பிரசவமாக புதிய ஹிந்தியா பிறந்து விடுகிறது.


திருக்குறளிலுள்ள 133 அதிகாரங்களில் "உழவு" என்ற அதிகாரமும் உண்டு. அதிலுள்ள முதல் ஐந்து குறள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)


பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து. (1032)

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (1033)

உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். (1034)

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். (1035)

தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

------

விவசாயியென்றால் பிச்சைக்காரன் போல இருக்க வேண்டுமென்ற பொது புத்தியை செருப்பாலேயே அடிக்க வேண்டும். எம் சோழ தேசத்தின் பெரும்பான்மையானோர் விவசாய குடும்பத்தினர் தான். அதில் சிறு/குறு/நடு/பெரு என பலதரப்பட்ட விவசாயிகள் இருக்கின்றனர். ஆளுக்கு தகுந்தாற்போல் நிலங்களின் எண்ணிக்கையுடன் கூடிய அளவும் மாறுபடும். விவசாய கூலியும் இருக்கிறார்கள்; மற்றவர் நிலத்தையோ, கோவில் நிலத்தையோ குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் இருக்கிறார்கள்; ஏக்கர் கணக்கிலும், வேலி கணக்கிலும் நிலங்களை வைத்து விவசாயம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

எங்கள் குடும்பமும், எங்களது உறவினர்களது குடும்பங்களும் முழுக்க விவசாய பின்னணியிலுள்ள குடும்பங்கள் தான். ஒருகாலத்தில் டிராக்டர் என்பது பத்து கிராமங்களுக்கு ஒன்று இருக்கும்; மாட்டு வண்டிகளெல்லாம் காலாவதி ஆனபின்னால், இப்போதைய நிலவரப்படி, ஒரு கிராமத்திற்கு குறைந்தது நான்கைந்து டிராக்டர்களாவது இருக்கின்றது. பண்ணை போன்ற பெரு விவசாயிகளிடம், முன்பெல்லாம் ஒரு டிராக்டரும், ஒரு அம்பாசிட்டர் காரும் இருக்கும்; இப்போது டிராக்டரோடு, கதிரடிக்கும் மெசினும் இருக்கிறது. ஆடிகார் இல்லாவிட்டாலும் கூட நவீனரக காரும் அவர்களிடம் இருக்கிறது. காவிரியும், வானமும் கை கொடுத்திருந்தால், அனைவருக்கும் முப்போகம் சாகுபடி விளைந்திருக்கும். அப்போது ஆடி காரெல்லாம் ஒரு விசயமாகவே இருந்திருக்காது. விவசாயிகள் என்பவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல; அனைவருக்கும் உணவளிக்கும் முதலாளிகள்; கடவுளின் தூதுவர்கள். அவர்களை போற்ற கூட வேண்டாம்; குறைந்த பட்சம் அவதூறு பரப்பி தூற்றாமலாவது இருங்கள்!

விவசாயி மகனாக,
இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக