13 நவம்பர் 2016

கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் அண்டை நாட்டு பயங்கரவாதிகளின் கோபத்தை, கோடி கணக்கில் கருப்பு பணமாக பதுக்கி வைத்திருக்கும் இந்நாட்டு அரசியல்வாதிகளின் அறசீற்றத்தால் உணர முடிகிறது. பொதுவாக கேட்கிறேன்; வாழ்நாளில் எந்தவொரு நிலையிலும், யாரும் கூட்டமாக வரிசையில் நின்றதே இல்லையா என்ன? தனக்கு பிடித்த நடிகரின் படத்தை பார்க்க சொந்த காசை செலவழித்து தியேட்டர் வாசலில் மணி கணக்கில் வரிசையில் நின்று, 30ரூ டிக்கெட்டை 300ரூபாய்க்கு வாங்கியவர்களும் இங்கே உண்டு.

தன் மகன்/மகள்களின் அட்மிசன்களுக்காக பள்ளி/கல்லூரி வாசலில் தவம் போல காத்துக்கிடந்து, லட்ச கணக்கில் லஞ்சம் கொடுத்து கருப்பு பணத்திற்கு அடிகோலிட்டவர்களும் இங்கே உண்டு. இண்டர்நெட்/கால் அனைத்தும் இலவசம் என்று சொன்ன உடன் ஜியோ சிம் வாங்க, கால் கடுக்க ஒவ்வொரு செல்போன் கடை வாசல்களிலும் இரவுபகலாக காத்திருந்து, செக்யூரிட்டிகளிடம் கெஞ்சி கூத்தாடியவர்கள் இங்கே உண்டு. ரேஷன் கடையில் மாதமொரு முறை இலவச அரிசி வாங்கவோ, மானிய விலையில் மண்ணெணய், சக்கரை, பருப்பு வாங்கவோ பெரிய வரிசையில் நிற்பவர்கள் இங்கே உண்டு.சொந்த பணத்தை டெபாசிச் செய்ய கூட மணி கணக்கில் வரிசையில் நிற்க வைக்கும் எத்தனையோ வங்கிக்கிளைகள் இங்கே இருக்கின்றது. அப்போதெல்லாம் மக்கள் படும் அவதி பற்றி, கோபம் வரவில்லை இந்த அரசியல்வாதிகளுக்கு.

இன்றைக்கு தொலைக்காட்சி விவாதங்களில் பொங்கும், எந்தவொரு அரசியல்வாதிக்கும் பினாமியே இல்லையென்று சொல்ல முடியுமா? இதுவரையிலும் வரி ஏய்ப்பு செய்ததே இல்லையென்று சொல்ல அவர்களுக்கு அருகதை இருக்கிறதா? ஊரை ஏமாற்றி மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்து அரசுக்கு சேர வேண்டிய வரியையும் ஆடிட்டிங் மூலமாக ஏமாற்றி கருப்பு பணமாக வைத்திருக்கும் அரசியல்வாதிகளே பெரும்பான்மையாக இருக்கின்றனர். எவனும் மக்கள் சேவையாற்ற அரசியலுக்கு வரவில்லை. புகழ்/ பதவி/ பணம்/ பாதுகாப்பு போன்ற தன் சுயநலத்திற்காக தான் அரசியல்வாதியாய் அவதாரம் எடுக்கின்றனர் என்பது தெளிவு.

எனவே, மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர் என ஆடு நனைவதற்காக ஓநாய் அழுகின்ற கதை போல, நீலிக்கண்ணீரை ஏன் வீணாய் விடவேண்டும்? முதலில் போய் வரியை ஒழுங்காக செலுத்தி, பதுக்கி வைத்திருக்கும் பினாமி சொத்துகளை வெள்ளையாக்க முயற்சி செய்யுங்கள். மக்களின் கஷ்டம் இன்றைக்கு தான் புதிதாக உங்களுக்கு தெரிகிறதா? காலம் முழுக்க காத்து கிடந்தே வாழ பழகிவிட்டோம். எங்கள் வலியை நாங்கள் தாங்கி கொள்கிறோம். இதை வாய்ப்பாக பயன்படுத்தி, உங்கள் அரசியலை எங்கள் முதுகில் ஏற்றாதீர்கள்.

பாதிக்கப்படும் வணிகர்கள்:

மனசாட்சியுள்ள ஒரு சிறு/குறு வணிகர், தன்னுடைய வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்க, பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளை வாங்கிக்கொண்டு வியாபாரம் செய்வதாக வைத்துக்கொள்வோம். அவரிடம் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ 4,000க்கு குறையாமல் பழைய ரூபாய் நோட்டுகள் இருக்கக்கூடும். அவரிடம் கைகளில் இருப்பது பத்து விரல்களுக்கு பதில் பனிரெண்டு விரல்கள் இருப்பதாக கணக்கில் கொண்டால் கூட, எத்தனை நாட்களுக்கு அவரது விரல்களுக்கு வங்கி ஊழியர்கள் மை வைப்பார்கள்?

சீப்பை ஒளித்து வைத்தால், கல்யாணம் நின்று விடுமா என்ன? இப்படி முட்டாள்தனமான யோசனைகளை கொடுத்து, இப்போதிருக்கும் இக்கட்டான சூழலில் அரசிற்கு மேலுமோர் அவப்பெயரை வாங்கி தருவது யார்? இன்னும் ஒரு வாரத்திற்கு ஊடகங்கள் இந்த பணப்பிரச்சினை பற்றி விவாதங்களோ, நேரடி பேட்டியோ, ப்ளாஷ் நியூஸ் என எதையாவது சொல்லி மக்களை பதற்றப்படுத்தி பயமுறுத்தாமல் இருந்தாலே போதும். பாதி பிரளயம் முடிவுக்கு வந்துவிடும்.

எதார்த்தம்:

அம்மாவா? ஐநூறு - ஆயிரமா? என கேட்கவே தேவையேயில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக அப்பல்லோ வாசலை கோவிலாக மாற்றி மண்சோறு / ஹோமம் என காவடி எடுத்த கும்பலெல்லாம், அப்பல்லோவை அநாதையாக விட்டுவிட்டு இரு நாட்களாக பேங்க் வாசலில் நிற்கிறது. இதுதான் எதார்த்தம். யாரும் அடிமைகள் அல்ல; எல்லோரும் காரிய கிறுக்கர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக