18 ஜூன் 2017

தந்தையர் திருநாள் வாழ்த்துகள்!




ஓர் ஆண் தன்னுடைய வாழ்க்கையின் முழுமைத்துவத்தை புரிந்து கொள்ள ஆரம்பிப்பதே, தனக்கென ஒரு குழந்தை பிறந்ததற்கு பிறகு தான்! அதுவரையிலும், எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலின்றி ஊர்சுற்றியாக, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணராமல் ஊதாரியாக இருந்த அனைத்து ஆண்களும், அப்பா என்ற பதவிக்கு வந்தபின்னால் தனக்கான பொறுப்புகளை உணர்ந்து தன்னை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறார்கள்; எதையுமே பொறுமையாக, கவனமாக, ரொம்பவே யோசித்து செயல்படுத்துகிறார்கள். இளமையின் வேகம் குறைந்து, அனுபவமிக்கவராகவும் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட பெருமைகொண்ட மாண்புமிகு அப்பா என்ற பதவியை வகிக்கும் திரு. இரா.சம்பந்த தேவரான என் அப்பாவின் தியாகத்தையும் உழைப்பையும் இந்நாளில் நினைவுகூர்கிறேன்.

தமிழுணர்வு, அரசியல் ஆர்வம், விடுதலைபுலிகள் ஆதரவு, தலைமைத்துவ பண்பு, சிக்கனமாக கையாளுதல், ஆடம்பரமில்லா வாழ்வு, தாய் பாசம், குடும்ப பொறுப்பு, சமுதாய பங்களிப்பு, மற்றவர்களை அணுகும் விதம், நாட்குறிப்பு போலவே கணக்கு வழக்குகளை கையாளும் உத்தி, எளியோரையும் தன் வசப்படுத்தும் குணம், இடர்பாடான சுப/துக்க நிகழ்வுகளை கூட நேர்த்தியாக ஒருங்கிணைக்கும் வல்லமை, பாகுபாடில்லாத பழகும் முறை, நினைவாற்றலுடனான செயல்பாடு, இப்படி எத்தனையோ விசயங்களை இன்னுமும் என் வாழ்நாளில் என் தந்தை திரு. இரா.சம்பந்த தேவரிடமிருந்தே கற்று கொண்டிருக்கிறேன். நான்கு முழ வெள்ளை வேட்டி, முழங்கை வரை மடித்த முழு வெள்ளை சட்டையென்ற தனித்துவ ஆடை அடையாளத்தை அவரது பதின்ம வயதிலிருந்து இப்போது வரை மாற்றியதே இல்லை. அவரது மகன் என்ற பெருமையான ஒற்றை அடையாளத்தை எனக்களித்த இப்பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி!

மேலே சொல்லிருக்கின்ற எந்தவொரு விசயத்தையும் இப்போது வரையிலும் என் அப்பாவிடம் பகிர்ந்து கொண்டதே இல்லை. கூச்சமா? கால இடைவெளியா? பக்குவமின்மையா? இப்படி எது காரணமென தெரியவில்லை. அதனாலேயே வருடாவருடம் இங்கேயே சொல்லி விட்டு, இந்நாளை கடந்து விடுகிறேன். அது பக்தி; பாசம்; பயம்; தலைமுறை இடைவெளி. இப்படி ஆயிரம் அர்த்தம் இருந்தாலும், விலகியே ரசிக்கிறேன் என் அப்பாவை.

இனிய தந்தையர் திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக