26 மே 2017

காலா - குறிப்பிடும் குறியீடு என்ன?


கரிகாலனை ஏன் கொன்றார்கள்? யார் தூண்டுதலில் கொன்றார்கள்? என்பதே புரிந்து கொள்ள முடியாத பெரிய கதை. அண்ணன் பிரபாகரனுக்கும் இதே பெயர் உண்டு. கபாலியும், காலனும் அழிக்கும் கடவுளின் பெயர்களே; காலா என்பது கருமையையும் குறிக்கிறது. இப்படிப்பட்ட பல குழப்பத்திற்கு இடையே, அந்த பெயரில் ரஜினியை வைத்து என்ன செய்ய போறாப்ளயோ, 'குறியீடு' ரஞ்சித்?! ஒருவேளை ரஜினி சொன்ன அந்த அக்கப்'போர்' இது தான் போல!

காலா (கரிகாலன்)



மலேசியாவில் தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்து, சீன/தமிழ் தொழிலாளர்களுக்குள் சம்பள முறையில் ஏற்றத்தாழ்வு இருந்ததை எதிர்த்து களம் கண்டவர் தான் அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த தம்பிக்கோட்டையின் 'மலேயா' கணபதி தேவர். நேதாஜி உருவாக்கிய ஐ.என்.ஏ.விலும் பயிற்றுனராகவும் பணியாற்றியவர். பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கியதாகவும், சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கைத்துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்றும் மலேயா கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது. கோலாலம்பூர் நீதிமன்றம் மலேயா கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இவரின் வரலாற்றை ஓரளவுக்கு தழுவித்தான், தலித்திய சிந்தனையோடு 'கபாலி' திரைப்படமாக ஏற்கனவே உருவாக்கினார் பா.ரஞ்சித். அந்த படத்தில் கோட் ஷூட்டெல்லாம் ரஜினி போட்டிருந்தார்.

இப்போது மீண்டும், இந்த போஸ்டரில் ரஜினியை கைலி கட்ட வைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அநேகமாக இதை பார்க்கும் போது, பட்டியல் சாதி மக்களுக்காக தன் சொந்த சாதியான அகமுடையார் பண்ணையார்களையும், பண்ணையடிமை தனத்தையும் எதிர்த்து களம் கண்ட பொதுவுடைமை போராளிகளான வாட்டக்குடி இரணியன் தேவர் மற்றும் மணலி கந்தசாமி தேவரின் போராட்ட வாழ்க்கையைத் தான் கதைக்களமாக உருவாக்கி இருக்கக்கூடுமென நினைக்கிறேன். ஒருவேளை இப்படி இல்லாமல் கூட போகலாம்; ஆனால் அதற்கான தரவுகளை மணலி கந்தசாமி, வாட்டக்குடி இரணியன், ஜாம்பனோடை சிவராமன் போன்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த இப்போராளிகளின் கதையை தழுவித்தான் பொதுவுடைமை தனத்தை திரைப்படமாக்க முடியும்.

(கபாலி படம் தொடங்கப்பட்ட போது கூட, அந்த படத்தின் கதை மலேயா கணபதி தேவரின் கதையை தழுவிய படம் தானென்று ஆரம்பத்திலேயே முகநூலில் பதிவிட்டு இருந்தேன். அப்போது அதை விமர்சித்த பலரும், கபாலி படம் வந்த பின்னால், மலேசியா நாளேடுகளும், மலேசியா தொழிலாளர் போராட்டத்தை பற்றி விவரமறிந்தவர்களும், மலேயா கணபதி தான் 'கபாலி' கதையின் நிஜ ஹீரோ என சொன்ன பின்னரே என் மீதான விமர்சனத்தை நிறுத்திக்கொண்டனர்.)

- இரா.ச. இமலாதித்தன்

#Guess #அகமுடையார்




1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நாக்பூரில், பீம்ராவ் அம்பேத்கர் தனது ஐந்து லட்சம் ஆதரவாளர்களோடு அதிகாரப்பூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். ஆனால் ஹிந்தியாவை பொறுத்தவரை சமணம், பெளத்தம் என்ற எல்லாமே ஹிந்து என்ற ஒற்றை அடையாளத்திற்குள்ளாகவே அடைபட்டு விடும் என்பது இயக்குனர் ரஞ்சித்திற்கு தெரியாமல் இருக்க போவதில்லை. ஆனால், இதிலுள்ள இரண்டு குறியீடுகளை மையப்படுத்தியே ரஜினி + ரஞ்சித் மீண்டுமொரு கூட்டணியில் 'காலா' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

தலித்திய சிந்தனையாளரான ரஞ்சித்திற்கு, மராட்டியரான ரஜினி இரண்டாம் முறையும் கிடைத்திருக்கிறார். ஏற்கனவே அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த 'மலேயா' கணபதி தேவர் என்ற தொழிற்சங்க போராளியின் கதையை ரெஃபரன்சிற்காக உள்வாங்கி, 'கபாலி' என்ற தலித்தியவாதியாக ரஜினியை உருமாற்றி திரைக்கதை அமைத்திருந்தார். இப்போது கடல் கடந்து போகாமல், ஹிந்தியாவிற்குள்ளாகவே கடலோரமாக மும்பை வரை பயணித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். இந்த 'காலா' கதைக்கள பின்னணி, ரஜினியின் பூர்வீக பூமியான மராட்டியத்திலேயே இருப்பதாக போஸ்டரின் மூலம் அறிய முடிகிறது. இங்கேயும் ரெஃபரன்சிற்கு வரதாபாய் என்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த வரதராஜ முதலியாரே ரஞ்சித்தின் தலித்திய கதைக்கருவிற்கு தேவைப்படுவார்.

என்னதான் அம்பேத்கரியம் பேசினாலும் கடைசியில் கபாலி திரைப்படமானது பறையர் இனக்குழுவிற்கான அடையாளப்படம் போல சமூக ஊடகங்களில், அச்சாதியை சார்ந்தவர்களே பரப்புரை செய்தனர். இப்போது மீண்டும் நீலமும், கருப்பும், சிவப்பும் வண்ணக்குறியீடுகளோடு காலாவை வெளிக்கொண்டு வந்தாலும், அது மற்றுமொரு கபாலியின் நீட்சியாகவே சம்பந்தப்பட்ட பலராலும் பரப்புரை செய்யப்படும். இதிலுள்ள சிக்கல் என்னவெனில், மராட்டியரான ரஜினியை மள்ளரியம் பேசும் நபர்களால், கெய்க்வாட் என்ற பட்டம் கொண்ட அவர் சார்ந்த சாதியான குர்மியை, தமிழ் குடும்பர் என்ற பட்டத்தோடு இணைத்து தேசிய அளவிலான மள்ளரியம் பேசத்தொடங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போதைக்கு உலகளாவிய மள்ளரியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு கதை; நிற்க.

ஏற்கனவே மெட்ராஸில் மஞ்சள்Xநீலம் குறியீடு வைத்ததால் வட மாவட்ட இளைஞர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இப்போது பர்ஸ்ட்லுக் போஸ்டரிலேயே, கரிகாலன், சிவப்பு, கருப்பு, அம்பேத்கர், பெளத்தம், மும்பை, தாராவி, மராட்டியம் என பல குறியீடுகள் தென்படுவதால், இனிவரும் விமர்சனங்களையெல்லாம் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை காலம் தான் பதில் சொல்லும். பார்க்கலாம்; காலா வரட்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக