14 நவம்பர் 2013

இனி தேவரின அரசியல் எப்படி இருக்க வேண்டும்?



இன்றைக்கு நம்மினத்தவர்கள் பலரை நாம் மிகக்கடுமையாக விமர்சிப்பதற்கு ஒரே காரணம் வேறொரு சாதியோடு கூட்டணி வைத்ததால்தான் என்பது மற்ற எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால் என் கேள்வி,

மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தல் தடை மற்றும் ஸ்ரீ தேவர்ஜெயந்தி தடை, முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுசுவர் இடிப்பு, போலி என்கவுண்டர் துப்பாக்கிச்சூட்டில் பிரபு - பாரதி - குமார்  கொலை, திருநெல்வேலியில் மாமன்னர் பூலித்தேவன் நினைவேந்தலுக்கு தடை, திருநெல்வேலி - இராமநாதபுரம் - சிவகங்கை உள்பட பல மாவட்டங்களுக்கு 144 தடை, இதையெல்லாம் செய்வது யார்?

இந்த திராவிட அரசியல் தானே தமிழனையும், தமிழனென்ற அடையாளத்தையும் மறைமுகமாக அழித்து வருகின்றது. சாதி என்றோ தலைவன் என்றோ - எந்தவிதத்திலும் தமிழன் ஒன்றுபட்டுவிட கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, தமிழனின் ஒவ்வொரு அடையாளத்தையும் ஒவ்வொன்றாக சிதைப்பது இந்த இல்லாத திராவிடத்தின் கேவலமான அரசியல் தானே? அந்த தீரா விடமான திராவிடத்தை அழிக்கவும், நம் பண்பாட்டு அடையாளத்தை காக்கவும், எந்த தேவரின அமைப்பு அரசியலில்  நேரடியாக களம் காண முயற்சி எடுத்துள்ளது?

நம் தேவரின அமைப்புகள், இல்லாத திராவிடம் என்ற மாயையை நம்பி, அந்நியர்கள் ஆளுமை நிரம்பிய திராவிட கட்சிகளான திமுகவிடமும் - அதிமுகவிடமும் தேர்தல் சமயத்தில் தஞ்சம் புகுந்தன என்பது கடந்தகால வரலாறு மட்டுமல்ல நிகழ்காலத்திலும் அதுவேதான் தொடர்கிறது. அப்படிப்பட்ட திராவிட கட்சிகளிடம் ஓரிரு தொகுதிகளுக்காக தானே, நம் தேவரின அமைப்புகள், நம்முடைய எண்ணிக்கையை காரணம் காட்டி, நம்மையும்  -  நம் வாக்கினையும் - நம் மானத்தினையும் அடகு வைத்திருந்தன.

பெரும்பான்மையான சமூகமாக தேவரினம் இருந்த போதும், ஓரிரு தொகுதிகளுக்காக இன்னமும் திராவிட மயக்கத்தில் இருக்கும் தேவரின அமைப்புகள், தைரியமாக தனித்து தேவரின அரசியல் செய்ய களம் காணவில்லையே ஏன்? தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் - 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. எல்லா தொகுதிகளிலும் தனித்து நிற்பது என்பது விழலுக்கு இறைத்து நீர்போல வீண் தான். எனவே, காலமறிந்து - களமறிந்து நிச்சயமாக வெற்றிவாகை சூடக்கூடிய தேவரினத்தவர்கள் அதிகம்வாழும் தொகுதியை தேர்ந்தெடுத்து, தேவரின அமைப்புகள் தேர்தலை சந்திக்கலாமே?

ஏற்கனவே, தேவரின அமைப்புகள் தனித்து நின்று தோல்வியை சந்தித்திருக்கலாம். அது பெரியவிசயமல்லவே. தோல்வியே சந்திக்காமல் அரசியல் நடத்த அனைத்து தேவரின தலைவர்களும், ஸ்ரீ பசும்பொன் முத்துராமலித்தேவர் கிடையாது என்பதுதானே எதார்த்தம். பெயரளவில் மட்டும் அடைமொழியாக "வாழும் தேவர்" யென்று சொல்லி பெருமைப்பட்டு கொள்ளலாமே தவிர, ஒருபோதும் தேவரைப்போல யாரும் ஆகிவிட முடியாது. ஏனெனில், பசும்பொன் ஸ்ரீ தேவருக்கு நிகர் தேவர் மட்டுமே; வேறு யாரும் இதுவரை தோன்றவும் இல்லை, இனி தோன்றப்போவதுமில்லை.

தேர்தலில் தோல்வியை சந்திப்பதால் கிடைக்கும் அனுபவங்கள் நம்மை இன்னும் பக்குவடுத்த வேண்டுமே தவிர, ஒருபோதும் தளர்ச்சியை ஏற்படுத்திவிட கூடாது. தன்னைத்தானே "ஒட்டுமொத்த தேவரினத்தின் ஒரே தலைவர்" யென்று பிரகனபடுத்தி கொள்வதில் உள்ள கவனம், தேர்தல் சமயத்திலும் இருக்க வேண்டுமல்லவா?

ஒருவேளை தனியாக அரசியலில் களம் முடியாத பட்சத்தில், வழக்கம்போல அக்டோபர் மாதம் மட்டும் மாமன்னர் மருது பாண்டியர் நினைவேந்தலுக்கும், தேவர் ஜெயந்திக்கும் சிறப்பாக எதையாவது செய்துவிட்டு மற்ற 11 மாதங்களும் ஓய்வெடுத்து விடலாமே. அப்படியும் செய்ய முன்வரவில்லை. அப்பறம் ஏன் தேர்தல் சமயத்தில் மட்டும் ஜெயலலிதாவையோ - கருணாநியையோ சந்திக்க மெனக்கெட்டு கொண்டிருக்கிறீர்கள்?

திராணி இருந்தால், உங்களது சொந்த ஊரை உள்ளடக்கிய ஒரு தொகுதியிலாவது தனித்து நின்று வெற்றி பெற முயற்சிக்கலாமே? இல்லையெனில் தேவரின மக்கள் அதிகமாக வாழும் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து, அங்கே தனித்து நின்று வெற்றியடையலாமே? என்னதான், திராவிட கட்சிகளிடம் கைக்கட்டி நின்றாலும், ஓரிரு தொகுதியைத்தானே ஒதுக்க போகிறார்கள். மண்ணின் மைந்தர்களான பெரும்பான்மை தேவரின மக்களின் கட்சி எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதை திராவிடம் என்ன நிர்ணயிப்பது? பெரும்பான்மையான ஓட்டுவங்கியை கொண்டுள்ள தேவரினமக்களின் அரசியலை, தேவரின அமைப்புகள் கையில் எடுக்க ஆளுமை இல்லாதவரை திராவிடத்தின் காலில் விழுந்தே கிடக்கவேண்டும் என்பதே நியதி.

தமிழ் சாதிகள் எப்போதுமே ஒன்றுபட்டு விட கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருக்கும் திராவிடத்தை முதலில் வேரறுக்க வேண்டும். தமிழ் சாதிகள் ஒன்றுபட்டு விட்டால், திராவிடம் என்ற மாயை செல்லாக்காசாகி விடும் என்பது திராவிட கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால், திராவிடத்தை எதிர்ப்போரை, 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் தற்காலிகமாக ஆதரிக்கலாம். பிறகு தேவரின அரசியலில் நம்மை வலுப்படுத்திக்கொண்டு, இரு எதிரிகளோடும் நேரடியாக மோதிப்பார்க்கும் விதமாக, தனியாகவே தேர்தலை சந்திக்கலாம். எது வசதி என்பது தேவரின அமைப்புகளின் கையில்தான் இருக்கிறது. அதை விட்டுவிட்டு, நமக்குள்ளாகவே சண்டையிட்டு முட்டிமோதி கிடப்பது ஒட்டுமொத்த தேவரினத்தின் ஒற்றுமைக்கு களங்கத்தை தான் ஏற்படுத்துமே தவிர ஒருபோதும் எந்தவித பெருமையையும் தந்துவிடாது.

ஏனென்றால், எதிரிகளை விட துரோகிகளாலே வீழ்த்தப்பட்ட இனம் தேவரினம் என்பதற்கு எடுத்துக்காட்டே ஸ்ரீ பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவரும் - மாமன்னர் மருது பாண்டியர்களும் தான் என்பது நமக்கு தெரிந்த வரலாறு. எனவே, கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒன்றுபட்டு அரசியல் செய்வோம்! அரசையும் அதிகாரத்தை கைப்பற்றுவோம்!

- இரா.ச.இமலாதித்தன்

தேவருக்கு முதுகளத்தூர் முடிவல்ல!

மதிப்புரைப் பகுதியில் பழ. அதியமான் முன்னுரைச் செய்தியாகத் தந்துள்ள தகவல்கள் பொருத்தமானவை அல்ல. 1957 செப்டம்பர், 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் தேவர் “மறவர்” சார்பாகக் கலந்துகொள்ளவில்லை. இது ஒரு சாதிக் கலவரம் என்று காட்டுவதற்காக, காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் பெருந்தலைவர் காமராசரின் அரசாங்கமும் செய்த சூட்சுமமான உபாயங்களைப் புரிந்துகொண்ட தேவர் “நான் இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் கலந்துகொள்கிறேன்” என்று தெளிவுபடுத்துகிறார்.

“இன்று நடப்பது அரசியல்ரீதியான பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் அமைதிப் பேச்சுவார்த்தை; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, கையொப்பம் இட்டு அறிக்கை கொடுப்பதே பொருத்தம்; நாளைக்குப் பொதுப் பேச்சுவார்த்தை என்று கூட்டி அதில் யார் யார் அக்கறையும் ஆர்வமும் கொள்கிறார்களோ அவர்கள் எல்லாரும் கையொப்பம் இடுவோம்; அறிக்கை கொடுப்போம்” என்பதே தேவரின் நிலைப்பாடாக இருந்தது.

அன்று நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தின் ஆவணமும் வழக்குமன்றத்தில் தேவர் அளித்த வாக்குமூலமும் இதனை உறுதிப்படுத்துகின்றன. உண்மைகளும் நடந்த நிகழ்ச்சிகளும் இவ்வாறு இருக்க, நூல் மதிப்புரையில் ஆசிரியர், “மறவர்கள் சார்பாக முத்துராமலிங்கத் தேவர் கலந்துகொண்டார்” என்று எப்படி எழுதினார் எனத் தெரியவில்லை. நூலாசிரியருக்குச் சார்பு நிலை இருக்கலாம்; சார்புநிலை இருப்பதால் தானே ஒரு நூலை எழுதுகிறார். ஆனால், மதிப்பீடு செய்கிறவருக்கு ஏன் சார்புநிலை? அல்லது ஏன் கவனமின்மை?

முதுகுளத்தூர் கலவரம் பற்றி, ஒருசார்பான நூல்களும் கருத்துகளுமே வந்துகொண்டிருக்கின்றன. இவை உண்மையை வெளிக்கொணரும் முயற்சியாக இல்லை. முதுகுளத்தூர் கலவரம் குறித்து எழுதும் போதெல்லாம் தேவரை விமர்சித்து, சாதித் தலைவர் என்று சாயம்பூசி, தவறான அடையாளங்களைக் காட்டுவதால் கலவரத்தின் சரியான பின்னணி என்ன என்பது கண்டுணரப்படாமலே போய்விடுகிறது.

இது சாதிக் கலவரம் அல்ல; தேவரின் அரசியல் புகழை, வெற்றிகளை மாசுபடுத்த உருவாக்கப்பட்ட “அரசியல் கலவரம்” என்று ஆராய்ந்து எழுதினால், அது, தோழர் இமானுவேல் சேகரனின் படுகொலையை நியாயப்படுத்துவதாக ஆகிவிடாது. தோழர் சேகரனின் படுகொலை படுமோசமான நிகழ்வு; ஏற்றுக்கொள்ளவே முடியாத பயங்கரம். வரலாற்றை ஆராய்கிறவர்கள் இது ஏதோ தாழ்த்தப்பட்ட இனத்து மக்கள்மீது முக்குலத்து மக்கள் கிளர்ந்து நடத்திய சாதிக்கலவரம் என்று மட்டுமே அணுகிப் பார்க்கும்போது பல உண்மைகள் மறைந்துவிடுகின்றன;

பல கேள்விகளுக்கு விடையும் கிடைப்பதாக இல்லை. காஷ்மீர் பிரச்சினை, நேதாஜி மரணம், காமன்வெல்த் வலையில் இந்தியா சிக்கிக்கொண்டிருப்பது போன்றவை குறித்தும், அமெரிக்க, ஆங்கில ஏகாதிபத்தியங்களின் ‘செல்லப்பிள்ளை’யாகவே பண்டித நேரு நடந்துகொள்கிறாரே என்றும் தேவர் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் நிகழ்த்திய பேருரைகள் ஆளும் காங்கிரஸ்காரர்களை அச்சத்தில் ஆழ்த்தின. நேருவின் விசுவாசிகளுக்கு, விசுவாசமாக இருந்தால் பதவிகளில் தொடரலாம் என்று ஆசைப்படுகிறவர்களுக்குத் தேவரின் அனல் பேச்சுகள் உவப்பாயில்லை. தேவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கைப் பார்க்கும்போது அவரை நாடாளுமன்றத்தில் நுழையவிடாமல் தடுக்க முடியாது என்று உணர்ந்த அன்றைய ஆளும் காங்கிரஸ், வேறு ஒரு மாற்று வழி பற்றி யோசித்தது. அதுதான் சாதிச்சாயம் பூசப்பட்ட, தேவரை அதில் வம்புக்கு இழுத்த ‘முதுகுளத்தூர் கலவரம்’ என்ற அவல நாடகம்.

தாழ்த்தப்பட்ட தோழர்கள், பெருமக்கள் பல விஷயங்களைப் பரிசீலித்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். என்னதான் காங்கிரஸ் பேரியக்கம் சோஷலிஸம், சமத்துவம் பேசினாலும் அது அடிப்படையில் ஒரு முதலாளித்துவ இயக்கமே. பல நேரங்களில் அண்ணல் காந்தியடிகளையே மறுதலித்த இயக்கம்; பெருந்தலைவர் காமராஜர் பதவியிலிருந்து விலகியபோது, அந்த இடத்தில், எல்லா வகையிலும் மாண்புகள் நிறைந்த, எளிமையின் ஏந்தலாக வாழ்ந்து காட்டிய கக்கன்ஜியை வைத்து அழகுபார்க்க நினைக்காத இயக்கம். பாமர மக்களுடன் தொடர்பு இல்லாதவரும் வெறும் ‘கோப்புகளு’டன் மட்டுமே தொடர்புகொண்டிருந்தவருமான பெரியவர் பக்தவச்சலத்தை உட்கார வைத்த இயக்கம்; அதனாலேயே மீள முடியாத பெரிய சரிவை ஏற்படுத்திக்கொண்ட இயக்கம்.

மதுரை விமான நிலையத்துக்கும் மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்துக்கும் தேவரின் பெயர் வைக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தவுடன், அதற்குப் போட்டியாகத் தோழர் சேகரனின் பெயர் வைக்க வேண்டும் என்று அறிக்கைவிடுவது மேலும் மேலும் பிளவைத்தான் உருவாக்கும். யாரோ சில அரசியல் புதுக்கட்சிப் பிரமுகர்களின் ஆர்ப்பாட்ட, அவசர அறிக்கைகளுக்குள் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல், சார்புநிலைப்படாமல், நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டும். நடுநிலைச் சிந்தனைதான் நாட்டின் நிலையை வெளிச்சப்படுத்திக் காட்டும். தாய்நாடுதான் நமக்குப் பெரிது; ‘தலைவர்கள்’ அதற்குப் பின்னர்தான்!

நன்றி: மு. பழனி இராகுலதாசன், தேவகோட்டை & காலச்சுவடு

25 அக்டோபர் 2013

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்!


(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.)
1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.
மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.
ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.
பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.
சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.
அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.
தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.
எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.
பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.)
இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை
இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.
சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.
சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.
(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)
தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.
தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

நன்றி:  ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

24 அக்டோபர் 2013

மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?




உலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்ப குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரின் நூல் குறிப்பில் இது உள்ளது. "வீரம் என்ற குணம் தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்" என்று முத்துராமலிங்க தேவர் மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்க கூடும்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.
எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். - இது மருதுபாண்டியரின் பிரகடணத்தின் ஒரு பகுதி.

முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் மீது பாய்ந்த புலியை தனியாளாக நின்று கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது!


எல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்த போர்முறை இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் - தாக்கிவிட்டு மறைதல் - மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல் - ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல் - தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில் அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியை பயன்படுத்தி பெரும்படைகளை வென்று மண்ணை காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.

கி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்!
 

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.

மாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.
  

தாங்கள் கட்டிய காளையார்கோவில் தகர்ந்து விட கூடாதென்பதாலும், ஆட்சியை பிடிப்பதறக்காக ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் தூக்கிலிடப்பட்டனர் மருதுபாண்டியர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக அவர்களோடு துணை நின்ற சாதி / மத வேறுபாடின்றி ஆயிரகணக்கான மக்களும் தூக்கிலிடப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும்! தன் மன்னனுக்காக தங்களது உயிரை தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தங்களை இழந்த மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்?

ஆங்கில ஏகாதிபத்தியத்தாலும் - ஆன்மீக பக்தியாலும் அக்டோபர் 24 - திருப்பத்தூர் மண்ணில் மாமன்னர் மருது பாண்டியர்களை தூக்கிலிட்ட 212 வது நினைவேந்தல் தினம் இன்று!

அடங்காத பற்றோடு அடியேனின் வீரவணக்கம்!
  
   - இரா.ச.இமலாதித்தன்

05 அக்டோபர் 2013

முற்போக்குவாதி வள்ளலார்!





" நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.
குருவை வணங்கக் கூசி நிற்காதே.
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே."

 - திருவருட்பிரகாச வள்ளலார்

 எனக்கு வள்ளலார் பற்றி நினைக்கும் போது நினைவில் வருவது அவர் ஆரம்பித்த சுத்த சன்மார்க்க சங்கம் தான். மேலும், வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் காலம் தொட்டு இன்றுவரை வடலூரில் கருவறையில் அணையா தீபமும், சமையலறையில் அணையா அடுப்பும் உயிர்ப்புடனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். என் குடும்பத்தினரும், அம்மா வழி உறவுகளும் தீவிர சன்மார்க்க வாதிகள். அசைவம் (புலால்) உண்ண மாட்டார்கள். 

"ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்"
"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்"

வள்ளாலரை நினைக்கும்போது இந்த இரண்டும்தான் சட்டென்று நினைவில் வரும். வள்ளலார் தனது பெயரை அவர் பிறந்த ஊரான சிதம்பரம் என்பதை சேர்த்து சிதம்பரம் இராமலிங்கம் யென்றுதான் கையொப்பமிடுவார். அவர் முதலில் எம்பெருமான் முருக பக்தனாகவும், பிறகு ஈசன் சிவனை வணங்கி சிவனடியாராகவும் விளங்கினார்.

அவரை பின்பற்றும் சன்மார்க்க வாதிகள் அனைவருமே, "அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை" யென்ற இருவரிகளை உச்சரிக்காமல் இருக்கமாட்டார்கள்.

அப்படிப்பட்ட மகான் வள்ளலார் அவதரித்த தினம் (புரட்டாசி19) இன்று!

அடியேனும் அவர் அவதரித்த புண்ணிய புரட்டாசி மாதத்தில்தான் பிறந்தேன் என்பதில் மகிழ்ச்சியே...

- இரா.ச.இமலாதித்தன்

06 ஏப்ரல் 2013

குற்றப்பரம்பரைச் சட்டம்





பெருங்காமநல்லூர் 

இந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் மன்னர்கள் இடம் பெறுவர், மக்கள் இடம் பெறுவதில்லை என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவதுண்டு. ஆயினும், மன்னர்கள் அறம் பிறழ்ந்தபோதும் அநீதி இழைத்தபோதும், சாதாரண மக்கள் நீதியை நிலை நாட்டும் நெஞ்சுரம் கொண்டிருந்தனர். சாதாரண மக்கள் நீதிக்காகப் போராடிய வரலாற்றுக் குறிப்புகள் ஆங்காங்கே இலக்கியங்களில் புதைந்து கிடைப்பதையும் மறுக்க இயலாது. அத்தகைய மக்கள் வரலாற்றில் ஒரு பதிவுதான் ""தென்னக ஜாலியன் வாலாபாக்'' எனப் போற்றப்படும் வீரம் விளைந்த ""பெருங்காமநல்லுர்'' கிராமத்தில் நடைபெற்ற தீரச் செயல் ஆகும்.

ஜாலியன் வாலாபாக்:
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 21.03.1919-ல் "ரௌலட் சட்டம்' என்ற ஒரு கொடிய சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. எது குற்றம் - என்பதை இச்சட்டம் வரையறுக்கவில்லை. ஆனால், "சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சுருக்கமான வழக்கு விசாரணை இரகசியமாக நடைபெறும். சாட்சி விசாரணை கிடையாது. மேல் முறையீடு செய்ய வழிவகை இல்லை' என்று அதிகாரங்கள் தரப்பட்டிருந்தன.

பத்திரிகைகளின் குரலை ஒடுக்கி, மக்களின் விடுதலை வேட்கையை அடக்கி ஒடுக்கிட இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்திய மக்கள் அனைவரும் இச்சட்டத்தை எதிர்த்தனர். இச்சட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த மகாத்மா காந்தி, 10.04.1919-இல் கைது செய்யப்பட்டார். 13.04.1919 அன்று பஞ்சாப் மாகாணத்தின் அமிர்தசரஸில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

பெரிய மதில் அடைப்புச் சுவர்களும், சிறிய நுழைவாயிலும் கொண்ட ஜாலியன் வாலாபாக் திடலில், மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி இருந்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், மக்கள் கலைந்து செல்வதற்கு எச்சரிக்கையும் கொடுக்காமல், குண்டு மழை பொழிந்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றும் - ஆயிரக்கணக்கானவர்களைப் படுகாயப்படுத்தியும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டான் ஜெனரல் டயர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாகும்.

குற்றப்பரம்பரைச் சட்டம்:

ரௌலட் சட்டத்தைவிடக் கொடுமையானது "குற்றப்பரம்பரைச் சட்டம்'. வடஇந்தியாவில் கள்ள நாணயம் தயாரிப்பவர்களைக் கட்டுப்படுத்த, 1860-களில் இச்சட்டம் இயற்றப்பட்டது. சில பழங்குடியினரை உள்ளடக்கி 1871-இல் இச்சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

பின்னர் ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தித் தண்டிக்கும் வகையில் 1911-இல் இச்சட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. 1913-இல் சென்னை இராஜதானியில் இச்சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டப்படி,

01) மாவட்ட ஆட்சித்தலைவர் எந்த ஒரு சாதியையும் "குற்றப்பரம்பரை' என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது.

02) குற்றவாளி - நிரபராதி என்ற பாகுபாடு கிடையாது. ஒரு சாதியில் பிறந்த அனைவரும் "பிறவிக் குற்றவாளிகள்' என்றது அச்சட்டம்.

03) அச்சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

04) இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்கட்கும் விதி விலக்கு கிடையாது.

05) பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் கடவுச்சீட்டு பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

06) கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், தலையாரி கூட அவரைக் கைது செய்யலாம்.

07) சந்தேகப்படும்படி ஒருவர் நடந்துகொண்டால்கூட 3 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு. இந்த சட்டத்தின் கீழ், ஒரு தீப்பெட்டியும், கத்தரிக்கோலும் கையில் இருந்தது என்பதற்காக ஒருவர் மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இப்படி ஏராளமான அடக்குமுறைப்பிரிவுகள் அச்சட்டத்தில் இருந்தன.

மக்களின் எதிர்ப்பலை:

"குற்றப்பரம்பரைச் சட்டம்', அப்பாவி மக்களிடம் எதிர்ப்பலையைக் கிளப்பியது. 25.11.1915 அன்று மதுரை மாவட்ட பிறமலைக் கள்ளர் வாழ்ந்த பகுதியில் உறப்பனுரைச் சேர்ந்த சிவனாண்டித்தேவன், பிரபல வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் மூலம் சென்னை மாகாண ஆளுனருக்கு ஒரு ஆட்சேபனை மனுவினை அனுப்பி வைத்தார். அம்மனுவில் கீழ்க்கண்ட விவரங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

01) 1860-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குற்றவாளிகள் என விளம்புவது சமூக நீதிக்கு எதிரானது.

02) விவசாயமே எங்கள் வாழ்வாதாரம்.

03) சட்டத்தை மதித்து முறையாக நிலவரி செலுத்திக் கண்ணியமாக வாழ்ந்து வருகிறோம்.

04) மதுரை திருமலை நாயக்கர், கள்ளர் சமுதாயத்தின் எட்டு நாட்டுக்குத் தலைமை ஏற்கும் ஆட்சிப் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்ததற்கான தாமிரப் பட்டையங்கள் உள்ளன.

எனவே, நீதிக்குப் புறம்பான இச்சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என அந்த மனுவில் கேட்டிருந்தார். அவரது நியாயமான கோரிக்கை, மனிதாபிமானமற்ற முறையில் அரசால் நிராகரிக்கப்பட்டது.

பெருங்காமநல்லுர் துப்பாக்கிச் சூடு:
மதுரை மாவட்டம் பிறமலைக் கள்ளர் நாட்டில், அதிகாரிகள் இச்சட்டத்தை அமல்படுத்தி வருகையில், இறுதிமுகமாக பெருங்காமநல்லுர் கிராமத்திற்கு வந்தனர். மக்கள் இச்சட்டத்திற்கு அடிபணிய மறுத்தனர். ""சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் உகந்த சட்டங்கட்கு நாங்கள் கட்டுப்படுவோம். சமூக நீதிக்கு எதிரான சட்டத்திற்குக் கட்டுப்பட முடியாது'' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

எந்த வகையில் - என்ன செய்தாகிலும் சரி, சட்டத்தை அங்கே அமல்படுத்தியே ஆக வேண்டும் என அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டார்.

02.04.1920 இரவில் ஆயுதப்படை மற்றும் குதிரைப்படைகளுடன் பெருங்காமநல்லுர் செல்வதற்காக அதிகாரிகள் சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் முகாம் இட்டனர். தகவல் அறிந்த பெருங்காமநல்லுர் மக்கள் ஒன்று கூடி விவாதித்தனர். "ஆயுதத்தைக் கொண்டு நம்மை அடிபணிய வைக்க ஆங்கில அரசு நினைக்கிறது. நிரபராதிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து காவல் நிலையத்தில் கைரேகை பதியச் சொல்வது நமக்குப் பெரிய அவமானம். உயிரினும் மானம் பெரிது. அடுத்த நாள் அதிகாரிகள் வந்து நெருக்கடி கொடுத்தால், படாங்கு வேட்டுப் போட்டுப் பக்கத்து ஊர் மக்களையும் வரவழைத்துப் போராட வேண்டும்' என முடிவு செய்தனர்.
 03.04.1920 அன்று அதிகாலை குதிரைப்படை மற்றும் ஆயுதப்படையுடன் அதிகாரிகள் பெருங்காமநல்லுர் கிராமத்தை முற்றுகையிட்டனர். முக்கிய அதிகாரிகள், மந்தையில் இருந்து கொண்டு ஊர்ப் பெரியவர்கள் சிலரை அங்கே வரவழைத்தனர்.

சட்டத்தை மறுப்பது குற்றம் என அதிகாரிகள், பெரியவர்களிடம் எடுத்துரைத்தனர்.

 ""நாங்கள் செய்த குற்றம் என்ன? அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டோமா, கொலை கொள்ளையில் ஈடுபட்டோமா, சாதி - சமயச் சண்டையில் ஈடுபட்டோமா? எதற்காக இங்கே இவ்வளவு குதிரைப்படை, ஆயுதப்படையோடு வந்து எங்களைப் பயமுறுத்துகிறீர்கள்? குற்றவாளி, அப்பாவி என்ற பேதமில்லாமல் ஒட்டுமொத்த கள்ளர் சமுதாயத்தையும் குற்றவாளி என சட்டம் போட்டது குற்றம் இல்லையா? அச்சட்டத்தைக் கூறி எங்களைப் பயமுறுத்தி கொடுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? நாங்கள் கைரேகை பதிக்க மறுப்பது எங்களைப் பொறுத்தவரை தன்மானப் பிரச்னையாகும். அதை குற்றம் என்று நீங்கள் சொல்வது சரியா?'' எனக் கேட்டனர். வாக்குவாதம் மணிக்கணக்கில் தொடர்ந்தது. விவாதம் முடிவின்றி இழுபறியாக நீடித்தது.

 ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு தயாராவதுபோல அணி வகுத்தனர். மக்கள் படாங்கு வேட்டை வெடித்தனர். பக்கத்து ஊர் மக்கள் வேட்டு சத்தம் கேட்டதும் படை திரண்டு வந்தனர். இந்த மக்களை அடி பணிய வைப்பது எளிதான செயல் அல்ல என்பதை அதிகாரிகள் புரிந்துகெண்டனர்.

"சட்ட அமலாக்கத்தில் தோல்வி அடைந்துவிட்டோம்' என்ற எண்ணம் அதிகாரிகள் நெஞ்சில் உறுத்தியது. பின்வாங்குவதுபோல் பாவனை செய்து, அதிகாரிகள் ஊருக்குக் கீழ்புறம் அரை பர்லாங் தூரம் சென்றனர். பெரும் திரளான மக்களிடமிருந்து முனைப்புடன் நின்றவர்களைப் பிரித்து இழுக்கவே அவர்கள் இந்த உத்தியைக் கையாண்டனர்.

முன்னணி வீரர்கள் ஆயுதப்படையின் அருகில் சென்றதும், தங்கள் தோல்வியை மறைத்து மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்கும் சுயநல உள்நோக்கத்துடன் துப்பாக்கியைத் தூக்கினர். மாயக்காள் என்ற பெண் உட்பட 16 பேர்களின் உடலை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. வீர மரணம் அடைந்த 16 பேர்களின் உடலை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர்.

துப்பாக்கி சூட்டில் நிலைகுலைந்து சிதறி ஓடிய மக்களில் சுமார் 200 நிரபராதிகளை அதிகாரிகள் பிடித்து ஒரு கை, ஒரு காலுடன் இணைக்கும் நெடிய சங்கிலியால் விலங்கிட்டு நடைப்பயணமாக சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலத்திற்கு ஆடு, மாடுகளைப் போல் நடத்திச்சென்று நீதிமன்றத்தில் "ரிமாண்ட்' செய்தனர். வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப், "ரிமாண்டு' செய்யப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக வாதாடி வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தார்.

கள்ளர் சீரமைப்பு:

பெருங்காமநல்லுர் அப்பாவி மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எழுத்தறிவற்ற ஏழை, அப்பாவி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அப்பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி நலத்திட்டங்கள் நிறைவேறத் தொடங்கின. அதிகார வர்க்கம் செய்த தவறுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றமும், பிரிட்டிஷ் அரசும் தேடிய பிராயச் சித்தமாக இதனைக் கொள்ளலாம்.

ஒப்பிடலாம்:

ஆங்கில அதிகார வர்க்கம் நடத்திய கொலைக்களம் என்ற வகையில் ஜாலியன் வாலாபாக்கையும், பெருங்காமநல்லுரையும் ஒப்பிடலாம். ஜாலியன் வாலாபாக்கில் பலியானவர்கள் அங்கு நடந்த கண்டனக் கூட்டத்தைப் பார்க்க வந்த அப்பாவிகள் மற்றும் அருகில் இருந்த கோவில் வழிபாட்டில் கலந்துகொள்ள வந்தவர்கள்.

பெருங்காமநல்லுரில் பலியானவர்கள் தன்மானம் காத்த மாவீரர்கள். ஒரு கொள்கைக்காக நேருக்கு நேர் இறுதிவரை உறுதியாகப் போராடி வீர மரணத்தைத் தழுவியவர்கள். இம்மாவீரர்கட்கு பெருங்காமநல்லுரில் நடுகல் நட்டு ஆண்டு தோறும் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின், "குற்றப் பரம்பரைச் சட்டம்' இறுதியாக 5.6.1947-இல் ரத்தானது.

வீரர்களாக இருங்கள் என்று முழங்கினார் சுவாமி விவேகாநந்தர். அநீதி எந்தத் திசையில் இருந்து வந்தாலும் அதை எதிர்க்கும் துணிவும், திறனும், இன்றைய இளைஞர்களிடம் வேர் ஊன்றினால், அதுவே பெருங்காமநல்லுர் வீரத் தியாகிகட்கு நாம் செலுத்தும் உண்மையான வீர வணக்கமாக அமையும்.

கட்டுரையாளர்:  என்.எஸ். பொன்னையா, வழக்குரைஞர், தினமணி, 2013.

16 மார்ச் 2013

என் பார்வையில் பரதேசி



பாடல் வெளியீட்டிலிருந்தே அவத்த பையா பாட்டுதான் எனக்கு ரொம்பவே பிடிக்குமென்பதால், முதல் பாதியிலேயே அந்தபாடல் நெஞ்சை வருடிச் சென்றது. அதே போல மதமாற்றம் செய்யும் தமிழ் கிருஸ்துவ மருத்துவ கிழவனின் ஏசப்பா பாடலும் காட்சிகளின் ஊடாக பார்க்கும் போது பிடித்து போனது.

கதைக்களம் பின்பாதி முழுக்க முழுக்க அடிமைகளின் வாழ்க்கையை சார்ந்தே அமைக்கப்பட்டிருந்தது. முதல்பாதி கிராமியச்சாயலுடன் கூடிய பழமைவாதிகளின் வாழ்க்கை முறையை பதிவு செய்திருந்தது. அதர்வாவின் ஆத்தாவாக படைக்கப்பட்டிருந்த அந்த கிழவியின் நடிப்பும், எதார்த்தமும், வீரியமும், பேச்சுவழக்கும் ரொம்பவே என்னை கவர்ந்தது.

நாயகனும், நாயகியும் ஒரு பஞ்சாயத்து காட்சியில் சைகை மூலமாகவே பேசிகொள்வார்கள். பார்க்கவே ரொம்ப நல்லா இருந்துச்சு.. வெகுளித்தனமான நாயகனுக்கும், விவரமறிந்த நாயகிக்கும் காதல் மலர்ந்து மணம் முடிக்கும் முன்னரே, கருவும் உருவாக,.. வீட்டிலிருந்து தனிமைப்படுத்த பட, நாயகனின் ஆத்தா அடைக்கலம் கொடுக்கிறாள். இதற்கிடையில் ஊரின் வறுமையால் பஞ்சம் பிழைக்க ஒரு கங்காணியின் ஆசை வார்த்தைகளால் அதர்வா உள்பட கிராமத்தின் பெரும்பாலான ஆண்களும், சிறுவர்களும், மணம் முடித்தவர்கள் ஜோடியாகவும் தேயிலை தோட்டத்திற்கு ஒன்றரை மாதம் நடையாய் நடந்தே கடக்கின்றனர். போகும் வழியில் ஒருவனின் உடலை விட்டு உயிர் பிரிகிறது. அவனை விட்டு, மற்ற அனைவரும் கடந்து செல்கிறார்கள். அவனது மனைவியையும் இழுத்து செல்கிறார்கள். அவனது கைமட்டும் இறுதி தருவாயில் மேலே எழும்புகிறது. தூரத்தில் மற்றவர்கள் களைப்போடு கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் இடைவேளை.. இனி அடிமைகளின் வாழ்வியல்முறைதான் என்பதை யூகிக்கமுடிகிறது.

தேயிலை தோட்டத்திற்குள் வந்துவிட்டனர். தனித்தனியாக கூரை வேய்ந்த வீடுகள் ஆளுக்கொன்றாய் கட்டாயமாக பகிர்ந்தளிக்கபடுகிறது. அதற்கப்பறமான காட்சிகளை நான் எழுத்துகளின் வாயிலாக விளக்க விரும்பவில்லை. அங்குதான் பாலா நிற்கிறார்.
பாடலும், பிண்ணனி இசையென ஜி.வி.பிரகாஷ்குமார் அசத்தி இருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து, ஒவ்வொரு பாடலிலும் வைரவரிகளினால் இந்தவயதிலும் நம்மை கட்டிப்போடுகின்றார் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாகவே இருக்கிறது. செழியனின் ஒளிப்பதிவு இருளிலும் – வெளிச்சத்திலும் உண்மையை மட்டுமே பிரதிபலித்திருக்கிறது. படம் நெடுகிலும், உதவி இயக்குனர்களின் அயாரத உழைப்பும், துணை நடிகர்களின் பங்களிப்பும் அப்பட்டமாக நம் கண்முன் தெரிகிறது. ஒவ்வொரு சின்னஞ்சிறிய வசனத்தில் கூட பாலா இன்னும் நம்மை கதைக்குள் உள்ளிழுத்து நம் நாடியை பிடித்து பார்க்கிறார்.

படத்தின் முதல் காட்சியில் தொடர்ச்சியாக அந்த குக்கிராமத்தின் அநேக வீடுகளையும் மக்களையும் காட்டும்விதம் அருமை. அதேபோலவே தேயிலை தோட்ட அடிமைகளுக்கான வீடுகளை காட்டுகின்ற காட்சியமைப்புகளும் உருவாக்கப்பட்டிருந்தன. போலி வைத்தியர் – போலி சாமியார் – தேயிலை தோட்டத்தை வடிவமைக்கும் வெள்ளைக்கார கிழவன் – அவனுக்கு மாமா வேலை செய்யும் எடுபுடி எஜமானான கங்காணி. இப்படியான கிராமத்து ஆட்களை ஊருராக சென்று அடிமையாக்கும் கங்காணியும், அவனுக்கு எடுப்புகளும், அடியாட்களும் என பலரும் வாழ்ந்திருக்கிறார்கள் கதையின் மாந்தர்களாகவே.

அப்போது நடந்த (இப்போது வரை நடந்து கொண்டிருக்கும்) கிருஸ்துவ மத மாற்றத்தை கடுமையாகவே சாடி இருக்கிறார் பாலா. எப்படியெல்லாம் மதமாற்றம் அந்தகாலத்தில் செய்திருக்க முடியும் என்பதை பாமரனும் உணரும் வகையில் பல காட்சியமைப்புகளும், வசனங்களும் மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.

படம் முடிந்ததும் சட்டென்று நினைக்கு வந்தது, ஈழமண்ணில் நடந்தேறிய பயங்கரங்களும், ஒடுக்குமுறைகளும் தான். முள்வேலி முகாம்களின் சித்ரவதையை பரதேசியின் மூலம் சிறிய அளவிலானும் உணர முடிந்தது.

பரதேசியின் கதைக் களத்தையும், தனி ஈழம் என்ற தேசத்தின் விடுதலை கனவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருந்தது. தேயிலை தோட்டத்தை நான் இலங்கை போலவும், சொந்த மண்ணிலேயே அகதிகளான எம்தமிழின உறவுகளை, கொத்தடிமைகளாகவும் ஒப்பீடு செய்ய முடிந்தது. வெள்ளைக்காரனை சர்வதேச வல்லாதிக்க நாடுகளோடு சேர்த்துணர முடிந்தது. என்னைபொறுத்தவரையில், பரதேசியிலும் ஈழத்தின் சுவடுகள் தெரிந்தது.
பரதேசி - எல்லோருக்குமான விடுதலையை அடிமைகளின் வாயிலாக சுட்டிக்காட்டுகிற படம். என் மனசை ரொம்பவே பாதிச்சது. படம் நல்லாருக்கு. எல்லோரும் பாருங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போங்க, உங்க மனசு படம் முடிந்தபின்னும் சிலமணிநேரம் உள்ளுக்குள் ஏதோவொன்றை கண்டிப்பாக பண்ணும். அண்ணன் இயக்குனர் பாலாவை இந்தபடத்தின் மூலமாக இன்னும் அதிகமாகவே நேசிக்கிறேன். கிரேட்
வெறும் டீ தானேன்னு நினைக்காமல், அந்த டீக்கு பின்னால் உள்ள தேயிலை தோட்டத்தின் வரலாற்றையும் கூட, கதைக்களமாக மாற்ற முடியும்ன்னு நிரூபிக்கிறவன் தான் உண்மையான கலைஞன்...  நீர் கலைஞன்யா!