12 ஜூன் 2016

ஆன்மீகம் எதுவென உணருங்கள்!

நம் எண்ணங்களுக்கு அபூர்வமான ரகசிய சக்தி உண்டு. நாம் எதை நோக்கி அதிகம் கவனம் செலுத்துகிறோமோ, அது நம்மருகே எந்த முயற்சியுமே இல்லாமல் கவர்ந்திழுக்கப்படும். எதை அதிகமாக சிந்திக்கிறாமோ அது தொடர்பான அனைத்தும் நமக்கு வசமாகும். அதற்கு முதன்மையான அடிப்படை தகுதி, நம்பிக்கை மட்டுமே. ஒரு விசயம் கிடைக்குமென நம்பி, அதை கேட்டால், அதை நாம் நிச்சயம் பெற முடியும். இங்கே அதை யாரிடம் கேட்பது என்பதில் குழப்பம் வந்தால், ஒரு கருங்கல்லிடம் கூட கேட்கலாம். ஆனால் சந்தேகமில்லாமல், கேட்க வேண்டும்; கிடைக்குமென்ற ஒற்றை நம்பிக்கையோடு கேட்க வெண்டும். நிச்சயம் அது கிடைத்தே தீரும். தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த பரம்பொருள் நமக்காக வரங்களை கொடுக்க காத்திருக்கிறது. ஆனால், நாம் தான் அதை கவனிக்க தவறிக்கொண்டிருக்கிறோம்.

அந்த பரம்பொருளானது, எந்த மதத்தினாலும் காப்புரிமை வாங்கப்பட்டு, எவராலும் உருவாக்கப்பட்ட இறைவனல்ல. அது இயல்பாகவே நம்மை சூழ்ந்திருக்கும் ஒட்டுமொத்த 'பிரபஞ்சம்' தான். பல்லாயிர கிரகங்கள் உட்பட பலநூறு சூரிய சந்திரன்களையும் பால்வெளியில் பேரண்டமாய் சுமந்திருக்கும் அந்த ஒற்றை கூரையான பிரபஞ்சமே பேரம்பலம். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்பது போல, நம்முள்ளுள்ள உள்ளொளியும் கடவுள் தான்; அந்த கடவுளே சிற்றம்பலம். இதை புரிந்தாலே பரம்பொருள் ரகசியம் எளிதாக நம் சிற்றறிவுக்கு அம்பலமாகி விடும். அதன் பின்னால், அந்த அருட்பெரும் ஜோதியோடு உறவாடி, நாமே கடவுளாகலாம்.

தாய்மொழியில், தமிழ்மொழியால் உரையாட தெரியாதவன் கடவுளாகவே இருக்க முடியாது; அவனை கடவுளென சொல்ல தகுதியுமில்லை; அவன் கடவுளாக இருக்க வாய்ப்புமில்லை. எனவே, சிற்றம்பலமும் - பேரம்பலமும் உறவாடும் போது, அங்கே அரபியோ, ஹீப்ருவோ, சமகிருதமோ எதுவும் தேவையில்லை. ஏனெனில் கடவுளுக்கென மொழியுமில்லை; கடவுளை தொடர்பு கொள்ள மொழியும் தேவையில்லை. "அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லாகி யாங்கு" என்ற திருக்குறளின் வரிகளுக்கேற்ப, பொருளோடு அருளையும் சேர்த்து பேரம்பலத்தானோடு சரணாகதியடைந்து, நீங்களும் கடவுளோடு கடவுளாக ஐக்கியமாகுங்கள். இறைத்தூதர் என்ற யாரையும் கடவுளாக்கி கடைசி வரையில் கடைக்கோடியிலேயே காலம் தள்ளாதீர்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக