18 பிப்ரவரி 2017

நேற்று வரை தோழி, இனி சின்னம்மா!?

அ: சசிகலா தமிழச்சி; அதனால் ஆதரிக்க வேண்டும்;

இ: அப்போ பன்னீர்செல்வம் யார்? அவரும் தமிழன் தானே?

அ: இல்லை இல்லை; பார்பன பிடியில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.

இ: சுப்ரமணிய சுவாமி என்ற பார்பனர், சசிகலாவை ஆதரித்து ஆளுநரிடமே பேசிக்கொண்டிருக்கிறாரே? அப்போது சசிகலா யார் பிடியில்?

அ: அதெல்லாம் விடுங்க; எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் சசிகலா பக்கம் தான்.

இ: ஆனால், சாமானிய தொண்டர்கள் 95% க்கு அதிகமானோர் ஓ.பி.எஸ்/தீபா பக்கம் தானே இருக்கின்றனர்?!

அ: அது பாஜக, திமுக கட்சிகளோட சதி.

இ: இந்த கன்றாவியையெல்லாம் பார்க்கணும்ங்கிறது எங்க விதி!


இப்படியாக கடந்து கொண்டிருக்கிறது சமகால அரசியல் நகர்வுகள்; டிசம்பர் 5ம் தேதி முதல்வராக இருந்த ஒரு நடிகை மறைந்தார். மிகச்சரியாக இரண்டே மாதங்களில், பிப்ரவரி 5ம் தேதி நடிகையின் தோழி ஒருவர் முதல்வராக உருவெடுக்க ஆயத்தமானார். அதற்குள்ளாக இத்தனை அரசியல் குழப்பங்கள் அரங்கேறி விட்டன.

சாதி அரசியல்:

இதற்கிடையில் இன்னமும் சாதி சாயத்தில் மூழ்கி கிடக்கும் கூட்டத்தினர், சசிகலாவை கள்ளராக முன்னிலைப்படுத்தி பெருமிதம் கொள்கின்றனர். ஆளும் தகுதியை கொடுத்த அதிமுகவின் ஆட்சி அதிகாரத்தை கொண்டு தமிழகத்தை நிர்வகிக்கும் தலைமை யாரென விமர்சிப்பதில் என்ன அவதூறு இருக்கிறதென தெரியவில்லை. இன்னுமா முக்குலத்தோர் என்று இல்லாத சாதியின் பெயரால் கண்டவர்களையெல்லாம் தூக்கி பிடிக்கிறீர்கள்?

தன்னுடைய சாதிக்காரன் எது செய்தாலும் சரியென நினைத்து, அதற்காக குருட்டுத்தனமாக முட்டுக்கொடுக்கும் மனப்போக்கை மாற்ற முயலுங்கள். (என்னுடைய சாதிய பார்வையே வேறு.) சாதியை வைத்து மட்டுமே சமகால அரசியலில் எதையும் சாதித்து விட முடியாது என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி ஒரு தற்போதைய சான்று. ஒரு குறிப்பிட்ட சாதிகளின் விளையாட்டென அரசியல் செய்தவர்களின் சதியை முறியடித்தது நீங்கள் பெருமைப்படுகின்ற எந்தவொரு தனிப்பட்ட சாதியும் இல்லையென்ற எதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அதிமுகவை விமர்சிக்கும் அளவுக்கு திமுகவை விமர்சிப்பதில்லையென சிலர் அடிக்கடி குறை கூறுகிறார்கள்; ஆள்பவர்களை தான் விமர்சிக்க முடியும். அதனால் பாஜக, அதிமுக என அதிகாரத்தில் உள்ளவர்களின் தவறை சுட்டிக்காட்டி விமர்சிக்கிறோம். சீமான், ஸ்டாலின், கருணாநிதி, தா.பாண்டியன், மோடி, ஜெயலலிதா என அனைவரையும் பாராட்டியும், கண்டித்தும் அந்தெந்த சூழலுக்கேற்ப விமர்சித்து இருக்கிறோம். இனியும் தொடரும்...

அப்பல்லோ - பத்திரிகையாளர் சந்திப்பு:

ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியதாக அவர்கள் ஒத்துக்கொண்டதே ஒருவகையில் உண்மையை அவசர அவசரமாக உளற தொடங்கிருக்கிறார்களோ என சிந்திக்க வைக்கிறது. ரிச்சர்ட் பீலே சொல்லிருக்கும் எல்லா விளக்கங்களும், ஏற்கனவே பலராலும் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக திண்ணையில் எழுதிக்கொடுத்த கடிதம் போலவே தோன்றுகிறது. மேனாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து சரியாக இரண்டு மாதங்கள் கழித்து, அவரது தோழி அதே முதல்வர் பதவியில் அமரும் வேளையில் அப்பல்லோ நிர்வாகம் திடீரென கோமா நிலையிலிருந்து சுயநினைவுக்கு திரும்பிருக்கிறது; தவளையும் தன் வாயால் கெடும்! என்பது போல அப்பல்லோவும் அதனை பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் கும்பலும் கெடும்.

இந்த அப்பல்லோ பத்திரிகையாளர் சந்திப்பு கலந்துரையாடல்களை உற்று கவனிக்கும் போது, 'பாபநாசம்' படம் தான் நினைவுக்கு வருகிறது. மீண்டுமொருமுறை கமல்ஹாசன், முன்கூட்டியே நடக்கவிருக்கும் நிகழ்வை படமாக்கி இருக்கிறாரோ என எண்ண வேண்டிருக்கிறது. 2000ம் ஆண்டு 'ஹேராம்' படத்தில் குஜராத் கலவரத்தை முன்னதாகவே காட்சிப்படுத்திருப்பார். 2003ல் 'அன்பே சிவம்' படத்திலேயே சுனாமி பற்றி பேசிருப்பார்; 'தசாவதாரம்' படத்தில் எபலோ வைரஸ் பற்றி முன்னதாகவே சொல்லிருப்பார். அந்த பட்டியலில் இப்போது பாபநாசமும் சேர்ந்திருக்கிறது.

எதிரணியில் ஓ.பி.எஸ்.:

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜெ. அணி, ஜா. அணி என இரண்டாக பிளவுப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, சசி அணி, தீபா அணி, ஓ.பி.எஸ். அணி என மூன்றாக பிளவுபட்டு நிற்கிறது. போற போக்கை பார்த்தால், ஜெயலலிதா பிறந்த நாளன்று ஜெ.தீபா தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்கிவிடுவார் போல; ஊரே அந்த கும்பலை நடிப்பதாக கழுவி ஊற்றுகிறது; ஆனால் அந்த கும்பலோ, ஓ.பி.எஸ் நடிப்பதாக சொல்கிறது, தங்கள் கட்சியின் தலைமையே நடிகர்கள் தான் என்பதை மறந்து! போயஸ் கார்டனை, 'அம்மாவின் இல்லம்' என இரண்டொருமுறை அழுத்தம் திருத்தமாக ஓ.பி.எஸ் சொன்னதில் கூட ஏதோவொரு செய்தியை அதன்பின்னால் மறைமுகமாக சொல்லிருக்கிறாரோ என தோன்ற வைக்கிறது.

”சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என உலகின் எல்லா பகுதியிலிருந்தும் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தரச்சொல்லி தொடர்ச்சியாக என்னுடைய செல்போனுக்கு அதிக கால்கள் வருகிறது. அவர்கள் நிறைய செலவு செய்து, வாட்சப், பேஸ்புக் மூலமாக ஒரு பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி பலரும், ஓ.பி.எஸை ஆதரிக்க சொல்கிறார்கள்.” என தந்தி தொலைக்காட்சியின் 'கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியன் இப்படி சொல்கிறார். அந்த பெரிய நெட்வொர்க், தானா சேர்ந்த கூட்டம். அதுவும் ஜியோவால் சேர்ந்த கூட்டம் என்பதை சசிகலா குடும்பத்தின் ஆதரவாளரான  அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை போல. :)

சசிகலாவின் அவசரம்:

ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆர்வத்தை ஊட்டியதே நான் தான் என்று சசிகலா சொல்லிருக்கிறார். ஊட்டியது, அரசியல் ஆர்வத்தையா? இல்லை ஆகாரத்துல விசத்தையா?ன்னு மக்கள் கேட்கிறார்கள். நல்லவேளை இந்த கொடுமையையெல்லாம் கேட்க ஜெயலலிதா இப்போது உயிரோடு இல்லை.

பொதுச்செயலாளர் பதவிக்கே தகுதி இல்லையென கட்சி விதிகள் சொல்கின்றன; அதற்குள்ளாக, அவைத்தலைவர், பொருளாளர் என சக பெருந்தலைமைகளில் உள்ளவர்களையே நீக்கினால் யாருக்கும் லாபம்? ஒட்டுமொத்த தொண்டர்களில் 99% பேர் தற்காலிக பொதுச்செயலாளருக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட முடியுமா? இன்னும் சொல்லப்போனால், கட்சி விதிகளின் படி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. அவசர அவசரமாக, தவறான வழிகாட்டுதலால், மிகத்தவறான முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆத்திக்காரனுக்கு புத்தி மட்டும் என்பது போல, தான்தோன்றித்தனமாக அந்த கூடாரத்திலுள்ள பலரும் பலதரப்பட்ட முடிவுகளை எடுப்பதால் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் முதன்மை காரணம்; தங்க முட்டையிடும் வாத்தை கொன்ற பிறகு அதன் மூலம் இத்தனை வருடங்களாக கிடைத்த லாபம் மட்டும் எப்படி இனி கிடைக்கும்?

ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதை பற்றி அவரே முடிவு செய்வாரென அப்பல்லோ ரெட்டி சொன்னதை ஏற்றவர்கள், ஆளுநர் ராவை மட்டும் எதிர்ப்பது ஏன்? அவரே முடிவு செய்யட்டுமே?! 75 நாட்கள் அப்பல்லோவில் நடந்ததும் தெரியவில்லை; 5 நாட்களாக கூவத்தூரில் நடப்பதும் தெரியவில்லை. இதையெல்லாம் பொறுமையாக மக்கள் வேடிக்கை பார்க்கவில்லையா? அவ்வளவு ஏன் அவசரம்?

”ஜெயலலிதாவின் சடலம் தான் அப்பல்லோவிற்குள் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே ஜெயலலிதா இறந்து விட்டார்; அவர் இறந்த பிறகு தான் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார்; அவரது உடலை பதப்படுத்தப்படுத்தவே கன்னத்தில் மூன்று துளைகள் இடப்பட்டன” என அப்பல்லோவில் பணிபுரிந்த ராமசீதா சொல்லிருக்கிறார். அப்படியெனில் இதில் பலர் கூட்டு களவாணிகளாக இருந்திருக்கின்றனரோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆனால் இதுவரையிலும் அதைப்பற்றி யாருமே வாயை திறக்காமல் கள்ள மெளனம் காக்கின்றனர் என்பது கூட மிக அழுத்தமான சந்தேகங்களை அனைவரது மனதிலுள் எழுப்பி வருகிறது.

கூவத்தூர் கூத்து:

"நாங்க ஜாலியா இருக்கோம்!"ன்னு சொல்கின்ற பன்னாடைகளில் ஒன்றிரெண்டாவது ஆளே காலியாகி பாடையில் தான் போகுமென தோன்றுகிறது. நீங்க குடியும், குடித்தனமாக கூவத்தூரில் கூத்தடிக்கத்தான் வாக்களித்தோமா? நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல சுற்றுச்சூழல் இவையெல்லாம் அந்த ஸ்டார் ஹோட்டலில் மட்டும் தான் கிடைக்கிறதா? தமிழ்நாட்டில் வேறெங்கும் கிடைக்காதா? ஊர்க்காரனுக்கே யாரென தெரியாதவனையெல்லாம், ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக அடையாளம் காட்டியதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம். கூவத்தூரில் குதூகலமாய் கும்மியடித்து கொண்டிருக்கும் இந்த அரசியல் பொறுக்கிகளெல்லாம், தன்னுடைய தொகுதிக்குள் செல்லும் போது, கண்டிப்பாக அடையாளம் தெரியாதவர்களால் செருப்படி வாங்குவார்கள்.
130 எம்.எல்.ஏ.க்களுக்கும் தங்களுக்கு வாக்களித்த அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் எண்ணம் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், காசுக்காக கூத்தாடி கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கே அவமானமாக இருக்காதா? மானங்கெட்ட அரசியலின் உச்சம் இது. த்தூ!

குடியும், குடித்தனமாக தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த பேரம் என்ற போதை இரண்டு நாட்கள் கடந்தும் தெளியவில்லை. கறிக்கடையில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளுக்கும் கூட இலைதழையென கவனிப்பு அதிகமாகவே இருக்கும்; ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் அந்த ஆடுகளெல்லாம் மட்டன் பீசுகளாக மேலே தொங்கவிட பட்டிருக்கும். இதுதான் இன்றைக்கு கூவத்தூரில் கூத்தடித்து கொண்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களும் விரைவில் நடக்கவிருக்கிறது. ஆனால், இந்த அரசியல் செம்மறி ஆடுகளை தோலுரித்து தொங்கவிடப்பட போவது, அந்த கூடாரமா? இல்லை; மக்கள் அதிகாரமா? என்பதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

இனி குடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்:

அனைத்து திறமையுமுள்ள தினகரனுக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும். அந்த பதவிக்குரிய அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு. ஜெயலலிதாவிற்கு அரசியலில் அடைக்கலம் கொடுத்த சசிகலாவையே வழிநடத்திய தினகரனே முதல்வராக வேண்டுமென்ற கோரிக்கைகளும் விரைவில் எழும். ஊசாலுடும் இந்த உயிருக்கு நிறைய செலவழித்து இன்று தற்காலிக சுவாசத்தோடு இயங்க வைக்கப்பட்டுள்ளது; நிரந்தரம் என்பதே இங்கில்லை, நிரந்தர பொதுச்செயலாளர் போல; இனி ஒவ்வொரு நாட்களும் எண்ணப்படும், கூடவே ஜாலியாக இருந்த 124 தலைகளையும் தான்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக