10 நவம்பர் 2016

இனி SC/ST பட்டியலில் முக்குலத்தோர்களா?




தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சீர்மரபினரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் (DNC+MBC) 20 சதவீத ஒதுக்கீட்டில் பலன் பெற்று வருகிறார்கள். அதாவது முக்குலத்தோர் என்று கூறிக்கொண்டே கள்ளர், மறவர்கள் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டிலும் இருக்கிறார்கள் என்பதை பற்றிய விரிவான பார்வையை இங்கே பகிர்கிறோம்.

'சீர்மரபினர் கள்ளர்கள்' பிற கள்ளர்களுக்காகக்கூட இட ஒதுக்கீடு கேட்டு இதுவரை போராடவில்லை. அதுபோலவே 'சீர்மரபினர் மறவர்களும்' பிற மறவர்களுக்காக இட ஒதுக்கீடு கேட்டு, தங்களின் சலுகையை விரிவுபடுத்தி பிற உறவுகளுக்கும் கிடைத்திட போராடியதில்லை. மேலும் 'சோ கால்டு - முக்குலத்தோர்' என்ற வகையில் அகமுடையார்களுக்காக சலுகை பெற்றுவரும் எவரும் இது சம்பந்தமாக குரல் கொடுத்ததில்லை. பிறகு எப்படி 'சோ கால்டு - முக்குலம்' ஓரணியில் இருக்கும்? இருக்க முடியும்? இப்போது சீர்மரபினர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கு ஒரு சதவீத ஒதுக்கீடுதான் உள்ளது. மேலும் பட்டியல் சாதிகளான ஆதி திராவிடர் என்று அடையாளப்படுகின்ற பள்ளர், பறையர், சக்கிலியர் எனப்படுவோருக்கு 18 சதவீத இடஒதுக்கீடும் உள்ளது. மொத்தமாக உள்ள இந்த 19 சதவீத ஒதுக்கீட்டில் தான், சீர்மரபினரும் சேர முயற்சிக்கிறார்கள்.

சீர்மரபினர் பட்டியலில் யாரையும் சேர்க்கவோ எடுக்கவோ அரசுகளுக்கு அதிகாரமில்லை. இப்போது வன்னியர்களுடன் (எம்.பி.சி. + டி.என்.சி) இடஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் இருக்கும் சீர்மரபினர் பட்டியலில் உள்ள கள்ளர், மறவர்கள் இனி தலித் எனப்படும் பள்ளர், பறையர், சக்கிலியருடன் இட ஒதுக்கீட்டில் இருக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள். ஏற்கனவே இருந்துவரும் இடஒதுக்கீட்டில் முக்குலத்தோர் எல்லாரும் ஒரே இனமாக ஏற்கப்படவில்லை. 1995ல் தமிழக அரசால் போடப்பட்ட "தேவர்" அரசாணை நடைமுறைக்கு வரவே இல்லை. ஒட்டுமொத்த அகமுடையார்களும், பெரும்பான்மையான கள்ளர்களும், சில பகுதி மறவர்களும் இன்னும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்தான் இருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டில் தங்களுடன் பிற முக்குலத்தோர் இருக்க, சலுகை பெற்றுவரும் பிற முக்குல பிரிவினர் விரும்பாததால் இன்னும் முக்குலம் என்பதில் நம்பிக்கையற்று இளைஞர் சமுதாயம் தனித்தனிப்பிரிவாய் பிளவு படத்தொடங்கிவிட்டதை மருது பாணடியர்கள், பசும்பொன் தேவர், இராசராச சோழன் விழாக்களில் காணமுடிகிறது. இதன் அரசியல் பின்னணி புரியாத முக்குல அமைப்புக்களின் தலைமைகள், தலையாரி வீட்டில் தஞ்சமடையும் பழமொழியை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இனி முக்குலத்தோர் எனும் சொல் அவமானப்படுத்தப்படுவதும் கேவலமாக பார்க்கப்படுவதும் நடக்கும் என நம்பலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக