16 செப்டம்பர் 2014

அமைச்சருக்கும் அடி சறுக்கும்!

         நாகப்பட்டினத்தை சேர்ந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சரான மாண்புமிகு திரு. கே.ஏ.ஜெயபால் அவர்கள் மீனவர் சமுதாயத்தை சார்ந்தவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விசயம். அதனால் தான் மீன்வளத்துறைக்கு அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார். சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் என்பது ஒரு கடலோர மாவட்டம் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், மீனவ சமுதாயத்தினர் மட்டுமே நாகப்பட்டினத்தில் இல்லை. நாகூரும் - வேளாங்கன்னியும் - சிக்கலும் மதச்சின்னங்களுக்கு அடையாளமாக திகழ்ந்து வருவது நாகப்பட்டினத்திற்கு கிடைத்த பெருமைகளில் ஒன்று. ஏனெனில், இசுலாம் - கிருத்துவம் - ஹிந்து உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட சாதி-மத மக்களும் நாகை மாவட்டத்தை பூர்வகுடியாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால், மாண்புமிகு அமைச்சர் திரு.கே.ஏ.ஜெயபால் அவர்கள், தனது பதவியை பயன்படுத்தி தன்னுடைய சாதி மக்களுக்கு மட்டுமே அனைத்து தரப்பட்ட உதவிகளையும் செய்து வருவது, மாற்று இன-சாதி மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தி வருகிறது.

இன்னும் சொல்லப்போனால், தேர்தலின் போது அவரது சாதி மக்களின் ஓட்டு கூட முழுமையாக அவருக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் தொகுதி மறுசீரமைப்பினால், பெரும்பாலான மீனவ கிராமங்கள் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியின் வரம்புக்குள் இல்லை. ஆனால், 51.20% வாக்குகளோடு மிகப்பெரிய வெற்றியை திரு.கே.ஏ.ஜெயபால் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தது, மாற்று மத-சாதிகளை சார்ந்த வாக்களர்களே. ஆனால், தான் வெற்றி பெற்று அமைச்சரானதும், தன்னுடைய சாதி மக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து விட்டு, மற்ற மத-சாதி மக்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமலே இருப்பது எந்த விதத்தில் நியாயம்? :(

இதையெல்லாம் ஏன் கேட்கிறேனென்றால், நான் உள்பட என் குடும்பத்தினர் அனைவரும் திரு.கே.ஏ.ஜெயபால் அவர்களுக்கு வாக்களித்தோம் என்ற தார்மீக உரிமையில் தான். அன்றைய சோழர்காலத்தில் பெரும்புகழோடு  திகழ்ந்த துறைமுக நகரமான நாகப்பட்டினம் இன்னமும் பழமை மாறாமலேயே இருக்கின்றது. அதுவும், இத்தனை ஆட்சியாளர்கள் வந்தபிறகும் புதுமையென்ற பொலிவே இல்லாமல் பழமையாகியே கிடக்கின்றது என்பதே வருத்தமான யதார்த்தம். மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் தானே உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால், இன்னமும் பாதாளச்சாக்கடை பணிகளால், மாவட்ட தலைநகரின் பிரதான சாலைகள் கூட புதுபிக்கப்படவில்லையே. மேலும், பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட ஏராளமான நலத்திட்ட அறிவிப்புகள் வெறும் அறிப்புகளாக மட்டுமே கிடப்பில் கிடக்கின்றன. இதற்காகவா வாக்களித்தோம்? :(

வழக்கம் போல அடுத்த சட்டமன்றத் தேர்தலின் போதுதானே இந்த சாமானியர்களை தேடி வருவீர்கள். அப்போது, நான் உங்களுக்கு எதிராக வாக்களிப்பேன். இங்கே நான் என்பது நான் மட்டுமல்ல. என்னைப்போன்ற பல சாமானியர்களும் தான். ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக