27 மார்ச் 2014

அவனின்றி அணுவும் அசையாது!


அரியும் சிவனும் ஒன்று! என்று சொல்வதை பல இடங்களில் கேள்விபட்டிருப்போம். எதனால் ஒன்றென சொன்னார்கள் முன்னோர்? இதனை சற்று ஆராய்ந்தால், பல விசயங்களை புரிந்துகொள்ள முடியும்.

முதலில் நடராச தத்துவம்; இதுதான் அணுவின் அசைவை/ஓட்டத்தை நடனமாக செயல்முறையில் விளக்க உதவுகின்றது. அதனாலேயே ஆடல்வல்லான் என்ற பெயரும் கிடைத்தது. மேலும், செஞ்சடை வானவன் என்றும், சிவந்த நிறமுடையவனென்றும், செம்மேனியனென்றும் பல இடங்களில் சிவனை பற்றிய குறிப்புள்ளது. தென்னாடுடைய சிவனுக்கு எப்படி செஞ்சடை பொருத்தமாக இருக்கும்? தென்னாட்டினருக்கு தலைமுடி கருமைதானே?


சங்கால இலக்கியங்களில் இறைவழிபாட்டை பற்றி பல இடங்களில் செய்தி வந்துள்ளன. அவை தமிழர்களின் ஆன்மீகத்தை பற்றி சொல்லும்போது, இரு தெய்வ வழிபாட்டை மட்டுமே பேசுகின்றன. ஒன்று சேயோன்; மற்றொன்று மாயோன்.

சேயோன் - என்றால் முருகன், சிவன் என்று பொருள். ஏனெனில் சேயோன் என்ற வார்த்தை, சிவப்பு - செம்மை  - செவ்வாய் என திரிந்தே வந்துள்ளது.

செய்யான் = சிவந்தவன், செம்பூரான்.
செய் - சேய் = சிவப்பு, செவ்வாய், முருகன்.
சேய் - சேயன் - சேயான் = செந்நிறத்தான்.
சேயவன் = செவ்வாய், முருகன்.
சேயோன் = முருகன், சிவன்.
சே = சிவப்பு, சேங்கொட்டை.
சே-சேத்து = சிவப்பு.

ஜோதிடத்தில் மேஷம் மற்றும் விருச்சிக ராசியினருக்கு அதிபதி செவ்வாய் என்று வரையறுக்க பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்குரிய கடவுளாக இருப்பவர் முருகன் எனவும் வரையறையுள்ளது. கோவில்களிலுள்ள நவக்கிரக சிலைகளில் செவ்வாய்க்கு சிவப்பு வண்ணத்தினாலுள்ள ஆடையையே சூட்டிருப்பார்கள். திருமால் மருகன் என்ற பெயரும் முருகனுக்குண்டு. சிவப்பு - செவ்வாய் - சேயோன் - முருகன் என்ற ஒப்பீடு சரியாக இருக்குமென நம்புகிறேன்.


சரி அது ஒருபுறம் இருக்கட்டும். அடுத்து, மாயோனுக்கு வருவோம். மாயோன் என்றால் திருமால், விஷ்ணு, கிருஷ்ணன் என்று பொருள். தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் இயற்றிய 'திருமாலை' யில் வரும் பாடலில், "பச்சை மா மலைபோல் மேனி" யென்று புகழ்கிறார். ஏனெனில் பசுமையான மரங்கள் சூழ்ந்த வனத்தை உடையவனாகையால் அவனை பச்சை மா மலை போன்ற மேனி என்கிறார்.

"கார் கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு
நீர்கொண்ட பாயல் நிறம்கொண்டு" - கண்ணி : 1

(நீர் = பாற்கடல், பாயல் = படுக்கை)
திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளான். அவனுடைய படுக்கை ஆல் இலை. ஆல் என்பது ஆலமரம். ஆலமரத்தின் இலையின் நிறம் பச்சை. கிளியின் நிறமும் பச்சை. எனவே, திருமால் ஆகிய இறைவனின் படுக்கை ஆகிய ஆல் இலையின் நிறம் கொண்டது கிளி என்று புகழப்படுகிறது. மேலும் பல இடங்களில் பச்சை நிறத்தையும், திருமாலையும் ஒப்பிட்டே குறிப்பிடுகின்றன. பச்சை பட்டுடுத்தி வைகையில் கள்ளழகர் இறங்கினார் என்ற செய்தியும் வருடாவருடம் செய்தி தாள்களில் படிக்கின்றோம்.

மேலே சொல்லியுள்ள இவையனைத்தையும் ஆன்மீக ரீதியிலேயே மெய்ஞானத்தோடு மட்டும் முடிவுக்கு கொண்டுவர விருப்பமில்லை. அதனால், திருமூலன் வாக்கான திருமந்திரத்தோடு அறிவியலையும் இணைத்து விஞ்ஞானத்தோடும் கலக்க விரும்புகின்றேன்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே
- திருமந்திரம் 2008வது பாடல்

திருமந்திர பாடலின் மூலமாக அணுவுக்கு அணுவாய்த் திகழும் சிவபெருமானை அணுகுவது கைகூடும் என்ற பொருள் தரும்படி முடித்துள்ளார் திருமூலர்.


இதுவரை மெய்ஞானத்தை பார்த்தோம். இனி விஞ்ஞானத்தின் ஊடாகவும் இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் பல பிரமிப்பான விசயங்களை நாம் உணரமுடியும். அணு என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்களால் ஆனது. அவற்றுள், புரோட்டான் பச்சை நிறத்திலும், நியூட்ரான் சிவப்பு நிறத்திலும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பச்சை நிறத்தில் உள்ள புரோட்டானே பச்சைமால் என்கிற விஷ்ணுவாகவும்,  சிவப்பு நிறத்திலுள்ள நியூட்ரானே சிவனாகவும் கருதினால் மெய்ஞானத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான அறிவியல் சற்று விளங்கும்.



 மேலும் ஹிந்து முறையிலான வழிபாடுகளில் முதல் மூன்று தெய்வங்களாக நாம் பாவிப்பது, பிரம்மா - விஷ்ணு - சிவன் உள்ளிட்ட இம்மூவரைதான். இங்கே பிரம்மா - எலக்ட்ரானாகவும், விஷ்ணு - புரோட்டானாகவும், சிவன் - நியூட்ரானகவும் கருத்தில் கொள்தல்தான் ஒரு புது தெளிவை உண்டாக்குமென தீர்க்கமாக நம்புகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக